எலி வளைச் சுரங்கம்: கைகளால் பாதையை ஏற்படுத்தி உத்தரகாண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியவர்கள் மீட்கப்படுவது எப்படி?

எலி வளைச் சுரங்கம்: கைகளால் பாதையை ஏற்படுத்தி உத்தரகாண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியவர்கள் மீட்கப்படுவது எப்படி?

உத்தராகண்ட் சுரங்க விபத்து, உத்தரகாசி

பட மூலாதாரம், ASIF ALI

உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டு, அதனுள் 41 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.

அவர்களை மீட்கும் பணி கடந்த 16 நாட்களாக நடைபெற்று வருகிறது.

மீட்புப் பணியின் 16-வது நாளான இன்று (நவம்பர் 28) இயந்திரம் மூலம் இடிபாடுகளைத் துளையிடும் பணி நிறுத்தப்பட்டு, தொழிலாளர்களைக் கொண்டு துளையிடும் பணி நடந்து வருகிறது.

இந்தப் பணி, 24 மணிநேரம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 24 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் ‘எலிவளைச் சுரங்க முறை’ பயன்படுத்தி இடிபாடுகளுக்குள் துளையிடுகிறார்கள்.

உத்தராகண்ட் சுரங்க விபத்து, உத்தரகாசி
படக்குறிப்பு,

மீட்புப் பணிகள் குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தும் மூத்த அதிகாரிகள்

எலிவளைச் சுரங்க முறை என்றால் என்ன?

இதில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்கள் கைக்கருவிகளைப் பயன்படுத்தி இடிபாடுகளை அகற்றிச் சுரங்கப்பாதையை உருவாக்குவார்கள்.

வழியில் இரும்புக் கம்பிகள் போன்ற தடைகள் இருந்தால் லேசர் இயந்திரம் அல்லது பிளாஸ்மா இயந்திரங்களக் கொண்டு அவற்றை வெட்டி அவற்றை அகற்றுவார்கள்.

அவர்கள் இரண்டு மீட்டர் வரை மண்ணை அகற்றியதும் பின்னால் இருந்து ஆகர் இயந்திரம் மூலம் ஒரு குழாய் உள்ளே தள்ளப்படும்.

எலிவளைச் சுரங்க முறை நிலக்கரிச் சுரங்கங்களில் பயன்படுத்தப் படுகிறது. இதில் பணிபுரியும் தொழிலாளர்கள் மண்வெட்டிகளை உபயோகப்படுத்தி கரியை வெட்டி, கூடைகளில் அதைச் சேகரிப்பர்.

இதன்மூலம் ஒரு நபர் மட்டுமே ஊர்ந்து செல்லக்கூடிய அளவுக்கான ஒரு துளையை உருவாக்குவார்கள்.

இது தொழிழ்நுட்பப் பூர்வமான முறையல்ல, பாதுகாப்பானதும் அல்ல, ஆனால் இந்த இடத்தில் அது உதவக்கூடும் என்று ஒரு அதிகாரி ‘தி இந்து’ நாளிதழிடம் தெரிவித்தார்.

உத்தராகண்ட் சுரங்க விபத்து, உத்தரகாசி

பட மூலாதாரம், ASIF ALI

படக்குறிப்பு,

800மிமீ விட்டம் கொண்ட குழாயை தள்ளுவதில் தடை ஏற்பட்டால், 700மிமீ விட்டம் கொண்ட குழாயை தள்ள முயற்சி மேற்கொள்ளப்படும்

அவர்கள் 10 மீட்டர் தூரத்தில்தான் உள்ளனர்

பணியாளர்களைக் கொண்டு கையால் துளையிடுவது குறித்து தகவல்களை அளித்த நிவாரணப் பணியின் நோடல் அதிகாரி நீரஜ் கைர்வால், “எலிவளைச் சுரங்க முறையுடன் தொடர்புடைய குழு சில்க்யாரா சுரங்கப்பாதையை அடைந்துள்ளது. இவர்கள் கைகளால் சுரங்கத்தைத் தோண்டுவார்கள். மேலும் கால்வாய்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் தில்லியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்,” என்றார்.

“இவர்கள் குறுகிய இடங்களிலும், பாதகமான சூழ்நிலைகளிலும் பணிபுரிந்து பழகியவர்கள்,” என்றார்.

“எலிவளைச் சுரங்கத் தொழிலாளர்கள் கைகளால் தோண்டி ஒரு பாதையை உருவாக்குவார்கள். பின்னால் இருந்து, 800மிமீ விட்டம் கொண்ட குழாய்கள் ஒரு ஆகர் இயந்திரம் மூலம் உள்ளே தள்ளப்படும்,” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், குழாய் தற்போது அடைந்திருக்கும் இடத்திலிருந்து சிக்கியிருக்கும் பணியாளர்கள் 10மீ முதல் 12மீ தூரத்தில்தான் உள்ளனர், என்றார்.

மேலும், இந்தப் பணி எளிதாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், உள்ளே இரும்புக் கம்பிகள் போன்ற தடைகள் இருந்தால், சுரங்கத் தொழிலாளர்கள் பிளாஸ்மா கட்டர் அல்லது லேசர் கட்டர் மூலம் இந்த தடைகளை வெட்டி முன்னோக்கிச் செல்வார்கள், என்றும் கூறினார்.

சில காரணங்களால் 800மிமீ விட்டம் கொண்ட குழாயை தள்ளுவதில் தடை ஏற்பட்டால், 700மிமீ விட்டம் கொண்ட குழாயை தள்ள முயற்சி மேற்கொள்ளப்படும், என்றும் கூறினார்.

மேலும், “சுரங்கப்பாதையின் பிரதான நுழைவாயிலில் (சில்க்யாரா பக்கத்தில்) இருந்து தொழிலாளர்களை வெளியேற்ற எஃகு குழாய்களை உள்ளே தள்ளி சுமார் 49 மீட்டர் நீளமுள்ள வெளியேறும் சுரங்கப்பாதை தயார் செய்யப்பட்டுள்ளது. 7 மீட்டர் முதல் 10மீட்டர் தூரம் வரை பணி பாக்கி உள்ளது,” என்றார்.

உத்தராகண்ட் சுரங்க விபத்து, உத்தரகாசி

பட மூலாதாரம், ASIF ALI

படக்குறிப்பு,

முதலில் இடிபாடுகளுக்குள் எஃகு குழாய்களைச் செருகி, அதன்மூலம் சிக்கியிருப்பவர்களை மீட்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது

ஏன் கையால் துளையிடப்படுகிறது?

சில்க்யாரா சுரங்கப்பாதையை அமைத்த தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (என்.எச்.ஐ.டி.சி.எல்) நிர்வாக இயக்குநர் மஹ்மூத் அகமது, சுரங்கத்தின் சில்க்யாரா பகுதியில் உள்ள தடைகளை நீக்கி, இடிபாடுகளுக்குள் எஃகு குழாய்களைச் செருகி, அதன்மூலம் சிக்கியிருப்பவர்களை மீட்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது என்று கூறினார்.

இப்போது, கையால் இடிபாடுகளைத் தோண்டும் பணி தொடங்கியுள்ளது.

இது குறித்துப் பேசிய அவர், “இதுவரை இயந்திரம் மூலம் துளையிடும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் இப்போது கையால் துளையிட்டு மட்டுமே சிக்கியிருப்பவர்களை மீட்க முடியும்,” என்றார்.

மேலும் திங்கட்கிழமை (நவம்பர் 27) இதுகுறித்துப் பேசிய அவர், “வெள்ளிக்கிழமை இரவு, இயந்திரத்தின் ஒரு பெரும்பகுதி இடிபாடுகளுக்குள் பொதிந்திருந்த இரும்புக் கம்பத்தில் சிக்கியது. அதனால் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன. இப்போது சிக்கிய இயந்திரம் வெட்டி நீக்கப்பட்டுள்ளது. கையால் துளையிடுவதன் மூலம் 800மி.மீ குழாஉ 0.9மீ உள்ளே தள்ளப்பட்டுள்ளது,” என்றார்.

செங்குத்தாகவும் துளையிடும் பணி

செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் துளையிடும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) முதல் மேற்கொள்ளப்படுகிறது. சுரங்கப்பாதைக்கு மேலிருந்து கீழே துளையிடும் பணி நவம்பர் 21 துவங்கப்பட்டது. சட்லஜ் ஜல் வித்யுத் இப்பணியைச் செய்கிறது.

மஹ்மூத் அகமது மேலும் கூறுகையில், “திங்கள்கிழமை (நவம்பர் 27) இரவு 7.30 மணி வரை 36மீ துளையிடும் பணி நடைபெற்றது. சிக்கியுள்ளவர்களை அடைய மொத்தம் 86மீ முதல் 88மீ துளையிட வேண்டும். இதற்கு நான்கு நாட்கள் ஆகலாம்,” என்றார்.

சுரங்கப்பாதையில் ஆகர் இயந்திரம் சிக்கியதால் சனிக்கிழமை மாலை வரை மீட்புப் பணிகள் நிச்சயமற்ற நிலையில் இருந்தன. ஞாயிற்றுக்கிழமை காலை அதிகாரிகள் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, செங்குத்தாகத் துளையிடுவது குறித்து முடிவு செய்தனர்.

மஹ்மூத் அகமது மேலும் கூறுகையில், “பொதுவாக இந்த அளவு துளையிடுவதற்கு 60 முதல் 70 மணிநேரம் ஆகும். ஆனால் ஒரு டிரில்லிங் இயந்திரத்தின் மூலம் மட்டுமே முழுமையாகத் துளையிடுவது சாத்தியமில்லை. மற்ற டிரில்லர்களும் பயன்படுத்தப்படும்,” என்றார்.

சுரங்கத்தின் மறுமுனையிலும் துளையிடும் பணி துவக்கம்

மஹ்மூத் அகமது, சுரங்கப்பாதையின் இன்னொரு நுழைவாயிலான பர்கோட் முனையிலிருந்து சுரங்கப்பாதை உருவாக்கத் துளையிடும் பணியும் நடைபெற்று வருகிறது என்றார். பார்கோட் முனையிலிருந்து ஒரு மைக்ரோ சுரங்கப்பாதை உருவாக்கும் பணி நடைபெறுகிறது.

இதில் 300மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட ஒரு மைக்ரோ டன்னல் அமைக்கப்படவுள்ளது.

மேலும், வெடிவைத்து, உடைந்த கற்களை வெடி வைத்து சுத்தம் செய்து வருகின்றனர் என்றும், இதுவரை 12மீ சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இந்த முனையிலிருந்து தொழிலாளர்களை சென்றடைய 25 நாட்களுக்கு மேல் ஆகும், என்றார்.

உத்தராகண்ட் சுரங்க விபத்து, உத்தரகாசி

பட மூலாதாரம், ASIF ALI

படக்குறிப்பு,

அதிகாரிகள் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, செங்குத்தாகத் துளையிடுவது குறித்து முடிவு செய்தனர்

சிக்கியுள்ளவர்களுக்கு மருத்துவ உதவிகள்

இந்த மீட்புப் பணியில் மருத்துவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு.

சுரங்கத்திற்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களிடம் மருத்துவர்கள் தொடர்ந்து பேசுகின்றனர்.

அவர்களின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றனர்.

உத்தரகாசி மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் ஆர்.சி.எஸ். பன்வார், ஆரம்பத்தில் உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் பதட்டம் மற்றும் அமைதியின்மை போன்ற சில பிரச்சனைகளை எதிர்கொண்டதாகவும், ஆனால் மருத்துவரிடம் பேசிய பிறகு, அவர்கள் திருப்தி அடைந்தனர், என்றும் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “அவர்களுக்கு பதட்டம் மற்றும் அமைதியின்மை ஆகியவற்றைச் சமாளிக்க மருந்துகள் தரபட்டன. சளி, வயிற்றுப் பிரச்சனைகள் தொடர்பான மருந்துகளும் தரப்பட்டுள்ளன,” என்றார்.

சுரங்கப்பாதைக்கு வெளியே 20 மருத்துவர்கள் கொண்ட குழு நிறுத்தப்பட்டுள்ளது. அதில் 15 பேர் மருத்துவர்கள் மற்றும் 5 பேர் மருத்துவ ஊழியர்கள். தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும், நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பன்வார் மேலும் கூறுகையில், “கடந்த பல நாட்களாக சுரங்கப்பாதையில் பணிபுரியும் தொழிலாளர்கள் சூரிய ஒளி படாமல் உள்ளனர். எனவே அவர்களுக்கு வைட்டமின் டி அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்குப் புரதம் மற்றும் கால்சியமும் வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *