விஜயகாந்த்: ‘தமிழ் சினிமாவின் கோபக்கார’ இளைஞனாக உருவானது ஏன்?

விஜயகாந்த்: 'தமிழ் சினிமாவின் கோபக்கார' இளைஞனாக உருவானது ஏன்?

விஜயகாந்த்: தமிழ் சினிமாவின் கோபக்கார இளைஞன்

பட மூலாதாரம், RASI STUDIO

படக்குறிப்பு,

தமிழ் சமூகத்தின் ஒரு காலகட்டத்தை பிரதிபலித்த விஜயகாந்த்

தமிழ் சினிமாவின் ஹீரோவுக்கான இலக்கணங்களுக்குள் பொருந்தாத அம்சங்களைக் கொண்டிருந்த விஜயகாந்த், தமிழ் சமூகத்தின் ஒரு காலகட்டத்தை மிகச் சிறப்பாகப் பிரதிபலித்தார்.

இந்தி சினிமாவில் 70களின் தொடக்கத்தில் சமூக அநீதிகளை எதிர்த்துக் கேள்வியெழுப்பும் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அந்த கோபக்கார இளைஞன் பாத்திரத்திற்கு மிகச் சரியாகப் பொருந்திப் போனார் அமிதாப் பச்சன். இப்படி சமூக அநீதியைக் கேள்வி கேட்கும் கோபக்கார இளைஞன் தமிழ் சினிமாவில் உருவாக மேலும் பத்தாண்டுகள் ஆயின.

தமிழ் சினிமாவில் அப்படி ஒரு காலம் 1980களின் துவக்கத்தில்தான் வந்தது. சட்டம் ஒரு இருட்டறை, சிவப்பு மல்லி, நெஞ்சில் துணிவிருந்தால், சாதிக்கொரு நீதி, அலை ஓசை என சமூக அநீதிகளைத் துணிச்சல்மிக்க இளைஞராகக் கேள்வி எழுப்பினார் அந்த கறுப்பு நிற இளைஞர்.

தமிழ் சினிமாவில் அப்போது சிவாஜி – எம்.ஜி.ஆரின் யுகம் முடிந்து, ரஜினியும் கமலும் உச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நேரம். மேலே சொன்ன படங்களின் மூலம், தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டிருந்தார் அந்த இளைஞர். ஆனால், அந்த இடத்திற்கு வர அவர் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.

மதுரையில் இருந்து வந்து சினிமா வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்த விஜய்ராஜ், இயக்குநர் பி. மாதவன் தனது அடுத்த படத்திற்காக நடிகர்களைத் தேர்வுசெய்துகொண்டிருக்கிறார் என்று அறிந்து அவரைப் போய் பார்த்தார்.

அந்தப் படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகன். எம்.என். நம்பியார் வில்லன். இதில் ராஜா என்ற பாத்திரத்திற்கு விஜய்ராஜை யோசித்தார் மாதவன். ஆனால், ஏனோ அந்தப் பாத்திரத்திற்கு விஜய்ராஜ் பொருத்தமாக இருக்க மாட்டார் எனத் தோன்றியது. பிறகு அந்தப் பாத்திரத்தில் சிலோன் மனோகர் நடித்தார். ‘என் கேள்விக்கு என்ன பதில்?” என்ற அந்தப் படம் பெரும் வெற்றிபெற்றது.

அந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்திருந்தால், மிகச் சிறந்த அறிமுகமாக இருந்திருக்கும் என நினைத்தார் விஜயராஜ். ஆனால், அவருடைய விடா முயற்சியால் இன்னொரு படத்தில் வாய்ப்புக் கிடைத்தது. சில காட்சிகளே வரும் பாத்திரம்தான். ஆனால், வில்லன் பாத்திரம்.

படம், ‘இனிக்கும் இளமை’. எம்.ஏ. காஜாதான் இயக்குநர். அப்போது வெற்றிகரமான ஜோடியாக இருந்த சுதாகரும் ராதிகாவும்தான் இந்தப் படத்திலும் ஜோடி. ஆனால், படத்தைப் பார்த்த தணிக்கை வாரியம், ஆபாச காட்சிகள் அதிகம் இருப்பதாகக் கூறி ‘ஏ’ சான்றிதழ் அளித்தது. படத்திற்கு மோசமான விமர்சனங்களும் குவிந்தன. படம் தோல்வியடைந்தது. இந்தப் படத்தின் டைட்டிலில் விஜய்ராஜ், விஜயகாந்த் என்ற பெயரில் அறிமுகமானார்.

விஜயகாந்த் கோபக்கார இளைஞனாக உருவெடுத்தது எப்படி?

விஜயகாந்த்: தமிழ் சினிமாவின் கோபக்கார இளைஞன்

பட மூலாதாரம், RASI STUDIO

படக்குறிப்பு,

கோபக்கார பழிவாங்கும் இளைஞனாக இதில் விஜயகாந்த் நடித்தார்.

இதற்குப் பிறகு, அன்னக்கிளி, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள் படங்களின் கதாசிரியரான ஆர். செல்வராஜ் அகல் விளக்கு என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பளித்தார். அவருக்கு ஜோடியாக ஷோபா நடித்தார். இந்தப் படத்தில்தான் பிரபல பாடலான ‘ஏதோ நினைவுகள்’ பாடல் இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்தப் படத்திற்கும் எதிர்மறையான விமர்சனங்களே வந்ததால், படம் வெற்றி பெறவில்லை.

அடுத்ததாக, சாமந்திப்பூ, நீரோட்டம் ஆகிய படங்கள் வந்தன. அவை பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை. இதற்குப் பிறகு, கே. விஜயனின் இயக்கத்தில் ‘தூரத்து இடி முழக்கம்’ என்ற படத்தில் நாயகனாக நடித்தார் விஜயகாந்த். இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் சலீல் சௌத்ரி.

விஜயகாந்த் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த கவனம், இந்தப் படத்தின் மூலம் அவருக்குக் கிடைத்தது. 1981ஆம் ஆண்டின் “இந்தியன் பனோரமா”வில் திரையிடப்பட்ட 21 படங்களில் இந்தப் படமும் ஒன்றாக அமைந்தது.

புதுமுக இயக்குநரான எஸ்.ஏ. சந்திரசேகர், ‘அவள் ஒரு பச்சைக் குழந்தை’ என்ற தனது முதல் படம் சரியாகப் போகாத நிலையில் தனது அடுத்த படத்தை ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் படமாக உருவாக்க நினைத்தார். அந்தப் படம், சட்டம் ஒரு இருட்டறை. கோபக்கார பழிவாங்கும் இளைஞனாக இதில் விஜயகாந்த் நடித்தார். படம் மிகப் பெரிய ஹிட்.

அடுத்த படம் ராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த சிவப்பு மல்லி. இதிலும் அநியாயத்தைக் கேள்வி கேட்கும் கோபக்கார இளைஞன். அதற்கடுத்த படம் மீண்டும் எஸ்.ஏ. சந்திரசேகரின் இயக்கத்தில் நெஞ்சிலே துணிவிருந்தால். இதில், ஊர்ப் பணக்காரரை எதிர்த்து கேள்வியெழுப்பும் வேடம். படம் வெற்றி. அவ்வளவுதான். அடுத்த இருபது ஆண்டுகளுக்கு விஜயகாந்திற்குத் திரும்பிப் பார்க்கவே நேரமில்லை.

காவல்துறை அதிகாரி வேடங்களின் தொடக்கம்

விஜயகாந்த்: தமிழ் சினிமாவின் கோபக்கார இளைஞன்

பட மூலாதாரம், RASI STUDIO

படக்குறிப்பு,

விஜயகாந்த் 1980களில் அவர் ஏற்று நடிக்கும் பாத்திரங்களில் ஒரு மாற்றம் ஏற்பட்டது.

விஜயகாந்த் 1978இல் இனிக்கும் இளமையில் தொடங்கி விருதகிரி வெளிவந்த 2010ஆம் ஆண்டுவரையிலான 32 ஆண்டுகளில் மொத்தமாக 153 படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில், கோபக்கார இளைஞன் பாணியிலான திரைப்படங்கள்தான் இவருக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்தன என்றாலும், தொடர்ந்து அதே பாணியில் அவர் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை. 80களின் இறுதியில் அவர் ஏற்று நடிக்கும் பாத்திரங்களில் ஒரு மாற்றம் ஏற்பட்டது.

“ஆரம்பத்தில் இடதுசாரி கொள்கை சார்ந்த படங்கள். சட்டம், அதிகாரம் ஆகியவற்றைக் கேள்வி கேட்கக்கூடிய படங்கள், சமூக அமைப்பைக் கேள்வி கேட்கக்கூடிய படங்கள் ஆகியவற்றில் அவர் நடித்தார். ஆனால், 80களின் இறுதியில் விஜயகாந்த் தேர்வு செய்யும் படங்கள் முற்றிலுமாக மாறிப் போயின. அதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது ஆபாவாணன் இயக்கத்தில் வெளிவந்த ஊமை விழிகள் படம்,” என்கிறார் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.

ஊமை விழிகள் திரைப்படம் 1986இல் வெளிவந்தது. அதில் காவல் துறை அதிகாரியாக நடித்தார் விஜயகாந்த். இந்தப் படம் மிகப் பெரிய ஹிட்டானது. அதில் அவர் ஏற்று நடித்த காவல்துறை அதிகாரி பாத்திரம் மிகவும் பேசப்பட்டது. இதற்குப் பிறகு, காவல்துறை அதிகாரி பாத்திரத்திற்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார் விஜயகாந்த்.

இதற்கு நடுவில் 1987இல் விஜயகாந்த் நடித்து வெளிவந்த உழவன் மகன் திரைப்படம், விஜயகாந்த்திற்கு இன்னொரு பரிமாணத்தைக் கொடுத்தது. அந்த ஆண்டு தீபாவளிக்கு உழவன் மகன் திரைப்படத்தோடு, விஜயகாந்த் நடித்த சட்டம் ஒரு விளையாட்டு, ரஜினிகாந்த் நடித்த மனிதன், கமல் நடித்த நாயகன் ஆகிய படங்களும் வெளியாகின.

இதில் ரஜினி, கமல் படங்களுக்கு இணையாக வசூலைக் குவித்தது உழவன் மகன். இந்தப் படம் வெளியான பிறகு, தன் படங்களைத் தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்தார் விஜயகாந்த்.

“இதற்குப் பிறகு, புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் (வனத்துறை அதிகாரி), மாநகரக் காவல், சேதுபதி ஐபிஎஸ், ஹானஸ்ட் ராஜ், உளவுத் துறை, அலெக்ஸாண்டர், தமிழ்ச்செல்வன் என 90களில் பல படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்தார்.

அதிகாரவர்க்கத்தையும் சமூக அமைப்பையும் கேள்வி கேட்பவராக 80களில் நடித்துக்கொண்டிருந்த விஜயகாந்த், 90களில் அதே அதிகாரவர்க்கத்தின் அங்கமாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால், 80களில் தனக்கு எது வெற்றியைத் தேடித் தந்ததோ அந்தக் கூறுகளைக் கைவிடவில்லை. காவல்துறை அதிகாரியாக இருந்தாலும், காவல்துறைக்குள் இருந்த ஊழல்களை, மோசடிகளைக் கேள்வி கேட்பவராக இருந்தார்,” என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

விஜயகாந்த்தின் அரசியல் சிந்தனைக்கும் சினிமாவுக்கு தொடர்பு உண்டா?

விஜயகாந்த்: தமிழ் சினிமாவின் கோபக்கார இளைஞன்

பட மூலாதாரம், RASI STUDIO

படக்குறிப்பு,

பிறரது காதலைச் சேர்த்து வைப்பதற்காகப் பெரும் உதவிகளைச் செய்பவராக பல படங்களில் நடித்தார்.

இதற்கு நடுவில், வேறொரு அவதாரமும் விஜயகாந்த் கூடவே வந்துகொண்டிருந்தது. அதாவது, பிறரது காதலைச் சேர்த்து வைப்பதற்காகப் பெரும் உதவிகளைச் செய்பவராக பல படங்களில் நடித்தார். சின்ன கவுண்டர் போன்ற சில படங்களில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெரிய மனிதராகவும் வலம் வந்தார் விஜயகாந்த். 1980களில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்களுக்கு முற்றிலும் மாறான அம்சமாக இந்தப் படங்கள் அமைந்தன.

விஜயகாந்த் நடிப்பில் 1990களில் வெளியான படங்கள் எதுவும் குறிப்பிடத்தக்கனவாக அமையவில்லை. ஆனால், 2000களின் துவக்கத்தில் வானத்தைப் போல, நரசிம்மா, தவசி போன்ற படங்கள் பெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன.

அதேபோல், 2002இல் வெளிவந்த ரமணா, விஜயகாந்த்திற்கு சினிமாவில் ஒரு புதிய திசையைக் காட்டியது. ஒரு வகையில் பார்த்தால், அந்தப் படத்தின் மூலம் அநியாயத்தைக் கேள்வி கேட்டு, தண்டிக்கும் 80களின் பாணிக்குத் திரும்பியிருந்தார். படம் சூப்பர் ஹிட். இருந்தாலும் அதற்குள் அவரது கவனம் அரசியலில் திரும்பியது. அதற்குப் பிறகு வந்த படங்கள் எல்லாம் மிகச் சாதாரணமான படங்களாகவே அமைந்தன.

கோபக்கார இளைஞன், காவல்துறை அதிகாரி, ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெரிய மனிதர், காதலுக்கு உதவுபவர் ஆகியவையே இவருக்கு அமைந்த பெரும்பான்மை பாத்திரங்களாக இருந்தாலும், சில நல்ல காதல் திரைப்படங்கள், காமெடி திரைப்படங்களும் இவருக்கு அமைந்தன. ஆனால், அவருடைய முன்னுரிமை இதுபோன்ற படங்களாக இருக்கவில்லை.

“விஜயகாந்த்தின் அரசியல் சிந்தனையை வடிவமைத்ததில் அவருடைய ஆரம்பக் கால திரைப்படங்களுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகவே நினைக்கிறேன். இந்தப் படங்களை இயக்கியவர்களுக்கு அதிகார எதிர்ப்பு, அநீதி எதிர்ப்பு குறித்த ஆழமான புரிதல் இருப்பதாகத் தெரியவில்லை. விஜயகாந்திற்கும் அப்படித்தான்.

ஒருவர் துன்பப்பட்டால், அதைத் தீர்க்க வேண்டும் என்பதுதான் அவருடைய அடிப்படைப் புரிதலாக இருந்தது. அவர் திரும்பத் திரும்ப முன்வைத்த வறுமை ஒழிப்பு என்ற விஷயத்தை அவர் அப்படித்தான் பார்த்தார்,” என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

தமிழ் சினிமாவின் மிக முக்கியக் காலகட்டமான 80களில் வெற்றிகரமான நடிகராக வலம்வந்த விஜயகாந்த் எல்லாவிதமான பாத்திரங்களுக்கும் பொருத்தமானவராகவே இருந்தார். ஆனால், அவர் அரசியல்வாதியாக மிகக் குறைவான படங்களிலேயே நடித்திருக்கிறார்.

பிற்காலத்தில் அரசியலில் குதிக்க நினைத்த அவர், ஏன் பெரிய அளவில் அரசியல்வாதி பாத்திரங்களைத் தேர்வு செய்யவில்லை என்பது ஒரு கேள்விக்குறிதான்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *