இலங்கை அணி உலகக்கோப்பை முதல் போட்டியில் சந்திக்கப் போகும் சவால்கள் என்ன?

இலங்கை அணி உலகக்கோப்பை முதல் போட்டியில் சந்திக்கப் போகும் சவால்கள் என்ன?

இலங்கைக்கு உலகக் கோப்பை எப்படி சவாலாக அமையும்

பட மூலாதாரம், Getty Images

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், கடந்த காலங்களில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ள இலங்கை அணி தென்னாப்பிரிக்க அணியுடன் இன்று மோதவுள்ளது.

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி டெல்லியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இறுதியாக இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியில் தேசிய அணியொன்று எதிர்நோக்கக்கூடாத வகையிலான படுதோல்வியை இலங்கை அணி சந்தித்திருந்தது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதியிருந்தன.

இலங்கைக்கு உலகக் கோப்பை எப்படி சவாலாக அமையும்

பட மூலாதாரம், Getty Images

பலரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து, 15.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்களை மாத்திரமே பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 6.1 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி, 51 ரன்களை பெற்று ஆசியக் கோப்பையை தன்வசப்படுத்தியது.

இந்த படுதோல்வியானது, இலங்கை அணி மீதான நம்பிக்கையை முழுமையாக ரசிகர்கள் மத்தியில் இழக்கச் செய்துள்ளது.

உலகக் கோப்பை போட்டி ஆரம்பிக்க சில வாரங்களே உள்ள பின்னணியில், தேசிய அணியொன்று இவ்வாறான படுதோல்வியை சந்தித்திருந்தமை விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், ஆசிய கோப்பை போட்டிகளில் கலந்துகொண்ட அதே அணி, உலகக்கோப்பை போட்டிகளுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை மேலும் விமர்சனத்தை அதிகரித்துள்ளது.

ஆசியக் கோப்பை போட்டிகளில் தலைமைத்துவத்தை வகித்த தசுன் ஷானக்கவிற்கு, உலகக்கோப்பை போட்டிகளிலும் தலைமைவத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை போட்டிகளின் பயிற்சிப் போட்டிகளில் இலங்கை அணி படுதோல்வி அடைந்தமை, உலகக்கோப்பை மீதான இலங்கை ரசிகர்களின் எதிர்பார்ப்பை இல்லாது செய்துள்ளதாகக் கூற முடிகின்றது.

முதலாவது பயிற்சிப் போட்டியில் வங்கதேசம் அணியுடன் இலங்கை அணி தோல்வியை சந்தித்ததுடன், இரண்டாவது பயிற்சிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் தோல்வியைத் தழுவியது.

இவ்வாறு எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் இலங்கை அணியின் தயார் நிலைகள் தொடர்பில் பிபிசி தமிழுக்கு, விளையாட்டு ஊடகவியலாளர் அப்துல் ரகுமான் கருத்து தெரிவித்தார்.

இலங்கை அணி

பட மூலாதாரம், Getty Images

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் இலங்கை அணி மோதுகின்றமை தொடர்பில் விளையாட்டு ஊடகவியலாளர் அப்துல் ரகுமான் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

”தென்னாபிரிக்க அணியுடனான முதல் போட்டி, இலங்கை அணிக்கு கடுமையான சவால் நிறைந்த போட்டியாக அமையும். அதற்குக் காரணம், இரண்டு பயிற்சி போட்டிகளிலும் இலங்கை அணி கடுமையான தோல்வியைச் சந்தித்திருந்தது.

அது லேசான தோல்வி அல்ல. படுதோல்வி அடைந்தது. இலங்கை அணியின் பேட்டிங்கை, ஆசியக் கோப்பை தொடர் மாத்திரமல்ல, அதற்கு முந்தைய தொடர்களிலிருந்தே பார்த்து வருகின்றோம்.

யாராவது ஒரு வீரர் சிறப்பாக பேட்டிங் செய்யும்போது, ஏனைய வீரர்கள் விளையாட்டைக் குழப்பி விடுவார்கள். அதனால் பேட்டிங் சீர்குலைந்து விடும். இலங்கை வீரர்களில் யாரும் நின்று, நிதானமாக பேட்டிங் செய்வதாக இல்லை. எனவே, இலங்கை அணிக்குக் கடுமையாக சவால் நிறைந்த போட்டியாக மாறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை,” என அவர் பதிலளித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியில் அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் இல்லாமை, இலங்கைக்கு பாரிய சவால் எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இலங்கை அணி - உலகக்கோப்பை

பட மூலாதாரம், ABDUL RAHUMAN

”இந்திய ஆடுகளங்கள் பேட்டர்களுக்கு மிகவும் சாதகமான ஆடுகளங்கள். எந்த அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பேட்டிங் செய்வார்களோ, அந்த அணிக்கு வெற்றி சந்தர்ப்பங்கள் மிகவும் அதிகம்.

அந்த வகையில் இலங்கை அணியைப் பொருத்த வரையில், வனிந்து ஹசரங்க உபாதைக்குள்ளாகியுள்ளார். அதேபோன்று, துஷ்மந்த ஷமீர உபாதைக்குள்ளாகியுள்ளார். அனுபவம் வாய்ந்த இரண்டு வீரர்கள் இந்தப் போட்டியில் இல்லை.

ஆகவே குறைவான பந்து வீச்சாளர் பலத்தையே இலங்கை அணியில் நாம் பார்க்கின்றோம். இதனாலேயே, கடந்த இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் இலங்கை அணி மிக மோசமான படுதோல்விகளைச் சந்தித்திருந்தது,” என்றார்.

ஆசியக் கோப்பை போட்டிகளில் விளையாடிய அதே வீரர்கள், உலக் கோப்பை போட்டிகளில் இணைத்துக்கொள்ளப்பட்ட தொடர்பிலும், அப்துல் ரகுமான் கருத்து தெரிவித்தார்.

”தில்ஷான் மதுஷங்க ஆசியக் கோப்பை போட்டிகளில் இருக்கவில்லை. அவர் உபாதைக்குட்பட்டிருந்தார். அவர் தற்போது மீண்டும் அணிக்குள் வருகை தந்துள்ளார். ஏனைய வீரர்கள் ஆசியக் கோப்பை போட்டிகளில் விளையாடிய வீரர்கள் தான்.

வனிந்து ஹசரங்க அணிக்குள் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அணிக்குள் சேர்க்கப்படவில்லை. லஹிரு குமார அணிக்குத் திரும்பினார். லஹிரு குமார அணிக்குத் திரும்பியமை, இந்திய ஆடுகளங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கு சாதமாக காணப்பட்டாலும் கூட, இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் அவர் சரியாக பிரகாசிக்கவில்லை.

ஆசியக் கோப்பையுடன் ஒப்பிடுகையில், உலகக் கோப்பை அணியை அறிவிக்கும்போது நாங்கள் எதிர்பார்த்தோம், அனுபவ வீரர் அஞ்சலோ மெத்தீவ்ஸ் அணிக்குள் அழைக்கப்படுவார் என்று ஆனால் இலங்கை தேர்வாளர்கள் அவ்வாறான முடிவை எடுக்கவில்லை.

அஞ்சலோ தெத்தீவ்ஸ் அணிக்குள் இணைக்கப்பட்டிருந்தால், அது சாதகமாக இருந்திருக்கும். எல்.பி.எல் போட்டிகளில் அவர் சிறப்பாக பந்துவீசியிருந்தார். அனுபவம் வாய்ந்த வீரர் இணைக்கப்பட்டிருந்தால், இலங்கைக்கு சாதகமாக அமைந்திருக்கும். ஆசியக் கோப்பை போட்டிகளுடன் ஒப்பிடுகையில், உலகக் கோப்பை போட்டிகளுக்கு அதே அணிதான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு மாற்றங்கள் மாத்திரமே இருக்கின்றன,” என அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு உலகக் கோப்பை எப்படி சவாலாக அமையும்

பட மூலாதாரம், Getty Images

இலங்கை அணித் தலைவராக செயற்படும் தசுன் ஷானக்க, கடந்த பல போட்டிகளில் சிறந்த முறையில் பிரகாசிக்கவில்லை என சுட்டிக்காட்டிய விளையாட்டு ஊடகவியலாளர் அப்துல் ரகுமான், அவர் மீண்டும் வழமைக்குத் திரும்புவது போல தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.

உலகக் கோப்பை போட்டிகளில் இலங்கை அணித் தலைவர் பதவியிலிருந்து தசுன் ஷானக்க நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டாலும், அவரை தேர்வாளர்கள் நீக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

”இறுதியாக இடம்பெற்ற பயிற்சி போட்டிகளில் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டு, குசல் மென்டீஸிற்கே அணி தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. நாளைய போட்டியில் என்ன நடக்கும் என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.

ஒருவேளை, தனுன் ஷானக்கவை அணியிலிருந்து நீக்கி விட்டு, குசல் மென்டீஸ் தலைமை தாங்குவாரா என எதிர்பார்க்கப்படுகின்றது. தசுன் ஷானக்க மீண்டும் வழமை நிலைமைக்குத் திரும்பாதிருப்பது, அவருக்கும், இலங்கை அணிக்கும், இலங்கை ரசிகர்களுக்கும் மிகப் பெரிய ஏமாற்றமாக இருக்கின்றது,” என விளையாட்டு ஊடகவியலாளர் அப்துல் ரகுமான் குறிப்பிடுகின்றார்.

இலங்கை அணியுடன் ஒப்பிடும் போதும், தென்னாபிரிக்க அணி எவ்வாறான நிலைமையில் உள்ளது என்ற கேள்விக்கும் விளையாட்டு ஊடகவியலாளர் அப்துல் ரகுமான் பதிலளித்தார்.

இலங்கை அணி - உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

”இலங்கை அணியுடன் ஒப்பிடும்போது, அவர்கள் ஒரு படி மேலாக இருக்கின்றார்கள். எனினும், துரதிஷ்டவசமாக அவர்களின் வேகப்பந்து புயல் என்விச் நொக்கியா இந்த முறையில் உபாதை காரணமாக அணியில் இடம்பெறவில்லை.

எனினும், தென்னாபிரிக்கா அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றார்கள். பயிற்சிப் போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசியிருந்தார்கள். தென்னாபிரிக்க அணி இலங்கையுடன் ஒப்பிடும் போது ஒரு படி மேலே இருக்கின்றது.

ஆனால், இறுதியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் இலங்கை அணி இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்திருக்கின்றது. இறுதியாக நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரில் இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இலங்கை கோப்பையைக் கைப்பற்றியது. ஆனால், இப்போது தென்னாபிரிக்க அணி சிறப்பாக இருக்கின்றது,” என அவர் பதிலளித்தார்.

ஆசியக் கோப்பை போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளம் வீரராக துனித் வெல்லாலகே, அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டமை சிறந்த முடிவு என விளையாட்டு ஊடகவியலாளர் அப்துல் ரகுமான் தெரிவிக்கின்றார்.

”துனித் வெல்லாலகே போன்ற வீரர்கள் தான் இலங்கை அணிக்கு பல மாற்றங்களை கொண்டு வரும் வீரர்கள். ஏனென்றால், இந்தியாவின் ஆடுகளங்களைப் பொருத்தவரையில் நாங்கள் பயிற்சி போட்டிகளில் பார்த்தோம்.

பாகிஸ்தான் அணியின் வீரர்கள் ரன்களை வாரி வழங்கினார்கள். அதேபோன்று, நேற்றைய உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக வேகப் பந்து வீச்சாளர்கள் உள்ள அணியாக இங்கிலாந்து அணி சொல்லப்பட்டது. ஆனால், நேற்றைய போட்டியில் நியூஸிலாந்தின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா இங்கிலாந்து வேகப் பந்து வீச்சாளர்களின் பந்துகளுக்கு அடித்து நொருக்கியிருந்தார்.

எனவே, இந்த உலகக் கோப்பையில் வேகப்பந்து வீச்சாளர்கள் எப்படி இருந்தாலும், இதில் பகுதிநேர வேகப் பந்து வீச்சாளர்களை அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பகுதிநேர பந்து வீச்சாளர்களின் சேவை இதில் மிக முக்கியமானது.

தனஞ்ச டி சில்வா, துனித் வெல்லாலகே போன்ற வீரர்கள் இலங்கைக்கு ஒரு சாதகமாக இருப்பார்கள். எனினும், தென்னாப்பிரிக்க அணியுடன் ஒப்பிடும் போது, இலங்கை அணியின் பலம் போதுமா என்ற கேள்வி எழுகின்றது,” என விளையாட்டு ஊடகவியலாளர் அப்துல் ரகுமான் கூறினார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *