மிக்ஜாம் புயல்: 2015 சென்னை வெள்ளம் போன்ற நிலைமை ஏற்படுமா? – முக்கிய கேள்விகளும் வானிலை நிபுணர்களின் பதில்களும்

மிக்ஜாம் புயல்: 2015 சென்னை வெள்ளம் போன்ற நிலைமை ஏற்படுமா? - முக்கிய கேள்விகளும் வானிலை நிபுணர்களின் பதில்களும்

புயல்

பட மூலாதாரம், IMD

மிக்ஜாம் புயல் நாளை (டிச. 5) முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கடக்கக்கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயலின் அறிகுறிகள் தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே தென்படத் தொடங்கிவிட்டன. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை முதல் கன கன மழை பெய்து வருகிறது.

பெரும்பாலான சாலைகளில் நீர் தேங்கியிருப்பதால், சென்னையின் முக்கிய சுரங்கப் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கிறன.

வங்கக்கடலின் தென்பகுதியிலிருந்து வடக்கு நோக்கி பயணித்த முந்தைய புயல்களான ஓகி, நிவர், நிஷா ஆகிய புயல்கள் மழையை அதிகமாக கொடுத்தன. அதேபோன்று, தமிழக கடற்கரையை நோக்கி வந்து செங்குத்தாக கடந்துசென்ற தானே, வர்தா, கஜா போன்ற புயல்களால் மழையைவிட காற்றின் தாக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அதிகமாக இருந்தன.

அப்படி பார்க்கும்போது தென்கிழக்கு வங்கக்கடலில் இருந்து மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்துவருவதால் மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு அதிக மழையை கொடுக்கும் என்றே வானிலை ஆய்வு மையங்களும் தனியார் வானிலை ஆர்வலர்களும் கணித்துள்ளனர்.

மிக்ஜாம் புயல் குறித்தும் புயலின்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் எழும் பல்வேறு கேள்விகளுக்கான பதில்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பிபிசி தமிழுக்கு அளித்த தகவல்கள், சென்னை மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

மிக்ஜாம் புயல்

பட மூலாதாரம், Greater Chennai Corporation

மிக்ஜாம் புயல் தற்போது எங்கு நிலைகொண்டிருக்கும்?

ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிநிலவரப்படி மிக்ஜாம் புயல் புதுச்சேரியில் கிழக்கு – வடகிழக்கில் 240 கி.மீ. தொலைவிலும் சென்னையில் கிழக்கு – தென்கிழக்கு திசையில் 210 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக, ”மிக்ஜாம் புயல் இன்று காலையில் வட தமிழ்நாடு-தெற்கு ஆந்திராவில் நிலைகொண்டிருக்கும். அதாவது, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகல் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும்” என்கிறார் பாலச்சந்திரன்.

புயல் சரியாக எங்கு கரையைக் கடக்கும்?

தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 5-ஆம் தேதி முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கடக்கக்கூடும்.

இன்று கனமழைக்கான வாய்ப்புள்ள மாவட்டங்கள் என்னென்ன?

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். 24 மணிநேரத்தில் 12-20 செ.மீ. அளவுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும் செவ்வாய்க்கிழமை அன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்புள்ளது?

தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல்

பட மூலாதாரம், Greater Chennai Corporation

மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையைக் கடக்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்புக்கான காரணம் என்ன?

இந்த கேள்விக்கு பதிலளித்த பாலச்சந்திரன், “ஆந்திராவில் கரையை கடந்தாலும் புயலின் மையப்பகுதி சென்னைக்கு 100 கி.மீ. வரை நெருங்கி வருவதால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்கள் முழுவதும் கனமழை பெய்யும் என சொல்ல முடியாது. ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.

புயல் பயணிக்கும் திசையிலும் அதன் தாக்கம் இருப்பதற்கான காரணம் என்ன?

தனியார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான் இந்த கேள்விக்கு பதிலளிக்கையில், “இந்த புயல் மெதுவாக நகர்கிறது. அப்படி நகரும்போது புயல் சுழன்றுவரும் பகுதிகளிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. கரையை கடக்கும் பகுதிகளில் அதன் தாக்கம் அதிகம் இருக்கும் என்றாலும் அது பயணிக்கும் திசைகளிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

முன்பு கூறியதுபோல புயல் மெதுவாக நகர்கிறது என்பதால், வட தமிழக கடற்கரையோர பகுதிகளில் இப்புயல் அதிக நேரம் நிலைகொண்டிருக்கும். எனவே, அப்பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

புயலின்போது காற்றின் வேகம் எப்படி இருக்கும்?

திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோமீட்டர் வேகத்திலும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும், புயல் சென்னைக்கு 100 கி.மீ. வேகத்தில் நெருங்கிவரும் என்பதால், எவ்வளவு தூரத்தில் புயல் இருக்கும் என்பதைப் பொறுத்து காற்றின் வேகம் மாறுபடும். மழையும் அதைப்பொறுத்தே இருக்கும்.

மிக்ஜாம் புயல்

பட மூலாதாரம், Greater Chennai Corporation

மிக்ஜாம் புயலால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2015-இல் நிகழ்ந்தது போன்று வெள்ளம் ஏற்படுமா?

“வெள்ளம் ஏற்படுமா, இல்லையா என இப்போதே கூறுவது மிகவும் முன்கூட்டிய ஒன்றாகும். வெள்ளம் ஏற்படுவதற்கான காரணிகள் பல உண்டு” என்றார், பிரதீப் ஜான்.

புயல், மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின்போது தொலைக்காட்சி, மொபைல் உள்ளிட்ட மின் சாதனங்களை ஏன் பயன்படுத்தக் கூடாது?

தேசிய பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த ராம்குமார் பிபிசியிடம் பேசுகையில், “இயற்கை பேரிடர்களின்போது மின் கம்பங்கள் சேதமடைந்து அதனால் மின் தடை ஏற்படும். மீண்டும் மின்சாரம் வந்தவுடன் மின்னழுத்தத்தில் ஏற்ற-இறக்கங்கள் ஏற்படும் என்பதால் மின்சாதனங்கள் பழுதாகலாம் என்ற காரணத்தால் இயற்கை சீற்றங்களின்போது மின் சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என்றார்.

மழையிலிருந்து தற்காத்துக்கொள்ள மரத்திற்கு அடியில் நிற்பது பாதுகாப்பானதா?

”மரங்களுக்கு மின்னாற்றலை வெளியேற்றும் தன்மை அதிகம் என்பதால் அதன் அடியில் நிற்பது பாதுகாப்பானது அல்ல. இடி, மின்னல் சமயங்களில் மரங்களுக்கு அடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். முன்பே கூறியதுபோன்று மின்கம்பங்கள், மின் கம்பிகள், மரங்கள் விழுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்” என்றார். ராம்குமார்.

மிக்ஜாம் புயல்

பட மூலாதாரம், Greater Chennai Corporation

இதுதவிர, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

“இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அளிக்கும் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் பேரில் முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.

முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர்புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

ஒருசில நாட்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு, நீர், பால் மற்றும் மருந்துகளை கையிருப்பில் வைக்க வேண்டும்.

கயிறு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட், அவசர விளக்கு, தீப்பெட்டி, மின்கலங்கள், பேண்ட் எய்ட் (Band aid), உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.

புயல் வரும் நேரத்தில் வெளியே, குறிப்பாக கடற்கரைப் பகுதிகளுக்குச் சென்று வீடியோ எடுப்பது, செல்ஃபி எடுப்பது போன்றவற்றில் ஈடுபடக் கூடாது. இது உயிருக்கே ஆபத்தாக அமையலாம்.

வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும். வீட்டின் கதவோ, ஜன்னல் கதவோ நல்ல நிலையில் இல்லாவிட்டால், அதை உடனடியாகச் சரி செய்துகொள்வது நல்லது.

காற்றின் அழுத்தத்தால் ஜன்னல் கண்ணாடிகள் விரிசல் விட்டு உடையவோ, உடைந்து சிதறவோ வாய்ப்புண்டு. மரப்பலகை, துணி ஏதேனும் இருந்தால், ஜன்னலை அதை வைத்து மூடிக்கொள்ளுங்கள். கண்ணாடித் துண்டுகள் காற்றின் வேகத்தில் வீட்டுக்குள் சிதறுவதை அது தடுக்கும்.

பலத்த காற்று காரணமாக ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் தகடுகளாலான மேற்கூரைகள் பறந்துவிழுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் மொட்டை மாடிகளில் நின்று வேடிக்கை பார்க்க வேண்டாம்.“

மிக்ஜாம் புயல்

பட மூலாதாரம், TN DIPR

புயல் சேதங்கள், பாதிப்புகள் குறித்த உதவி எண்கள்:

மாநில அவசரகால செயல்பாட்டு மையம் – 1070

வாட்ஸ் அப் எண் – 94458 69848

மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் – 1077

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *