
பட மூலாதாரம், Getty Images
உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில இந்திய அணி் நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி அதிரடியாக ரன்களை குவித்து வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். மைதானத்தில் குவிந்துள்ள பல ஆயிரம் ரசிகர்கள் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தி ஆரவாரம் செய்து வருகின்றனர்.
இந்தியா டாஸ் வென்று முதல் பேட்டிங்
இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற இந்திய அணி முதல் பேட்டிங் செய்து வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா – சுப்மான் கில் ஜோடி அதிரடி தொடக்கம் தந்தது. குறிப்பாக, கேப்டன் ரோகித் சர்மாவின் ஆட்டத்தில் அனல் பறந்தது. பவுண்டரி, சிக்சர்களை அநாயசமாக அவர் விளாசினார்.
கெயில் சாதனையை தகர்த்த ரோகித்
டிரன்ட் போல்ட் வீசிய 5வது ஓவரில் சிக்ஸர் விளாசியதன் மூலம் ஒட்டுமொத்த உலகக்கோப்பைத் தொடர்களில் 50 சிக்ஸர்களை எட்டி அவர் எட்டினார். இதன் மூலம் உலகக்கோப்பையில் அதிக சிக்சர்களை விளாசியவர் என்ற கிறிஸ் கெயிலின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்தார். கிறிஸ் கெயில் 49 சிக்சர்களுடன் இதுவரை முதலிடத்தில் இருந்தார். உலகக்கோப்பைத் தொடரில் 27 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை ரோகித் சர்மா எட்டியுள்ளார். 3வது இடத்தில் உள்ள மேக்ஸ்வெல்(43), டி வில்லியர்ஸ், டேவிட் வார்னர்(37) சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
ரோகித் அவுட், கோலி – கில் அபாரம்
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ரோகித் சர்மா அரைசதத்தை நெருங்கிய நிலையில் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். டிம் சவுத்தீ பந்துவீச்சில் கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறிய அவர் 29 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். அதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடக்கம்.
ரோகித் அவுட்டைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் விராட் கோலி ரசிகர்களின் பலத்த கரகோஷங்களுக்கு இடையே உள்ளே வந்தார். ஒருமுனையில் கோலி நிதானமாக ஆட, மறுமுனையில் மற்றொரு தொடக்க வீரரும், ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான சுப்மான் கில் அதிரடிக்கு மாறினார்.
நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சிலும், சுழற்பந்துவீச்சிலும் அவர் சிக்சர்களை விரட்டினார். அபாரமாக ஆடிய அவர் 41 பந்துகளில் அரைசதம் கடந்தார். ரோகித் களத்தில் இருந்தவரை நிதானம் காட்டிய கில், அவர் அவுட்டான பின்னர் அதிரடிக்கு மாறினார். அரைசதத்தில் கடைசி 39 ரன்களை 27 பந்துகளில் அவர் எடுத்தார்.

பட மூலாதாரம், Getty Images
சுப்மான் கில் தசைப்பிடிப்பால் வெளியேற்றம்
அரைசதம் கடந்த பின்னரும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த சுப்மான் கில் பந்துகளை அடிக்கடி பவுண்டரி எல்லைக்கு விரட்டியபடி இருந்தார். இதனால் இந்திய அணியின் ரன் ரேட் 6-க்கும் அதிகமாகவே தொடர்ந்து இருந்து வந்தது.
கில் அதிரடி காட்டியதால் மறுமுனையில், நட்சத்திர வீரர் விராட் கோலி ரன் ரேட் பற்றிய நெருக்கடி ஏதும் இன்றி களத்தில் காலூன்ற போதிய அவகாசம் எடுத்துக் கொள்ள முடிந்தது. இந்த ஜோடி 100 ரன்களை கடந்த நிலையில், எதிர்பாராத விதமாக தசைப்பிடிப்பால் சுப்மான் கில் களத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் 65 பந்துகளில் 3 சிக்சர் 8 பவுண்டரிகளுடன் 79 ரன்களை சேர்த்திருந்தார். அப்போது இந்திய அணி 22.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்திருந்தது.

பட மூலாதாரம், Getty Images
கில் வெளியேறிய பிறகு ஸ்ரேயாஸ் களமிறங்கி, கோலியுடன் ஜோடி சேர்ந்து ஆடி வருகிறார்.
சுயநலம் கருதாத ரோகித் சர்மா
ரோகித் சர்மா இந்த உலகக் கோப்பைத் தொடரில் 550 ரன்கள் குவித்துள்ளார். இதில் 226 ரன்கள் கடந்த 10 போட்டிகளில் முதல் 20 பந்துகளில் சேர்க்கப்பட்டவை. அரைசதம் அடிக்க வேண்டும் என்ற சுயநலத்துடன் ஆடாத ரோஹித் சர்மா, அணியின் ஸ்கோர் உயர்வுக்காக மட்டுமே கவனம் செலுத்தி பேட் செய்துள்ளார்.
இதனால்தான், இந்த உலக் கோப்பைத் தொடரில் 4 முறை 40ரன்களுக்கு மேல் ரோகித் சர்மா ஆட்டமிழந்துள்ளார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் மட்டும் ரோகித் சர்மா 40க்கும் அதிகமான ரன்களை பவர்ப்ளே ஓவரில் 5 முறை விளாசியுள்ளார். இதில் ரோகித்தின் ஸ்ட்ரைக் ரேட் 120க்கும் அதிகமாகும். 1999ம் ஆண்டு உலகக் கோப்பையில் பிரன்டம் மெக்கலம் மட்டுமே முதல் 10 ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார், 2015ம் ஆண்டிலிருந்து மெக்கலம் ஃபார்முலாவை பல நாட்டு பேட்டர்களும் பின்பற்றத் தொடங்கினர்.
600 ரன்களைக் கடந்த விராட் கோலி
ரவீந்திரா வீசிய 14-வது ஓவரில் விராட் கோலி பவுண்டரி அடித்தபோது புதிய மைல்கல்லை எட்டினார். 2023 உலகக் கோப்பைத் தொடரில் 600 ரன்களை எட்டிய 3வது இந்திய பேட்டர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். இதற்கு 2003ல் சச்சின் டெண்டுல்கரும், 2019ம் ஆண்டு உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவும் 600 ரன்களைக் கடந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
இது நடக்குமா?
இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் முதல் 10 ஓவர்களில் 60 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைச் சேர்த்த போட்டிகளில் எல்லாம் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 91 ஆகஇருந்துள்ளது. 2022 முதல் 22 ஒருநாள் போட்டிகளில் ஆடி, 20 போட்டிகளில் இந்திய அணி முதல் 10ஓவர்களில் 60 ரன்களுக்கு மேல் சேர்த்து வெற்றி பெற்றுள்ளது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்