
சோல்னெக்னோகோர்ஸ்க் கல்லறையில் ராணுவ வீரர்கள் ஓவியம்
சமீபத்தில் சிறையில் இறந்து போன அலெக்ஸே நவால்னியின் கல்லறை மீது பலரும் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்துவதை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அங்கிருந்த இளைஞர் ஒருவர், “இரண்டாண்டுகளுக்கு முன்பு 24 பிப்ரவரி அன்று போர் ஆரம்பித்த போது இருந்தது போலவே, இப்போது நான் அதிர்ச்சியில் இருக்கிறேன்” என்று என்னிடம் கூறினார்.
இது எனக்கு, ரஷ்ய அதிபர் புதின் முழுவீச்சில் யுக்ரேனை ஆக்கிரமிக்க உத்தரவிட்டதில் இருந்து கடந்த இரண்டாண்டுகளாக நடந்த பல நிகழ்வுகளை நியாபகப்படுத்தியது.
இது முழுக்க நாடகத்தன்மை, ரத்தம், கொடுமை என அனைத்தும் கலந்த கலவை.
- ரஷ்யா-யுக்ரேன் போரால் யுக்ரேனில் பல உயிர்சேதமும், அழிவும் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் ரஷ்ய ராணுவமும் பெரிய அளவிலான இழப்பை சந்தித்துள்ளது.
- ரஷ்ய நகரங்கள் குண்டுவீச்சுக்கும், டிரோன் தாக்குதலுக்கும் உள்ளாகின.
- ஆயிரக்கணக்கான ரஷ்ய இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர்.
- வாக்னர் படை கிளர்ச்சி செய்து மாஸ்கோவில் அணிவகுப்பு நடத்தியது. பின்னர் அவர்களின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்தார்.
- சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் புதினை போர் குற்றவாளியாக அறிவித்து அவருக்கு பிடி உத்தரவு பிறப்பித்தது.
- புதினின் தீவிர விமர்சகரான நவால்னி உயிரிழப்பு.

பட மூலாதாரம், Getty Images
போரால் பாதிக்கப்பட்ட யுக்ரேன் கிராமம்
ரஷ்ய – யுக்ரேன் வரலாற்றில் 24 பிப்ரவரி 2022 ஒரு திருப்புமுனையான நாள்
ஆனால், கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தால் எல்லாம் தெளிவாக இருக்கிறது. 2014 இல் ரஷ்யா யுக்ரேனின் கிரைமியா பகுதியை தன்னோடு இணைத்துக்கொண்டது. டான்பாஸ் பகுதியில் தனது முதல் ராணுவ தலையீட்டை தொடங்கியது. 2020-இல் அலெக்ஸே நாவல்னி மீது நரம்பு மண்டலத்தை தாக்கும் விஷத்தாக்குதல் நடத்தப்பட்டது. பின் 2021-இல் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். உக்ரைன் படையெடுப்புக்கு முன்பு ரஷ்யாவில் உள்நாட்டு அடக்குமுறை தொடங்கியது.
விளாடிமிர் புதினை பொறுத்தவரை, இந்த இரண்டு வருட போரில் நாட்டிற்குள்ளேயும், வெளியேயும் உள்ள எதிரிகளை வீழ்த்துவதில் உறுதியாகவும், தீர்மானமாகவும் இருக்கிறார். புதின் யுக்ரேனுக்கு எதிரான போரை “மேற்குலக கூட்டணியால்” ரஷ்யா மீது தொடுக்கப்பட்டுள்ள போராகவும், தனது நாடு பிழைத்திருப்பதற்கான போராகவும் குறிப்பிடுகிறார். அமெரிக்கா, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதும் அவர் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்.
இது எப்போது எப்படி முடியும்? என்னால் எதிர்காலத்தை கணிக்க முடியாது. ஆனால், வரலாற்றை திரும்பி பார்க்க முடியும்.
சமீபத்தில் எனது வீட்டு அலமாரியில் தூசு படிந்த சில கோப்புகளை நான் கண்டெடுத்தேன். அதில் 20 ஆண்டுகளுக்கு முந்தைய ரஷ்யா குறித்த எனது குறிப்புகள் இருந்தன. அது புதினின் தொடக்க காலம்.
அவற்றை புரட்டிப்பார்க்கும் போது, ஏதோ பல்வேறு ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள வேற்று உலகத்தை பற்றி படிப்பது போல் இருந்தது.
“சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, 59% ரஷ்யர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் ரஷ்யா சேரும் யோசனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்” என்று 17 மே 2001 அன்று நான் எழுதியுள்ளேன்.
“நேட்டோவும் ரஷ்யாவும் தீவிரமான ஒத்துழைப்பை நாடுகின்றன : இதுவே உலக அமைதிக்கான உண்மையான அச்சுறுத்தல் இவர்களிடத்தில் இல்லை என்பதற்கான அடையாளம்” (20 நவம்பர் 2001)
ஆனால், எந்த புள்ளியில் இந்த நிலை மாறியது? எங்கு தப்பு நடந்தது? என்ற கேள்விக்கு நான் ஒருவன் மட்டும் ஆச்சரியப்படவில்லை.
சமீபத்தில் நான் லண்டனில் சந்தித்த நேட்டோவின் முன்னாள் தலைவர் லார்ட் ராபர்ட்சனும் இதே போன்றதொரு உணர்வை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

நேட்டோவின் முன்னாள் தலைவர் லார்ட் ராபர்ட்சன்
“நான் பார்த்த, நல்லுறவை பேணிய, நேட்டோ – ரஷ்யா கவுன்சிலை உருவாக்கிய புதின் இது இல்லை. தற்போது தன்னை தானே அதிகாரமிக்கவராக கருதிக்கொள்ளும் அவர் முழுமையாக வேறு மனிதராக தெரிகிறார்” என்று என்னிடம் கூறினார்.
“2002 மே மாதம் எனதருகில் நின்றுக்கொண்டு யுக்ரேன் ஒரு இறையாண்மை கொண்ட சுதந்திர நாடு. அது தனது பாதுகாப்பு குறித்த முடிவுகளை தானே எடுக்கும் என்று கூறிய அதே நபர் தான், இன்று யுக்ரேன் ஒரு நாடே இல்லை என்று கூறுகிறார்”
ரஷ்யா நேட்டோவில் உறுப்பினராவதற்கு யோசித்ததை கூட லார்ட் ராபர்ட்சன் நினைவு கூர்ந்தார்.
“புதினுடனான எனது இரண்டாவது சந்திப்பில், அவர் வெளிப்படையாகவே ‘ரஷ்யாவை நேட்டோவில் சேர எப்போது அழைக்கப் போகிறீர்கள்?’ என்று கேட்டார். நானோ, ‘நாங்கள் நேட்டோவில் சேர நாடுகளை அழைப்பதில்லை, அவை விண்ணப்பிக்கின்றன’ என்றேன். அதற்கு அவர், ‘அப்படியா சரி, ஒரு பொருட்டே இல்லாத நாடுகளின் அருகில் வரிசையில் நாங்கள் நிற்கப் போவதில்லை’ என்றார்.”
புதின் உண்மையில் நேட்டோவுக்கு விண்ணப்பிக்க விரும்பவில்லை என்றே தான் நினைப்பதாக கூறினார் லார்ட் ராபர்ட்சன். “அது அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். காரணம், அவர் எப்போதுமே உலகிலேயே உயர்ந்த நாடு ரஷ்யா என்றும், சோவியத் யூனியனுக்கு இருந்த மரியாதை போல் தற்போதும் இருக்க வேண்டும் என்ற சிந்தனையை கொண்டுள்ளார் என்றே நான் நினைக்கிறன்” என்று என்னிடம் கூறினார் அவர்.
“அவர் ஒருபோதும் அனைத்து நாடுகளும் சமமாக அமர்ந்து பொது நலனின் கொள்கைக்காக விவாதிக்கும் நாடுகளின் கூட்டணிக்குள் பொருந்தி போகப்போவதில்லை.” என்றார் லார்ட் ராபர்ட்சன்.

பட மூலாதாரம், Getty Images
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
‘வளரும் ஈகோ’
ஒருகாலத்தில் உலகின் இரண்டாவது சக்திவாய்ந்த நாடக சோவியத் ஒன்றியம் அங்கீகரிக்கப்பட்டது என்று கூறும் லார்ட் ராபர்ட்சன், தற்போது அதே வழியில் ரஷ்யா தன்னை கருதிக்கொள்ள முடியாது என்கிறார்.
“அதுவே அவரது ஈகோவை அழித்துவிட்டது என்று நினைக்கிறேன். அதோடு அவரது பலவீனம், சில நேரங்களில் மேற்குலகம் மற்றும் பல்வேறு வழிகளில் அவர் எதிர்கொண்ட கோபமூட்டல்கள், அவருக்குள் வளர்ந்த ஈகோ ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே முன்பு நேட்டோவோடு ஒத்துழைக்க நினைத்த ஒரு நபரை, தற்போது அதே நேட்டோவை பெரும் அச்சுறுத்தலாக பார்க்கும் நிலைக்கு தள்ளியுள்ளது என நான் நினைக்கிறன்”
இவற்றை மாஸ்கோ வேறு மாதிரியானதாக பார்க்கிறது. கிழக்கு நோக்கிய நேட்டோவின் விரிவாக்கமே ஐரோப்பிய பாதுகாப்பை வலுவிழக்க செய்தது மற்றும் போருக்கு வழிவகுத்தது என்று ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர். சோவியத் ஒன்றியத்தின் இறுதி நாட்களில் முன்பு மாஸ்கோவின் வளையத்திற்குள் இருந்த நாடுகளை இந்த கூட்டணியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என கிரெம்ளினுக்கு அளித்த வாக்குறுதியை நேட்டோ மீறியதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
“அப்படி ஆவணப்பூர்வமாக எதுவும் இல்லை” என்று என்னிடம் கூறினார் லார்ட் ராபர்ட்சன்.
“அப்படி எதுவுமே ஒப்புக்கொள்ளப்படவில்லை. அது சார்ந்து எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை. ஆனால், விளாடிமிர் புதின்தான் 2002 மே 28இல், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பிற நாடுகளில் தலையிடாமல் இருத்தலுக்கான அடிப்படைக் கொள்கைகளை உள்ளடக்கிய ரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதே ஒப்பந்தத்தில் நானும் கையெழுத்திட்டேன். எனவே அவர் யாரையும் குற்றம்சாட்ட முடியாது.”
மாஸ்கோவிலிருந்து 40 மைல் தொலைவில் உள்ள சோல்னெக்னோகோர்ஸ்க் நகரில் தான், ரஷ்யாவின் கடந்த இரண்டு ஆண்டு வரலாற்றின் நினைவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வாக்னர் படைக்கு ஆதரவான எழுத்துருக்களை என்னால் பார்க்க முடிந்தது.
அலெக்ஸே நவால்னியின் நினைவாக மலர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இரண்டு உள்ளூர் ஆண்கள் மற்றும் யுக்ரேனில் கொல்லப்பட்ட ரஷ்ய படைவீரர்களின் கல்லறைகள் இருந்தன. அதற்கு அருகில் ஒரு இளம் ராணுவ வீரர் அவர்களுக்கு ராணுவ வணக்கம் வைப்பதை போல் ஓவியம் தீட்டப்பட்டிருந்தது.

சோல்னெக்னோகோர்ஸ்க் போர்வீரர்கள் நினைவுக் கல்லறை
நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த கல்லறையில் கீழ்காணும் வாக்கியங்களோடு, இரண்டாம் உலகப்போர் மற்றும் ஆப்கன் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவு கல்லறைக்கு அருகில் மற்றுமொரு பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
“சிறப்பு ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்காக”
46 பெயர்கள் இந்தக் கல்லில் பொறிக்கப்பட்டிருந்தது.
அப்போது அந்த பக்கம் தனது பேரனோடு நடந்துபோன லிடியா பெட்ரோவ்னாவிடம், இந்த இரண்டாண்டுகளில் வாழ்க்கை எப்படி மாறியுள்ளது என்று கேட்டேன்.
“முன்பு வெளிநாடுகளில் இருந்து வாங்கி கொண்டிருந்த பொருட்களை இப்போது எங்கள் தொழிற்சாலைகள் தயாரித்து வருகின்றன. அது நல்லதுதான்” என்று கூறினார் லிடியா.
“ஆனால், கொல்லப்பட்ட அனைவருக்காகவும் நான் வருத்தப்படுகிறேன். எங்களுக்கு கண்டிப்பாக மேற்குலகோடு போர் தேவையில்லை. எங்கள் மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் போரை தவிர வேறு எதையும் பார்த்தது இல்லை.” என்றார் அவர்.
அடுத்து மரினாவோடு நான் பேசுகையில், ரஷ்ய வீரர்கள் யுக்ரேனில் தங்கள் கடமையை செய்வதாக அவர்களை பாராட்டினார் அவர். பின் தனது 17 வயது மகன் ஆண்ட்ரியை பார்த்த அவர், ஒரு அம்மாவாக எங்கு எனது மகனையும் போருக்கு அழைத்து விடுவார்களோ என்று பயமாகத்தான் இருக்கிறது என்றார்.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எங்களுக்கு அமைதி வேண்டும். அப்போதுதான் அடுத்த நாள் என்ன வரும் என்பது குறித்து பயப்படாமல் எங்களால் வாழ முடியும் என்றார் மரினா.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்