
பட மூலாதாரம், Getty Images
பாலத்தீனத்துடன் இந்தியா தொடர்ந்து நல்லுறவைப் பேணிவருகிறது.
பாலத்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் சனிக்கிழமை அதிகாலை காசாவில் இருந்து இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.
ஹமாஸ் இஸ்ரேல் மீது பல்லாயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசியது. இந்த தாக்குதல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதல் வர்ணிக்கப்படுகிறது.
காசாவில் இருந்து தாக்குதல் நடந்த பிறகு, பாலத்தீனத்தில் இருந்து செயல்படும் மத அடிப்படைவாத அமைப்பான ஹமாஸின் டஜன் கணக்கான ஆயுதமேந்திய போராளிகள் தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். எனினும், பெரும்பாலான பகுதிகளை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹமாஸின் தாக்குதல்களால் இஸ்ரேலில் இதுவரை 700 பேர் உயிரிழந்துவிட்டனர். பல இஸ்ரேலியர்கள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ‘போர்’ அறிவிப்பை வெளியிட்டதுடன், தனது எதிரி முன்னெப்போதும் இல்லாத விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இது ஒரு ‘பயங்கரவாத’ தாக்குதல் என்றும், இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேல் நாட்டுடனான தனது ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு வீடியோவை ட்வீட் செய்துள்ளது. அதில் இஸ்ரேலில் இன்று என்ன நடக்கிறதோ, அதைத் தான் 2004-2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையே (UPA அரசாங்கத்தின் பதவிக்காலம்) இந்தியா சந்தித்தது என்று கூறியுள்ளது. இந்த வீடியோவில் இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதற்குப் பிறகு, இஸ்ரேல்-பாலத்தீனம் தொடர்பான இந்தியாவின் கொள்கையில் மாற்றம் குறித்த விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பிரதமர் நரேந்திர மோதி கடந்த 2018-ம் ஆண்டு பாலத்தீனப் பயணம் மேற்கொண்டார்.
இஸ்ரேல் – பாலத்தீனம் பிரச்னையில் இந்தியாவின் கொள்கை மாறுகிறதா?
இஸ்ரேலுக்கும் பாலத்தீனியர்களுக்கும் இடையே பல தசாப்தங்களாக நீடித்து வரும் மோதலைத் தீர்க்க இரு தரப்பும் இணைந்து முடிவுகளை எடுக்க வேண்டும் என பல சர்வதேச இராஜதந்திரிகள் மற்றும் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். இதற்கு இந்தியாவும் ஆதரவாக உள்ளது.
இரு நாடுகளும் இணைந்து எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் பாலத்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிப்பது குறித்து உலக நாடுகள் பேசுகின்றன. இந்த நாடு மேற்குக் கரை, காசா பகுதி மற்றும் கிழக்கு ஜெருசலேமில் 1967 க்கு முந்தைய போர் நிறுத்தக் கோட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு இஸ்ரேல்-பாலத்தீனம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பான விவாதத்துடன் தொடங்கியது.
உண்மையில், கிழக்கு ஜெருசலேம் மற்றும் பாலத்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது தொடர்பான வரைவுத் தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வரைவுத் தீர்மானத்தில், பாலத்தீனப் பிரதேசத்தில் இஸ்ரேலின் ‘நீண்ட கால ஆக்கிரமிப்பு’ மற்றும் அதன் பிரிவினையின் சட்டரீதியான விளைவுகள் குறித்து சர்வதேச நீதிமன்றத்திடம் கருத்து கோரப்பட்டது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த வரைவு தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன, ஆனால் இந்தியா, பிரேசில், ஜப்பான், மியான்மர் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை.
அந்த நேரத்திலும் இந்தியா இஸ்ரேலை நெருங்கி பாலத்தீனத்தை விட்டு விலகிச் செல்வதாகவே பார்க்கப்பட்டது.
ஆனால் அரசியல் வல்லுநர்களின் பார்வையில் பாலத்தீனத்தைப் பற்றிய இந்தியாவின் கொள்கை மாறவில்லை என்றே கருதப்பட்டது. ஆனால் அது இருதரப்பையும் வேறுபடுத்திப் பார்ப்பதைப் போல் காட்டுகிறது.
அதாவது, பாலத்தீனத்தின் நலன்களுக்கு பாரம்பரியமாக இந்தியா தொடர்ந்து வலுவான ஆதரவை வழங்கும். ஆனால் இதற்கு இணையாக, இஸ்ரேலுடன் தனது நலன்களை மனதில் கொண்டு நல்லுறவையும் பேணும்.
இருப்பினும், பாலத்தீன விவகாரம் ஆண்டுக்கு ஆண்டு வலுவிழந்து வருவதாக நிபுணர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து உள்ளது.

பட மூலாதாரம், Issam Rimawi/Anadolu Agency/Getty Images
ரமல்லாவில் பிரதமர் மோதிக்கு பாலத்தீன அதிபர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய உலக அரசியல் நிலைப்பாட்டு கவுன்சில் மற்றும் மத்திய கிழக்கு அரசியல் நிலைப்பாடுகளில் நிபுணரான ஃபஸுர் ரஹ்மான் சித்திக் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இஸ்ரேல் தூதரக அங்கீகாரம் பெற்றுள்ளது. இஸ்ரேல் தனது எல்லையை விரிவுபடுத்தியுள்ளது என்பதுடன் நடைமுறையில் இஸ்ரேல்-பாலத்தீன மோதல் முடிவுக்கு வந்துவிட்டது.
பாலத்தீனத்தின் உட்பிளவு மற்றும் அண்டை நாடுகளில் வளரும் உள்நாட்டு பிரச்னைகள் தான் பாலத்தீன எழுச்சி தொடர்ந்து வலுவிழந்தது வருவதற்கு மிகப்பெரிய காரணம் என ரஹ்மான் சித்திக் கூறுகிறார். .
“அங்குள்ள தலைமை பிளவுபட்டுள்ளது. அங்கு தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. ஒரு பக்கம் ஹமாஸ், மற்றொரு பக்கம் பாலத்தீன நிர்வாகம் ஆகியவை குழப்பங்களை ஏற்படுத்திவருகின்றன. இது தான் முதல் காரணம்.”
“இரண்டாவது காரணம், அந்தப் பிராந்தியத்தில் மற்ற நாடுகள் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற நிலையும் மாறிவிட்டது. சிரியா, லிபியா, ஏமன், இராக், இரான், மொராக்கோ, துனீசியா, சூடான் என அனைத்து நாடுகளின் உள்நாட்டுப் பிரச்னைகள் காரணமாக பாலத்தீனப் பிரச்னை அந்நாடுகளுக்கு பெரிதாக இல்லை.”
ரெஹ்மான் சித்திக்கின் பார்வையில், இதற்கு மூன்றாவது பெரிய காரணம் உலகளாவிய அரசியலின் முன்னுரிமைகளை மாற்றுவதாகும். அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சி என எந்த அரசாக இருந்தாலும், இஸ்ரேலுடனான அந்நாட்டின் உறவுகள் எப்போதும் வலுவானவை என்கிறார்.
“அமெரிக்காவின் முழு கவனமும் இப்போது யுக்ரேன் மீது உள்ளது. யுக்ரேனுக்கு முன், கொரோனா தொற்றுநோய் இருந்தது. அதற்கு முன்பு, அமெரிக்காவில் உள்நாட்டு அரசியல் ஒரு பெரும் பிரச்னையாக இருந்தது. மேலும் டொனால்ட் டிரம்ப் பதவியில் இருந்த போது, அமெரிக்கா இஸ்ரேலுக்கு வெளிப்படையாக ஆதரவாக இருந்தது. அதில் ராஜதந்திரம் இல்லை. இராஜதந்திரம் என்பது இரு தரப்புக்கும் இடையில் நடுநிலையாக இருக்க வேண்டும்,” என அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் 2017 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவுக்கு வருகை தந்தார்.
பாலத்தீனம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
பாலத்தீன மக்களின் உரிமைகளை ஆதரிக்கும் வரலாற்று பாரம்பரியத்தை இந்தியா கொண்டுள்ளது. பாலத்தீன விவகாரத்தில் இந்தியாவின் ஆதரவு அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது .
1974 ஆம் ஆண்டில், யாசர் அராபத் தலைமையிலான பாலத்தீன விடுதலை அமைப்பை (பிஎல்ஓ) பாலத்தீன மக்களின் ஒரே மற்றும் சட்டபூர்வமான பிரதிநிதியாக அங்கீகரித்த முதல் அரபு அல்லாத நாடாக இந்தியா இருந்தது.
அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும் யாசர் அராபத்துக்கும் இடையே நல்ல உறவு இருந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
1988 இல், பாலத்தீன அரசை அங்கீகரித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது. 1996 ஆம் ஆண்டில், இந்தியா தனது பிரதிநிதி அலுவலகத்தை காஸாவில் திறந்தது. பின்னர் அது 2003 இல் ரமல்லாவிற்கு இடம் மாற்றப்பட்டது.
2003 அக்டோபரில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானத்தை இந்தியாவும் ஆதரித்தது. இது இஸ்ரேல் பிரிவினைச் சுவரைக் கட்டும் முடிவை எதிர்த்தது. 2011 இல், பாலத்தீனத்தை யுனெஸ்கோவின் முழு உறுப்பினராக்குவதற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.
2012 ஆம் ஆண்டில், ஐ.நா.வில் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் பாலஸ்தீனத்தை “உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடாக” மாற்ற வேண்டும் என்ற ஐ.நா பொதுச் சபை தீர்மானத்தை பிறநாடுகளுடன் இணைந்து இந்தியா முன்மொழிந்தது. இந்த முன்மொழிவுக்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களித்தது. 2015 செப்டம்பரில், ஐநா வளாகத்தில் பாலத்தீனக் கொடியை நிறுவ இந்தியாவும் ஆதரவளித்தது.
இந்தியாவிற்கும் பாலத்தீன அதிகார சபைக்கும் இடையில் தொடர்ந்து உயர்மட்ட இருதரப்புப் பயணங்கள் இடம்பெற்றுள்ளன.
சர்வதேச மற்றும் இருதரப்பு அளவிலான வலுவான அரசியல் ஆதரவைத் தவிர, பாலத்தீனியர்களுக்கு பல்வேறு வகையான பொருளாதார உதவிகளையும் இந்தியா வழங்கியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கும், பாலத்தீன விடுதலை அமைப்பின் தலைவராக இருந்த யாசர் அராபத்துக்கும் இடையே நல்லுறவு தொடர்ந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
காஸா நகரில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் ஜவஹர்லால் நேரு நூலகம் மற்றும் காஸாவின் டெய்ர் அல்-பலாவில் உள்ள பாலத்தீன தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள மகாத்மா காந்தி நூலகம் உள்ளிட்ட மாணவர் செயல்பாடு மையங்களை உருவாக்க இந்திய அரசு உதவியுள்ளது. இவை தவிர பாலத்தீனர்களுக்கு பல திட்டங்களை உருவாக்கவும் இந்தியா உதவி வருகிறது.
பிப்ரவரி 2018 இல், பாலத்தீன பகுதிக்கு நரேந்திர மோதி சென்றார். அப்போது, பாலத்தீன நிர்வாக அதிபர் மஹ்மூத் அப்பாஸ், மோதிக்கு நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலத்தீன’ விருதை வழங்கினார்.
கடந்த ஆண்டு, பாலத்தீனர்களுடனான சர்வதேச ஒற்றுமை தினத்தின் போது, பிரதமர் மோதி ஒரு செய்தியை வெளியிட்டார். இதில் பாலத்தீனத்திற்கு இந்தியாவின் “நிலையான ஆதரவை” பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
“இந்தியாவும் பாலத்தீனமும் நட்புறவு கொண்ட நாடுககளாக வரலாற்று உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. பாலத்தீன மக்கள் சுயசார்பு மற்றும் கண்ணியத்துடன் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டைப் பெறுவதற்கு நாங்கள் எப்போதும் ஆதரவளித்து வருகிறோம். பாலத்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், இதன் மூலம் அவர்கள் ஒரு விரிவான மற்றும் பரஸ்பரம் ஒப்புக்கொண்ட தீர்வைக் காண்பார்கள் என்றும் நம்புகிறோம்,” என பிரதமர் மோதி கூறினார்.
பாலத்தீனப் பிரச்னை வலுவிழப்பது ஏன்?
சௌதி அரேபியா பாலத்தீனத்துடன் ஒற்றுமையுடன் செயல்பட்டு இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை என்பதுடன் இஸ்ரேலுடன் எந்த ராஜதந்திர உறவுகளையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை.
ஆனால், இஸ்ரேலுடனான உறவை இயல்பாக்கும் வகையில் செயல்பட வேண்டுமென்றால், அதற்கு அமெரிக்காவிடமிருந்து அதிக ராணுவ உதவிகளை சௌதி அரேபியா கோருகிறது. ஆக்கப்பூர்வமாக அணுசக்தி திட்டத்தைச் செயல்படுத்துதல் மற்றும் பாலத்தீனத்திற்கு பல உதவிகளை அளிக்க வேண்டும் என்றும் சௌதி அரேபியா அமெரிக்காவிடம் கோரி வருகிறது என்று அண்மையில் கூறப்பட்டது.
இதற்கு முன்னரும் பல அரபு நாடுகள் இஸ்ரேலுடனான உறவை இயல்பான உறவாக மாற்றியுள்ளன.
2020 ஆம் ஆண்டில், அமெரிக்கா முன்னெடுத்தலின் பேரில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் ஒன்றாக இணைந்து இஸ்ரேலுடன் ‘ஆபிரகாம் ஒப்பந்தம்’ என்ற வரலாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் கீழ் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகள் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்தின.

பட மூலாதாரம், Getty Images
சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஜி 20 மாநாட்டின் போது பிரதமர் மோதியுடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.
ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் அமைதி மற்றும் பிரச்னைகளுக்கான தீர்வுகள் பிரிவான நெல்சன் மண்டேலா மையத்தில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் டாக்டர் பிரேமானந்த் மிஸ்ரா, இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான நட்புறவு திடீரென அதிகரிக்கவில்லை என்கிறார். இஸ்ரேலுடனான அரபு நாடுகளின் உறவுகளும் மேம்பட்டு வருவதும் இதற்கு ஒரு காரணம்.
இப்போது முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரபு நாடுகள் பாலத்தீனப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும் ஃபஸூர் ரஹ்மான் சித்திக் கருதுகிறார். இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவும் தனது நலன்களை முன்னிறுத்தி இஸ்ரேலுடனான உறவை அதிகரித்து வருகிறது.
ஆனால் இது பாலத்தீனம் மீதான இந்தியாவின் அணுகுமுறையை மாற்றுமா?
இதுகுறித்து பேராசிரியர் பிரேமானந்த் மிஸ்ரா கூறும்போது, “மோதி அரசு வந்த பிறகு இஸ்ரேலை பாலத்தீனத்தின் கண்களால் பார்ப்பது அல்லது பாலத்தீனத்தை இஸ்ரேலின் கண்களால் பார்ப்பது என்ற இரண்டும் இல்லை என தெளிவான கொள்கை உருவாக்கப்பட்டது,” என்கிறார்.
“இரண்டு வகையான வெளியுறவுக் கொள்கைகள் உள்ளன: ஒன்று இலட்சியவாதம். இன்னொன்று நடைமுறைவாதம். இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்துக்கும் இடையே சமநிலையை பராமரிக்க இந்தியா இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதாவது எப்பொழுதும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்னைகளில் பாலத்தீனத்தை ஆதரிப்பது என்றும், ஆனால் அது இந்தியாவின் நலன் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருக்கும் போதெல்லாம் இஸ்ரேலை ஆதரிப்பது என்பதே இந்தியாவின் நிலையாக இருக்கிறது,” என்று அவர் கூறுகிறார்.
டாக்டர் மிஸ்ராவின் பார்வையில், அரசியல் உறவுகள் மாறும் போது, அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்போது ஐக்கிய அரபு அமீரகம் ‘ஆபிரகாம் உடன்படிக்கைக்கு’ முன்பு செயல்பட்டதைப் போல் செயல்பட முடியாது.
“இந்தியா தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கருதப்பட்டாலும், நாளை இந்தியா மீது இதுபோன்ற தாக்குதல் நடந்தால், எந்த அடிப்படையில் ஆதரவை எதிர்பார்க்க முடியும்? இரு நாடுகளும் வலதுசாரித் தலைமையைக் கொண்டிருப்பதால் தான் இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகள் வளர்வதற்குக் காரணமாக அமைந்துள்ளது. ஆனால் இஸ்ரேல் தொடர்பான இந்தியாவின் கொள்கை முற்றிலும் எதார்த்தமானது மற்றும் பாலத்தீனத்திற்கான அதன் இலட்சியக் கொள்கை எதிர்காலத்திலும் தொடரும்.” என்று அவர் கூறுகிறார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்கு ஆசிய ஆய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் முடாசிர் கமார், இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோதியின் அறிக்கை பாலத்தீனம் மீதான இந்தியாவின் அணுகுமுறையில் எந்த மாற்றத்தையும் காட்டவில்லை என்கிறார்.
“தீவிரவாத தாக்குதல் நடந்தால் இஸ்ரேலுடன் இந்தியா நிற்கிறது என்பதை மோதி நேற்று வெளியிட்ட அறிக்கை காட்டுகிறது. சனிக்கிழமையன்று ஹமாஸ் இஸ்ரேலை தாக்கியது. பொதுமக்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இது இரு படைகளுக்கு இடையேயான போர் அல்ல. இஸ்ரேல் இந்தியாவின் முக்கிய நட்பு நாடாக உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, பிரதமர் மோதியின் அறிக்கையை இந்தப் பின்னணியில் பார்க்க வேண்டும்.” என்று அவர் கூறுகிறார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்