அமெரிக்கா, சீனாவை விஞ்சி சிப் உற்பத்தியில் தைவான் கொடி கட்டிப் பறப்பது எப்படி?

அமெரிக்கா, சீனாவை விஞ்சி சிப் உற்பத்தியில் தைவான் கொடி கட்டிப் பறப்பது எப்படி?

தைவான் சிப் உற்பத்தி

பட மூலாதாரம், Getty Images

23 வயதான ஷிஹ் சின்-டே 1969ம் ஆண்டு கோடைகாலத்தில் அமெரிக்காவிற்கு செல்ல விமானத்தில் ஏறியபோது, ​​அவர் முற்றிலும் வேறு உலகத்திற்கு பயணிக்க தொடங்கியிருந்தார்.

அவர் கரும்பு வயல்களால் சூழப்பட்ட ஒரு மீனவ கிராமத்தில் தான் வளர்ந்தார். பின்னர் தூசி நிறைந்த தெருக்கள் மற்றும் சாம்பல் நிற அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்த அரிதாகவே சொந்த கார்களை கொண்ட மக்கள் நிறைந்த தைவானின் தலைநகரான தைபேயில் உள்ள பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை மேற்கொண்டார்.

தற்போது அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திற்குச் சென்றுள்ளார். அமெரிக்கா ஒரு மனிதனை நிலவிற்கும் , போயிங் 747 விமானம் மூலம் வானிற்கும் உயர்த்துகிறது. சோவியத் யூனியன், ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பொருளாதாரத்தை விட அதன் பொருளாதாரம் பெரிதாக இருந்தது.

“அங்கு தரையிறங்கியபோது, ​​நான் அதிர்ச்சியடைந்தேன்,” என்று கூறுகிறார் இப்போது 77 வயதாகும் டாக்டர் ஷிஹ். “தைவான் மிகவும் ஏழ்மையான நாடு, அதைச் மேம்படுத்த நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்குள் நானே நினைத்துக்கொண்டேன்.”

அதை அவர் சாதிக்கவும் செய்தார். டாக்டர் ஷிஹ் , அவரின் இளைய மற்றும் லட்சியம் மிகுந்த பொறியியலாளர்களின் குழு சர்க்கரை மற்றும் டி-ஷர்ட்களை ஏற்றுமதி செய்யும் ஒரு தீவை எலக்ட்ரானிக்ஸ் பவர் ஹவுஸாக மாற்றியுள்ளனர்.

தற்போதைய தைபே செழிப்பான மற்றும் உலோக உற்பத்தி மையமாக இருக்கிறது. தீவின் மேற்கு கடற்கரையில் இருந்து அதிவேக ரயில்கள் ஒரு மணி நேரத்திற்குள் 350கிமீ(218mph) வேகத்தில் பயணிகளை இங்கு அனுப்புகிறது. தைபே 101 – விரிவாக சொல்ல வேண்டுமெனில் உலகின் மிக உயரமான கட்டிடம். நகரத்தின் மீது பறந்து உயர்ந்திருக்க கூடிய அதன் கோபுரங்கள், அந்நகரின் செழிப்பின் சின்னமாக திகழ்கிறது.

அங்கு உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் விரல் நகத்தை விட சிறிய சாதனங்களை உருவாக்குகின்றன. ஐபோன் முதல் விமானங்கள் வரை ஒவ்வொரு டெக்னாலஜியின் இதயமாக கருதப்படும் சிப் என்று அறியப்படும் செமி கண்டக்டர்கள் தான் அவை.

தாய்வானின் சிப் ஆதிக்கத்தின் ரகசியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தைவான் பொருளாதார வெற்றியின் ரகசியம்

நமது வாழ்க்கைக்கு ஆற்றல் வழங்கும் பாதிக்கும் மேற்பட்ட சிப்களை தைவான் தான் உற்பத்தி செய்கிறது. இதன் பெரிய உற்பத்தியாளரான தைவான் செமி கண்டக்டர் உற்பத்தி நிறுவனம் (TSMC) தான் உலகின் மதிப்புவாய்ந்த வணிக நிறுவனங்களில் 9வது நிறுவனமாகும்.

இதுவே தைவானை கிட்டத்தட்ட தன்னிகரற்றதாகவும் அதே சமயம் பாதிக்கும் நிலைக்கும் தள்ளுகிறது. அதிநவீன சிப்களை தயாரிப்பதில் தான் ஓரங்கட்டப்படலாம் என்று அஞ்சும் சீனா, தொடர்ந்து தைவானின் கிரீடத்தை கைப்பற்ற பல பில்லியன்களை செலவு செய்து வருகிறது அல்லது தைவானை ஆக்கிரமித்து கொள்ளும் மிரட்டலை அடிக்கடி வெளிக்காட்டி வருகிறது.

ஆனால் தைவானின் சிப் தனித்துவத்தை பிரதியெடுத்தல் அவ்வளவு எளிதானது அல்ல – காரணம் அதற்கு இந்த தீவு அதன் பொறியாளர்களால் பல தசாபதங்களாக கடினமாக உழைத்து உருவாக்கிய ரகசிய வழிமுறை ஒன்றை கொண்டுள்ளது. மேலும் இதன் உற்பத்தி, தற்போது தவிர்க்க முயற்சித்து வரும் அமெரிக்க-சீனா இடையிலான போட்டியை அதிகரிக்கும் பொருளாதார உறவுகளின் வலையை சார்ந்துள்ளது.

சர்க்கரை முதல் சிலிக்கான் வரை

டாக்டர் ஷிஹ் சின்-டே அமெரிக்காவை அடைந்த போது “அப்போது அது வெறும் செமி கண்டக்டர் புரட்சியின் தொடக்க காலமே” என்று கூறுகிறார் அவர்.

மைக்ரோசிப்பின் ஆரம்ப கட்டமான ஒற்றை வேஃப்பர் சிலிகானுக்குள் மின்னணு பாகங்களை சேர்த்து கணினி புரட்சியை ஏற்படுத்திய “மோனோலித்திக் இன்டகிரேட்டட் சர்க்யூட்டை” ராபர்ட் நொய்ஸ் உருவாக்கி ஒரு தசாப்தமாகிவிட்டது.

தாய்வானின் சிப் ஆதிக்கத்தின் ரகசியம்
படக்குறிப்பு,

டாக்டர் ஷிஹ் சின்-டே

டாக்டர் ஷிஹ் பட்டம் பெற்று இரண்டு ஆண்டுகள் கழித்து, அப்போது கணினி தயாரிப்பில் ஐபிஎம்க்கு அடுத்தபடியாக இருந்த பர்ரோஸ் கார்ப்பரேஷனில்(Burroughs Corporation) மெம்மரி சிப்களை உருவாக்கினார்.

அந்த நேரத்தில் ஏற்பட்ட, தைவான் எண்ணெய் நெருக்கடியை தொடர்ந்து ஏற்றுமதி பாதிப்படைந்ததால் ஒரு புதிய தேசிய நிறுவனத்திற்கான தேடலில் இருந்து தைவான். அப்போது சிலிக்கான் ஒரு நல்ல ஐடியாவாக இருந்தது. மேலும் டாக்டர் ஷிஹ் இதற்கு தன்னால் உதவ முடியும் என்று நம்பினார். “எனவே வீட்டிற்கு திரும்பி வருவதற்கான நேரம் இது என்று தான் நினைத்ததாக” கூறுகிறார் அவர்.

1970களின் பிற்பகுதியில் புதிய சோதனை மையத்தில் இருந்த சிறந்த பொறியாளர்கள் குழுவில் இணைந்தார் அவர். இந்த தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் தைவானின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதில் ஒரு பெரிய பங்கை வகிக்கும் என்று அப்போது எதிர்பார்க்கப்பட்டது.

தைபேயின் தெற்கில் உள்ள சிறிய நகரமான ஹ்சிஞ்சுவில் வேலை தொடங்கியது அந்நிறுவனம். இன்று அதுதான் ஒரு உலகளாவிய மின்னணு மையமாக உள்ளது. இங்கு டிஎஸ்எம்சி-இன் சிறந்த ஃபேப்ரிகேஷன் ஆலைகள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த சிப் தொழிற்சாலைகள், ஒவ்வொன்றும் பல கால்பந்து மைதானங்களின் அளவிற்கு பூமியிலேயே உள்ள தூய்மையான இடங்களில் ஒன்று போல இருக்கின்றன. இங்கு நடைபெறும் உற்பத்தி விவரங்கள் நன்கு இரகசியமான முறையில் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் வெளிப்புற கேமராக்கள் எதுவும் இங்கு அனுமதிக்கப்படாது.

புதிய தொழிற்சாலை மூலம் தெற்கு தைவானில் கிட்டத்தட்ட 20 பில்லியன் டாலர் மதிப்பில் அடுத்த தலைமுறை ஐபோன்களுக்காக 3 நானோமீட்டர் சிப்களை தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இவை அனைத்தும் 1970களில் டாக்டர் ஷிஹியும் அவரது சகாக்களும் அந்த புதிய தொழிற்சாலையை திறக்கும் போது கற்பனை செய்ததற்கு அப்பாற்பட்டவை. அமெரிக்காவின் முக்கிய எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பாளரிடமிருந்து தொழில்நுட்ப உரிமம் பெற்றிருந்ததால் அவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் அனைவருக்கும் ஆச்சரியமாக இவர்கள் தொடங்கிய தொழிற்சாலை அதன் தாய் நிறுவனத்தை விட சிறப்பாக செயல்பட்டது. அது எப்படி என்பதை விளக்குவது கடினம், ஏனெனில் இன்று வரை தைவான் வெற்றிக்கான துல்லியமான சூத்திரம் யாருக்கும் பிடிபடாமலேயே இருக்கிறது.

டாக்டர் ஷிஹின் நினைவு மிகவும் கூர்மையானது : “ஒரிஜினல் ஆர்சிஏ ஆலையை விட, குறைந்த செலவில் எங்களுடைய முடிவுகள் சிறப்பாக இருந்தது. எனவே, உண்மையிலேயே நாங்கள் ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையை அரசாங்கத்திற்கு இது அளித்தது.”

யுனைடெட் மைக்ரோ-எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனுக்காக முதலில் தைவான் அரசாங்கம் ஆரம்ப மூலதனத்தை போட்டது, பின்னர் 1987 இல் உலகின் மிகப்பெரிய சிப் தொழிற்சாலையாக மாறியது டிஎஸ்எம்சி.

தாய்வானின் சிப் ஆதிக்கத்தின் ரகசியம்

பட மூலாதாரம், COURTESY: ITRI

படக்குறிப்பு,

1977ல் மற்ற பொறியாளர்களோடு ஷிஹ் சின்-டே

நிறுவனத்தை நடத்த, அவர்கள் சீன-அமெரிக்க பொறியாளர் மற்றும் அமெரிக்க எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸின் முன்னாள் நிர்வாகியான மோரிஸ் சாங்கை நியமித்தனர். இது ஒரு அதிர்ஷ்டம் அல்லது புத்திசாலித்தனம் அல்லது இரண்டுமாக கூட இருக்கலாம். இன்று 93 வயதான அவர் தான் தைவானின் செமி கண்டக்டர் தொழில்துறையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

அப்போது, தங்களது சொந்த விளையாட்டில் ​​அமெரிக்க மற்றும் ஜப்பானிய ஜாம்பவான்களை சேர்த்துக் கொள்வது வீழ்ச்சி கூற்று என்பதை அவர் விரைவில் உணர்ந்தார். எனவே அதற்கு பதிலாக டிஎஸ்எம்சி மற்றவர்களுக்கு சிப்களை மட்டுமே தயாரிக்கும், மாறாக சொந்தமாக வடிவமைக்காது என்ற முடிவை எடுத்தது.

1987 இல் கேள்விப்படாத இந்த “ஃபவுண்டரி மாடல்” தான் தொழில்துறையின் அமைவையே மாற்றியது மட்டுமின்றி தைவான் அதில் உச்ச நிலைக்கு வரவும் வழி வகுத்தது.

மேலும் இதை விட வேறு நேரம் சிறப்பாக இருந்திருக்க முடியாது. சிலிக்கான் வேலியின் புதிய ஸ்டார்ட்-அப்களான ஆப்பிள், ஏஎம்டி, குவால்காம், என்விடியா ஆகிய நிறுவனங்களிடத்தில் சொந்தமாக ஃபேப் ஆலைகளை உருவாக்க நிதி இல்லை. எந்த சிப்கள் இல்லாமல் அவர்களால் செயல்படவே முடியாதோ அதை தயாரிக்கும் உற்பத்தியாளர்களை கண்டுபிடிப்பதற்காக அவர்கள் போராடி கொண்டிருந்தார்கள்.

“முன்னணி செமி-கண்டக்டர் நிறுவனங்களுக்குச் சென்று, அவர்கள் பயன்படுத்திக் கொள்ள தேவையான அதிகப்படியான உற்பத்தி திறன் உள்ளதா என்று கேட்க வேண்டியிருந்தது. ஆனால் அப்போதுதான் டிஎஸ்எம்சி வந்தது.” என்று கூறுகிறார் டாக்டர் ஷிஹ்.

தற்போது செமிகண்டக்டர் உற்பத்தி திறன் இல்லாத கலிஃபோர்னியாவின் நிறுவனங்கள் அவர்களின் வடிவைமைப்புகளை திருடுவதில் அல்லது அவர்களுடன் போட்டி போடுவதில் ஆர்வமில்லாத தைவானின் சிப் தயாரிப்பாளர்களுடன் கூட்டு சேர்ந்து கொள்ளலாம்.

“டிஎஸ்எம்சி-யின் முதல் விதியே உங்களது வாடிக்கையாளர்களுடன் போட்டி போடாதீர்கள்” என்பதே என்று கூறுகிறார் டாக்டர் ஷிஹ்.

அமெரிக்கா, சீனாவை தைவான் விஞ்சியது எப்படி?

உலக அளவில் ஓராண்டிற்கு மட்டும் ட்ரில்லியன் சிப்களுக்கு மேல் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு நவீன காரில் மட்டும் 1500 முதல் 3000 சிப்கள் வரை பொருத்தப்படுகின்றன. ஐபோன் 12 இல் சுமார் 1,400 செமிகண்டக்டர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பெருந்தொற்று காலத்தில் எலக்ட்ரானிக்ஸ் தேவை அதிகரித்ததால், 2022 இல் ஏற்பட்ட பற்றாக்குறையால் சலவை இயந்திரங்கள் மற்றும் BMWகளின் விற்பனை ஒரே மாதிரியாக பாதிக்கப்பட்டது.

தைவானின் அசாதாரண வெற்றியே அது இந்த டிரில்லியனுக்கும் அதிகமான சிப்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை தயாரித்து அனுப்புவதில் தான் உள்ளது. இவை அனைத்துமே மேம்பட்ட தொழிநுட்பங்கள். வேறு வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் தைவானிய சிப்கள் அனைத்தும் திறமையானவை.

சிலிக்கான் சிப்களை உற்பத்தி செய்வது விலை உயர்ந்தது மற்றும் கடினமானது. இது ஒரு படிகத்திலிருந்து வளர்க்கப்பட்ட அதீத சுத்தமான சிலிக்கானின் இன்காட்டிலிருந்து(Ingot) தொடங்குகிறது. ஒவ்வொரு இன்காட் வளர பல நாட்கள் ஆகலாம் மற்றும் இது 100 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும்.

தாய்வானின் சிப் ஆதிக்கத்தின் ரகசியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தொழில்நுட்பத்தில் பெரிய முன்னேற்றங்களை உருவாக்குவதில் தைவானின் நிறுவனங்கள் அவ்வளவு திறமையானவையல்ல

ஒரு வைர வெட்டு இயந்திரம் ஒவ்வொரு ஸ்லாப்பையும் மெல்லிய வேஃபர்களாக வெட்டிய பிறகு, ஒவ்வொரு வேஃபர்களிலும் சிறிய சுற்றுகளை பொறிக்க இயந்திரம் ஒன்று ஒளியைப் பயன்படுத்துகிறது. ஒற்றை வேஃபர் நூற்றுக்கணக்கான நுண்செயலிகளையும், பில்லியன் கணக்கான சுற்றுகளையும் கொண்டிருக்கலாம்.

இதில் முக்கியம் என்னவெனில் ஒவ்வொரு வேஃபரிலும் சிப்பாக பயன்படுத்தப்படும் பகுதிதான். 1970களில் அமெரிக்க நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட ஒரே வேஃபரில் உள்ள குறைந்தபட்ச சிப்களின் அளவு 10% ஆகவும், அதிகபட்சம் 50% ஆகவும் இருந்தன. 1980களில் ஜப்பானியர்கள் இதை சராசரியாக 60% ஆக கொண்டிருந்தனர். ஆனால், டிஎஸ்எம்சி-யோ 80% உற்பத்தியுடன் இவர்கள் அனைவரையும் மிஞ்சியுள்ளது.

காலப்போக்கில் தைவானிய உற்பத்தியாளர்களால் மனதைக் கவரும் வகையில் சிறிய பரப்பில் மேலும் மேலும் சுற்றுகளை அடக்க முடிந்தது. சமீபத்திய அல்ட்ரா-புற ஊதா ஒளி லித்தோகிராஃபி இயந்திரங்களைப் பயன்படுத்தி, டிஎஸ்எம்சி ஒரே நுண்செயலியில் 100 பில்லியன் சுற்றுகள் அல்லது ஒரு சதுர மில்லிமீட்டருக்கு 100 மில்லியன் சுற்றுகளை பொறிக்க முடிந்துள்ளது.

தைவானிய நிறுவனங்கள் எப்படி இதில் சிறப்பானதாக இருக்கின்றன? யாருக்குமே அது ஏன் என தெளிவாக தெரியவில்லை.

இதற்கான பதில் எளிமையானது என்று நினைக்கிறார் டாக்டர் ஷிஹ். “எங்களிடம் மிகவும் அதிநவீன உபகரணங்கள், அப்டேட்டட் வசதிகள் உள்ளன. தலைசிறந்த பொறியாளர்களை நாங்கள் பணியமர்த்தியுள்ளோம். எங்களது இயந்திர ஆப்பரேட்டர்கள் கூட மிகவும் திறமையானவர்கள். மேலும் நாங்கள் வெறுமனே தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யவில்லை, எங்கள் அமெரிக்க ஆசிரியர்களிடமிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு, தொடர்ச்சியான முன்னேற்றத்தை அமல்படுத்தி வருகிறோம்.”

தைவானின் மிகப் பெரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களில் ஒன்றில் பல வருடங்களாக பணியாற்றிய இளைஞர் ஒருவர் கூறுவதாவது : “தொழில்நுட்பத்தில் பெரிய முன்னேற்றங்களை உருவாக்குவதில் தைவானின் நிறுவனங்கள் அவ்வளவு திறமையானவையல்ல என்று நான் நினைக்கிறேன். ஆனால் அதேசமயம் அவர்கள் வேறொருவரின் யோசனையை எடுத்து அதைச் செழுமைப்படுத்துவதில் மிகவும் திறமையானவர்கள். இதை சோதனை மற்றும் பிழை முறையில் செய்து பார்த்து சிறிய விஷயங்களை தொடர்ந்து அவர்களால் மாற்றியமைக்க முடியும்.”

இது முக்கியமானது, ஏனெனில் ஒரு செமி கண்டக்டர் ஃபேப்பில் இயந்திரங்கள் தொடர்ந்து அளவீடு செய்யப்பட வேண்டும். மைக்ரோசிப்களை உருவாக்குவது பொறியியல் சார்ந்தது. ஆனால் அது அதைவிட அதிகமானதும் கூட. சிலர் இதை ஒரு நல்ல விருந்துக்கு சமைப்பதுடன் ஒப்பிடுகின்றனர். இரண்டு சமையல்காரர்களுக்கு ஒரே செய்முறை மற்றும் பொருட்களைக் கொடுக்கும்போது, சிறந்த சமையல்காரரே சிறந்த உணவை உருவாக்குவார்.

வேறு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், தைவானுடன் ரகசிய சாஸ் ஒன்று உள்ளது.

தாய்வானின் சிப் ஆதிக்கத்தின் ரகசியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மக்கள் கஷ்டங்களைச் சமாளிக்கத் தயாராக இருப்பதால்தான் இந்த நிறுவனங்கள் வெற்றி பெறுகின்றன

தனது பெயர் மற்றும் தனது நிறுவன பெயரை சொல்ல விரும்பாத இளைஞர் ஒருவர் தைவானிய நிறுவனங்களுக்கு மேலும் ஒரு கூடுதல் பயன் இருப்பதாக கூறுகிறார்.

“அமெரிக்காவில் உள்ள மென்பொருள் பொறியாளர்களோடு ஒப்பிடும்போது, இங்கிருக்கும் நல்ல நிறுவனங்களில் கூட பொறியாளர்களுக்கு மோசமான சம்பளமே வழங்கப்படுகிறது” என அவர் கூறுகிறார். “ஆனால் தைவானில் உள்ள மற்ற நிறுவனங்களோடு ஒப்பிடும்போது இந்த துறையின் சம்பளம் அதிகம்தான், எனவே நீங்கள் பெரிய எலக்ட்ரானிக் நிறுவனத்தில் பணிபுரிகிறீர்கள் என்றால் சில ஆண்டுகள் கழித்து உங்களால் கடன் பெற முடியும், கார் வாங்க முடியும். திருமணம் செய்து கொள்ள முடியும். எனவே, மக்கள் அதிலிருந்து தங்களுக்கு தேவையானதை உறிஞ்சி எடுத்து கொள்கிறார்கள்.”

ஒவ்வொரு நாளும் 07:30 மணிக்கு ஒரு கூட்டத்துடன் தொடங்கி வழக்கமாக மாலை 7 மணி வரை நீடிக்கும் வாரத்தில் 6 நாள் வேலைநாள் குறித்து விவரிக்கிறார் அவர். ஆலையில் ஏதாவது பிரச்சனை என்றால் ஞாயிற்றுக்கிழமை அல்லது விடுமுறை நாட்களில் கூட அவர் வரவழைக்கப்படுவாராம்.

“மக்கள் வேலையைச் செய்யத் தயாராக இல்லை என்றால் நிறுவனத்தின் முடிந்துவிடும். மக்கள் கஷ்டங்களைச் சமாளிக்கத் தயாராக இருப்பதால்தான் இந்த நிறுவனங்கள் வெற்றி பெறுகின்றன.”

சாதனையே சாபமாக மாறுகிறதா?

டிசம்பரில் 2022 டிஎஸ்எம்சி அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் $40 பில்லியன் தொழிற்சாலையை தொடங்கியது. இது உயர் தொழில்நுட்ப உற்பத்தி அமெரிக்க மண்ணுக்கு திரும்பியதற்கான அறிகுறி என்று ஜனாதிபதி ஜோ பைடனால் பாராட்டப்பட்டது.

அதிலிருந்து தலைப்பு செய்திகள் ஒரு மாதிரி உற்சாகமூட்டுவதாக உள்ளன.

அரிசோனாவின் சிக்கலான சிப் ஆலையில் தொழிற்சங்கங்களின் பிரச்சனையால் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த டிஎஸ்எம்சி போராடி வருகிறது..

சிப் உற்பத்தி அடுத்த வருடம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், தற்போது அது 2025க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் டிஎஸ்எம்சி தலைவர் டாக்டர் சாங் ஆரம்பத்திலிருந்தே இதுகுறித்து ஆழமான சந்தேகத்துடன் இருந்தார். கடந்த ஆண்டு அமெரிக்காவில் சிப் உற்பத்தியை விரிவுபடுத்துவதை “விலையுயர்ந்த, வீணான பயனற்ற முயற்சி” என்று அவர் கூறியிருந்தார். ஏனெனில் அமெரிக்காவில் சிப்களை உற்பத்தி செய்வது தைவானை விட 50% அதிக விலையுயர்ந்ததாக இருக்கும். ஆனால் தைவானின் சிப் தயாரிக்கும் திறன், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான தொழில்நுட்ப சண்டையின் மையத்தில் இருக்கிறது.

சீனாவுக்கு அதிநவீன சிப்களை தைவான் வழங்குவதை அமெரிக்கா தடுக்க விரும்புகிறது. காரணம் இதன் மூலம் சீனா தங்களது ஆயுத திட்டங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தி கொள்ளும் என்று அது அஞ்சுகிறது.

ஐரோப்பாவின் எரிவாயு விநியோகத்தின் மீது அழுத்தத்தை உண்டு செய்த உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குப் பிறகு, அமெரிக்க அரசியல்வாதிகள் தைவான் குறித்து பதற்றமடைந்துள்ளனர். தைவானில் உயர்தர சிப் உற்பத்தியில் ஏற்படும் பெரும் சரிவு அமெரிக்கப் பொருளாதாரத்தை சீனப் படையெடுப்புக்கு பணயக்கைதியாக ஆக்கி விடும் என்று அது அஞ்சுகிறது.

ஆனால் தைவான் நிறுவனங்கள் உற்பத்தியை தீவிலிருந்து வெளியே நகர்த்துவதில் சிறு பொருளாதார நலனை காண்கின்றன. இதை அவர்கள் அரசியல் அழுத்தத்தின் கீழ் தயக்கத்துடன் செய்கிறார்கள்.

தைவானில் உள்ள மக்கள் தங்கள் வெற்றிக்கு தங்களையே குற்றம் சாட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை வெறுக்கிறார்கள். சீன ஆக்கிரமிப்பிலிருந்து இந்த தீவும் அதன் ஜனநாயக சமூகமும் பாதுகாக்கப்பட வேண்டுமா என்று கருத்தில் உலகின் பிற நாடுகள் ஊசலாடி கொண்டிருக்கையில், தைவான் அதன் “சிலிக்கான் கவசம்” என்று பலர் கருதுவதை தானாக முன்வந்து பலவீனப்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் தைவான் மக்கள் எதிர்க்கிறார்கள்.

தாய்வானின் சிப் ஆதிக்கத்தின் ரகசியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

செமி கண்டக்டர் வரலாற்றை உற்றுநோக்கினால், எந்த நாடும் அந்த துறையில் ஆதிக்கம் செலுத்தவில்லை

யாரெல்லாம் வலுக்கட்டாயமாக உலகளாவிய சிப் உற்பத்தியை மறுகட்டமைப்பு செய்ய விரும்புகிறார்களோ, அவர்கள் அதன் வெற்றியை தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார் டாக்டர் ஷிஹ்.

“நீங்கள் செமி கண்டக்டர் வரலாற்றை உற்றுநோக்கினால், எந்த நாடும் அந்த துறையில் ஆதிக்கம் செலுத்தவில்லை,” என்று கூறுகிறார் அவர். “தைவான் வேண்டுமானால் உற்பத்தித் துறையில் ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால் இதில் மிக நீண்ட விநியோகச் சங்கிலி இருக்கிறது மற்றும் அதன் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் புதுமை இந்த தொழில்துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.”

உலகின் பெரும்பாலான மூல சிலிக்கான் சீனாவில் இருந்து தான் வருகிறது, இருப்பினும் அதில் பெரும்பாலானவை சோலார் துறைக்கு செல்கின்றன.

வேஃபர்களை செயலாக்கத் தேவையான இரசாயனங்களை உற்பத்தி செய்வதில் ஜெர்மனியும் ஜப்பானும் முன்னணியில் உள்ளன.

கண்ணாடிகள் மற்றும் கேமரா லென்ஸ்கள் தயாரிப்பதில் மிகவும் பிரபலமான ஒரு ஜெர்மன் ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்தான் கார்ல் ஜெய்ஸ். முன்னணி டச்சு நிறுவனமான ASML ஆல் தயாரிக்கப்பட்ட லித்தோகிராஃபி இயந்திரங்களுக்குச் செல்லும் ஆப்டிகல் சாதனங்களை இதுவே தயாரிக்கிறது. இந்த உழைப்பு மிகுந்த உற்பத்தி அமெரிக்க நிறுவனங்கள் அல்லது பிரிட்டனை தளமாகக் கொண்ட ஆர்ம் நிறுவனத்தில் உருவாகும் வடிவமைப்புகளுக்காக வேலை செய்கிறது.

சீனாவிற்குள் பொருட்கள், வடிவமைப்பு வரை உயர்தர உற்பத்தி வரை பெய்ஜிங்கால் இந்த விநியோகச் சங்கிலியை மீண்டும் உருவாக்க முடியும் என்று டாக்டர் ஷிஹ் சந்தேகிக்கிறார்.

“அவர்கள் வேறு ஒரு வித்தியாசமான மாதிரியை உருவாக்க விரும்பினால், அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிட்ட நான் விரும்புகிறேன்,” என்று அவர் ஆர்வமில்லாமல் கூறுகிறார். “ஏனெனில், நீங்கள் உண்மையிலேயே புதுமைகளை விரும்பினால், உலகம் முழுவதிலும் உள்ள அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இது ஒரு நிறுவனம் அல்லது ஒரு நாடு சம்மந்தப்பட்டது மட்டுமல்ல.”

அமெரிக்கா செய்வதை போல சீனாவை வெட்டி விடுவது குறித்து இவர் சந்தேகிக்கிறார்.

“இது ஒரு பெரிய தவறு என்று தான் நினைப்பதாக,” கூறுகிறார் அவர். “கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும்போது, ​​தைவானின் பொருளாதாரத்தின் அசாதாரண வளர்ச்சிக்கும், அதன் நீண்ட கால அமைதிக்கும் சாட்சியாக அமைந்ததற்கு நான் பாக்கியாவானாக உணர்கிறேன். தற்போது உலகின் பிற பகுதிகளில் முரண்பாடுகளை காண முடிகிறது, அது ஆசியாவிற்கும் வரக்கூடும் என்று நான் கவலைப்படுகிறேன்.”

“நாங்கள் எடுத்துள்ள இந்த விலை மதிப்பற்ற முயற்சியை மக்கள் பாராட்டுவார்கள் என்றும் அதை அவர்கள் அழிக்கமாட்டார்கள் என்றும் நான் நம்புகிறேன்”

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *