இந்தியா கூட்டணி: இந்திராவைப் போல மோதியை வீழ்த்த 1977 உத்தி பயன்படுமா?

இந்தியா கூட்டணி: இந்திராவைப் போல மோதியை வீழ்த்த 1977 உத்தி பயன்படுமா?

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோதியின் ஒன்பது ஆண்டுகால தொடர் அதிகாரத்திற்கு சவால் விடும் வகையில் காங்கிரஸுடன் நாட்டிலுள்ள 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்தப் புதிய கூட்டணியால் பாஜகவுக்கு சவால் விட முடியுமா?

வேறுபட்ட சித்தாந்தங்கள், கொள்கைகள் கொண்ட அரசியல் கட்சிகள் இணைந்த கூட்டணியால் பாஜகவின் தேசிய அரசியலை முடிவுக்கு கொண்டுவர முடியுமா?

‘இந்தியா’ கூட்டணி ஒரு புதுமையான , முக்கியமான அரசியல் பரிசோதனையாகக் கருதப்பட்டாலும், இந்தியாவில் இது முதன்முறையன்று. கடந்த காலத்திலேயே மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற ஒரு முயற்சி எதிர்பாராத முடிவுகளை அளித்திருக்கிறது.

1977-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக ‘ஜனதா கட்சி’ என்ற பெயரில் இதேபோன்று பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்தன.

தற்போது நரேந்திர மோதி உள்ளது போன்று அப்போது இந்திரா காந்தி ஏகபோகமாக இருந்தார். கட்சி, ஆட்சி இரண்டிலும் அசைக்க முடியாத தலைவராக ஆதிக்கம் செலுத்தினார். அந்த மேலாதிக்கம் இறுதியில் நாட்டில் அவசரநிலை பிரகடனத்திற்கு வழிவகுத்தது.

இந்தியா கூட்டணி- நாடாளுமன்ற தேர்தல்

பட மூலாதாரம், GETTY IMAGES

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இவ்வளவு பெரிய அளவில் போராட்டம் நடந்ததில்லை. நாட்டில் அதுவரை இருந்திராத அரசியல் சூழல் உருவானது. இதனால் அதுவரை நாடு கண்டிராத அவசர நிலையை இந்திரா காந்தி பிரகடனப்படுத்தினார்.

இத்தகைய அரசியல் தேவையின் காரணமாகவே ‘ஜனதா கூட்டணி’ உருவானது. அது வெற்றியும் பெற்றது. இந்த சோதனை முயற்சியின் பலனாக இந்தியா சுதந்திரம் அடைந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு நாட்டிற்கு முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமர் கிடைத்தார்.

1977 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ‘ஜனதா கூட்டணி’ முயற்சி போன்று தற்போது மத்தியில் உள்ள மோதி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மீண்டும் கூட்டணியை அமைத்துள்ளன.

ஜனதா கட்சியின் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஜனதா கட்சி உருவாவதற்கு முக்கிய பங்காற்றிய ஜெயபிரகாஷ் நாராயண், தேசத்தை புதுப்பிப்பது என்ற முழக்கத்தை எழுப்பினார்.

தற்போது, ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகளின் எதிர் அரசியல் சித்தாந்தங்கள், எதிரெதிராக தேர்தலில் போட்டியிட்ட வரலாறு, அரசியலில் உள்ள முரண்பாடுகள் போன்றவற்றை பாரதிய ஜனதா கட்சி சுட்டிக் காட்டும்போது, அதற்கு, ‘ஜனதா’ அரசின் உதாரணமே பதிலாக இருக்கிறது.

ஜனதா கட்சி அப்போது வலதுசாரித் தலைவர்கள், சோசலிஸ்டுகள், காங்கிரஸிலிருந்து பிரிந்தவர்கள் மற்றும் இந்திரா காந்திக்கு எதிராக ஒன்றுபட்ட மற்ற அரசியல் போட்டியாளர்களின் குழுவாக இருந்தது. அவர்கள் அனைவரின் குறிக்கோளும் ஒன்றாக இருந்ததால் சித்தாந்தம் கூட்டணிக்குள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதேபோன்ற நிலையை மீண்டும் உருவாக்க , ‘இந்தியா’ கூட்டணி முயற்சி செய்து வருகிறது.

வரலாறு மீண்டும் நிகழும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்க முடியும். இப்போதும் அப்படித்தான் தெரிகிறது. 1977ல் அமைந்த ஜனதா கூட்டணி தான் தற்போதைய எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு வழிவகுத்தது. அப்போது, ஜனதா கூட்டணி ஏற்பட முக்கிய காரணம் அவசரநிலை.

இந்தியா கூட்டணி- நாடாளுமன்ற தேர்தல்

பட மூலாதாரம், INDIAALLIANCE

படக்குறிப்பு,

‘இந்தியா’ கூட்டணி

வங்கதேச போர் முதல் அவசரநிலை வரை…

இந்திரா காந்திக்கு வயதாகி இருந்ததால் எந்த செயலையும் மேற்கொள்ள முடியாத பொம்மை என்று அவர் விமர்சிக்கப்பட்டார். ஆனால், சில ஆண்டுகளிலேயே அவரது தீர்க்கமான முடிவுகள் காரணமாக அடல் பிகாரி வாஜ்பாயி இந்திரா காந்தியை துர்கை உடன் ஒப்பிட்டு பேசினார்.

லால் பகதூர் சாஸ்திரிக்குப் பிறகு கட்சி மற்றும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற இந்திரா காந்தி, 1964 முதல் 1975 வரை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினார்.அந்த ஆதிக்கத்தால் உருவான அரசியல் சூழ்நிலைகளால் ஜனதா கூட்டணியின் உதயம் தவிர்க்க முடியாததாக இருந்தது.

இந்தியா கூட்டணி- நாடாளுமன்ற தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தீர்க்கமான முடிவுகள் காரணமாக அடல் பிகாரி வாஜ்பாயி இந்திரா காந்தியை துர்கை உடன் ஒப்பிட்டு பேசினார்

லால் பகதூர் சாஸ்திரியின் இறப்புக்கு பின்னர் பிரதமர் பதவிக்கு தகுதியான பல்வேறு தலைவர்கள் காங்கிரஸில் இருந்தாலும் இந்திரா பிரதமர் ஆனார். ஆனால், கட்சியில் முழு செல்வாக்கையும் பெற அவருக்கு சில காலம் ஆனது. பின்னர் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே குழப்பம் ஏற்பட்டது. ஸ்தாபன காங்கிரஸ் என்றும் இந்திரா காங்கிரஸ் என்றும் கட்சி பிளவுபட்டது. ஆனாலும், இந்திரா தனது பிடிவை வலுவாக்கினார்.

காங்கிரஸில் இத்தகைய போக்கு நடந்துகொண்டிருந்த அந்த நேரத்தில் இந்தியா வறுமை, உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுடன் போராடிக்கொண்டிருந்தது. சர்வதேச அளவில் பார்க்கும்போது அமெரிக்காவுக்கும், சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்துகொண்டிருந்தது.இவற்றுக்கு எதிராக சில துணிச்சலான நடவடிக்கைகளை இந்திரா காந்தி எடுத்தார். ஒரே இரவில் பெரிய தனியார் வங்கிகளை பொதுத்துறை வங்கிகளாக மாற்றினார்.

இந்தியா கூட்டணி- நாடாளுமன்ற தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்திரா காந்தி மற்றும் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன்

அந்த நேரத்தில் உணவுக்காக அமெரிக்காவையும் பிற நாடுகளையும் இந்தியா சார்ந்து இருந்தது. இந்திரா காந்தியின் ஆட்சியில் தொடங்கிய பசுமை புரட்சியின் பலன்கள் அடுத்த சில நாட்களிலேயே தெரியத் தொடங்கியது. 1967ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு 1971லும் பொருளாதார பிரச்னைகளில் கவனம் செலுத்திய இந்திரா காந்தி என்ற வறுமை ஒழிப்பு கோஷத்தை முன்வைத்து மீண்டும் ஆட்சியை பிடித்தார்.

1971ல், கிழக்கு பாகிஸ்தான் பிரச்னை அசாம்-வங்காள எல்லையில் வெடிக்கத் தொடங்கியது. அகதிகள் பிரச்சனை சர்வதேச பிரச்சனையாக மாறியது. பனிப்போரின் போது, ரிச்சர்ட் நிக்சன் மற்றும் ஹென்றி கிஸ்ஸிங்கரின் பாகிஸ்தான் சார்பு வெளியுறவுக் கொள்கை இந்திரா காந்திக்கு அழுத்தத்தை அதிகரித்தது.

ஆனால், 1971ல் நடந்த போரில், பாகிஸ்தானை தோற்கடித்து, அமெரிக்காவுக்கு பின்னடைவை இந்தியா ஏற்படுத்தியது. வங்கதேசம் பிறக்க அந்தப் போர் வழிவகுத்தது. இதன் மூலம் இந்திராவின் பெயர் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பிரபலமடைந்தது.

மறுபுறம் உள்நாட்டு பொருளாதாரம், சமூக பிரச்சனைகள் எழுந்தன. இதனால், நாடு முழுவதும் அரசுக்கு எதிராக சகிப்பின்மை அதிகரித்தது. நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. அந்த நேரத்தில், நாட்டின் அரசியல் மற்றும் அரசாங்கக் கொள்கைகள் இந்திராவை மையப்படுத்தியே இருந்தன.

இந்தியா கூட்டணி- நாடாளுமன்ற தேர்தல்

பட மூலாதாரம், SHANTI BHUSHAN

படக்குறிப்பு,

அரசு எதிர்ப்பு இயக்கத்தின் தலைமை மூத்த காந்தியவாதியான ஜெய்பிரகாஷ் நாராயணனிடம் வந்தது

சதி என நினைத்த இந்திரா

இந்த நேரத்தில், காங்கிரஸ் தலைவர் ஒருவர், ‘இந்திரா தான் இந்தியா’ என்று கூறியது, நிலைமையைக் காட்டுவதாக இருந்தது. இந்திரா காந்தி மீதான விமர்சனங்கள் அதிகரிக்க ஆரம்பித்தன. இதற்கு மத்தியில் அவரது மகன் சஞ்சய் காந்தியின் செல்வாக்கு வளர ஆரம்பித்தது.

அரசு எதிர்ப்பு இயக்கத்தின் தலைமை மூத்த காந்தியவாதியான ஜெய்பிரகாஷ் நாராயணனிடம் வந்தது. ஜவஹர்லால் நேருவின் நண்பரும், மகாத்மா காந்தியின் அன்புக்குரியவரும், சிறுவயதில் இருந்தே இந்திரா காந்தியைப் பார்த்துக் கொண்டிருந்தவருமான ஜெயப்பிரகாஷ், அரசியலில் தீவிரமாக ஈடுபடவில்லை. ஆனால் இளைஞர்கள் மூலம் ஜேபி’ மீண்டும் கவனம் பெற்றார்.

புதிய புரட்சிக்கு தயாராகும்படி பிகாரின் இளைஞர்களுக்கு ஜெயபிரகாஷ் நாராயணன் அழைப்பு விடுத்தார். இது நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. மாணவர்களின் போராட்டத்தால் குஜராத்தில் சிமன்பாய் படேல் அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டது.

மாணவர்கள், விவசாயிகள் ஆகியோரின் போராட்டங்களால் அரசியல் சூழ்நிலையும் மோசமடைந்தது. இந்திரா அரசை ஜெயப்பிரகாஷ் தொடர்ந்து விமர்சித்தார். ‘முழுமையான புரட்சி’ என்ற முழக்கத்தை அவர் எழுப்பினார். இது தனக்கு எதிரான சதி என்றும், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்னை என்றும் இந்திரா நினைத்தார். மறுபுறம், இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தது.

இதன் ஒருபகுதியாக, 1971ஆம் ஆண்டு ரே பரேலி தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் இந்திரா காந்தி முறைகேடு செய்து வெற்றி பெற்றார் என்று சமாஜ்வாதி தலைவர் ராஜ் நாராயண் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜூன் 12, 1975-ல் இந்திரா காந்திக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தியா கூட்டணி- நாடாளுமன்ற தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

1974ல் ஜெய்பிரகாஷ் நாராயணனும் மொரார்ஜி தேசாயும் ஒன்றினைந்த ஜனதா மோர்சாவை உருவாக்கினர்.

அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதோடு அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது.

தான் கலந்துகொள்ளும் கூட்டங்களிலெல்லாம், இந்திராவின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டாம் என்று காவல்துறைக்கும் ராணுவத்துக்கு ஜெய்பிரகாஷ் நாராயண் கோரிக்கை வைத்தார்.

இத்தகைய சூழல்களால் அமைதியை இழந்த இந்திரா காந்தி, ஜூன் 25 1975-ல் அவசர நிலையை நாட்டில் அமல்படுத்தினார். சுதந்திரத்துக்கு பின்னர் சர்வாதிகார ஆட்சியை இந்திய மக்கள் பார்த்ததில்லை. ஆனால், ஜனநாயக நாட்டிலேயே தனிநபர்களின் உரிமைகள் அனைத்தும் காணாமல் போனது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இத்தகைய அசாதாரண சூழலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பது என்ற முதல் அரசியல் முயற்சி ஜனதா கூட்டணி வழியாக பரிசோதிக்கப்பட்டது.

ஜனதா கூட்டணியும் இந்திராவின் தோல்வியும்

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வந்தது. அனைத்து மாநிலங்களிலும் வலிமை பெற்ற ஒரே தேசிய கட்சியாக காங்கிரஸ் திகழ்ந்தது. இந்து மகாசபை, ஜன சங்கம், இடதுசாரிகள் ஆகியோர் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்தாலும் காங்கிரஸ் அளவுக்கு வலிமையோடு இருக்கவில்லை.

அதுவரை காங்கிரஸுக்கு எதிராக எந்த கட்சியும் எந்த கூட்டணியும் வலிமையாக இருந்ததில்லை. அவசரநிலையால் இத்தகைய கட்சிகள் ஒன்றியணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

ஜெயப்பிரகாஷ் நாராயணின் முயற்சியால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையத் தொடங்கினர். 1974ல் ஜெயப்பிரகாஷ் நாராயணனும் மொரார்ஜி தேசாயும் ஒன்றினைந்த ஜனதா மோர்சாவை உருவாக்கினர். இதுதான் ஜனதா கட்சியின் தொடக்கம்.

இந்தியா கூட்டணி- நாடாளுமன்ற தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்திராவுடன் சஞ்சய் காந்தி

பாரதிய ஜனசங்கம், சமாஜ்வாதி கட்சி மற்றும் பாரதிய லோக்தளம் போன்ற பிற கட்சிகளும் இதில் அங்கம் வகித்தன. அரசியல் சூழல் எப்படி மாறியிருக்கிறது இதனை பார்க்கும்போதே புரியும்.

1975ல் ஜனதா மோர்ச்சா இணைந்து முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டது. குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. ஆனால், மறுநாள் அலகாபாத் நீதிமன்றம் இந்திரா காந்திக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ஜூன் 25ம் தேதி அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.

ஜெய்பிரகாஷ் நாராயண் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அடல் பிஹாரி வாஜ்பாயி, எல்.கே.அத்வானி, சந்திரசேகர் என அனைத்து தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

1977 ஜனவரியில் இந்திரா காந்தி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் அவசரநிலை காரணமாக நீண்ட காலம் சிறையில் இருந்ததால் எதிர்க்கட்சிக் கூட்டணி தேர்தலுக்கு தயாராக இருக்காது என்று அவர் நினைத்தார்.

ஆனால், அதற்கு நேர்மாறாக, தேர்தல் அறிவிப்பு வெளியான ஐந்தே நாட்களில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஜனதா கட்சியை உருவாக்கின. இதில் ஜெய்பிரகாஷ் நாராயண் முக்கிய பாத்திரம் வகித்தார்.

எதிர்க் கட்சிகள் இவ்வளவு வேகமாக ஒன்று சேர்ந்தது இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி மற்றும் காவல்துறையின் புலனாய்வுத் துறைக்குக் கூட திகைப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று மூத்த அரசியல் பத்திரிக்கையாளர் நீரஜா சௌத்ரி தனது ‘ஹவ் பிரைம் மினிஸ்டர் டிசைட்ஸ்’ புத்தகத்தில் எழுதியுள்ளார்.

“இவ்வளவு குறுகிய காலத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும் என்று இந்திரா காந்தியும், உளவுத்துறையும் கூட கணித்திருக்க முடியாது. தேர்தல் அறிவிப்பு வெளியான 5 நாட்களில் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று ஒரு கட்சி ஆனது.

இந்தியா கூட்டணி- நாடாளுமன்ற தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அடல் பிஹாரி வாஜ்பாயி

நான்கு முக்கிய அரசியல் கட்சிகளான காங்கிரஸ் (ஓ), பாரதிய லோக்தளம், பாரதிய ஜனசங்கம், சமாஜ்வாதி கட்சி மற்றும்

சந்திரசேகர் தலைமையிலான யங்க் துருக்ஸ் ஆகியன 23 ஜனவரி 1977 அன்று டெல்லியில் உள்ள மொரார்ஜி தேசாய் இல்லத்தில் கூடி புதிய கட்சியை அறிவித்தன. அங்கு கூடியிருந்த தலைவர்கள் பலர் 19 மாதங்களாக சிறையில் சந்தித்து வந்திருக்கின்றனர். இதனால் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. எனவே, அவர்களுக்கிடையேயான கூட்டணியை இந்திரா காந்தியால் கணிக்கவில்லை என்று நீரஜா சௌத்ரி தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

ஜெயப்பிரகாஷ் நாராயணின் மேற்பார்வையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஜனதா கட்சியை உருவாக்கியது. வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்டிருந்த, இதற்கு முன்பு தங்களுக்குள்ளேயே போட்டிப் போட்டுக்கொண்ட சரண் சிங்கின் பாரதிய லோக்தளம், வாஜ்பாயி மற்றும் அத்வானியின் ஜனசங்கம், சமாஜ்வாதி, சுதந்திரக் கட்சி, பாரதிய கிராந்தி தளம் போன்ற எதிர்க்கட்சிகள் இந்திரா காந்திக்கும் அவசர நிலைக்கும் எதிராக ஒன்றிணைந்தன.

சந்திரசேகர் ஜனதா கட்சியின் முதல் தேசியத் தலைவரானார். செயலாளராக ராமகிருஷ்ண ஹெக்டே செயல்பட்டார்.

சில நாட்களுக்குப் பிறகு, இந்திரா காந்தியிடம் இருந்து பிரிந்து, ஜனநாயகத்திற்கான காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கிய பாபு ஜக்ஜீவன் ராமும் எதிர்க்கட்சியில் சேர்ந்தார்.

இந்தியா கூட்டணி- நாடாளுமன்ற தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மொரார்ஜி தேசாயை ஜெயப்பிரகாஷ் நாராயண் தேர்வு செய்தார்

காங்கிரஸ் அல்லாத பிரதமர் ஆன மொரார்ஜி தேசாய்

தேர்தல் அரசியலுக்குள் ஜெயப்பிரகாஷ் நாராயண் நுழையவில்லை என்றாலும் கூட்டணி முயற்சிகள் வெற்றி அடைந்தன. அடுத்த 2 மாதங்களுக்கு இந்த கூட்டணி பற்றிதான் நாடு முழுவதும் பேச்சு இருந்தது.

அவசர நிலையின்போது மக்கள் அனுபவித்த துன்பங்கள், சர்வாதிகார கொள்கைகளை அமல்படுத்தியது, சஞ்சய் காந்தியின் அணுகுமுறை, கட்டாய குடும்ப கட்டுப்பாடு போன்றவை இந்திராவுக்கு எதிரான சூழலை ஏற்படுத்தியது.

மார்ச் மாதம் தேர்தல் நடைபெற்றது. ஜனதா கட்சி என்ற குடைக்குள் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும் பாரதிய லோக் தளம் என்ற பெயரில் அவர்கள் தேர்தலை சந்தித்தனர். ஒருபுறம், இந்திரா காந்தியும் சஞ்சய் காந்தியும் இருந்தனர், மறுபுறம் ஜனதா கட்சி தலைவர்கள் இருந்தனர்.

அரசியலில் இந்திரா காந்திக்கு இருந்த பிடிப்பு, மக்கள் மனங்களில் அவருக்கு இருந்த இடம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்திரா நிச்சயம் தோற்கமாட்டார் என்று பலரும் நினைத்தனர்.

ஆனால், 1977ஆம் ஆண்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் புரட்டிப்போட்டது. இந்திராவின் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. முதன்முறையான அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தது அவர்களுக்கு சிறப்பான முடிவை வழங்கியது.

ஜனதா கட்சி 295 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் 350 இடங்களை வென்ற இந்திராவின் காங்கிரஸ் இம்முறை 154 இடங்களில் மட்டுமே வென்றது. ரே பரேலி தொகுதியில் போட்டியிட்ட இந்திராவும் அமேதியில் போட்டியிட்ட சஞ்சய் காந்தியும் தோல்வி அடைந்தனர். ராஜ் நாராயண் இந்திராவை தோற்கடித்தார். வட இந்தியாவில் கிட்டத்தட்ட காங்கிரஸ் காணாமல் போனது. அக்கட்சி வென்ற இடங்களில் பெரும்பாலானவை தென் இந்தியாவை சேர்ந்தவை.

இந்தியா கூட்டணி- நாடாளுமன்ற தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பாபு ஜக்ஜீவன் ராம்

ஜனதா கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். எதிர்க்கட்சிகளின் இந்த ஒற்றுமைக்கு 41.32 சதவீத வாக்குகள் கிடைத்தன. மொரார்ஜி தேசாய், சந்திரசேகர், அடல் பிஹாரி வாஜ்பாயி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்திரா காந்தி தோற்கடிக்கப்பட்டவுடன், அவசர நிலையும் நீக்கப்பட்டு, அவர் பதவியை ராஜினாமா செய்தார். தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஜனதா கட்சி உருவானது என்பதால் பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே முடிவு செய்ய முடியவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற பின் ஆட்சி அமைப்பது, யாருக்கு எந்த பதவியை வழங்குவது என்பது அவர்களுக்கு சவாலாக மாறியது.

பிரதமர் யார் என்பது தொடர்பாக கேள்விகள் எழுந்தன. மூன்று பெயர்கள் ஆலோசனையில் இருந்தன, அதற்கான காரணங்களும் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தன. முதல் பெயர் மொரார்ஜி தேசாய். நீண்ட நெடிய அனுபவம் உள்ளவர், காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதே பிரதமர் பதவிக்காக அவர் பெயர் ஆலோசிக்கப்பட்டது. இரண்டாவது சரண் சிங். வட இந்தியாவில் விவசாயிகள் இடையே மிகப்பெரிய தலைவராக அவர் இருந்தார். மூன்றாவது பாபு ஜக்ஜீவன் ராம். மூத்த தலைவரான அவருக்கு அமைச்சரவையில் இடம்பெற்ற 30 ஆண்டு அனுபவம் உண்டு, தலீத் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால், அவசர நிலையின்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்ததோடு அதனை ஆதரித்திருந்தார்.

கடைசியாக, மொரார்ஜி தேசாயை ஜெய்பிரகாஷ் நாராயண் தேர்வு செய்தார். இதையடுத்து, காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமராக அவர் பதவியேற்றார். சரண் சிங் உள்துறை அமைச்சராக பதவியேற்றார். ஜக்ஜீவன் ராம் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அடல் பிஹாரி வாஜ்பாயி வெளியுறவுத்துறை அமைச்சரானார்.

இந்தியா கூட்டணி- நாடாளுமன்ற தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

1980 இல் தேர்தல் வந்தபோது, இந்திரா காந்தி தனது நம்பிக்கையை மீண்டும் பெற்றார்

ஜனதா கட்சி பிளவுபட்டு ஆட்சி கவிழ்ந்தது

ஜனதா கட்சியின் உருவாக்கம் இந்திய அரசியலில் கூட்டணிகளின் சகாப்தத்திற்கு வழிவகுத்தாலும், இந்த கூட்டணி நீண்ட காலம் நீடிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளில், அது குறையத் தொடங்கினார்.

உண்மையில் இந்த புதிய அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. ஒன்று, ஆளும் நபர் அல்லது கட்சிக்கு அவசர நிலையை கொண்டு வருவதன் மூலம் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் அமைப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்த முடியாத வகையில் தேவையான அரசியலமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டன. பின்னர் அவசரகால அரசு செய்த தவறான நிர்வாகம் மற்றும் அநீதி குறித்து விசாரிக்க ‘ஷா கமிஷனை’ நியமித்தது. அப்போது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஆனால் முரண்பாடுகள், அதிகார எதிர்பார்ப்புகள், மனிஷாவின் பிரதமர் பதவி ஆசை நாளுக்கு நாள் அதிகரித்தது. பரஸ்பர சச்சரவுகள் வர ஆரம்பித்தன. பிரதமர் தேசாய் கூட இந்த விமர்சனத்திலிருந்து விடுபடவில்லை. இந்த வேறுபாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்தன.

இறுதியாக சரண் சிங்கின் பாரதிய லோக் தளம் தனது ஆதரவை வாபஸ் பெற்றது. இன்னும் சில தோழமை கட்சிகள் வெளியே வந்தன. இறுதியாக, 19 ஜூலை 1979 அன்று, சிறுபான்மையினராக இருந்த மொரார்ஜி தேசாய் பதவியை ராஜினாமா செய்தார். 1980 இல் அடுத்த தேர்தல் வரை, சரண் சிங் பெரும்பான்மையைப் பெற முயன்றார், ஆனால் வெற்றிபெறவில்லை.

இறுதியாக 1980 இல் தேர்தல் வந்தபோது, இந்திரா காந்தி தனது நம்பிக்கையை மீண்டும் பெற்றார். அவர் நாடு முழுவதும் பயணம் செய்தார். 3 ஆண்டுகளுக்கு முன்பு 295 எம்.பி.க்களுடன் மாபெரும் வெற்றியைப் பெற்ற ஜனதா கட்சி வெறும் 31 இடங்களுக்குத் தள்ளப்பட்டது.

இதன் பின்னர், ஜனதா கட்சியில் இருந்த கட்சிகள் தங்கள் வழிகளில் செல்லத் தொடங்கின. ஜனதா கட்சி பிளவுப்பட்டது. அடல் பிஹாரி வாஜ்பாயி, எல்.கே.அத்வானி ஆகியோரால் 1980ல் பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டது. பாஜக வளர்ந்து தற்போது மத்தியில் ஆட்சி அதிகாரத்திலும் உள்ளது.

ராஷ்ட்ரிய லோக் தளம் ஹரியானாவிலும் உத்தர் பிரதேசத்திலும் அரசியலில் உள்ளது. மண்டல் கமிஷனுக்கு பின் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் சமாஜ்வாதி கட்சியும் பீகார், உத்தர் பிரதேசத்தில் வளர்ச்சி அடைந்தன.

1977 ஆம் ஆண்டு ஜனதா கட்சியின் ‘எதிர்ப்பு சித்தாந்தங்களை மீறி ஜனநாயகத்திற்காக ஒன்றுபடுவோம்’ என்ற திட்டத்தின்படியே ‘இந்தியா’ கூட்டணியும் ஒன்று சேர்ந்துள்ளதாகக் கூறுகிறது. ஆனால் அந்த சோதனையின் அனுபவங்களிலிருந்து அவர்கள் என்ன கற்றுக்கொள்வார்கள்? அந்த சோதனை வெற்றி என்றும், உடனடி தோல்வி என்றும் கூறப்பட்டது. வரலாற்றில் இருந்து ‘இந்தியா’ என்ன கற்றுக் கொள்ளும்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *