அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் யார் பூஜை செய்வது என்பதில் சர்ச்சை – என்ன நடக்கிறது?

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் யார் பூஜை செய்வது என்பதில் சர்ச்சை – என்ன நடக்கிறது?

அயோத்தி, ராமர் கோவில், ராம் ஜென்மபூமி, பாபர் மசூதி, உத்தரப்பிரதேசம், பாஜக, இந்தியா

பட மூலாதாரம், ANI

‘ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை’ — இது அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் பணிகளை கவனித்து வரும் அறக்கட்டளை. இந்த அமைப்பு வரும் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறவுள்ள பிரான் பிரதிஷ்டை எனும் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழ்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி உட்பட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல வி.வி.ஐ.பி விருந்தினர்கள் பிரான் பிரதிஷ்டா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கோவிலின் கருவறை கட்டுமானப் பணிகள் தொடர்ந்து 24 மணி நேரமும் நடந்து வருகின்றன.

புதிய கோவில் அர்ச்சகர்களுக்கான தேர்வும் நடந்து வருகிறது. முதற்கட்டமாக பெறப்பட்ட 300 விண்ணப்பங்களில், 21 அர்ச்சகர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கான அர்ச்சகர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் பிபிசியிடம் பேசும்போது, “பயிற்சி முடிந்ததும், சனாதன தர்மம், வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களில் அவர்களுக்கு உள்ள ஞானம் குறித்து சோதனை நடத்தப்படும். ஒரு சிலருக்கு மட்டுமே அயோத்தியில் வேலை கிடைக்கும், மற்ற இளைஞர்கள் நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு அனுப்பப்படுவார்கள்,” என்று கூறினார்.

வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பிரான் பிரதிஷ்டைக்கு தலைமை தாங்கும் வாரணாசியைச் சேர்ந்த இரண்டு அர்ச்சகர்களின் பெயர்களையும் ராமர் கோவில் கமிட்டி அறிவித்துள்ளது.

காசியிலிருந்து வரும் தலைமை அர்ச்சகர்கள்

அயோத்தி, ராமர் கோவில், ராம் ஜென்மபூமி, பாபர் மசூதி, உத்தரப்பிரதேசம், பாஜக, இந்தியா
படக்குறிப்பு,

ராமர் கோவில் அர்ச்சகர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி குறித்து பேசும் சம்பத் ராய்

லக்ஷ்மிகாந்த் தீட்சித் மற்றும் கணேஷ்வர் சாஸ்திரி திராவிட், இவர்கள் தான் அந்த இரண்டு அர்ச்சகர்கள்.

சம்பத் ராய் மேலும் கூறுகையில், “லக்ஷ்மிகாந்த் தீட்சித் மற்றும் கணேஷ்வர் சாஸ்திரியின் பெயர்களைக் கேட்டால், அயோத்தியில் சடங்குகளைச் செய்யும் பிராமணர்கள் கூட அவர்களை தங்களது குருமார்கள் என்று தான் கூறுவார்கள்.

“வாரணாசி எப்போதுமே அறிஞர்களின் நகரமாக விளங்கி வருகிறது, அதே சமயம் இந்த விஷயத்தில் அயோத்தி நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது,” என்று அவர் கூறுகிறார்.

“அயோத்தியில் கூட காசியில் இருப்பது போன்ற ஒன்று அல்லது இரண்டு அறிஞர்கள் இருக்கலாம். ஆனால் வாரணாசியைச் சேர்ந்த லக்ஷ்மிகாந்த் தீட்சித் மற்றும் கணேஷ்வர் சாஸ்திரி திராவிட் ஆகிய இருவர் தான் கும்பாபிஷேகத்தை தலைமையேற்று நடத்துவார்கள் என முடிவு எடுத்தாகிவிட்டது,” எனவும் சம்பத் ராய் கூறுகிறார்.

ராமர் கோவில் கமிட்டியின் இந்த முடிவை அயோத்தியின் சில உள்ளூர் மத குருமார்கள் மற்றும் பூசாரிகள் எதிர்பார்க்கவில்லை. ஜனவரி 22 அன்று நடைபெறும் கும்பாபிஷேகத்திற்கான தலைமை அர்ச்சகரை ஆயிரக்கணக்கான கோயில்கள் கொண்ட நகரமான அயோத்தியில் இருந்து ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அயோத்தி, ராமர் கோவில், ராம் ஜென்மபூமி, பாபர் மசூதி, உத்தரப்பிரதேசம், பாஜக, இந்தியா
படக்குறிப்பு,

ஹனுமான் கர்ஹியின் தலைமை குரு, மஹந்த் தரம்தாஸ்

1949-ஆம் ஆண்டில், மஹந்த் தரம் தாஸின் குருவும், அயோத்தி ஹனுமான் கர்ஹியின் தலைமை மஹந்துமான பாபா அபிராம் தாஸ் அந்த சர்ச்சைக்குரிய இடத்தில் ராம் லல்லாவின் சிலையை வைத்தார்.

மஹந்த் தரம் தாஸ் கூறுகையில், “பூஜை நடத்த ஒரு பூசாரி வருகிறார் என்றால், அவர் எப்படி பூஜை நடத்துவார் என்று பார்ப்போம். இங்குள்ளவர்களையும் பூஜையில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அனைவருக்கும் மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்,” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை, வேறு ஊரில் இருந்து ஆட்களை அழைத்து வருகிறார்கள், அது ஒன்றும் அவ்வளவு பெரிய வேலை இல்லை. பிரம்மா என்ற ஒரு ஆச்சாரியார் இங்கு இருக்கிறார். அவர் ஒரு அர்ச்சகராக பூஜைகளை சிறப்பாக செய்கிறார்.

“அவர்களுக்கு கடவுள் மீது மரியாதை இருக்கிறது, ஆனால் முழுமனதாக இல்லை. எங்களது கடவுளின் சிலை மிகவும் மதிப்புமிக்க ஒன்று, அவரது பெயரில் தான் உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது நினைவில் இருக்கட்டும். சரி இதுவும் நல்லது தான், அவர்கள் விருப்பப்படியே செய்யட்டும்,” என்று கூறுகிறார்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு பின், 2020-இல் ராமர் கோவில் கட்டும் பணி துவங்கியது. 67 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பிரம்மாண்டமான வளாகத்தை முழுமையாக சுத்தம் செய்த பிறகு, கோவிலுக்காக இரண்டு ஏக்கர் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த புதிய ராமர் கோவிலின் கருவறை கட்டும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இங்கு கடந்த பல மாதங்களாக லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, ரூபாய் மட்டுமின்றி, தங்கம், வெள்ளி போன்ற காணிக்கைகளைச் செலுத்தி வருகின்றனர். இதற்காக கோவில் வளாகம் அருகே வங்கி ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தன்னிப்பூர் மசூதியின் நிலை என்ன

அயோத்தி, ராமர் கோவில், ராம் ஜென்மபூமி, பாபர் மசூதி, உத்தரப்பிரதேசம், பாஜக, இந்தியா
படக்குறிப்பு,

தன்னிபூர் கிராமத்தில் உள்ள இந்த இடத்தில் ஒரு மசூதி கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது

ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் தளத்தில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தன்னிபூர் கிராமத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் கட்டப்பட உள்ள மசூதிக்கு தற்போது நிதி திரட்டப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், ராமர் கோயில் கட்டப்பட்டதன் மூலம் அயோத்தியில் ஒரு அசுர மாற்றம் வந்துள்ளது. அயோத்தி இதற்கு முன்பாக பைசாபாத் மாவட்டத்தின் கீழ் வந்தது.

சரயு ஆற்றின் மலைப்பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. புதிய சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய விமான நிலையத்திற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இந்த முழு திட்டத்திலும் இழப்பீடு வழங்கிய பிறகு, சுமார் இரண்டாயிரத்தி ஐநூறு வீடுகள் இடிக்கப்பட்டன.

அயோத்தி, ராமர் கோவில், ராம் ஜென்மபூமி, பாபர் மசூதி, உத்தரப்பிரதேசம், பாஜக, இந்தியா
படக்குறிப்பு,

துர்கா பிரசாத் குப்தா

39 வயதான துர்கா பிரசாத் குப்தா ஒரு சிற்றுண்டி கடையை வைத்திருந்தார், அந்த கடை இடிக்கப்பட்டு, அதற்காக அவருக்கு இழப்பீடும் வழங்கப்பட்டது. இப்போது புதிய இடத்தில் ஒரு சிறிய கடை நடத்தி வருகிறார்.

அதற்கு அவர், “முன்பிருந்த நிலையுடன் ஒப்பிட்டால், இப்போது இங்கு வளர்ச்சிப் பணிகள் அதிகளவில் நடக்கின்றன. புதிய சாலைகள், ரயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன. இனி வரும் காலங்களில் இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் ஆனால் அதே வேளையில் பிரச்சனைகளும் அதிகமாக இருக்கும்.

“எனவே முன்பு இருந்ததைப் போல பெரிய கடையாக வைக்க வேண்டும். இப்போது எப்படியோ இந்த வண்டிக்கடை மூலம் சம்பாதித்து வருகிறேன். குடும்பம் இருக்கிறது, அவர்களுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும், ஆனால் வண்டிக்கடை வருமானம் மூலம் செலவுகளை சமாளிக்க முடியவில்லை,” என்கிறார்.

வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் நடப்பது என்ன?

அயோத்தி, ராமர் கோவில், ராம் ஜென்மபூமி, பாபர் மசூதி, உத்தரப்பிரதேசம், பாஜக, இந்தியா
படக்குறிப்பு,

அயோத்தியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன

மத்திய, மாநில அரசுகள் இணைந்து அயோத்தியில் 30,000 கோடி ரூபாய்க்கு மேல் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கியுள்ளன என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இப்போது கண்கவர் ஹோட்டல்களும் மற்றும் புதிய நெடுஞ்சாலைகளும் நகரத்தில் தென்படுகின்றன, ஆனால் பல ஆண்டுகளாக பண்டைய அயோத்தியில் வாழும் மக்களின் எதிர்பார்ப்பு வேறு மாதிரியாக உள்ளது.

ராம் காட் அருகே 150 ஆண்டுகள் பழமையான பாட்னா கோவிலின் அர்ச்சகர் ஆஷிஷ் கிருஷ்ண சாஸ்திரி கூறுகையில், “பல்வேறு இடங்களில் அவர்கள் புதிதாக கட்டும் ஹோட்டல்கள், கட்டிடங்கள், சாலைகள் போன்றவற்றை நிறுத்துமாறு அரசை கேட்டுக்கொள்கிறேன்.

“அதை செய்தால் உபயோகமாக தான் இருக்கும், ஆனால் நமது சரித்திரக் குறியீடுகளாக விளங்கும் அயோத்தியின் பழமையான கோவில்கள் பலப்படுத்தப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். அரசுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்,” என்கிறார்.

வெளியிலிருந்து தோன்றுவதை விட அயோத்தி மிகவும் பெரியது. பல தெருக்களில் அமைந்துள்ள பழங்கால கோவில்கள் மற்றும் தர்மசாலைகள் உலக அளவில் அறியப்படாமல், இன்றும் ராமரின் பெயரால் உள்வாங்கப்படுகின்றன.

அயோத்தி, ராமர் கோவில், ராம் ஜென்மபூமி, பாபர் மசூதி, உத்தரப்பிரதேசம், பாஜக, இந்தியா
படக்குறிப்பு,

பாட்னா கோவில் அர்ச்சகர் ஆஷிஷ் கிருஷ்ண சாஸ்திரி

சீதா குண்ட் அருகே உள்ள ராம்-பிஹாரி கோயிலுக்குள் ஒன்றரை மணி நேரம் கீர்த்தனை செய்துவிட்டு எங்களைச் சந்திக்க வந்த பூசாரி கோஸ்வாமி ஜியிடம், “உங்கள் இடத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறதா?” என்று கேட்டோம்.

அதற்கு பதிலளித்த பூசாரி கோஸ்வாமி, “நீங்கள் இதையெல்லாம் முதல்முறையாகக் கேட்கிறீர்கள், வேறு யாரும் இதையெல்லாம் கேட்கவில்லை. நிலைமை என்ன, என்ன நடந்தது? மாற்றம் உண்டா, அப்படியா? என பல கேள்விகளைக் கேட்காமல், எல்லோரும் இதைக் கண்டுகொள்ளாமல் செல்கிறார்கள்.

“முன்பு சில சாதுக்கள் ஓய்வூதியம் பெற்று வந்த நிலையில் தற்போது அனைத்து சாதுக்களின் ஓய்வூதியமும் நிறுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கும்போது, ​​இப்போது சாதுவுக்கு அது கிடைக்காது என்ற பதிலே கிடைக்கிறது. முதிய சாதுக்களுக்கு யார் தான் உதவி செய்வார்கள்?” என்கிறார்.

ராமரைக் காண குவியும் மக்கள்

அயோத்தி, ராமர் கோவில், ராம் ஜென்மபூமி, பாபர் மசூதி, உத்தரப்பிரதேசம், பாஜக, இந்தியா
படக்குறிப்பு,

ராமரை தரிசிக்க வந்த ஒரு பக்தர்

இந்த அயோத்தி நகரின் ஒரு யதார்த்த நிலை என்னவெனில், ராமர் கோவில் கட்டும் பணி துவங்கி ராம் லல்லாவின் சிலையை தற்காலிக இடத்தில் வைத்ததில் இருந்தே, மக்கள் கூட்டம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

டெல்லியில் இருந்து தரிசனத்திற்காக வந்த நிர்மலா குமாரி, கோவில் வளாகத்திற்கு வெளியே நம்மிடம் பேசினார்.

“வளாகத்தின் உள்ளே ஒரு நல்ல உணர்வு இருக்கிறது. பிள்ளைகளை அழைத்து வரமுடியவில்லையே என்று மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால் வீடியோ கால் செய்து பிள்ளைகளுக்கு அனைத்தையும் காட்டினோம். நாங்கள் இங்கிருந்து கொஞ்சம் மண்ணை எடுத்து பத்திரப்படுத்தி வைத்துள்ளோம். அதை டெல்லிக்கு கொண்டு செல்கிறோம்” என்று கூறினார்.

இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டின் பிரதமர் 2024 ஜனவரியில் நடக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பது சரியா என்ற விவாதமும் தொடர்கிறது.

பல தேசிய எதிர்க்கட்சிகளும் இதை 2024-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுடன் தொடர்புபடுத்தி விவாதித்து வருகிறார்கள்.

‘பா.ஜ.க ராமர் பெயரில் அரசியல் செய்கிறது’

அயோத்தி, ராமர் கோவில், ராம் ஜென்மபூமி, பாபர் மசூதி, உத்தரப்பிரதேசம், பாஜக, இந்தியா

சமாஜ்வாடி கட்சியின் உத்தரபிரதேச பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெய்சங்கர் பாண்டே, “ஆளும் பாரதிய ஜனதா கட்சி ராமர் பெயரில் அரசியல் செய்கிறது,” என்று கருதுகிறார்.

“சனாதன தர்மம் அனைவருக்கும் சொந்தமானது, கடவுள் ராமர் அனைவருக்கும் சொந்தமானவர் என்பதை இன்று இல்லை என்றால் நாளை பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள். மகாத்மா காந்தி ராமராஜ்ஜியத்தை மட்டுமே கற்பனை செய்தார்.

“ஆனால் ஏதோ தாங்கள் தான் ராமர் கோவில் காட்டுகிறோம், ராம ராஜ்ஜியம் அமைக்கிறோம் என்பது போல பாஜக சமூகத்தில் காட்ட முயல்கிறது. லட்சக்கணக்கான இந்துக்கள் புதிய ராமர் கோவிலுக்கு எந்த அரசியல் தூண்டுதலும் இல்லாமல் நன்கொடை அளித்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.

இந்திய அரசியல் வரலாற்றை புரட்டிப் பார்த்தால், 1947-இல் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும், குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்துக்கும் இடையே இதே போன்ற பிரச்சினையில் கருத்து வேறுபாடு இருந்ததைக் காண முடிகிறது.

சர்தார் பட்டேலின் தலைமையில் தொடங்கிய குஜராத்தின் சோம்நாத் கோவிலின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்தபோது, ​​படேல் அவர்கள் உயிரோடு இல்லை. கோவில் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டாமென்ற நேருவின் கருத்தைப் புறக்கணித்து, அந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் பங்கேற்றார்

அயோத்தியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ வேத் பிரகாஷ் குப்தா தேர்தல் சார்ந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, “பிரதமர் ஏன் வருகிறார் என்பது கேள்வியே இல்லை. அயோத்தியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் பணியுடன், பூர்வாஞ்சல் முழுவதும் மேம்படுத்தப்பட்டு வருகிறது என்பதுதான் முக்கியம்,” என்கிறார்.

“காசியும் இது போல மாறியதை எல்லோரும் பார்த்தார்கள். அங்குள்ள தொழிலதிபர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், நகரம் சுத்தமாக இருக்கிறது, தெருக்கள் சுத்தமாக இருக்கிறது. எனவே பிரதமரோ, முதலமைச்சரோ வருகிறார் என்றால் கண்டிப்பாக அங்குள்ள உள்ளூர் மக்களுக்கு அதன் பலன் தெரியும். எதிர்கட்சிகள் நேர்மறையான விஷயங்களைக் கூட எதிர்மறையாக மாற்றும் வேலையைச் செய்கின்றன,” என்றார்.

அயோத்தி வேகமாக மாறி வருகிறது. முதலீடுகளும் அதிகம் வருகின்றன, பக்தர்களும் வருகிறார்கள். புதிய ராமர் கோவில் கட்ட இன்னும் சிறிது காலமாகலாம். இந்த நடவடிக்கை இங்குள்ள மக்களுக்கு என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை வரலாறு பதிவு செய்ய கூடுதல் அவகாசம் எடுத்துக்கொள்ளும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2020, ஆகஸ்ட் 5-ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார்.

1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது, அதன் பிறகு முதலில் அலகாபாத் உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் இந்து தரப்புக்கும் முஸ்லிம் தரப்புக்கும் இடையே நீண்ட சட்டப் போராட்டம் நடந்தது.

இறுதியாக, 2019 நவம்பரில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் கோயில் கட்டப்படும் என்ற வரலாற்றுத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

மேலும் புதிய மசூதி கட்டுவதற்கு சன்னி வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கவும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *