புரோசோபக்னோசியா: நண்பர்கள் முகத்தையே மறக்கச் செய்யும் நோய் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

புரோசோபக்னோசியா: நண்பர்கள் முகத்தையே மறக்கச் செய்யும் நோய் வந்தால் என்ன செய் வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

“சில மாதங்களுக்கு முன்பு, நிகழ்ச்சி ஒன்றில் நான் அதிகம் அறியாத முகம் என் முன் வந்தது. அந்த மனிதர் என்னைப் பார்த்து அன்புடன் சிரித்தார். அவரைப் பார்த்ததும் நான் மிகவும் பதற்றமடைந்தேன். நான் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று நினைத்தேன்.”

“அவரது புன்னகை, ஒவ்வொரு நாளும் எனக்குள் நிகழும் மன எழுச்சியை மேலும் தீவிரப்படுத்தியது. எனக்கு மற்றவர்களின் முகங்கள் நினைவில் இருப்பதில்லை”.

பிபிசி செய்தியாளர் நடாலியா குரேரோ, மற்றவர்கள் தனக்கு அந்நியர்களாகத் தோன்றும் ‘நிலை’ குறித்து இப்படி விவரிக்கிறார். முகங்களை அடையாளம் கண்டுகொள்வது அவருக்கு ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருக்கிறது.

“பல ஆண்டுகளாகவே யாரையாவது பார்க்கும்போது ‘இவர் யார்?’, ‘இவரை எனக்குத் தெரியுமா? அவர்கள் என்னுடன் வேலை செய்கிறார்களா?’ என்ற கேள்விகளுக்குப் பதில் தேட முயல்கிறேன். அவர்கள் என்னுடன் வேலை செய்தாலும் நான் ஏன் அவர்களை அடையாளம் காண முடியவில்லை என ஆச்சர்யமாக இருக்கிறது. இதுவொரு மோசமான விஷயம்,” என்கிறார் அவர்.

புரோசோபக்னோசியா என்றால் என்ன?

மனநலம்

பட மூலாதாரம், GETTY IMAGES

ஒருவருடைய முகம் உங்களுக்கு நினைவில் இல்லை என்றால், அதற்கு மனநல மொழியில் புரோசோபக்னோசியா (prosopagnosia) என்று பெயர்.

இந்த நிலையில், சிலருடைய முகங்கள் நினைவில் இருந்தாலும் அவர் யார் என்பதை அடையாளம் காண முடியாது.

நொய்டாவில் உள்ள மெட்ரோ மருத்துவமனை மற்றும் இதய மையத்தின் மூத்த ஆலோசகரும் நரம்பியல் நிபுணருமான டாக்டர் சோனியா லால் குப்தா, “சில நேரங்களில் புரோசோபக்னோசியா பிறவியிலேயே இருக்கலாம்” என்கிறார்.

“புரோசோபக்னோசியாவிற்கு வேறு காரணங்கள் உள்ளன. உதாரணமாக, சில நேரங்களில் ஒரு நபர் அதிர்ச்சி அல்லது ஆழ்ந்த மூளை காயம் காரணமாக இந்த நிலைக்குச் செல்லலாம்” என்கிறார் அவர்.

“முகங்களை அடையாளம் காணும் திறன் சம்பந்தப்பட்ட மூளையின் வலது கீழ் பகுதிக்கு ரத்த ஓட்டம் இல்லாதபோது புரோசோபாக்னோசியா ஏற்படலாம்,” என்கிறார், டெல்லி செயின்ட் ஸ்டீபன் மருத்துவமனையின் மனநல மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் ரூபாலி ஷிவால்கர்.

“பிறவியிலேயே புரோசோபக்னோசியா இல்லாமல் பின்னாளில் சில காரணங்களால் அந்த நிலை ஏற்பட்டவர்களை எம்.ஆர்.ஐ பரிசோதனை மூலம் கண்டறிய முடியும். எம்.ஆர்.ஐ சோதனை முடிவில் மூளையின் அந்தப் பகுதியில் ஒரு வித்தியாசத்தை நீங்கள் காண்பீர்கள்.

ஆனால் பிறவி புரோசோபாக்னோசியாவில் இந்தக் கட்டமைப்பு வேறுபாடு தெரியவில்லை. ஏனெனில், குழந்தைகளின் மூளையில் அந்தப் பகுதி வளர்ச்சியடைந்திருக்காது,” என்கிறார் அவர்.

மனநலம்

பட மூலாதாரம், GETTY IMAGES

ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் சமீபத்திய அறிக்கை 33 பேரில் ஒருவர் ஓரளவுக்கு புரோசோபக்னோசியாவால் பாதிக்கப்படுகிறார் என்று கூறுகிறது. அதாவது, 3.08 சதவீத மக்கள் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரைமட்டாலஜிஸ்ட் ஜேன் குடால், நடிகர் பிராட் பிட், இந்திய நடிகை மற்றும் பயணம் குறித்த இன்புளூவென்சர் ஷெஹ்னாஸ் ட்ரசூரிவாலா போன்ற பிரபலங்கள் தங்களுக்கு இந்தப் பிரச்னை இருப்பதாக வெளிப்படையாக உலகுக்குக் கூறியுள்ளனர்.

டாக்டர் ரூபாலி ஷிவால்கரின் கூற்றுப்படி, இந்தியாவில் புரோசோபக்னோசியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 முதல் 3 சதவீதம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

புரோசோபக்னோசியாவின் நிலைகள்

மனநலம்

பட மூலாதாரம், GETTY IMAGES

தனது உடல்நிலை குறித்து பிபிசி செய்தியாளர் நடாலியா கூறும்போது, ​​“மனிதர்களின் முகத்தை அடையாளம் காண முடியாத எனது நிலை மிகவும் தீவிரமானது அல்ல. எனது குடும்பம், பெரும்பாலான நண்பர்கள் மற்றும் பணிபுரியும் சக ஊழியர்களை என்னால் அடையாளம் காண முடிகிறது,” என்கிறார்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, புரோசோபக்னோசியாவில் வெவ்வேறு நிலைகள் உள்ளன. மருத்துவர் ரூபாலி ஷிவால்கர் கூறுகையில், முன்பு மருத்துவர்கள் குழந்தைகளில் பிறவி புரோசோபாக்னோசியாவை ஆட்டிசத்துடன் தொடர்புபடுத்தினர். ஆனால் இப்போது ஆராய்ச்சிக்குப் பிறகு இரண்டும் வெவ்வேறு நிலைகள் என அறியப்பட்டுள்ளது.

நரம்பியல் கோளாறுகள் மற்றும் பக்கவாதத்திற்கான அமெரிக்க அரசாங்க இணையதளத்தின்படி, புரோசோபக்னோசியாவின் முக்கிய அறிகுறி, முகங்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படுவதாகும். அவர்களுக்கு வெவ்வேறு முகங்களை வேறுபடுத்துவது கடினமாக இருக்கும்.

புரோசோபக்னோசியாவில் பல அறிகுறிகள் உள்ளன:

  • பழக்கமானவர்களின் முகங்களை அடையாளம் காண்பதில் பலருக்கு சிரமம் உள்ளது.
  • அறிமுகமில்லாத முகங்களை வேறுபடுத்திப் பார்க்க இயலாமை
  • ஒருவரின் முகத்தையும் ஒரு பொருளையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது
  • தன்னுடைய முகத்தைக்கூட அடையாளம் காண முடியாது

இதுதவிர, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முகபாவனைகளை அடையாளம் காண்பதில் சிரமம், திரைப்படங்கள் அல்லது தொலைக்காட்சிகளில் வரும் கதாபாத்திரங்களை அடையாளம் காண இயலாமை அல்லது கதையை மறப்பது, வழிகளை மறப்பது போன்ற பிற பிரச்னைகளால் பாதிக்கப்படுவர்.

சமூக வாழ்வில் தாக்கம்

மனநலம்

பட மூலாதாரம், GETTY IMAGES

சில நேரங்களில் மக்கள் தன்னை திமிர் பிடித்தவராகக் கருதுவதாக நடாலியா கூறுகிறார். பத்திரிகையாளராக இருப்பதால், மக்களைச் சந்திக்க வேண்டிய இடத்தில், அதில் நிறைய சிரமங்கள் இருப்பதாக அவர் கூறுகிறார்.

தனது பணிகளில் ஒன்றை நினைவுகூர்ந்த அவர், “அமெரிக்காவின் நியூயார்க்கில் ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர் தொடர்பான செய்தியை நான் சேகரித்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் நீதிமன்ற அறையில் சக பத்திரிகையாளர்களை என்னால் அடையாளம் காண முடியவில்லை.

அங்கே மூன்று பேர் அமர்ந்திருந்தனர். அவர்கள் மூவரின் வயதும் 30 வயதுக்கு மேல் இருக்கும். மூவரும் வித்தியாசமாக இருந்தனர். மூவரும் வெவ்வேறு ஆடைகளை அணிந்திருந்தனர். ஆனால், எனக்கு அவர்கள் மூவரும் ஒரே மாதிரியாகத் தெரிந்தார்கள். உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டேன்,” என்றார்.

மருத்துவர் ரூபாலி ஷிவால்கர் கூறும்போது, ​​“இந்த நிலை, ஒரு நபரின் சமூக வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். சமூக கவலை அல்லது மனச்சோர்வை ஏற்படுத்தலாம்,” என்றார்.

மருத்துவர் சோனியா லால் குப்தா கூறுகையில், “புரோசோபக்னோசியா பிரச்னைக்கு சிகிச்சை இல்லை” என்று கூறுகிறார். மேலும், “சிகிச்சையின் நோக்கம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களை அடையாளம் காண தங்களுக்கென சொந்த வழிகளை உருவாக்க உதவுவது,” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “பக்கவாதம், அதிர்ச்சி அல்லது காயம் காரணமாக இந்நிலை ஏற்பட்டிருந்தால், அதன் மூல காரணத்தை அறிந்து அதற்கான மருந்து உங்களுக்கு வழங்கப்படும். உதாரணமாக, வீக்கம் இருந்தால், வீக்கத்தைக் குறைக்க மருந்து கொடுக்கப்படும்,” என்றார்.

என்ன செய்ய வேண்டும்?

புரோசோபக்னோசியா: நண்பர்கள் முகத்தையே மறக்கச் செய்யும் நோய் வந்தால் என்ன செய் வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

இதற்கு எந்த சிகிச்சையும் இல்லை, ஆனால் இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்க்கையை எளிதாக்கும் சில விஷயங்கள் உள்ளன.

மருத்துவர் ரூபாலி ஷிவால்கரின் பரிந்துரைகள்:

  • மற்றவர்களைச் சந்திப்பதற்கு முன் உங்கள் நிலையைப் பற்றி அவர்களிடம் தெரிவித்துவிடுங்கள்.
  • தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுமாறு நண்பர்களிடம் கேளுங்கள்.
  • நீங்கள் ஒருவரைச் சந்திக்கும்போது, ​​அவர்கள் யார் என சொல்லச் சொல்லுங்கள்.
  • குரல் மற்றும் உடல்மொழி மூலம் மக்களை அடையாளம் காணுங்கள்.

இறுதியாக நடாலியா கூறுகையில், “மக்களைப் புறக்கணிப்பது மிகவும் மோசமானது. எனக்கும் மக்களை இப்படி உணர வைப்பது பிடிக்காது. ஆனால், என்னைப் போன்றே, இதுபோன்ற பிரச்னை உள்ளவர்கள் பொதுவாக மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவது, அன்றாட வாழ்க்கையை கடினமாக்குகிறது என்று மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நான் எல்லோருடனும் நட்பாக இருக்க விரும்புகிறேன், நீங்கள் யார் என்று தயக்கமின்றிக் கேட்க விரும்புகிறேன்,” என்றார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *