
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் நடைபெற்ற யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடியை வீழ்த்தி அமெரிக்காவின் ராஜீவ் ராம், பிரிட்டனின் ஜோ சாலிஸ்பெரி ஜோடி பட்டத்தை வென்றது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி பிரான்சின் நிகோலஸ் மஹத், பியர்-ஹியுஸ் ஹெர்பெர்ட் ஜோடியை 7-6 (7-3), 6-2 என்ற நேர்நெட் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.
இதன் மூலம் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் இறுதிப்போட்டிக்கு போபண்ணா முன்னேறியிருந்தார். முதன்முறையாக, அவர் 2010ஆம் ஆண்டு அமெரிக்க ஓபனின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு எஹ்திஷாம்-உல்-ஹக் குரேஷியுடன் தகுதி பெற்றார்.
இதேபோல் 1968ஆம் ஆண்டுக்குp பின்னர் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வயதான நபர் என்ற சாதனையையும் 43 வயதான போபண்ணா படைத்தார். கனடா வீரர் டேனியல் நெஸ்டர் 43 வயது 3 மாதத்தில் இறுதிப் போட்டியில் விளையாடியதே சாதனையாக இருந்தது. இதை 43 வயது 6 மாதங்களான போபண்ணா முறியடித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
யுஎஸ் ஓபன் பட்டம் வென்ற ராஜீவ் ராம்- ஜோ சாலிஸ்பெரி
இந்திய வீரர் VS இந்திய வம்சாவளி வீரர்
இறுதிப்போட்டியில் ரோகன் போபண்ணா, மேத்யூ எப்டென் ஜோடி அமெரிக்காவின் ராஜீவ் ராம், பிரிட்டனின் ஜோ சாலிஸ்பெரி ஜோடியை எதிர்கொண்டது.
இதில் ராஜீவ் ராம் இந்திய வம்வாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜீவ் ராமின் தந்தை ராகவ் மற்றும் சுஷ்மா இருவரும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள்.
நல்ல தொடக்கத்தை வெற்றியாக மாற்ற முடியவில்லை
ரோகன் போபண்ணா – எப்டென் ஜோடி சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை அவர்கள் வசப்படுத்தினர்.
பின்னர் ராஜீவ் ராம்- ஜோ சாலிஸ்பெரி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டு வந்தனர். 6-3, 6-4 என அடுத்தடுத்த செட்களை கைப்பற்றி வெற்றியை வசப்படுத்தினர்.
ராஜீவ் ராம்- ஜோ சாலிஸ்பெரி ஜோடி படைத்த சாதனை
கடந்த 2021, 2022 மற்றும் தற்போதை யுஎஸ் ஓபன் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தொடர்ந்து மூன்று முறை பட்டத்தை வென்று ராஜீவ் ராம்- ஜோ சாலிஸ்பெரி ஜோடி சாதனை படைத்துள்ளது. இதுவரை எந்த ஜோடியும் தொடர்ச்சியாக மூன்று முறை பட்டங்களை வென்றதில்லை.
“எங்களின் கூட்டணி உண்மையிலேயே சிறப்பானது” என்று வெற்றிக்கு பின்னர் சாலிஸ்பெரி தெரிவித்தார்.
“நாங்கள் எங்களின் முழு திறமையையும் வெளிப்படுத்துவோம், கடுமையாகப் போராடுவோம் என்று தெரியும். அதைத்தான் இன்று செய்தோம். முதல் செட்டில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை.
ஆனால், தொடர்ந்து முன்னேறுவோம் என்று தெரியும், அதுதான் நடந்தது. இன்று நாங்கள் விளையாடிய விதத்தை நினைத்துப் பெருமைப்படுகிறேன்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
ரோகன் போபண்ணா, மேத்யூ எப்டென்
சர்வீஸ் மூலம் எதிரே விளையாடும் வீரர்களை திணறவைக்கும் போபண்ணா
ரோகன் போபண்ணாவின் அபார சர்வீஸ் அவரது ஆட்டத்திற்கு பலமாக கூறப்படுகிறது. அவர் எப்போதும் வேகமாக சர்வீஸ் செய்பவராகத் திகழ்கிறார். பல நேரங்களில் தன் சர்வீஸ் மூலம் எதிரே இருக்கும் வீரர்களைத் திணறச் செய்து வெற்றி பெற்றுள்ளார்.
தந்தையின் அன்பு அவரை டென்னிஸ் வீரராக மாற்றியது
இந்தியாவில் இளைஞர்கள் ஏதேனும் ஒரு விளையாட்டில் கவனம் செலுத்துவது அரிதாகவே உள்ளது. போபண்ணாவும் இதிலிருந்து வேறுபட்டவர் அல்ல.
அவர் ஹாக்கி மற்றும் கால்பந்து விளையாடுவதை அதிகம் விரும்பினார். ஆனால் அவரின் தந்தை எம்ஜி போபண்ணா தனது மகன் குழு விளையாட்டுக்குப் பதிலாக தனி நபர் விளையாட்டுகளில் ஈடுபடுவதை விரும்பினார்.
தந்தையின் விருப்பத்தை மனதில் வைத்து ரோகன் போபண்ணா டென்னிஸ் விளையாடத் தொடங்கினார்.
2021இல் ஓய்வு பெற நினைத்த போபண்ணா
போபண்ணா 2021இல் விளையாடிய 7 போட்டிகளிலும் தோல்வி அடைந்திருந்தார். போட்டிகளில் மோசமான செயல்பாடுகள் காரணமாக அவர் ஓய்வு பெறத் திட்டமிட்டிருந்தார்.
இதுகுறித்து போபண்ணா கூறுகையில், “நான் கடலுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு, ‘நான் என்ன செய்கிறேன்? நான் போட்டிகளில் கூட வெற்றி பெறவில்லை, எனக்கு வீட்டில் ஒரு குடும்பம் உள்ளது. ஓய்வு பெற்றுவிடலாமா? எங்கள் மகளுக்கு இப்போது நான்கு வயது ஆகிறது. ஓய்வு பெற்றால் என்ன என்று நினைத்தேன்,” எனக் குறிப்பிட்டார்.
ஓய்வு பற்றி போபண்ணா நினைத்ததற்கு அவரது செயல்பாடுகள் மட்டுமே காரணம் அல்ல. இரண்டு ஆண்டுகளாகவே மூட்டு வலியால் அவர் அவதிப்பட்டு வந்தனர்.
ஒரு நாளைக்கு மூன்று முறை வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும் என்று போபண்ணா குறிப்பிட்டார். இருந்தும் அதைக் கடந்து தொடர்ந்து விளையாட வேண்டும் என்று அவருக்கு இருந்த உத்வேகம்தான் இன்று அவரை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்