
பட மூலாதாரம், Getty Images
இரான், இராக்கிற்கு பிச்சை எடுக்கச் சென்ற பாகிஸ்தானியர்கள்.
உம்ரா எனும் புனித பயணம் மேற்கொள்ளும் சாக்கில் பிச்சை எடுப்பதற்காக செளதி அரேபியா செல்லும் பொருட்டு இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் இம்மாதம் 5ஆம் தேதி லாகூரில் உள்ள அல்லாமா இக்பால் விமான நிலையத்தை அடைந்தனர்.
பஞ்சாபின் கசூர் மாகாணத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர்களின் இந்த ‘ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலில்’ நஸ்ரீன் பீபி, அவரது சித்தப்பா அஸ்லம், சித்தி பர்வீன் மற்றும் சகோதரர் ஆரிஃப் ஆகியோர் அடங்குவர்.
இந்த நான்கு நெருங்கிய உறவினர்களும் அழகான கனவுகளுடன் விமான நிலையத்தில் அமைந்துள்ள எஃப்ஐஏ குடிவரவு கவுண்டரை அடைந்தனர்.
இதற்கு முன்னதாக நஸ்ரீன் பீபி 16 முறையும், பர்வீன் ஒன்பது முறையும் உம்ரா அல்லது புனித பயணம் செல்வதாக கூறி பிச்சை எடுக்க செளதி அரேபியா, இரான் மற்றும் இராக் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளனர்.
அஸ்லமும் ஆரிஃப்பும் முதன்முறையாக செளதி அரேபியாவிற்கு செல்ல இருந்தனர். ஆனால் அவர்கள் முன்னதாக ஜியாரத் என்ற போலி காரணத்தின் பேரில், இரான் மற்றும் இராக்கிற்கு பல முறை பிச்சை எடுக்கச் சென்றுள்ளனர்.
FIA இமிக்ரேஷன் அதிகாரிகள் இந்த நான்கு பேரிடமும் விசாரணை நடத்திய பிறகு அவர்களை விமானத்தில் ஏற விடாமல் தடுத்தனர். ‘ஆள் கடத்தல் சட்டம் 2018’ இன் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
உம்ரா என்ற பெயரில் செளதி அரேபியாவிற்கு செல்ல இருந்ததாகவும், தங்களின் உண்மையான நோக்கம் அங்கு சென்று பிச்சை எடுப்பது என்றும் விசாரணையின் போது நான்கு பேரும் ஒப்புக்கொண்டதாக முதல் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.
நான்கு பேரும் ஏற்கனவே செளதி அரேபியா, இரான் மற்றும் இராக் ஆகிய நாடுகளுக்கு பிச்சை எடுக்கச் சென்றுள்ளனர் என்று பிபிசிக்கு கிடைத்த எஃப்ஐஆர் நகல் கூறுகிறது.
இந்த கும்பல் வெளிநாட்டில் பிச்சை எடுப்பதற்கான ஆதாரங்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் அவர்களின் முகவர் ஜஹான்ஸெப்புக்கும் இடையேயான மொபைல் செய்தி உரையாடல்கள் மூலம் கிடைத்துள்ளதாக எஃப்.ஐ.ஆர் குறிப்பிடுகிறது. அவர்களது மொபைல் போன்கள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
நஸ்ரீன் பீபி மற்றும் பர்வீன் ஆகிய இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். முகமது அஸ்லமும் ஆரிஃப்பும் விசாரணைக்காக லாக்கப்பில் உள்ளனர்.
அக்டோபர் 9ஆம் தேதி உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துவரப்பட்ட நஸ்ரீன் பீபியிடம் நீதிமன்றத்திற்கு வெளியே பிபிசி பேசியது. “எங்களை இப்படி கைது செய்வதன் மூலம் பிரச்சனை தீர்ந்துவிடுமா? இந்த நாட்டில் மக்கள் பசியால் சாகவில்லையா? சம்பாதிப்பதற்கான உரிமை மக்களுக்கு இல்லையா?,” என்று அப்போது அவர் வினவினார்.

பட மூலாதாரம், Getty Images
ஹஜ் அல்லது உம்ராவுக்குச் செல்வதாகக்கூறி செளதி சென்று அங்கு பிச்சை எடுக்கின்றனர்.
செளதியில் பிச்சை எடுப்பது பாகிஸ்தானுக்கு அவப்பெயரை ஏற்படுத்தாதா?
இதுபோன்ற கைதுகளால் இந்தச் செயல் நிற்காது என்கிறார் நஸ்ரீன் பீபி. “நாங்கள் ஏழைகள். அதனால் எங்களை எளிதாகப் பிடித்துவிட்டார்கள். எப்போதாவது சக்தி வாய்ந்த யாரையாவது இங்கு பிடித்திருக்கிறார்களா?” என்று அவர் கேட்டார்.
நாட்டை விட்டு வெளியே சென்று பிச்சை எடுப்பது பாகிஸ்தானுக்கு அவப்பெயரை ஏற்படுத்தாதா என்று கேட்டதற்கு, “முதலில் நல்ல பெயர் எங்கே இருக்கிறது? என்று அவர் பதில் கேள்வி கேட்டார்.
வெளிநாடுகளில் கைது செய்யப்பட்ட பிச்சைக்காரர்களில் 90 சதவிகிதம் பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று வெளிநாடுவாழ் பாகிஸ்தானியர்களின் விவகாரங்கள் தொடர்பான அமைச்சகத்தின் செயலர் சுல்ஃபிகர் ஹைதர், சமீபத்தில் செனட் நிலைக்குழுவிடம் கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
பாகிஸ்தானில் இருக்கும் முகவர்கள் திட்டமிட்ட முறையில் பிச்சைக்காரர்களையோ அல்லது ஏழைகளையோ மத்திய கிழக்கு நாடுகளுக்கு குறிப்பாக செளதி அரேபியா, இரான் மற்றும் இராக் போன்ற நாடுகளுக்கு பிச்சை எடுக்க அனுப்புகிறார்கள் என்று பிபிசி மேற்கொண்ட விசாரணையில், தெரியவந்துள்ளது. பிச்சை எடுத்து வசூலிக்கும் பணத்தில் இந்த ஏஜெண்டுகளுக்கும் பங்கு உண்டு.
இருப்பினும் சமீபத்தில் செளதி அரசு இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் அரசிடம் முறையான புகார் அளித்ததுடன் பிரச்னையைத் தீர்க்குமாறு அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டது. இதன் விளைவாக நஸ்ரீன் பீபி மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.
சமீபத்தில் முல்தான் மற்றும் சியால்கோட்டில் இதுபோல் சில கும்பல்கள் கைது செய்யப்பட்டுள்ளன. அவை உம்ரா என்ற பெயரில் மக்களை செளதி அரேபியாவிற்கு அழைத்துச் செல்கின்றன என்று பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு அமைப்பு (எஃப்ஐஏ) தெரிவித்தது.
இதுவரை 37 பேர், விமானத்தில் ஏறவிடாமல் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானை சேர்ந்த, வெளிநாட்டில் பிச்சை எடுப்பவர்களின் கும்பல் அம்பலமாகியுள்ளது.
முதல் முறையாக செளதி அரேபியா செல்ல இருந்தனர்
உம்ரா செல்லும் சாக்கில் பிச்சை எடுப்பதற்காக தாங்கள் முதன்முறையாக செளதி அரேபியா செல்ல இருந்ததாக நஸ்ரீன் பீபியின் சித்தப்பா அஸ்லம் மற்றும் சகோதரர் ஆரிஃப் ஆகியோர் பிபிசியிடம் தெரிவித்தனர். தனது முழு குடும்பமும் பிச்சை எடுப்பதாகவும், இது தலைமுறைதலைமுறையாக நடந்து வருவதாகவும் மஜித் அலி கூறினார்.
”விசா மற்றும் டிக்கெட்டிற்காக ஏஜெண்டிடம் தலா 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கொடுத்திருந்தோம்,” என்று அவர் கூறினார். சுமார் 20 நாட்கள் செளதி அரேபியாவில் தங்க திட்டமிடப்பட்டிருந்தது என்றார் அவர்.
“முதலில் தெருக்களிலும், சுற்றுப்புறங்களிலும் குரங்கு போல வேடமிட்டு பிச்சை எடுத்தேன். பிறகு பிச்சை எடுக்க இரான் மற்றும் இராக் நாடுகளுக்கும் சென்றேன்.”
இரான், இராக் ஆகிய நாடுகளில் செலவுகளுக்குப் பிறகு ஒரு பயணத்தில் பிரதி நபர், 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிப்பதாக ஆரிஃப் கூறுகிறார்.
இரான், இராக் மற்றும் செளதி அரேபியாவுக்குச் சென்று சில சமயங்களில் ஊமையாக நடித்தும், சில சமயங்களில் கைகளால் உணவு சாப்பிடும் சைகைகள் காண்பித்தும் பிச்சை எடுத்ததாக அவர் சொன்னார்.
இதன் மூலம் புனிதப் பயணமும் செய்ய முடியும், பணமும் சம்பாதிக்க முடியும் என்கிறார் ஆரிஃப்.
செளதி அரேபியாவில் அவர்களுக்கு உதவி செய்பவர்கள் குறித்து கைது செய்யப்பட்டவர்கள் எதுவும் கூறவில்லை.
செளதி அரேபியாவில் அத்தகைய நபர்களுக்கு தங்குமிடம் மற்றும் பிற வசதிகளை வழங்குபவர்களுக்கு எதிராக, FIA துணை இயக்குனர் முகமது ரியாஸ் கான் மேற்பார்வையில் விசாரணை நடந்து வருகிறது என்று FIA விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
ஹஜ் மற்றும் உம்ரா என்ற பெயரில் விசா எளிதில் பெறப்படுகிறது
வெளிநாட்டில் பிச்சை எடுப்பது அமைப்பு சார்ந்த குற்றத்தின் ஒரு பகுதி
பிபிசியிடம் பேசிய முகமது ரியாஸ் கான், “வெளிநாட்டிற்குச்சென்று பிச்சை எடுப்பது, பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல கும்பல்களை உள்ளடக்கிய ஒரு திட்டமிட்ட குற்றமாக மாறியுள்ளது என்பது இதுவரை நடந்த விசாரணைகளில் தெரியவந்துள்ளது” என்று கூறினார்.
”பிச்சை மூலம் வருவாயில் பாதி ஏஜெண்ட்டுக்கு செல்லும் என்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் முகவருக்கும் இடையில் ஏற்கனவே முடிவாகியிருந்தது. அவர்களின் பயண ஆவணங்களுக்கு ஏற்பாடு செய்தது மட்டுமல்லாமல், செளதி அரேபியாவில் அவர்களின் தங்குமிடம் மற்றும் பிற தேவைகளுக்கும் ஏஜெண்ட் ஏற்பாடு செய்தார்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“இங்கே ரூபாய், செளதியில் ரியால்”
உம்ரா என்ற பெயரில் செளதி அரேபியாவுக்கு ஆட்களை அழைத்துச் செல்வது குறித்து, சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக் பக்கத்தை நடத்தும் ஏஜென்ட் ஒருவர் பெயர் குறிப்பிடப்படக் கூடாது என்ற நிபந்தனையின் பெயரில் பிபிசியிடம் பேசினார். “இங்கே ரூபாய் கிடைக்கும். ஆனால் செளதி அரேபியாவில் ரியால்களில் பிச்சை கிடைக்கும். வானத்திற்கும் பூமிக்கும் இடையிலான வித்தியாசம் இது,” என்று அவர் குறிப்பிட்டார்.
”நான் இங்கிருந்து ஆட்களை கூலி வேலை மற்றும் உம்ரா என்ற பெயரில் செளதி அரேபியாவுக்கு அழைத்துச் செல்கிறேன். சில நேரங்களில் 16 பேர், சில சமயம் 25 பேர் இருப்பார்கள். நான் இதை ஐந்து மாதங்கள் வரை செய்கிறேன்,”என்றார் அவர்.
பாகிஸ்தானில் பணிபுரியும் பல முகவர்களைப் போலவே இவரும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் தனது வேலையைச் செய்கிறார். மக்களுக்கு எல்லா தகவல்களையும் வாட்ஸ்அப்பில் அளிக்கிறார்.
பாகிஸ்தானில் உள்ள பலர் இந்த முகவர்களை கூலி வேலை நோக்கத்திற்காக தொடர்பு கொள்கிறார்கள். எந்த வேலைக்கும் செல்லாதவர்களிடம் முகவர்கள் பிச்சை எடுப்பது பற்றி சொல்கிறார்கள்.
பாகிஸ்தானிலிருந்து எல்லோரும் வேலைக்காகச் செல்வதில்லை. அதனால்தான் அவர்களுக்கு வேறு வழியை சொல்ல வேண்டியுள்ளது என்று அவர் கூறினார்.
“பெண்கள் மற்றும் குழந்தைகளும் இந்த குழுவில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். இதனால் உம்ரா அல்லது ஜியாரத்துக்கு எளிதாக விசா பெற முடியும். பின்னர் அவர்கள் மெக்கா மற்றும் மஸ்ஜித்-இ-நபவி போன்ற புனித இடங்களில் பிச்சை எடுக்க உட்கார வைக்கப்படுகிறார்கள்,” என்று ஏஜெண்ட் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானிய பிச்சைக்காரர்கள் தொடர்பான ஆவணங்களை செளதி அரேபியா பகிர்ந்துள்ளது
சௌதி அரேபியாவுக்கு புதிய தலைவலி
இந்த முக்கியமான விவகாரத்தில் செளதி அரேபிய அரசு பாகிஸ்தான் அரசுடன் பகிர்ந்து கொண்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களும் பிபிசிக்கு கிடைத்துள்ளன.
2023 ஜூன் 16 ஆம் தேதி செளதி அரேபியாவில் பிச்சை, பாலியல் தொழில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் போலி பயண ஆவணங்கள் போன்ற குற்றங்களில் பாகிஸ்தானியர்களின் ஈடுபாடு குறித்து அந்நாட்டு பிரதமர் அலுவலகத்திற்கு செளதி அரேபிய அரசு எழுத்து மூலமாக தெரிவித்தது என்று இந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
செளதி அரேபியாவின் முறையான புகாரைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் மற்றும் FIA உட்பட இது தொடர்புடைய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியது. அதைத் தொடர்ந்து செளதி அரேபியா மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பாகிஸ்தானியர்களின் விவரக் குறிப்புகள் பெறுவதை FIA எல்லா விமான நிலையங்களிலும் தொடங்கியது என்று பிபிசி கண்டறிந்தது.
செளதி அரேபியா, இரான் மற்றும் இராக் ஆகிய நாடுகளில் இருந்து தனக்கு தகவல் கிடைத்ததாகவும், அதன் பிறகு இந்த தகவல் அறிக்கை வடிவில் அளிக்கப்பட்டதாகவும் வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்கள் விவகார அமைச்சகத்தின் செயலர் சுல்ஃபிகர் ஹைதர் பிபிசியிடம் பேசுகையில் கூறினார்.
இதற்குப் பிறகு FIA நடவடிக்கை எடுக்க ஆரம்பித்ததாக என்று அவர் தெரிவித்தார். தற்போது FIA ஆள் கடத்தலை தடுத்து நிறுத்துவதில் தீவிரமாக உள்ளது என்றும் இது பற்றிய எல்லா தகவல்களையும் பகிரங்கப்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
சாமான்களில் பிச்சை எடுக்கும் பாத்திரங்களும் கண்டெடுக்கப்பட்டன
வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்கள் விவகார அமைச்சகத்தின் செயலர் செனட் நிலைக்குழுவில் அறிக்கை அளித்ததை அடுத்து, பயணிகளின் ‘புரோஃபைலிங்’ தொடங்கப்பட்டது என்று FIA துணை இயக்குநர் கவாஜா ஹம்மாத்-உல்-ரஹ்மான் பிபிசியிடம் கூறினார்.
‘புரோஃபைலிங்’ என்பது பயணிகளின் முக்கியமான விதிகளை சரிபார்த்து அவர்களின் பயணத்தின் நோக்கத்தை உறுதிசெய்வது ஆகும். ஒரு பயணி உம்ராவுக்காக செளதி அரேபியா செல்ல விரும்பினால் இந்த பயணத்தை செய்யமுடியும்
அளவிற்கு அவரது நிதி நிலைமை நன்றாக உள்ளதா என்று கண்டறியப்படும் என்று அவர் தெரிவித்தார்.
புரோஃபைலிங் செயல்முறையின் போது, ஹோட்டல் முன்பதிவுகள், ரிட்டர்ன் டிக்கெட்டுகள் மற்றும் பயணிகளின் கையில் இருக்கும் பணம் ஆகியவற்றை சரிபார்ப்பதன் வாயிலாக, பயணிகள் உம்ராவுக்காக மட்டுமே பயணிக்கிறார்களா அல்லது வேறு ஏதேனும் நோக்கத்திற்காகப் பயணிக்கிறார்களா என்பதைத் தீர்மானிக்க முடியும்.
“சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஆள் கடத்தலைத் தடுக்க ஐரோப்பா மற்றும் பிற நாடுகளுக்குச் செல்லும் பயணிகளின் புரோஃபைலிங் செய்யப்பட்டது. ஆனால் பின்னர் புகார்கள் காரணமாக, விமான நிலையங்களில் இது நிறுத்தப்பட்டது,” என்று ஒரு கேள்விக்கு பதிலளித்த கவாஜா ஹம்மாத்-உல்-ரஹ்மான் குறிப்பிட்டார்.
ஆனால் செளதி அரேபியாவுக்கு பிச்சை எடுக்கச் செல்வது தொடர்பான புகார்கள் எழுந்ததை அடுத்து தற்போது அது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
2023 செப்டம்பர் 29 ஆம் தேதி பெண்கள் உட்பட 16 பேர் கொண்ட கும்பல் செளதி அரேபியாவுக்குச் செல்லும் நோக்கத்துடன் முல்தான் விமான நிலையத்தை அடைந்தபோது, புரோஃபைலிங் உதவியுடன் FIA தனது முதல் பெரிய வெற்றியைப் பெற்றது.
புதிய வழிகாட்டுதல்களின் கீழ் குடிவரவு அதிகாரிகள் அந்த நபர்களை சந்தேகத்திற்குரியவர்களாக கருதி, அவர்களை மற்ற பயணிகளிடமிருந்து பிரித்து விசாரிக்கத் தொடங்கினர். ”முதல்கட்ட விசாரணையில் அவர்களின் ப்ரொபைலிங் செய்யப்பட்ட போது, அவர்கள் அனைவரும் பிச்சைக்காரர்கள் என்று தெரியவந்தது ,” என்று குவாஜா ஹம்மாத்-உல்-ரஹ்மான் தெரிவித்தார்.
அவர்களிடம் ஹோட்டல் முன்பதிவு இல்லை, பணமும் இல்லை, உம்ராவுக்காக செளதி அரேபியா செல்லக்கூடிய அளவிற்கு பொருளாதார வசதியும் இல்லை. அவர்களது சாமான்களை சோதனையிட்ட போது பைகளில் இருந்து பிச்சை எடுக்கும் பாத்திரங்களும் மீட்கப்பட்டன.
‘‘பிச்சை எடுக்கும் நோக்கத்தில் செளதி அரேபியா செல்லும் இவர்களுக்கு நூரு என்ற ஏஜெண்ட் உதவி வழங்குகிறார் என்று விசாரணையில் தெரியவந்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.
“தினசரி பிச்சை தொகை கணக்கிடப்பட்டு வருவாயில் பாதி விநியோகிக்கப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது,” என்று மூத்த எஃப்ஐஏ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
குற்றவாளிகள் பிடிபட்ட பாகிஸ்தானின் முல்தான் விமான நிலையம்
முல்தான் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள்?
முல்தான் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்களில் லோத்ரானைச் சேர்ந்த ஷகீல் என்பவரும் அடங்குவார். அவர் தனது இரண்டு மனைவிகளுடன் செளதி அரேபியாவுக்குச் சென்று கொண்டிருந்தார்.
முல்தானில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்திற்கு வெளியே பிபிசியிடம் பேசிய ஷகீல், தான் மோட்டார் சைக்கிளில் சென்று பெட்ஷீட்களை விற்பதாகக் கூறினார்.
உம்ராவுக்காக செளதி அரேபியாவுக்குச் செல்லும் எண்ணம் தன்னுடன் பெட்ஷீட் விற்றுவந்த ஒரு நண்பர் மூலம் தனக்கு ஏற்பட்டதாக அவர் சொன்னார்.
மூன்று பேருக்குக்காக மூன்று லட்சம் ரூபாயில் டீல் முடிவானதாகவும், விசா மற்றும் டிக்கெட் போன்றவற்றுக்காக நண்பர், முகவரிடம் அறிமுகம் செய்ததாகவும் அவர் கூறினார்.
லாகூர் கான்ட்டின் இஸ்மாயில் டவுன் பகுதியைச் சேர்ந்த நான்கு பெண்களும் முல்தான் விமான நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இவர்களில் ஷகீலா பீபி, அவரது மருமகள் மற்றும் ஒரு மகள் அடங்குவர். இந்த கும்பலில் லாகூரைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் ஏழு பேரும் இருந்தனர். இந்த ஏழு பேரும் செப்டம்பர் 27 ஆம் தேதி லாகூரில் இருந்து பேருந்தில் முல்தானை அடைந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானின் லாகூர் நகரம்
பிபிசி, லாகூரில் உள்ள இஸ்மாயில் டவுனுக்குச் சென்றது. குண்டும் குழியுமான ஒரு தெருவில் ஒற்றை மாடி வீட்டில் ஒரு கட்டிலில் ஷகீலா பீபி அமர்ந்திருந்தார். அங்கு அவரது மருமகளும் மகளும் இருந்தனர்.
தான் செளதி அரேபியாவிற்கு பிச்சை எடுப்பதற்காக அல்ல, உம்ராவுக்காக செல்ல இருந்ததாக பிபிசியிடம் பேசிய ஷகீலா பீபி கூறினார்.
பிச்சை பாத்திரங்கள் தனது பையில் இருந்து கிடைக்கவில்லை, மற்ற பெண்களின் உடைமைகளிலிருந்து மீட்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
தனது கணவர் மற்றும் மூன்று மகன்கள் பாதாமி பாக் காய்கறி சந்தையில் மூங்கில் கூடைகள் விற்பனை செய்கின்றனர் என்றும் மிகவும் சிரமப்பட்டு பணம் சேகரித்த பிறகு உம்ராவுக்கு செல்ல முடிவு செய்ததாகவும் ஷகீலா பீபியின் தெரிவித்தார்.
விமான நிலையத்தில் ‘போர்டிங் பாஸ் வழங்கப்பட்டு விட்டது, சாமான்களும் போய்விட்டன. ஆனால் திடீரென்று தன்னை FIA ஆட்கள் தடுத்தனர் என்று அவர் சொன்னார்.
“நாங்கள் இமிகிரேஷன் சென்றபோது எஃப்ஐஏ சிலரைத் தடுத்து நிறுத்தியது. பின்னர் எங்கள் முறையும் வந்தது.”
கணவர் அல்லது மகன்கள் ஏன் அவருடன் உம்ரா செய்யப் போகவில்லை என்று அவரிடம் கேட்டபோது, வீட்டுப்பெண்களை உம்ராவுக்கு அனுப்ப தனது கணவரும், மகன்களும் விரும்பியதாக ஷகீலா பீபி பதில் அளித்தார்.
மறுபுறம், இந்த காலனியில் வசிக்கும் ஆண்களும் பெண்களும் லாகூரின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று பிச்சை எடுப்பதாக பெயர் வெளியிடப்படக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் இஸ்மாயில் டவுனின் உள்ளூர் கடைக்காரர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்