லியோ படத்தில் ரத்தம் தெறிக்கும் கழுதைப்புலி காட்சி எடுக்கப்பட்டது எப்படி? – ஒளிப்பதிவாளர் பேட்டி

லியோ படத்தில் ரத்தம் தெறிக்கும் கழுதைப்புலி காட்சி எடுக்கப்பட்டது எப்படி? - ஒளிப்பதிவாளர் பேட்டி

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா

பட மூலாதாரம், manojinfilm@instagram

படக்குறிப்பு,

புதிய தொழில்நுட்பங்கள் மூலம் பணிகளை எளிமையாகச் செய்யமுடிவதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா கூறினார்.

விஜய் நடித்து சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘லியோ’ படத்தின் ஒளிப்பதிவு வெகுவாகக் கவனிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அந்தப் படத்தின் வண்ணச் சேர்க்கை, கழுதைப் புலி வரும் காட்சிகள் ஆகியவை சிறப்பாக அமைந்திருப்பதாக பாராட்டுகளைப் பெற்றுவருகின்றன. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் மனோஜ் பரமஹம்சா.

அவரிடம் லியோ பட அனுபவம், அவருடைய முந்தைய படங்கள், ஒளிப்பதிவு குறித்த அவரது பார்வை ஆகியவை பற்றி விரிவாக பிபிசி பேசியது. பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு மனோஜ் பரமஹம்ஸா அளித்த பேட்டி:

கே. ‘ஈரம்’ உங்களுடைய முதல் படம். அந்தப் படத்தில் துவங்கி, தற்போது ‘லியோ’ வரை, உங்களுடைய பயணம் எப்படி இருந்தது?

ப. நான் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலி என்று சொல்லலாம். ஏனென்றால் தொழில்நுட்பம் வெகுவாக மாறியிருக்கிறது. நான் கல்லூரியில் படித்த காலத்திலும் அசிஸ்டெண்ட்டாக இருக்கும்போதும் முதல் படத்தை எடுக்கும்போதும் நாங்கள் ஃபிலிமில்தான் பணியாற்றினோம். இப்போது புரொஜெக்ஷனும் கேமராவும் முழுமையாக டிஜிட்டலாக மாறிவிட்டன. அப்போது படமாக்குவதில் இருந்த பல கட்டுப்பாடுகள் இப்போது இல்லை.

இயக்குநர்கள், கதை சொல்லும் விதம் ஆகியவையும் மாறியிருக்கின்றன. இந்தப் பயணத்தை நான் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறேன்.

லியோ

பட மூலாதாரம், 7 SCREEN ENTERTAINMENT

கே. முதல் படமான ஈரத்தை டிஜிட்டலில் பதிவுசெய்தீர்களா?

ப. இல்லை. அந்தப் படத்தை நாங்கள் ஃபிலிமில்தான் பதிவுசெய்தோம். ‘நண்பன்’ படம் வரை ஃபிலிமில்தான் பதிவுசெய்தோம். அதற்குப் பிறகுதான் ஒளிப்பதிவு முழுமையாக டிஜிட்டலாக மாறியது. ஆரம்பத்தில் படமாக்கல் எல்லாம் டிஜிட்டலாக மாறிவிடுமா என்ற சந்தேகம் இருந்தது. அதனால், நானே ஒரு டிஜிட்டல் கேமராவை வாங்கி, ‘பூவரசம் பீப்பி’ என்ற படத்தைத் தயாரித்தேன். டிஜிட்டலாக படத்தை எப்படி பதிவுசெய்வது, அதை எப்படி பிரதி எடுப்பது, எடிட்டருக்கு எப்படி கொடுப்பது என்பதை அதில் பழகினேன்.

அதற்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடித்த ‘ரேஸ் குர்ரம்’ என்ற தெலுங்குப் படத்தை முதன்முதலாக டிஜிட்டலில் படமாக்க ஆரம்பித்தோம். அந்தக் கட்டத்தில் சிலர் டிஜிட்டலிலும் சிலர் ஃபிலிமிலும் செய்துகொண்டிருந்தார்கள். அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆன பிறகு எல்லோருக்கும் தன்னம்பிக்கை வந்துவிட்டது. தமிழ்நாட்டில் விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்திற்குப் பிறகு பெரும்பாலானவர்கள் டிஜிட்டலுக்கு மாறிவிட்டார்கள்.

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா

பட மூலாதாரம், manojinfilm@instagram

படக்குறிப்பு,

லியோ படத்தின் ஒளிப்பதிவு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

கே. ஃபிலிமில் படம் எடுக்கும்போது ஒருவிதமான கட்டுப்பாடு, ஒழுங்கு தேவைப்படுகிறது என்றீர்கள். ஆக டிஜிட்டல் கூடுதல் சுதந்திரத்தைத் தருகிறதா?

ப. எந்த ஒரு புதிய தொழில்நுட்பமுமே கூடுதல் சுதந்திரத்தைத் தரும். அதைச் சரியாகவும் பயன்படுத்தலாம், தப்பாகவும் பயன்படுத்தலாம். சிலர் இந்தத் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்திவிடுவார்கள். அதைப் பார்ப்பவர்கள், என்னிடமும் வந்து அதேபோல எடுக்க வேண்டுமென கேட்பார்கள். அவர்களுக்கு புரிய வைக்க வேண்டியிருக்கும்.

கே. இப்போது சிறிய டிஜிட்டல் கேமராவை வைத்துக்கூட, ஏன் போன்களை வைத்துக்கூட படங்களை எடுக்கிறார்கள். இது சினிமாவை ஜனநாயகப்படுத்தியிருக்கிறதா அல்லது பலவீனப்படுத்தியிருக்கிறதா?

ப. ஒரு கருவியை வைத்து என்ன செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அதை வைத்து நல்ல கதையைச் சொன்னால் அது சரிதானே. ‘ஈரம்’ படத்தை துவங்கியபோது சிறிய வீடியோ கேமராவை வைத்து ஒரு சிறிய படத்தை எடுத்துப் பார்த்தோம். மிகச் சாதாரணமான விளக்குகளைப் பயன்படுத்தினோம். பிறகு கம்யூட்டரில் கலரைச் சரிசெய்தோம். அப்படி உருவாக்கிய சிறிய படத்தை போட்டுக் காட்டித்தான் தயாரிப்பாளர்களிடம் வாய்ப்புக் கேட்டோம். வாய்ப்பு கிடைத்தது. ஆகவே, தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம்.

கே. ‘ஈரம்’ படத்தில் ஒருவிதமான நீல வண்ணத்தை பயன்படுத்தியிருந்தீர்கள். கதைக்காக அந்த வண்ணம் கொடுக்கப்பட்டதா, அல்லது வித்தியாசமாகக் காண்பிக்க அந்த வண்ணம் கொடுத்தீர்களா?

ப. கதையில் ஒரு முக்கியமான அம்சம் அது. படம் ஒரு கொலை மர்மமாகத்தான் துவங்கும். பிறகுதான் திகில் படமாக மாறும். ஹீரோவுக்கு சில விஷயங்கள் சிவப்பில் தோன்றிக்கொண்டே இருக்கும். அந்த வண்ணம் தண்ணீரில் கலக்கும்போது ரத்தமாக மாறுவதைப் போல அவர் சொல்லியிருந்தார். ஆனால், சிவப்பு ஒரு பொதுவான வண்ணமாக இருக்கிறது.

ஆகவே, அதற்கு எதிரான வண்ணமான வெளிர் நீல வண்ணத்தைப் பயன்படுத்த முடிவுசெய்தோம். எங்கெல்லாம் அமானுஷ்யமான இடங்கள் வருகிறதோ, அங்கெல்லாம் அந்த வண்ணத்தைப் பயன்படுத்தியிருந்தோம். படத்தின் பெரும்பகுதி மழையை ஒட்டியதாக இருக்கும். ஒன்று மழை பெய்யப்போவதைப் போல இருக்கும். அல்லது மழை விட்டவுடன் அந்தக் காட்சி இருக்கும். ஆகவே, அந்த வெளிர் நீல வண்ணத்தைப் பயன்படுத்தினோம்.

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா

பட மூலாதாரம், manojinfilm@instagram

படக்குறிப்பு,

கதையை முழுமையாகக் கேட்ட பின்னரே, அதை எப்படி ஒளிப்பதிவு செய்வது என்பது குறித்து முடிவெடுப்பதாக மனோஜ் பரமஹம்சா தெரிவித்தார்.

கே. வண்ணங்களை இவ்வளவு கவனமாகப் பயன்படுத்துவதை பார்வையாளர்கள் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறார்களா? அதைப் பற்றிப் பேசியிருக்கிறார்களா?

ப. அந்தப் படம் வெளியானபோது ஒரு வெள்ளிக்கிழமையில் எல்லாமே மாறிவிட்டது. எல்லா வெள்ளிக்கிழமையும் படங்கள் வெளியாகின்றன. புதிதாக ஒளிப்பதிவாளர்கள் வருகிறார்கள். ஆனால், எனக்குக் கிடைத்த வரவேற்பு என்பது இதுபோலச் செய்ததால்தான் கிடைத்தது. இன்றுவரை அந்த வரவேற்பு இருக்கிறது. கதையோடு ஒரு விஷயத்தைச் சேர்த்துச் செய்தால் அது தொடர்ந்துகொண்டே இருக்கும்.

கே. உங்களுடைய படங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு விதமான வண்ணத் தேர்வை பயன்படுத்துகிறீர்கள். இதை எப்படி முடிவுசெய்கிறீர்கள்..?

ப. சினிமா என்பது ஒரு கலை. ஆனால், ஒளிப்பதிவாளரைப் பொறுத்தவரை இது ஒரு அறிவியல். ஆகவே கலையும் அறிவியலும் எப்படி கலக்கின்றன என்பது முக்கியம். ‘லியோ’ படத்தின் கதையைச் சொல்லும்போது, எந்த மாதிரி விஷயங்கள் இந்தப் படத்தில் வரப்போகின்றன என்பதைக் கேட்டுக்கொள்வேன். ஆரம்பத்தில் என்ன மாதிரி வரும், முடிவில் கதை எப்படி முடியும் என்பதைப் புரிந்துகொள்வேன். ஆகவே, எந்த வண்ணத்தில் துவங்கி, எப்படி முடிந்தால், படம் பார்ப்பவர்களின் மன நிலை மாறும் என்பதை யோசிப்பேன்.

லியோ

பட மூலாதாரம், 7 SCREEN ENTERTAINMENT

‘லியோ’ படத்தைப் பொறுத்தவரை, எனக்கு அந்தக் கதை ஒரு எரிமலையாகத்தான் தோன்றியது. பனி சூழ்ந்த எரிமலை. உள்ளே கொதிக்கும் குழம்பு இருக்கிறது. அது வெடித்துக்கொண்டு வெளியில் வந்தால் என்ன வண்ணத்தில் இருக்கும் என்பதுதான் இரண்டாவது பாதி.

ஆகவே, முதல் பாதியில் பனியின் வெண்ணிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். இரண்டாவது பாதியில் ஒரு ஆரஞ்சு வண்ணம் கொடுக்கப்பட்டிருக்கும். இயக்குனரின் முந்தைய படங்களான ‘கைதி’, ‘விக்ரம்’ ஆகிய படங்களில் வன்முறை காட்சிகளில் மஞ்சள் வண்ணம் பயன்படுத்தியிருப்பார்கள். நான், மஞ்சளுக்குப் பதிலாக ஆரஞ்சு வண்ணத்தைப் பயன்படுத்தலாமா என்று கேட்டேன். இயக்குநர் ஒப்புக் கொண்டார்.

கே. இது போன்ற விஷயங்களை புரிந்துகொள்ள ஒளிப்பதிவாளருக்கும் இயக்குநருக்குமான புரிதல் எந்த அளவுக்கு முக்கியம்?

ப. இயக்குநரைப் பொறுத்தவரை ஒளிப்பதிவாளரோடு மட்டுமல்லாமல், நடிகர்கள், பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் என எல்லாரோடுமே ஒரு புரிதலை ஏற்படுத்த வேண்டியிருக்கும். இல்லாவிட்டால், ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை நினைத்துக் கொண்டிருப்போம்.

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா

பட மூலாதாரம், manojinfilm@instagram

படக்குறிப்பு,

பிலிம்களில் ஒளிப்பதிவு செய்ததை விட தற்போது டிஜிட்டலில் ஒளிப்பதிவு செய்வது நிறைய வசதிகளைக் கொடுக்கிறது என்றார் மனோஜ் பரமஹம்சா.

ஒரு ஒளிப்பதிவாளராக எனக்கு சில விஷயங்கள் பிடித்திருக்கும். நான் அதைத் திணித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். ஒரு இயக்குநராக அவர் என்ன விரும்புகிறார் என்று பார்ப்பேன். லோகேஷ் கனகராஜைப் பொருத்தவரை அவர் துப்பாக்கிகள் மீது மிகவும் ஆர்வமாக இருந்தார். ஆகவே, துப்பாக்கியின் பார்வையில் ஒரு காட்சியை வைக்கலாம் என நினைத்தோம்.

எனவே, அதற்கென ஒரு வடிவமைப்பைச் செய்து, துப்பாக்கி சுடும்போது அதன் பார்வையில் இருந்து பார்த்தால் எப்படி இருக்கும் என ஒரு காட்சியை உருவாக்கினோம்.

படப்பிடிப்பிற்கான இடங்களைப் பார்க்கப் போகும்போது இயக்குநருடன் நிறையப் பேசுவேன். பேசப் பேச புரிதல் அதிகமாகும். பிறகு, அந்த இயக்குநரின் முந்தைய படங்களையும் பார்த்து, அவர் என்ன நினைக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முயல்வேன். புதிதாக வரும் இயக்குநர்களிடம் இதெல்லாம் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அவர்களிடம் நிறைய பேசி, இந்த புரிதலை உருவாக்குவேன்.

கே. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ போன்ற ரொமான்டிக் படங்களுக்கான வண்ணப் பின்னணியை எப்படி உருவாக்குகிறீர்கள்?

லியோ

பட மூலாதாரம், MADONNA SEBASTIAN

ப. கௌதம் மேனனைப் பொறுத்தவரை பழுப்பு வண்ணம்தான் அவருடைய வண்ணம் எனப் புரிந்துகொண்டிருந்தேன். ஆனால், அவரிடம் பேசியபோது தான் இந்தக் கதையை வெண்மையாகப் பார்ப்பதாகச் சொன்னார். ஏன் என்று கேட்டேன். கிறிஸ்தவத்தின் வண்ணம் வெள்ளை என்பதாலும் காதலுக்கு வெள்ளை நிறம் பொருத்தமாக இருக்கும் என நினைப்பதாலும் வெள்ளை நிறமாக இந்தப் படத்தைப் பார்ப்பதாகச் சொன்னார்.

இந்தப் படத்தின் நிறைய காட்சிகள் வெளியில் எடுக்கப்பட்டிருந்ததால், வானம் அதன் நீலமும் அதிகமாக காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. ஆகவே வெள்ளையும் நீலமும்தான் இதன் அடிப்படை வண்ணமாக அமைந்தன.

வெள்ளை என்பது திரைப்படமாக்கத்தில் மிகவும் சிக்கலானது. ஏனென்றால், வெள்ளை அதிகமாக இருந்தால் எல்லாப் பொருட்களும் வெளிறிப் போய் தெரியும். அதேபோல, திரையரங்குகளில் திரைகள் அழுக்காக இருந்தால், அதுவும் தெரியும். ஆகவே வெள்ளை என்பது சினிமாவில் சவாலான நிறம்.

இருந்தாலும் இயக்குநர் அந்த வண்ணத்தைக் கேட்பதால், ஒரு உத்தியைப் பயன்படுத்தினோம். சில வடிவங்கள் வருவதுபோன்ற ஒரு ஃபில்டரைப் பயன்படுத்தினோம். அப்படிச் செய்தபோது, திரையில் அழுக்கு இருந்தாலும் தெரியாது.

அதேபோல, இந்தப் படத்திற்காக 400 ஆண்டுகள் பழமையான ஒரு தேவாலயத்தைத் தேடிப் போய் படம் எடுத்தோம். மால்டாவில் போய் படப்பிடிப்பு நடத்தினோம். காரணம், அந்த ஊர் முழுவதுமே வெண்மையாக இருக்கும். இப்படியாக பார்த்துப் பார்த்து அந்தப் படத்தைச் செய்தோம்.

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா

பட மூலாதாரம், manojinfilm@instagram

ஆனால், சில படங்களுக்குத்தான் இப்படி கேட்பார்கள். சில படங்களுக்குக் கேட்க மாட்டார்கள். உதாரணமாக ‘ரேஸ் குர்ரம்’ படத்திற்கு எதுவுமே அவர்கள் கேட்கவில்லை. ஆனால், தெலுங்குப் படங்களைப் பார்க்கும்போது அதில் சிவப்பும் நீலமும் அதிகமாக இருப்பது தெரியவந்தது. ஆகவே, இந்தப் படத்தில் சிவப்பு நீலமும் அதிகமாக வந்துவிடக்கூடாது என்று முடிவுசெய்தேன். ஆடை வடிவமைப்பாளர்கள், கலை இயக்குநர்கள் என எல்லோரிடமும் அதைச் சொன்னேன்.

கே. அந்தப் படத்தின் இயக்குநர் அதை எப்படி எடுத்துக்கொண்டார்?

ப. அவர்கள் என்னைத் தேடி வருவதற்கான காரணமே அதுதான். படத்தின் இயக்குநர், ‘ஈரம்’ படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமனின் நண்பர். தமனிடம் கேட்டுத்தான் என்னை ஒப்பந்தம் செய்தார்கள். ஆகவே, நான் ஏதாவது வித்தியாசமாகச் செய்வேன் என்றுதான் என்னை அழைத்தார்கள்.

கே. எல்லா இயக்குநர்களும் இது போன்ற சுதந்திரத்தைத் தருகிறார்களா?

ப. எல்லா இயக்குநர்களுமே தங்களுடைய பார்வையாளர்கள் யார் என்பதை முடிவுசெய்துவிட்டுத்தான் வருகிறார்கள். இயக்குநர் யாரை இலக்காக வைத்து படத்தை எடுக்கிறாரோ, அவர்களை மனதில் வைத்தே நாமும் இயங்க வேண்டும். அப்படிச் செய்தால் அந்த வித்தியாசத்தை நாம் காட்டிவிட வேண்டும்.

கே. ‘லியோ’ படத்தில் கழுதைப் புலியுடன் நாயகன் சண்டையிடும் காட்சியில் கிராஃபிக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அம்மாதிரி காட்சியை எடுப்பது ஒளிப்பதிவாளருக்கு எவ்வளவு சிரமமாக இருக்கும்?

ப. ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல, எல்லோருக்குமே சிரமமான காட்சி அது. ஏனென்றால் இல்லாததை இருப்பதாக நினைத்துக்கொண்டு படமாக்க வேண்டும். ஆனால், கிராஃபிக்ஸை பயன்படுத்தி எடுக்கும் காட்சிகளில் எனக்கு நல்ல அறிமுகம் உண்டு. ‘ஈரம்’ படத்திலேயே தண்ணீரை எல்லாம் கிராஃபிக்ஸில்தான் செய்திருப்போம்.

கிராஃபிக்ஸ் பயன்படுத்தப்படும் காட்சிகளைப் பொறுத்தவரை, படமாக்கலுக்கு முன்பே நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும். பிறகு, எந்த மிருகத்தை பயன்படுத்தப் போகிறோமோ, அது எப்படி நடந்துகொள்ளும், எவ்வளவு வேகத்தில் ஓடும், அதை அடக்கும்போது என்ன செய்யும் என்பதையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும். பிறகு, ஒரு பொம்மையையோ, ஒரு மனிதரையோ வைத்து அந்தக் காட்சி எடுக்கப்படும். இதில் விளக்குகளை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். நாம் பயன்படுத்தும் வெளிச்சமும் கிராஃபிக்ஸில் பயன்படுத்தப்படவிருக்கும் வெளிச்சமும் சரியாக வர வேண்டும். பல்வேறு கேமராக்களில் அந்தக் காட்சியைப் பதிவுசெய்து கிராஃபிக்சிற்குத் தர வேண்டும். இது ஒரு பெரிய வேலை.

வெளிச்சத்தை பொறுத்தவரை ஸ்டுடியோவில் படம் எடுத்தால் வெளிச்சத்தைக் கட்டுப்படுத்தலாம். ஆனால், காஷ்மீர் போன்ற இடங்களில் வெளிப்புற படப்பிடிப்பில் ஈடுபடும்போது, மிகவும் கடினமாக இருக்கும். ஒரு காட்சியை எடுத்து முடிப்பதற்குள் வெளிச்சம் போய்விடும். அடுத்த நாள் அதே நேரத்தில் அந்தக் காட்சியின் தொடர்ச்சியை எடுக்க வேண்டியிருக்கும். இவ்வளவு கவனமாக இருந்ததால்தான் அது கிராஃபிக்ஸைப் போல தெரியவில்லையென பலரும் கூறுகிறார்கள்.

விஎஃப்க்ஸ் செய்யவும் மிகச் சிறந்த நிறுவனத்தைத் தேர்வுசெய்தோம். அதனால்தான் நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

கே. அதேபோல, ‘லியோ’ படத்தில் சிகரெட்டைத் தூக்கிப் போட்டவுடன் எல்லாம் எரிந்துவிடும் காட்சியும் பரபரப்பாக பேசப்படுகிறது. அந்தக் காட்சி எப்படி படமாக்கப்பட்டது?

ப. அந்தக் காட்சிக்கு எஃப்பிவி என்ற ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினோம். வழக்கமான ட்ரோன்களைப் பயன்படுத்துவதில் சில வரையறைகள் இருக்கும். இந்த ட்ரோனைப் பொறுத்தவரை ரேஸ்களுக்குப் பயன்படுத்தக்கூடியது. இதை நாங்கள் சினிமாவுக்குப் பயன்படுத்தினோம்.

ஆனால், இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் அந்தக் காட்சி படமாக்கப்படும்போது எல்லோரும் பார்க்க முடியாது. இயக்குபவருக்கு மட்டும்தான் அது தெரியும். முதல் நாளே சண்டைக் காட்சிகளுக்கான இயக்குநர் வந்து, எப்படி, எந்தக் காட்சிகளை படமாக்க வேண்டும் எனச் சொல்லிவிடுவார். அதற்குப் பிறகு அடுத்த நாள் படமாக்குவோம்.

இந்தப் படத்தில் கழுகை ஒரு பாத்திரத்தைப் போல பயன்படுத்தியிருந்தார் இயக்குநர். கழுகு போகும் வேகத்திற்கு கேமராவும் சென்றால் நன்றாக இருக்கும் என்பதால் இதைப் பயன்படுத்தினோம். சண்டைக் காட்சிகளைப் படமாக்கும்போதும், முதலில் ஒரு குழு ஓடிவரும். பிறகு இன்னொரு குழு ஓடிவரும். அதற்கு மாற்றாக ஒரே ஷாட்டில் இரு தரப்பும் வருவதைப்போல காட்சிப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்.

மேலும், இந்தப் படத்திற்கு என மிகப் பெரிய செலவில் ஒரு செட் அமைத்திருந்தோம். இம்மாதிரி செட்கள் ஒரே நேரத்தில் முழுமையாகத் தெரியாது. சில ‘வைட் ஷாட்’களில் தெரியும், அவ்வளவுதான். இந்த ட்ரோனை வைத்து இரண்டு ஏக்கரில் போட்ட செட்டை ஒரே காட்சியில் தெரிவது போல 360 டிகிரி கோணத்தில் படம் பிடித்தோம். சுமார் ஒரு நிமிடத்திற்கு கேமரா பயணம் செய்யும்போது, அந்த செட்டின் பிரம்மாண்டம், கலை இயக்குநரின் முயற்சிகளுக்கு ஒரு கவனம் ஆகியவை கிடைத்தன. ஒரே காட்சியில் குழுவில் உள்ள எல்லோரது திறமையையும் காட்டும் வாய்ப்புக் கிடைத்தது.

எங்களுக்கு இப்படி ஒரு காட்சியை எடுக்கும் திட்டமே இல்லை. ஆனால், கழுதைப் புலி காட்சியை எடுக்கும்போது எங்களுக்கு வேகமாக நகரக்கூடிய ஒரு கேமரா தேவைப்பட்டது. அப்போதுதான் இந்த ட்ரோனை வைத்து படமாக்க முடிவுசெய்தோம். ஆனால், அந்தக் காட்சியில் எல்லோருமே கழுதைப் புலியைக் கவனித்ததால், கேமரா நகர்வதைக் கவனிக்கவில்லை.

கழுதைப் புலி காட்சியை எடுக்கும்போதே, இயக்குநருக்கும் சண்டைக் காட்சி இயக்குநருக்கும் இதைப் பயன்படுத்தி வேறு காட்சிகளை எடுக்கும் ஆசை வந்துவிட்டது. ஆகவே இதற்காகவே ஒரு காட்சியை எழுதி படமாக்கினோம். இப்போது விமர்சகர்கள், தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் தாண்டி எல்லோருமே அந்தக் காட்சியைப் பேசுகிறார்கள். அது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

கே. அதேபோல, சுமார் ஆயிரம் பேரை வைத்து ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. அதைப் படமாக்கும்போது என்ன சவால்கள் இருந்தன?

ப. காட்சிகளை இருண்மையோடு எடுக்கும் லோகேஷ் போன்ற இயக்குநராக இல்லாமல் இருந்தால் எனக்குப் பிரச்சனை இல்லை. பெரிய விளக்குகளை பயன்படுத்தி, பல வண்ணங்களில் படம் பிடித்துவிடலாம். ஆனால், இந்தப் படத்தில் அப்படி செய்ய முடியாது. அதே நேரம் ஆயிரம் பேர் இருப்பதன் பிரம்மாண்டத்தையும் காட்ட வேண்டும். இது கொஞ்சம் சவாலாக இருந்தது.

இம்மாதிரியான சவாலான காட்சிகளைப் படமாக்கும்போது, படப்பிடிப்புத் தளத்திற்கு சென்று யோசிக்கக்கூடாது. முன்பே திட்டமிட வேண்டும். சோதனை செய்து, என்ன கலர் இருக்க வேண்டும் என்பதையெல்லாம் யோசித்து செய்தால், சிறப்பாக செய்ய முடியும்.

கே. ‘விண்ணத் தாண்டி வருவாயா’ போன்ற ஒரு அமைதியான திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்வது அல்லது ‘லியோ’ மாதிரியான ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்வது என்ற இரண்டில் எதைச் செய்வது உங்களுக்குப் பிடித்திருக்கிறது?

ப. ஒளிப்பதிவு என்பது ஒரு பொறுப்பு. ஒரு இயக்குநர் நம்மை அழைக்கும்போது, அவர் எம்மாதிரி படங்களை எடுப்பார் என்பதை புரிந்துகொண்டு அந்த படத்தில் இணைகிறோம். அதே நேரம், நான் பணியாற்றும் படங்களுக்கு வெளியில் நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டால், எனக்கு த்ரில்லர்களைப் பிடிக்கும். அதீதமான ரொமான்சோ, அதீதமான ஆக்ஷனோ பிடிக்காது.

ஆனால், வேலை என்று வரும்போது அந்தச் சவாலை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரே மாதிரிதான் படமெடுக்க விருப்பமென்றால், அதுபோன்ற ஒரு அரசு வேலையைத் தேடிக்கொண்டு போய்விடலாம்.

கே. ஒரு படம் தொழில்நுட்ப ரீதியில் சிறப்பாக வந்துவிட்டால், ஹாலிவுட் தரத்திற்கு இருப்பதாகச் சொல்கிறார்கள். தமிழ் சினிமா இவ்வளவு வளர்ந்த பிறகும் ஹாலிவுட்தான் அளவுகோலா?

ப. தமிழ் சினிமாவில் மணிரத்னம், பி.சி. ஸ்ரீராம் ஆகிய இருவரையும் விட்டுவிட்டால், ஹாலிவுட்டில் பயன்படுத்தும் கேமரா வேறு, நாம் பயன்படுத்தும் கேமரா வேறு என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். முன்பெல்லாம் ஆங்கிலப் படத்தைப் பார்க்க ஒரு சில விஷயங்கள் தேவைப்பட்டன. அந்தப் படங்கள் எல்லா திரையரங்குகளிலும் ஓடாது. தேடிச் சென்று பார்க்க வேண்டும். ஆனால். இப்போது ஓடிடி வந்த பிறகு, ஆங்கிலப் படங்களைப் பார்ப்பது சாதாரணமாகிவிட்டது. எல்லோரும் பார்க்கிறார்கள். அது இப்போதுள்ள இயக்குநர்களுக்கு மிகப் பெரிய அழுத்தத்தை உருவாக்குகிறது.

‘லியோ’வை எப்படியும் எடுத்திருக்கலாம். ஆனால், இந்தப் படத்திற்கு என ஒரு வர்த்தகம் இருக்கிறது. இவ்வளவு செலவு செய்தாலும் அந்தப் படத்தில் லாபம் இருக்கும் எனும்போது, தரத்தை தொடர்ந்து மேலே கொண்டுசெல்ல முயற்சிக்கிறோம். அதைப் பார்ப்பவர்கள் நன்றாக இருக்கிறது என்பதைச் சொல்ல ஹாலிவுட் தரம் என்கிறார்கள். ரசிகர்களுக்கு நாம் செய்வது பிடித்திருக்கிறது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கே. இப்போது படம் பிடித்த பிறகு, அதைச் சரிசெய்ய, மாற்றி அமைக்க பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இது கூடுதல் வசதியைத் தருகிறதா அல்லது அலட்சியத்தைத் தருகிறதா?

ப. ஃபிலிம்களை வைத்துப் படமாக்கும்போது அதில் என்ன பதிவாகியிருக்கிறது என்பது தெரியாது. ஃபிலிமைப் பொறுத்தவரை, வெளிச்சம் அதில் உள்ள ரசாயனத்தில்பட்டு காட்சிகள் பதிவாகும். ஆனால், அது எப்படி பதிவாகியிருக்கும் என்பதைச் சொல்ல முடியாது. சின்னச் சின்ன விஷயங்களில் தவறு செய்திருந்தால் தவறாக முடிய வாய்ப்புள்ளது. நன்றாக வர வேண்டும் என ஒரு காட்சியை எடுத்திருப்போம், அது நாம் நினைத்ததைவிட ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கும்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்த பிறகு, நாம் என்ன பார்க்கிறோமோ அதுதான் நமக்குக் கிடைக்கும் காட்சி. ஆகவே எடுக்கும்போதே என்ன கிடைக்கும் என்பது தெரிந்துவிடும். DI போன்றவற்றின் மூலம் கூடுதலாக ஒரு வண்ணத்தைச் சேர்க்கலாம். ஆகவே இம்மாதிரி தொழில்நுட்பங்களை வைத்து, சற்று சரிசெய்யலாம். புதிதாக எதையும் உருவாக்கிவிட முடியாது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *