
பட மூலாதாரம், PRIYA SINGH
சமூக ஊடகங்களில் பிரபலமான பிரியா சிங், தனது காதலன் தன்னைக் கொல்ல முயன்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில், தனது காதலனும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் மகனும் தன்னை ரேஞ்ச் ரோவர் காரை ஏற்றிக் கொலை செய்ய முயன்றதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பிரியா சிங் சமூக ஊடகங்களில் செல்வாக்கு பெற்றவர். தனது ‘காதலன்’ அஸ்வஜித் சிங் கெய்க்வாட் தன்னை காரைவிட்டு ஏற்றி நசுக்கிக் கொல்ல முயன்றதாக இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அஸ்வஜித் கெய்க்வாட், அவரது நண்பர்கள் ரோமில் பாட்டீல் மற்றும் சாகர் ஷெல்கே ஆகியோர் மீது அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், கொடுங்காயங்களை ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இருப்பினும், கொலை முயற்சிக்குரிய இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 307-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இந்த வழக்கில், போலீசார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.
ஆனால், அந்த முதல் தகவல் அறிக்கையும் முதலில் போலீசார் பதிய மறுத்ததாகவும், சமூக ஊடகங்களில் இச்சம்பவத்தைப் பதிவிட்ட பின்னரே போலீசார் வழக்குப்பதிவு செய்ததாகவும் பிரியா சிங் தெரிவித்துள்ளார்.
தனது சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டுள்ள அவர், “நான்கு நாட்களுக்கு முன்பு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முயன்றேன். ஆனால் போலீசார் என் புகாரைப் பதிவு செய்யவில்லை. நான் சமூக ஊடகங்களில் இதுகுறித்துப் பகிர்ந்த பிறகு, காவல்துறையினர் என்னைத் தொடர்புகொண்டனர். இப்போது அவர்கள் எனக்கு ஒத்துழைக்கின்றனர்,” எனப் பதிவிட்டுள்ளார்.
என்ன சொல்கிறது போலீஸ்?

இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தானே மாநகர பாேலீஸ் கமிஷ்னர் அமர் சிங் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய தானே போலீஸ் கமிஷனர் அமர் சிங் ஜாதவ், “பாதிக்கப்பட்ட பெண், அஷ்வஜித் கெய்க்வாட், ரோமில் பாட்டீல் மற்றும் சாகர் ஷெல்கே ஆகியோருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 279, 338, 323, 504, 34 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.”
பாதிக்கப்பட்ட பிரியா சிங், அஸ்வஜித் கெய்க்வாட் என்பவருடன் கடந்த நான்கரை ஆண்டுகளாகப் பழகி வந்ததாகவும், அவர் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாகவும் கூறியுள்ளார்.
சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள பிரியா சிங், “அஸ்வஜீத் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, தற்போது பிரிந்து வாழ்வதாக என்னிடம் கூறினார். ஆனால், சம்பவத்தன்று அஸ்வஜீத்தை அவரது மனைவியுடன் நான் பார்த்ததால், அவருக்கு கோபம் வந்தது. அதனால்தான் அவர் என்னைக் கொல்ல முயன்றார்,” எனக் கூறியுள்ளார்.
‘என்னை அறைந்தான், கழுத்தை நெரிக்க முயன்றான்’

பட மூலாதாரம், @PRIYASINGH_OFFICIAL/INSTAGRAM
கால் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், உடல் முழுவதும் கீறல்கள் இருப்பதாகவும் பிரியா சிங் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பிரியா சிங், தனது புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அவருக்கு நேர்ந்த அந்தச் சம்பவம் மிகவும் கொடூரமானது என்றும், தன் மீது காரை ஏற்றிக் கொலை முயற்சி செய்துவிட்டு, படுகாயமடைந்த தன்னை சாலையிலேயே விட்டுச் சென்றதாகவும் அவர் தனது பதிவில் எழுதியுள்ளார்.
“திங்கட்கிழமை காலை நான்கு மணியளவில் எனது காதலனிடமிருந்து (அஷ்வஜித் கெய்க்வாட்) எனக்கு அழைப்பு வந்தது, அதனால் நான் அவரைச் சந்திக்கச் சென்றேன். அவர் தனது குடும்பத்தினர் மற்றும் எங்களுக்கு உள்ள பொதுவான நண்பர்கள் சிலருடன் ஒரு விழாவில் இருந்தார். நானும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.”
“ஆனால், அன்று என் காதலன் விசித்திரமாக நடந்து கொள்வதை நான் கவனித்தேன். நான் அவனிடம் தனியாகப் பேச வேண்டும் என வலியுறுத்தினேன். நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்று, அவனுக்காகக் காத்திருந்தேன். அவன், அவனுடைய நண்பர்களுடன் வெளியே வந்தான். நான் அவனுடன் பேச முயன்றேன். ஆனால், அவனுடைய நண்பர்(ரோமில் பாட்டீல்) என்னைத் தடுத்து கீழே தள்ளி அவமானப்படுத்தினார்,” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் நடந்ததாகவும் அவர் எழுதியுள்ளார். “என் காதலனும் அவனுடைய நண்பனும் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள். நான் என் காதலனிடம் என்னைக் காப்பாற்றக் கூறினேன். ஆனால், அவன் என்னைக் காப்பாற்றவில்லை. அதற்கு பிறகு நடந்தவை அனைத்தும் என கற்பனைக்கே அப்பாற்பட்டவை,” என எழுதியுள்ளார்.
தொடர்ந்து எழுதியுள்ள அவர், “என் காதலன் என்னை அறைந்தான், கழுத்தை நெரிக்க முயன்றான். நான் அவனைத் தள்ள முயன்றபோது, அவன் என் கையைக் கடித்து, என்னை அடித்து, என் தலைமுடியைப் பிடித்து இழுத்தான். அப்போது திடீரென அவரது நண்பர் என்னைத் தள்ளி கீழே விழச் செய்தார்,” எனப் பதிவிட்டுள்ளார்.
‘காவல்துறையிடம் செல்ல வேண்டாம் எனக் கூறி மிரட்டினர்’

பட மூலாதாரம், PRIYA
தனக்கு நடந்ததை விரிவாக எழுதியுள்ள பிரியா சிங், என்ன நடக்கிறது என்பதைத் தாம் புரிந்துகொள்வதற்கு உள்ளாகவே தனது காதலன் காரை நோக்கி நடக்கத் தொடங்கியதாக எழுதியுள்ளார்.
“நானும் உடனே கார் அருகே நின்றிருந்த என் காதலனை நோக்கி ஓடினேன். நான் எனது தொலைபேசியையும் பையையும் அவரிடம் இருந்து பெற வேண்டியிருந்தது. நான் அவருடைய காருக்கு அருகே சென்றபோது, அவர் தனது டிரைவரிடம் ‘அடிச்சுத் தூக்கு’ என்று சொல்வதைக் கேட்டேன்,” எனக் குற்றம் சாட்டினார்.
அதைத் தொடர்ந்து, “அவரது டிரைவர் காரை வேகமாக ஓட்டினார். வாகனத்தின் இடது பக்கம் என் மீது மோதியது. நான் தரையில் விழுந்தேன், காரின் பின் சக்கரம் என் காலில் ஏறியது. என் மீது ஏறிய பின், கார் சுமார் 30 மீட்டர் தூரம் சென்று நின்றது. நான் வலியில் இருந்தேன், என் கையால் சைகை காண்பித்து அவரை அழைத்தேன், ஆனால் அவர் அங்கிருந்து திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டார். நான் அப்படியே தெருவில் கிடந்தேன்.”
“நான் முப்பது நிமிடங்கள் அங்கேயே கிடந்தேன். என்னிடம் தொலைபேசியோ அல்லது உதவிக்கு யாரையும் அழைக்கவோ எந்த வழியும் இல்லை. அந்த வழியாகச் சென்ற ஒரு நபர் என்னைப் பார்த்துவிட்டு, போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
அவர் என் அருகில்தான் நின்றுகொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து, நான் இறந்துவிட்டேனா அல்லது உயிருடன் இருக்கிறேனா என்று பார்க்க என் காதலனின் ஓட்டுநர் வந்தார். எனக்கு அருகில் ஒருவர் நிற்பதைப் பார்த்த அவர், போலீசாரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்,” என தனக்கு நடந்ததை தனது சமூக ஊடக பக்கத்தில் விவரித்திருந்தார்.
“மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், அவரது ஓட்டுநர் என்னை இந்த விஷயத்தை காவல்துறையிடம் சொல்ல வேண்டாம் என்று கூறி என்னை மிரட்டினார்,” என்றும் அவர் தனது பதிவில் குற்றம் சாட்டியிருந்தார்.
‘உடல் முழுவதும் கீறல்கள் உள்ளது’

பட மூலாதாரம், Getty Images
பிரியாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஒட்டுநர் தனது மொபைல்போனை தர மறுத்ததாகவும், பின் மருத்துவமனையில் மருத்துவர்கள் அறிவுறுத்திய பின்னரே மொபைலை கொடுத்ததாகவும் எழுதியுள்ளார்.
பிரியா கடந்த வியாழன் அன்று சமூக ஊடகத்தில் இந்தப் பதிவை எழுதியுள்ளார்.
“நான் இப்போது சுயநினைவை அடைந்துள்ளேன். என் வலது கால் உடைந்துவிட்டது. எனக்கு உடல் முழுவதும் கீறல்கள் உள்ளன. கைகள், இடுப்பு மற்றும் வயிற்றில் ஆழமான காயங்கள் உள்ளன. கடந்த மூன்று நான்கு மாதங்களாகப் படுத்த படுக்கையாக இருக்கிறேன். நான் முழுமையாக குணமடைய ஆறு மாதங்கள் ஆகும்,” என்றார்.
காதலனின் நண்பர்கள் தனது குடும்பத்தினரை மிரட்டுவதாகவும், புகாரை வாபஸ் பெறுமாறு அழுத்தம் கொடுப்பதாகவும் பிரியா கூறியுள்ளார்.
“நான் எஃப்ஐஆர் பதிவு செய்ததால் கடந்த இரண்டு நாட்களாக அவரது நண்பர்கள் சிலர் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்து எனது சகோதரியை மிரட்டி வருகின்றனர். எனக்குப் பயமாக இருக்கிறது. என் குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படுகிறேன். நான் பாதுகாப்பாக உணரவில்லை,” என அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த முழு விஷயத்திலும் அஷ்வஜித் கெய்க்வாட் தரப்பிடம் பேச பிபிசி முயன்றுள்ளது, ஆனால் அவரது தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
கொலை முயற்சி வழக்குப் பதியாத காவல்துறை

பட மூலாதாரம், Getty Images
ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசிய பிரியாவின் வழக்கறிஞர் தர்ஷனா பவார், காவல்துறையினர் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய மறுப்பதாகக் கூறினார்.
“கொலை முயற்சி வழக்குப் பதியவில்லை என்றால், உயர் நீதிமன்றத்தை அணுகுவோம். பிரியாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்.”
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மகாராஷ்டிராவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் மாநில அரசு நோக்கிக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மாநிலத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதாகவும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.
மகாராஷ்டிரா காங்கிரஸ் பொதுச் செயலாளர் அதுல் பாட்டீல், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பின்னும் குற்றவாளிகளை இன்னும் ஏன் கைது செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து இதுவரை மகாராஷ்டிரா அரசு எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்