தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்: 10 ஆயிரம் வேப்பங்கன்றுகளை வளர்க்க ரூ.2 கோடியா? விவசாயிகள் கேள்வி

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்: 10 ஆயிரம் வேப்பங்கன்றுகளை வளர்க்க ரூ.2 கோடியா? விவசாயிகள் கேள்வி

தமிழக வேளாண் நிதிநிலை அறிவிப்புகள் போதுமானவையா?

பட மூலாதாரம், mkstalin/X

தமிழ்நாட்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்கிறார்கள் விவசாயிகளும் பொருளாதார நிபுணர்களும்.

தமிழ்நாட்டின் வேளாண் நிதிநிலை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப். 20) தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

கடந்த ஆண்டில் ரூ. 38,904 கோடி ரூபாய்க்கு வேளாண் நிதிநிலை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு, 42,281 கோடி ரூபாய்க்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில், குறிப்பிடத்தக்க திட்டமாக மண் வளத்தைக் காப்பதற்கான “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” என்ற புதிய திட்டம் 206 கோடி ரூபாயில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

அது தவிர, 100 உழவர் அங்காடிகள் அமைப்பதற்கான அறிவிப்பு, எண்ணெய் வித்துகள், துவரம் பருப்பு பயிரிடும் பரப்பை அதிகரிப்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

மேலும், சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு அளித்த விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்த ஆதாய விலையைவிட கூடுதலாக ஒரு டன்னுக்கு 215 ரூபாய் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

டெல்டா மாவட்டங்களில் 2,235 கி.மீ. தூரத்திற்கு சி, டி பிரிவு கால்வாய்கள் தூர்வாரப்படும் என்றும் 5,338 கி.மீ. தூரத்திற்கு ஆறுகள், கால்வாய்கள் தூர்வாரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக வேளாண் நிதிநிலை அறிவிப்புகள் போதுமானவையா?

பட மூலாதாரம், Getty Images

‘மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம்’

இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் முக்கியமானவையாக இருந்தாலும் இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்கிறார்கள் வேளாண் பொருளாதார நிபுணர்களும் விவசாயிகளும்.

“விவசாயத்திற்கு தனியான நிதிநிலை அறிக்கை என்றவுடன் பலர் இதனை விவசாயத்திற்கு அளிக்கப்பட்ட மரியாதையைப் போல பார்க்கிறார்கள். அப்படியல்ல, விவசாயத்தில் பிரச்னைகள் என்பவை இடம் சார்ந்து இருக்கும். அதைத் தனித்தனியாக விவாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தனி நிதிநிலை அறிக்கை வேண்டும் என்று கோரப்பட்டது. அப்படி விவாதிக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் என்று பார்த்தால், இந்த நிதிநிலை அறிக்கை மண்வளம், பயிர்களின் வளம், அதிக சத்துகள் கிடைப்பது என மூன்றையுமே பேசியிருப்பது முக்கியமானது. இதற்காக ‘மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம்’ என்ற திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அது வரவேற்கத்தக்கது.

அதேபோல, ரசாயனமற்ற விவசாயம் குறித்துப் பேசும்போது, அதற்கான இடுபொருள் தேவை என்பது மிக முக்கியமானது. அதை இந்த நிதிநிலை அறிக்கையில் பேசியிருக்கிறார்கள். ஆனால், இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது” என்கிறார், வேளாண் பொருளாதார நிபுணரான ஆர். கோபிநாத்.

வேப்பங்கன்று வளர்க்க ரூ.2 கோடி எதற்கு?

தமிழக வேளாண் நிதிநிலை அறிவிப்புகள் போதுமானவையா?

பட மூலாதாரம், Getty Images

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியும் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் திரூவாரூர் மாவட்டச் செயலாளருமான அழகர்ராஜ், கடந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களே முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்கிறார்.

“கடந்த நிதிநிலை அறிக்கையில் பருத்தி உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார்கள். திருவாரூர் மாவட்டத்தில்தான் அதிகம் பருத்தி விளைகிறது. பெரிதாக எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது 10 ஆயிரம் வேப்பங்கன்றுகளை உருவாக்க 2 கோடி ரூபாய் செலவிடப் போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். வேப்பங்கன்றுகள் சாதாரணமாக வளரக் கூடியவை. அதற்காக 2 கோடி ரூபாய் நிதியைச் செலவழிப்பது தேவையற்றது” என்கிறார்.

அதேபோல, பல அறிவிப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்கிறார் அவர். “நெல் ஜெயராமன் பெயரில் பாரம்பரிய நெல் ரகங்களைக் காப்பாற்ற 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அது சுத்தமாகப் போதாது. ஏதோ பெயருக்குச் செய்ததைப் போல இருக்கிறது. அதேபோல, காவிரி டெல்டா பகுதியில் தூர்வார ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியும் போதாது” என்கிறார் அவர்.

16,500 கோடி ரூபாய் விவசாயிகளின் கடன்களுக்காக ஒதுக்கியிருந்தாலும் அந்தக் கடன்கள் சிறிய விவசாயிகளுக்குக் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது என்கிறார் அவர்.

”10 உலர்த்திகள் போதாது”

தமிழக வேளாண் நிதிநிலை அறிவிப்புகள் போதுமானவையா?

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் விவசாய இயந்திரங்கள், ஆய்வகங்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது என்றும் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்கிறார் ஆர். கோபிநாத்.

“மண்வளத்தை ஆய்வு செய்வதற்கான ஆய்வகம் ஒன்று மயிலாடுதுறையில் அமைக்கப்படும் எனச் சொல்லியிருக்கிறார்கள். மண் வள ஆய்வகங்களைப் பொருத்தவரை அவை பெரும் எண்ணிக்கையில் தேவைப்படுகின்றன. என்னதான் நடமாடும் ஆய்வகங்கள் இருந்தாலும் அவை போதுமானதாக இல்லை.

இந்த நடமாடும் ஆய்வகங்களில் செய்யப்படும் ஆய்வுகளில் நுண்ணூட்டச் சத்துகள் குறித்து அறிய முடிவதில்லை. விவசாயம் செய்யக்கூடிய பகுதிகளில் ஐம்பது கிலோ மீட்டருக்கு ஒன்று என மண் வள ஆய்வகங்களை அமைக்க வேண்டும்.

மேலும், தமிழ்நாட்டில் 35 சதவீத்திற்கு மேல் நெல்தான் பயிரிடப்படுகிறது. இந்த நெல்லை விவசாயிகள் விற்கும்போது, ஈரப்பதம் குறித்த பிரச்னை வருகிறது. இதை எதிர்கொள்ள ‘ட்ரையர்’ எனப்படும் உலர்த்திகள் தேவைப்படுகின்றன. எல்லோருமே இதனைக் கேட்கிறார்கள். இப்போது அரசு 10 உலர்த்திகளை வாங்கப்போவதாகச் சொல்கிறது. பத்து உலர்த்திகள் போதாது, நிறைய வாங்க வேண்டும்” என்கிறார் ஆர். கோபிநாத்.

இயற்கைப் பேரிடர்கள் வரும்போது இழப்பீடு வழங்குவது என்பது பெரும் சிக்கலான விஷயமாக இருப்பதால், அதனை பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்கிறார் அவர்.

“கடந்த ஆண்டு சில மாவட்டங்களில் மழை பெய்து குறுவை சாகுபடி பயிர்கள் சேதமடைந்த போது, அரசு நிவாரணம் அளித்தது. அப்படி அரசு நிவாரணம் அளிக்கும்போது அதில் பல பிரச்னைகள் வருகின்றன. இந்த நிவாரணத்தை பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவருவதன் மூலம், அந்த இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனமே கொடுத்துவிடும். அதனைச் செய்ய வேண்டும்” என்கிறார் கோபிநாத்.

இந்தியாவில் விளைபொருட்களுக்கான ஆதார விலை என்பது எப்போதுமே சிக்கலான ஒன்றாக இருக்கிறது. நெல், கோதுமை உள்ளிட்ட பல பயிர்களுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் இந்தியா முழுவதுமே இருந்து வருகின்றன.

“தமிழ்நாடு அரசின் இந்த நிதிநிலை அறிக்கையில் கரும்புக்கு மத்திய அரசின் ஆதார விலையைவிட ஒரு டன்னுக்கு கூடுதலாக 215 ரூபாய் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். நெல்லுக்கு அப்படி ஏதும் சொல்லவில்லை” என்கிறார் கோபிநாத்.

”கரும்புக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும்”

தமிழக வேளாண் நிதிநிலை அறிவிப்புகள் போதுமானவையா?

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தாலும் அவற்றுக்கு நிதி ஒதுக்குவதில்லை எனக் குற்றம்சாட்டுகிறார் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன்.

“குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் கிராம வளர்ச்சி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு இல்லாமல் முடக்கப்பட்டுள்ளது. திமுக தங்களுடைய தேர்தல் அறிக்கையில் கரும்பு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயும் நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயும் தருவதாகச் சொன்னார்கள். இப்போதுவரை அதைப் பற்றி பேச்சே இல்லை” என்கிறார் பி.ஆர். பாண்டியன்.

இதே விஷயத்தையே சுட்டிக்காட்டுகிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம். “நெல்லுக்கு 2,500 ரூபாயும் கரும்புக்கு 4,000 ரூபாயும் தருவதாகச் சொன்னது திமுகதான். ஆனால், நான்கு பட்ஜெட்டுகள் தாக்கல் செய்த பிறகும் அதைப் பற்றி பேசாதது வருத்தமளிக்கிறது. இப்போது நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2,085 ரூபாய் அல்லது 2,107 ரூபாய் தரப்படுகிறது.

கேரளாவில் 2,860 ரூபாய் தருகிறார்கள். சத்தீஸ்கரில் 2,750 ரூபாய் தருகிறார்கள். தமிழ்நாடு அரசு ஏன் அதைச் செய்யத் தயங்குகிறது? அதேபோல, கரும்புக்கான ஊக்கத் தொகையாக கடந்த ஆண்டு வரை டன்னுக்கு 195 ரூபாய் தந்தார்கள். இந்த ஆண்டு 215 ரூபாய் தருகிறார்கள். 100 கிலோவுக்கு 20 ரூபாய் அதிகரித்திருக்கிறார்கள். இது எப்படி சரியாக இருக்கும்?” எனக் கேள்வியெழுப்புகிறார் சண்முகம்.

”காப்பீட்டு நிறுவனம் தொடங்க வேண்டும்”

தமிழக வேளாண் நிதிநிலை அறிவிப்புகள் போதுமானவையா?

பட மூலாதாரம், Getty Images

எல்லா வேளாண் நிதிநிலை அறிக்கைக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் இதனை வலியுறுத்தினாலும் எந்த முன்னேற்றமும் இல்லை என்கிறார் அவர்.

பி.ஆர். பாண்டியன் வேறு சில விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறார்.

பொது விநியோகத் திட்டத்தில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை விநியோகித்தால் விவசாயிகளுக்குக் கூடுதல் விலை கிடைக்கும். இது குறித்து பல முறை அரசிடம் சொல்லியும் அது பற்றிய அறிவிப்புகள் இல்லை என்கிறார் அவர்.

பயிர் காப்பீட்டைப் பொறுத்தவரை, தமிழ்நாடு அரசே ஒரு காப்பீட்டு நிறுவனத்தைத் துவக்க வேண்டும் என்கிறார் சண்முகம்.

“பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் பெரும் லாபம் சம்பாதிக்கிறார்கள். தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு காப்பீட்டுத் தொகையாக 2,400 கோடி ரூபாய் கொடுத்தது. ஆனால், காப்பீட்டு நிறுவனங்கள் 1600 கோடி ரூபாய்தான் விவசாயிகளுக்கு அளித்தன. இது அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. ஆகவே தமிழ்நாடு அரசே ஒரு காப்பீட்டு நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும்” என்கிறார் பெ. சண்முகம்.

இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது, பயிர் கடனுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 16,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருப்பது கன்னியாகுமரியில் தேனீக்களுக்கான முனையம் அமைப்பது ஆகியவை இந்த நிதிநிலை அறிக்கையில் மிக முக்கியமான அறிவிப்புகள் என்கிறார் அவர்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *