
பட மூலாதாரம், Getty Images
18வது நாடாளுமன்ற தேர்தளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு தேசிய , மாநில அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணியில் இறங்கி விட்டன. இதில் தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சியும், ஆளுங்கட்சியுமான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டையே முடித்து வேட்பாளர்களையே அறிவிக்கும் நிலைக்கு சென்று விட்டது. ஆனால், எதிர்க்கட்சியும் மற்றுமொரு பிரதான கட்சியுமான அதிமுக இன்னும் கூட்டணி கட்சிகளை முடிவு செய்வதிலேயே இழுபறி நீடித்து வருகிறது.
தேர்தல் தேதி அறிவித்த பிறகும் அதிமுக கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படாதது ஏன்? அதிமுக பலவீனமடைந்துள்ளதா? இந்த தேர்தலில் அதிமுகவின் உத்தி என்ன?

பட மூலாதாரம், DMK / TWITTER
தமிழ்நாடு-புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 19 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.
தேர்தல் கூட்டணி
தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய முஸ்லீம் லீக் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இவற்றிற்கான தொகுதி பங்கீடுகளும் முடிந்து தமிழ்நாடு-புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 19 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுக இதுவரை எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்போகிறோம் என்பதையே வெளியிடாமல் இருக்கின்றது.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி பா.ஜ.க., பாட்டாளி மக்கள் கட்சி, புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம், தமிழ்மாநில காங்கிரஸ், தேமுதிக மற்றும் இதர சிறுகட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
அதே போல் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தமிழ்மாநில காங்கிரஸ், புதிய பாரதம் மற்றும் இதர சிறு கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன.
ஆனால், சமீபத்தில் பாஜக – அதிமுகவுக்கு இடையிலான கூட்டணி முடிவுக்கு வந்ததாக அதிமுக அறிவித்தது அதிமுக. இதனைத் தொடர்ந்து 2024 தேர்தலில் பழைய கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி நிலவி வந்தது.
அதற்கு பதிலளிக்கும் வண்ணம் இதுவரை அதிமுக கூட்டணி முடிவாகாமல் இருக்கிறது. தமிழக பாஜகவை பொறுத்தவரை அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் பெரிய ஆர்வம் காட்டுவது போல் தெரியவில்லை. ஆனால், பாஜகவின் தேசிய தலைவர்கள் இன்னமும் கூட்டணிக்கான கதவுகள் திறந்திருப்பதாகவே பேசி வருகின்றனர்.
அதே சமயம் தேமுதிக 40 தொகுதிகளுக்கும் விருப்பமனு அளிக்குமாறு தனது தொண்டர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவர்களுக்கும் அதிமுகவுக்குமான கூட்டணி பேச்சுவார்த்தையும் ஒரு முடிவுக்கு வந்த பாடில்லை.
ஆனால், பாமகவும் அதிமுகவும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் இன்று(17.3.2024) அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியுள்ளார்.

பட மூலாதாரம், DR. S. RAMADOSS/FB
அதிமுக தரப்பில் 7 மக்களவை தொகுதிகளும், 1 மாநிலங்களவை தொகுதியும் தர இசைவு தெரிவித்துள்ளதாக அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக – பாமக பேச்சுவார்த்தை
கடந்த ஒரு மாதமாகவே அதிமுக – பாமக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதில் பாமக 10 தொகுதிகள் கேட்பதாக கூறப்பட்டது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டது போல் தெரியவில்லை.
இந்நிலையில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், எடப்பாடிபழனிச்சாமியை சந்தித்து பேசியுள்ளது முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. இதில் அதிமுக தரப்பில் 7 மக்களவை தொகுதிகளும், 1 மாநிலங்களவை தொகுதியும் தர இசைவு தெரிவித்துள்ளதாக அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதுகுறித்து இரண்டு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. அதே சமயம் 18ஆம் தேதி பாமக எந்த கட்சியோடு கூட்டணி அமைக்கப்போகிறது என்பதை வெளியிடலாம் என்றும் பாமக வட்டாரங்கள் கூறுகின்றன.
வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில் இதுவரை கூட்டணி குறித்து அதிமுக தீர்க்கமான முடிவெடுக்காமல் இருப்பது அக்கட்சிக்கு இத்தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
“40 தொகுதிகளிலும் வெல்லும் அதிமுக”
ஆனால், அதிமுக தனித்து நின்றாலும் சரி, கூட்டணி கட்சிகளோடு தேர்தலை சந்தித்தாலும் சரி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று உறுதியாக கூறுகிறார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கூட்டணி எப்போது அமைக்கிறோம் என்பது முக்கியமில்லை. களநிலவரத்தை பொறுத்தவரை மக்கள் திமுகவுக்கு எதிராக இருக்கிறார்கள். அந்த வாக்குகள் எங்களையே வந்து சேரும். அதன் அடிப்படையில் அதிமுகவே வெற்றி பெறப்போகிறது” என்று கூறினார்.
மேலும், “நாங்கள் தனித்தன்மையுடன் பல தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம். 1980, 2016 என அதற்கு பல தேர்தல்கள் உதாரணம் உண்டு. தனியாக நின்றுதானே அதிமுக வெற்றி பெற்றது. அதற்காக நாங்கள் தனியாக நிற்போம் என்று அர்த்தமல்ல. இன்னும் ஓரிரு தினங்களில் கூட்டணி, வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும்” என்று கூறியுள்ளார் அவர்.

பட மூலாதாரம், PRIYAN
மூத்த பத்திரிகையாளர் பிரியன்
“தவறு செய்துள்ள எடப்பாடி பழனிச்சாமி”
எடப்பாடி பாஜக கூட்டணியை விட்டு பிரிந்து வந்ததற்கான உண்மையான காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. இவர்கள் சொல்லும் எந்த காரணமும் தெளிவானதாக இல்லை என்று கூறும் மூத்த பத்திரிகையாளர் பிரியன் அதிமுகவின் மௌனம் குறித்து சந்தேகம் எழுப்புகிறார்.
“இவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ தொடர்பு இருக்குமோ, ஒரு வேளை திமுகவுக்கு எதிராக சிறுபான்மையினர் வாக்குகளை பிரிக்க பாஜகவே அதிமுகவை திட்டமிட்டு செயல்பட வைக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால், சிஏஏ ஆதரவு போன்ற விஷயங்கள் சிறுபான்மையின மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு பின்னடைவு கொடுத்திருக்கிறது என்பதே கள எதார்த்தம்” என்று கூறுகிறார் பிரியன்.
இதற்கு காரணமாக, இந்த தேர்தலில் அதிமுக தோற்று விட்டால் அடுத்த 2026 தேர்தலிலும் பலவீனம் அடைந்துவிடும். அப்போது கட்சி தலைமையே எடப்பாடியிடம் இருக்குமா என்று தெரியாது. எனவே கடந்த தேர்தலை விட இந்த தேர்தல் அதிமுகவுக்கு முக்கியம் என்று கூறுகிறார் அவர்.

பட மூலாதாரம், TWITTER
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
“திமுகவே பி டீம்”
அதிமுக-பாஜக தனித்து நிற்பது பாஜகவின் திட்டமாக இருக்குமோ என்று பிரியன் எழுப்பும் சந்தேகத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் ஜெயக்குமார் திமுகவே பாஜகவின் பி டீம் என்று குற்றம் சாட்டுகிறார்.
“சிஏஏ சட்டத்திற்கு வாஜிபாய் ஆட்சிக்காலத்தில் பிள்ளையார் சுழி போட்டதே திமுகதான். ஆனால், நாங்கள் பூர்வ இஸ்லாமியர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படக்கூடாது என்றே அன்றும், இன்றும் கூறி வருகிறோம். சிறுபான்மையின மக்களின் ஆதரவு எங்களுக்கே உண்டு. எனவே இதுபோன்ற வதந்திகள் தோல்வி பயத்தில் திமுகவை சேர்ந்தவர்கள் பரப்பி விடும் மலிவான அரசியல்” என்று அழுத்தமாக கூறுகிறார் ஜெயக்குமார்.
ஆனால், “சிஏஏ ஆதரவு போன்ற பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்த அதிமுகவுக்கு கண்டிப்பாக சிறுபான்மையின மக்கள் வாக்கு செலுத்த மாட்டார்கள். திமுகவின் கூட்டணி உறுதியாக இருக்கிறது. எனவே கண்டிப்பாக 40 தொகுதிகளிலும் அது வெற்றி பெரும். குறிப்பாக தமிழக முதல்வரின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் எங்களுக்கு வெற்றியை வாங்கித்தரும்” என்று உறுதியாக கூறுகிறார் திமுக எம்பி வில்சன்.
இது பாஜகவின் திட்டம்தானா என்ற கேள்விக்கு பதிலளித்த அக்கட்சியின் மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, இதெல்லாம் அரசியல் முதிர்ச்சியற்ற, அனுபவமற்றவர்களின் கருத்து என்று ஒரே வரியில் தெரிவித்துவிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “தேர்தல் கால கூட்டணியை பொறுத்தவரை மற்ற கட்சிகளை போல ஒரு கட்சியை சார்ந்து இருக்கும் கட்சியல்ல பாஜக. தேர்தல் அரசியல் என்று வரும்போது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதே எங்களது இலக்கு. அந்த வகையில் மோதி அவர்களின் தலைமையை ஏற்று, பாஜகவின் கொள்கையை ஏற்றுக்கொண்டு யார் கூட்டணிக்கு வருகிறார்களோ அவர்களை நாங்கள் இணைத்துக் கொள்வோம்” என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
2014ஆம் ஆண்டும் கூட மறைந்த முன்னாள் அதிமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தலைமையில் அதிமுக தமிழ்நாட்டில் தனித்தே நின்றது.
மக்களவை தேர்தல் நிலைப்பாடு
பொதுவாகவே மக்களவை தேர்தல் என்பது மத்தியில் அமையப்போகும் ஆட்சியை நிர்ணயிக்கும் தேர்தல் என்பதால், தேசிய கட்சிகளை சுற்றி களத்தின் சூழல் அமைவது இயல்பான ஒன்று. பல மாநில கட்சிகள் இந்த தேர்தலில் பங்கேற்றாலும், இறுதியில் தேசிய கட்சிகளுக்கான ஆதரவு என்ற புள்ளியில் ஒன்றிணைவதை பார்த்திருக்கிறோம்.
ஆனால், இந்தமுறை மாநிலம் சார்ந்த கோரிக்கைகளோடு களம் இறங்கியுள்ளது அதிமுக. 2014ஆம் ஆண்டும் கூட மறைந்த முன்னாள் அதிமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தலைமையில் அதிமுக தமிழ்நாட்டில் தனித்தே நின்றது.
இந்தியா முழுவதும் மோதி அலை என்று தீவிரமாக பேசப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாட்டில் “மோடியா இல்லை இந்த லேடியா” என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தலை சந்தித்தார் ஜெயலலிதா. இந்த முறையும் தேசிய கட்சி எதற்கும் ஆதரவு தெரிவிக்காமல் அதிமுக மக்களவை தேர்தலை சந்திக்கிறது.
இதில் தங்களது நிலைப்பாடு குறித்து பேசிய ஜெயக்குமார், “இத்தனை ஆண்டுகளாக தேசிய கட்சிகள் எதையும் செய்யவில்லை. அதே போல் திமுகவை சேர்ந்த எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் எதையும் சாதிக்கவில்லை. ஆனால், 2014ஆம் ஆண்டு அம்மா தலைமையில் போட்டியிட்டு வென்ற 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல முறை நாடாளுமன்றத்தையே முடக்கியுள்ளனர். எனவே இந்த முறையும் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவோம்” என்று கூறுகிறார்.
ஆனால், இந்தமுறை ஜெயலலிதா அளவிற்கான வீரியமான எதிர்ப்பு குரல் எதையும் காணமுடியவில்லை என்றே கூறுகிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள்.

பட மூலாதாரம், Getty Images
“ஆட்சியில் இருந்தபோது பாஜகவோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார்கள். இப்போது அவர்களது தயவு தேவையில்லை என காட்ட நினைக்கிறார்கள்.”
“விமர்சிக்க தயங்கும் எடப்பாடி பழனிச்சாமி”
இதுகுறித்து பேசிய பிரியன், பல்வேறு காரணங்களால் எடப்பாடி பழனிச்சாமி மோதியை தீவிரமாக எதிர்க்காமல் தவிர்த்து வருவதாக குறிப்பிடுகிறார்.
“ஆட்சியில் இருந்தபோது பாஜகவோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார்கள். இப்போது அவர்களது தயவு தேவையில்லை என காட்ட நினைக்கிறார்கள். ஆனால், அதிமுகவினர் பாஜகவையோ அல்லது பாஜக தலைவர்களையோ தீவிரமாக விமர்சனம் செய்ய மறுக்கிறார்கள்.” என்கிறார் பிரியன்.
ஆனால், “ எங்களுடைய பிரதான எதிரி திமுக. `பாஜகவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் அந்த கட்சியை பெரிய விஷயமாகவே நாங்கள் நினைக்கவில்லை. இதனால், திமுகவை நாங்கள் எதிர்க்கிறோம். பாஜக தமிழ்நாட்டில் இல்லவே இல்லை என்பதால் அவர்கள் குறித்து பேசுவதில்லை” என்று கூறுகிறார் ஜெயக்குமார்.

பட மூலாதாரம், TWITTER
2019இல் இருந்து பாஜக – அதிமுக கூட்டணி தொடர்ந்து வந்தாலும் கூட தன்னை பிரதான எதிர்க்கட்சியாக காட்டிக்கொள்ள பாஜக எங்குமே தயங்கியதில்லை.
தேர்தல் களம் திமுக – பாஜக என்று மாறுகிறதா?
நீண்டகால தமிழ்நாடு அரசியல் பாரம்பரியத்தின்படி, திமுக – அதிமுக ஆகிய கட்சிகளே அனைத்து தேர்தல்களின் நாயகர்களாக இருந்துள்ளனர். ஆனால், இந்த முறை திமுக – பாஜக என்ற நேரடி போட்டி நிலவுதாக அரசியல் வட்டாரம் தெரிவிக்கின்றது.
2019இல் இருந்து பாஜக – அதிமுக கூட்டணி தொடர்ந்து வந்தாலும் கூட தன்னை பிரதான எதிர்க்கட்சியாக காட்டிக்கொள்ள பாஜக எங்குமே தயங்கியதில்லை. உண்மையான சட்டமன்ற எதிர்க்கட்சியான அதிமுக எதிர்க்கட்சி இருந்தபோதிலும் கூட, தங்களையே எதிர்க்கட்சி என்று பாஜக பதிவு செய்து வந்துள்ளது.
இந்நிலையில் 2024 மக்களவை தேர்தல் களத்திலும் அதிமுகவை முந்துகிறதா பாஜக என்ற கேள்வியை முன்வைத்தோம்.
இதற்கு பதிலளித்த பிரியன், “நமக்கு பிடிக்கிதோ இல்லையோ தேர்தல் களம் திமுக – பாஜக என்று மாறக் காரணம் இது மக்களவை தேர்தல். திமுகவும், பாஜகவும் தான் எதிர் எதிர் சித்தாந்தங்கள் கொண்ட கட்சிகள், இவர்களுக்குள் தான் மாறிமாறி மோதல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.”
“நடக்கப்போவது பிரதமரை தேர்வு செய்யும் தேர்தல் என்பதால் இவைதான் களத்தின் பிரதான போட்டியாளர்களாக மாறுகின்றனர். ஆனால், எடப்பாடி மையக்கருத்தை விட்டு வெளியே நிற்கிறார். அவர் இன்னமும் திமுகவை எதிர்க்கும் புள்ளியில் நிற்கிறாரே தவிர, பாஜகவை விமர்சிக்கத் தயங்குகிறார். இதுவே அவரை களத்தில் மூன்றாவது இடத்திற்கு தள்ளி விடுகிறது” என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
2019ஆம் ஆண்டு தேர்தலிலும் கூட இதே போன்றதொரு இழுபறியே நிலவியது. ஆனால், அப்போது அதிமுகவில் இரட்டை தலைமை இருந்தது.
அதிமுக கூட்டணி இழுபறிக்கு காரணம்?
மார்ச் 20 வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் இன்னமும் அதிமுக கூட்டணி ஒரு முடிவுக்கு வரவில்லை. அதிமுகவின் வேட்பாளர் தேர்வும் எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை.
தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் பலவும் திமுக கூட்டணியில் ஏற்கனவே இணைந்து விட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி முன்பு எதிர்பார்த்தது போல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் அதிமுகவுடன் சேரவில்லை. இந்நிலையில் பாமகவுடனான பேச்சுவார்த்தை மட்டும் இன்னும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு காரணமாக, அதிமுக தோற்று விடுவோம் என்று தெரிந்ததால் மட்டுமே இன்னமும் கூட்டணி குறித்து முடிவு செய்யாமல் இருக்கிறார்கள். அவர்களிடம் வேட்பாளர் கூட இருக்கிறார்களா என்று தெரியவில்லை என்று கூறுகிறார் வில்சன்.
2019ஆம் ஆண்டு தேர்தலிலும் கூட இதே போன்றதொரு இழுபறியே நிலவியது. ஆனால், அப்போது அதிமுகவில் இரட்டை தலைமை இருந்தது. இந்த முறையோ முடிவெடுக்கும் அதிகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் இருப்பது ஏன் என்ற கேள்வியை முன்வைத்தோம்.
இதற்கு பாஜகவும் அதிமுகவும் பிரிந்ததே காரணம் என்று கூறுகிறார் பிரியன்.
பாஜக – அதிமுக பிரிவே காரணம்?
“இந்த இரு கட்சிகளும் ஒன்றாக இருந்தாலாவது ஏதாவது ஒரு சில இடங்களில் வெற்றிபெறலாம் என்ற வாய்ப்பு இருந்தது. ஆனால் இவர்கள் இருவருமே பிரிந்துள்ள நிலையில், இருவருக்குமே வெற்றி வாய்ப்பு கிடைக்க வாய்ப்பில்லை. இதனால் எங்கு போனாலும் தோல்வி என்ற நிலையில், அதிக இடம் மற்றும் பலன் தரும் கட்சியுடன் சேரலாம் என்றே இதர கட்சிகள் நினைக்கின்றன” என்கிறார் பிரியன் .
ஆனால், “அதிமுகவில் அதற்கும் வழியில்லை. முன்பு ஆட்சியில் இருந்தபோது அன்புமணிக்கு ராஜ்யசபா வாய்ப்பு கொடுத்தார்கள். தற்போது ஆட்சியிலும் இல்லை. எனவே மாநிலங்களவை இடம் கொடுத்தால் மூத்த தலைவர்கள் கோபம் கொள்வார்கள். தகுதிக்கு அதிகமான தொகுதிகளையும் தர முடியாது. அதனால்தான் அதிமுக கூட்டணி இன்று வரை உறுதியாகாமல் இருக்கிறது” என்று தெரிவிக்கிறார் அவர்.
மேலும், இது எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் தலைமையையே கேளிவிக்குறியாக்கி உள்ளது என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
தற்போது வரை அதிமுகவுடன் இணைந்துள்ள எஸ்டிபிஐ, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளெல்லாம் பெரிய சக்திகள் கிடையாது என்று கூறுகினார் பிரியன்.
வாக்கு வங்கி அரசியல்
தேர்தலில் ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் எவ்வளவு வாக்கு வங்கியை கொண்டுள்ள கட்சிகளை கூட்டணியில் ஒரு கட்சி வைத்திருக்கிறது என்பதை வைத்தே ஓரளவு தேர்தல் முடிவுகளை கணித்து விடமுடியும்.
இந்நிலையில் தற்போது வரை அதிமுகவுடன் இணைந்துள்ள எஸ்டிபிஐ, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளெல்லாம் பெரிய சக்திகள் கிடையாது என்று கூறுகினார் பிரியன்.
“அதே சமயம் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இருப்பதால் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் வாக்குகள் திமுகவுக்கு எளிதில் கிடைத்துவிடும். இதன்படி ஒரு தொகுதிக்கே அடிப்படையில் 18% வாக்குகளை பெற்றுவிடுகிறது திமுக கூட்டணி. எனவே இந்த கூட்டணி பலம், அதிமுக பிரிந்து நிற்பது, திமுகவின் பெண்கள் சார் திட்டங்கள் ஆகியவை திமுகவை வெற்றிபெற செய்யும்” என்கிறார் அவர்.
ஆனால், எங்களை விட திமுகவுக்கு அடிப்படை வாக்கு வங்கி குறைவுதான் என்று உறுதியாக கூறுகிறார் ஜெயக்குமார்.
இதுகுறித்து பேசிய அவர், “அதிமுகவுக்கே தமிழ்நாட்டில் அதிக வாக்கு வங்கி உள்ளது. கிட்டத்தட்ட அதிமுகவுக்கு 40% வாக்கு வங்கி உள்ளது. அதோடு சேர்த்து திமுகவுக்கு எதிரான வாக்குகள், கூட்டணி கட்சிகளின் வாக்குகள் என நாங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன” என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், TWITTER
2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக 44.4% , திமுக 23. 6%, பாஜக 5.5% வாக்குகள் பெற்றன.
முந்தைய தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு விகிதம்
தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளை பொறுத்தவரை கடந்த இரண்டு தேர்தல்கள் அப்படியே தலைகீழ் மாற்றத்தை கண்டுள்ளன. 2014 ஜெயலலிதா காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த அதிமுக, 2019இல் சறுக்கலை சந்தித்துள்ளது. அதற்கு பின் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அதே நிலையே.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக 44.4% , திமுக 23. 6%, பாஜக 5.5% வாக்குகள் என்ற அடிப்படையில் பெற்றன. இதில் அதிமுக மட்டும் தனித்து போட்டியிட்டு 44.4 சதவீதம் பெற்று குறிப்பிடத்தக்கது.
ஆனால், இதே தலைகீழாக மாறி 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுக 18.48%, பாஜக 3.66%, திமுக 32.76%, காங்கிரஸ் 12.26% வாக்குகள் என்ற அடிப்படையில் பெற்றுள்ளன. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியின் மொத்த வாக்கு சதவீதம் 30 சதவீதமாக குறைந்தது. ஆனால், திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 53 சதவீதமாக உயர்ந்தது.
அதே போல், கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக 33.29%, திமுக 37.70% என்ற அளவிலேயே வாக்குகளை பெற்றன. இரு கட்சிகளுக்கும் இடையில் சதவீதம் ஓரளவுக்கு நெருக்கமாகவே இருந்தாலும், திமுகவுக்கே அதிக இடங்கள் கிடைத்தன. அக்கட்சி ஆட்சியும் அமைத்தது.
நிலைமை இப்படி இருக்க, இன்னமும் கூட்டணி முடிவாகாமல் இருப்பது, இரட்டை இலை தொடர்பான சிக்கல், பாஜகவுடனான விரிசல் என இந்த தேர்தல் அதிமுகவுக்கு கூடுதலான சவாலை தந்திருக்கின்றன.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்