
உலகப் பொருளாதாரங்களில் இந்தியப் பொருளாதாரம் மூன்றாவது இடத்தில் இருப்பதாகவோ, ஐந்தாவது இடத்தில் இருப்பதாகவோ தொடர்ந்து மத்திய அரசு கூறி வருகிறது.
உலகப் பொருளாதாரங்களில் இந்தியப் பொருளாதாரத்தின் நிலை, மக்களின் நிஜமான நிலையை எதிரொலிக்கிறதா என்பது குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீ நிவாஸனிடம் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன்.
அந்தப் பேட்டியிலிருந்து…
இந்திய பொருளாதாரம் பற்றி பிரதமர் மோதி தவறான தகவல்களை அளிக்கிறாரா?
கேள்வி: 2014ஆம் ஆண்டில் இந்தியா உலகின் பத்தாவது பெரிய பொருளாதாரமாக இருந்ததாகவும், பத்தாண்டுகளில் ஐந்தாவது பொருளாதாரமாக உயர்ந்திருப்பதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்து வருகிறார். இது எந்த அளவுக்குச் சரி?
பதில்: பிரதமர் தவறான தகவல்களை அளிக்கிறார். மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பொறுத்தவரை, Nominal GDP, Real GDP, PPP என மூன்று வகையான உள்நாட்டு மொத்த உற்பத்தியை பற்றிக் குறிப்பிடுவார்கள்.
இதில் Nominal GDPயைப் பற்றி யாருமே பேச மாட்டார்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோதி Nominal GDPயை பற்றித்தான் குறிப்பிடுகிறார். PPP (Purchasing power parity)ஐ அடிப்படையாகக் கொண்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியைத்தான் கணக்கில் எடுப்பார்கள்.
அதன்படி பார்த்தால், மன்மோகன் சிங் காலத்திலேயே இந்தியா நான்காவது பொருளாதாரமாக வந்துவிட்டது. இப்போது மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கும்.
முதலில் Purchasing Power Parity என்றால் என்ன என்று பார்க்கலாம். ஒரு கூடையில் பத்துப் பொருட்களை எடுத்துக்கொண்டால், அவற்றுக்கு இந்தியாவில் என்ன விலை – அமெரிக்காவில் என்ன விலை என்று பார்க்க வேண்டும். அதன்படி பார்த்தால் சீனா முதலிடத்திலும் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் இந்தியா மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
‘Nominal GDP, Real GDP, PPP என மூன்று வகையான உள்நாட்டு மொத்த உற்பத்தியைப் பற்றிக் குறிப்பிடுவார்கள். இதில் Nominal GDPயைப் பற்றி யாருமே பேச மாட்டார்கள். ஆனால், பிரதமர் அதைப் பற்றித்தான் குறிப்பிடுகிறார்,’ என்கிறார் ஸ்ரீநிவாஸன்
அடுத்ததாக Real GDP, Nominal GDP என்றால் என்னவெனப் பார்க்கலாம். பணவீக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார அதிகரிப்பையும் சேர்த்துச் சொல்வதுதான் Nominal GDP. பணவீக்கத்தால் ஏற்பட்ட அதிகரிப்பைக் கழித்துவிட்டுச் சொல்வது Real GDP. பணவீக்கத்தை கழித்துவிட்டுப் பார்த்தால் இந்தியா ஆறாவது இடத்தில் இருக்கிறது.
இந்தியா ஓர் இளம் நாடு. வேலை பார்க்கும் வயதில் நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆகவே, பொருளாதாரம் வளர்ந்துகொண்டே போகும் என்பது அடிப்படையான விஷயம்.
மோதி ஆட்சியைவிட்டுப் போன பிறகும் அந்த வளர்ச்சி இருக்கும். எந்த காலகட்டத்தில் எவ்வளவு வளர்ச்சி இருக்கும் என்பதுதான் முக்கியம்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பொருளாதார வளர்ச்சி சராசரியாக 8 சதவீதம் இருந்தது. மோதியின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 5.5 -6 சதவீதமாகத்தான் இருக்கிறது.
கோவிட் பேரிடரைக் காரணம் சொல்வார்கள். ஆனால், அதற்கு எட்டு காலாண்டுகளுக்கு முன்பே வளர்ச்சி குறைந்து, 3 சதவீதமாகிவிட்டது. கோவிட் காலகட்டத்தில் மிகவும் பாதாளத்திற்குப் போய்விட்டது. – 5.8 சதவீதமாகிவிட்டது. அவ்வளவு கீழ் நிலையில் இருந்ததால், இப்போது ஏழு சதவீதம், எட்டு சதவீதம் வளர்ச்சி இருக்கிறது.
இந்தியா 2025க்குள் ஐந்து ட்ரில்லியன் பொருளாதாரமாகி விடும் என்றார். Real GDP 3 ட்ரில்லியன்தான். இன்னும் ஓராண்டுதான் இருக்கிறது. 8 சதவீதம் வளர்ச்சி இருதாலும் அது 3.24 ட்ரில்லியனாகத்தான் இருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
‘கோவிட் பேரிடருக்கு முன்பே இந்தியப் பொருளாதாரம் விழுந்துவிட்டது,’ என்கிறார் ஸ்ரீநிவாஸன்
இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு கோவிட் தாக்கம் காரணமில்லையா?
கேள்வி: இதற்கு கோவிட் தாக்கம் ஒரு காரணமல்லவா?
பதில்: கோவிட் பேரிடருக்கு முன்பே இந்தியப் பொருளாதாரம் விழுந்துவிட்டது. சமீபத்தில் தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் குறித்த விவரம் வெளியிடப்பட்டது. இந்தியப் பொருளாதாரம் – 5.8 சதவீதமாக வீழ்ந்தபோதும், தமிழக பொருளாதாரம் 1 சதவீத வளர்ச்சியில் இருந்ததே? அப்படியானால், தமிழ்நாட்டில் என்ன வித்தியாசமாகச் செய்தார்கள்? அதை ஏன் இந்திய அளவில் செய்ய முடியவில்லை?
கேள்வி: மூன்றுவிதமான மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீடுகளில், எதைக் கணக்கில்கொள்ள வேண்டும்?
பதில்: உலக வங்கி Real GDPஐ கணக்கில் எடுக்கிறது. பொருளாதார நிபுணர்கள் PPPஐ கணக்கில் எடுப்பார்கள். இதைத் தாண்டி, தனி நபர் வருவாய் என்ற ஓர் அம்சமும் இருக்கிறது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை, மக்கள் தொகை எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் எண் இது. இதனைக் கணக்கில் எடுத்தால், நாம் எங்கோ பின்னால் இருக்கிறோம்.
எந்தவிதமான ஜிடிபியை பற்றிப் பேசினாலும் அதில் சாமானியனுக்கு எந்தப் பலனும் இல்லை. ஒரு சாமானியனை பொறுத்தவரை, அவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதுதான் முக்கியம். இந்தியாவின் தனிநபர் வருவாய் சுமார் 98 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. அதிலும் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு இருக்கிறது.
இந்தியாவில் 21 சதவீத வருவாயை, அதன் மக்கள் தொகையில் வெறும் ஒரு சதவீதமாக இருப்பவர்கள் பெற்றுவிடுகிறார்கள். மீதமுள்ள 79 சதவீதத்தை 99 சதவீத மக்கள் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால், அதுவும் சமமாகப் பகிரப்படுவதில்லை.
குறிப்பாக, 50 சதவீத மக்கள் மொத்த வருவாயில் ஒரு சதவீதத்தைத்தான் பகிர்ந்துகொள்கிறார்கள். இந்த அளவுக்கு ஏற்றத்தாழ்வு இருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வைப் பற்றி பிரதமர் பேசவில்லை.
அரசு கார்ப்பரேட் வரியை 40 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைத்திருக்கிறது. பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாகிறார்கள். ஆனால், ஜிஎஸ்டி, சுங்க வரி, கலால் வரி போன்ற மறைமுக வரிகள் வெகுவாக அதிகரித்துள்ளன. இதனால், பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன.
நம்முடைய பொருளாதாரத்தை வெளிநாட்டுப் பொருளாதாரத்தோடு ஒப்பிடுகிறோம். ஆனால், உள்நாட்டிலேயே மாநிலங்களுக்கு இடையிலேயே வாழ்க்கைத் தரத்திலும் வருவாயிலும் வித்தியாசம் இருக்கிறது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் ஓரளவுக்குச் சிறப்பாக இயங்குகின்றன. ஆனால், உத்தர பிரதேசத்தில் இப்படியிருக்குமா என்றால் இருக்காது. மாநிலங்களுக்கு இடையே உள்ள இந்த ஏற்றத்தாழ்வை எப்படிப் புரிந்துகொள்வது?
நாற்பதைம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து வட மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்வார்கள். இன்று அப்படி நடப்பது மிகவும் குறைவு. வட மாநிலங்களில் இருந்து வருபவர்கள்தான் அதிகம். குறிப்பாக கூலி வேலைக்கு அதிகம் பேர் வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் காமராஜர் காலத்தில் இருந்தும் கேரளாவில் நம்பூதிரிபாட் காலத்தில் இருந்தும் படிப்பிற்கு முக்கியத்துவம் அளித்தார்கள். மதிய உணவுத் திட்டத்தை உலகிற்கே அறிமுகப்படுத்தியதே தமிழ்நாடுதான். அதனால், கல்வி கற்றோர் விகிதம் வெகுவாக அதிகரித்தது.
பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்குச் செல்பவர்களின் விகிதமும் அதிகரித்தது. அப்படிப் படித்தவர்கள் பொருளாதாரத்திற்குக் கூடுதல் பங்களிப்பு செய்வார்கள். இதெல்லாம் சமூக மூலதனம்.
ஆகவே பொருளாதாரத்தைப் பற்றிப் பேசும்போது மொத்த எண்களைப் பற்றிப் பேசக்கூடாது. ஒரு குடிமகனுக்கு என்ன கிடைக்கிறது என்பதைத்தான் பேச வேண்டும்.
சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டின் தனிநபர் வருவாய்க்கும் இந்தியாவின் தனிநபர் வருவாய்க்கும் இடையில் பெரிய அளவில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. சராசரியிலேயே இந்த அளவுக்கு ஏற்றத்தாழ்வு இருக்கிறது. உத்தர பிரதேசத்தின் தனிநபர் வருவாயை எடுத்துக்கொண்டால், தமிழகத்தின் தனிநபர் வருவாய் மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
‘600- 700 ரூபாய்க்கு விற்க வேண்டிய சிலிண்டரை 1,100 ரூபாய்க்கு விற்றார்கள். தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியே கிடைத்தது,’ என்கிறார் ஸ்ரீநிவாஸன்
சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைப்பது நிவாரணமா?
கேள்வி: ஆகவே பொருளாதாரத்தைப் பற்றிப் பேசும்போது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்துப் பேசுவது அர்த்தமற்றதா?
பதில்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மிகப் பெரிய சாதனையாளர். அவர் ஆயிரக்கணக்கான இடங்களில் பேசியிருக்கிறார். எங்கேயாவது, தான் இதைச் செய்திருக்கிறேன் என்று பெருமையடித்துக் கொண்டதுண்டா? அவருக்கு இது அர்த்தமற்றது என்று தெரியும்.
கேள்வி: எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை பற்றிய கருத்து என்ன?
பதில்: 600- 700 ரூபாய்க்கு விற்க வேண்டிய சிலிண்டரை 1,100 ரூபாய்க்கு விற்றார்கள். தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியே கிடைத்தது. இப்போது மூன்று மாநிலத் தேர்தல்கள் வருகின்றன. அதனால் குறைத்திருக்கிறார்கள். தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் குறையும்.
கேள்வி: 1,100 ரூபாய்க்கு விற்ற சிலிண்டரின் விலையில் 200 ரூபாய் குறைவது ஒரு நிவாரணம் இல்லையா?
பதில்: எப்படி நிவாரணமாகும்? இந்த 200 ரூபாயில் ஆறு கிலோ தக்காளி வாங்கலாம். அது ஒரு பெரிய நிவாரணமா? ஒரு மாத காய்கறிச் செலவை சமாளிக்க முடியுமா? தமிழ்நாட்டில் 20 கிலோ அரிசியை இலவசமாக அளிக்கிறார்கள். இந்திய அளவில் 5 கிலோ அரிசிதான் தருகிறார்கள்.
இங்கே பருப்பு, எண்ணெய் ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்திய அளவில் அவையெல்லாம் அளிக்கப்படுவதில்லை. 600 ரூபாய் இருந்த சிலிண்டரின் விலையை 1,100 ரூபாயாக ஆகிவிட்டு, அதில் 200 ரூபாயைக் குறைத்தால் எப்படி நிவாரணமாகும்?
கர்நாடக அரசு ஒரு கோடியே எட்டு லட்சம் பேருக்கு மாதம் 2,000 ரூபாய் தரப் போகிறது. தமிழ்நாடு அரசு செப்டம்பரில் இருந்து மாதம் ஆயிரம் ரூபாய் தரப் போகிறது.
ஒரு கிராமத்தில் வசிப்பவரிடம் சென்று நீங்கள் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தில் இருக்கிறீர்கள் என்று சொன்னால் அவருக்கு என்ன புரியும்?
அவரைப் பொறுத்தவரை, அவருடைய மகனின் கல்லூரிப் படிப்புக்கு கட்டுவதற்குப் பணம் வேண்டும், அவ்வளவுதான். ஒரு குடும்பத் தலைவியைப் பொறுத்தவரை, வரும் வருவாயில் குடும்பத்தை நடத்த முடிகிறதா என்பது முக்கியமா, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்பது முக்கியமா?
உலகப் பொருளாதாரத்தில் எத்தனையாவது இடத்தில் இருக்கிறோம் என்பது எதையும் தரப் போவதில்லை. மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். தமிழ்நாட்டில் காமராஜர் காலத்தில் இருந்து இப்போது வரை கல்விக்கும் பொது விநியோக முறைக்கும் முக்கியத்துவம் அளிக்கிறார்கள். அதுவும் எல்லோருக்கும் அளிக்கிறார்கள். அதுதான் முக்கியம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்