
பட மூலாதாரம், IMD
சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயல் பல்வேறு பகுதிகளை தீவிரமாக பாதித்துள்ளது. குறிப்பாக நீர் நிலைகளுக்கு அருகில் இருக்கக் கூடிய பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் நான்கு அடிக்கும் குறையாமல் இருந்தது.
இந்த புயல் கடந்த எட்டு ஆண்டுகளில் சென்னை பார்க்காத அளவுக்கான அதிகனமழையை கொடுத்துள்ளது. இந்த புயல் மற்ற புயல்களிலிருந்து சில காரணிகளால் வேறுபட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் எப்படி வித்தியாசமானது?
புயல்கள் கரைக்கு எவ்வளவு அருகில் இருக்கிறதோ அவ்வளவு அதிகமாக அதன் தாக்கம் இருக்கும். மிக்ஜாம் புயல், சென்னைக்கு மிக அருகில், வெறும் 90 கி.மீ தொலைவில் வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்தது. இது கடந்த ஆண்டு ஏற்பட்ட மண்டஸ், மற்றும் பிற புயல்களை விட சென்னைக்கு மிக நெருக்கமாக இருந்தது.
பொதுவாக புயல்கள் நகர்ந்து கொண்டே இருக்கும், ஆனால் மிக்ஜம் புயலின் போது, கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விசயம், புயல் நகராமல் ஒரே பகுதியில் நிலைக் கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட 18 மணி நேரமாக சென்னைக்கு அருகில் வங்கக் கடல் பகுதியில் நிலைக் கொண்டிருந்தது புயல். அந்த நேரத்தில் தான், அதாவது திங்கள்கிழமை அதிகாலை முதல் இரவு 9 மணி வரை விடாது மழை பெய்த நேரம். இது மற்ற புயல்களின் போது வழக்கமாக நேராத ஒன்று.
அது மட்டுமல்லாமல் புயல் நகர்ந்து செல்லும் வேகமும் மிக குறைவாக இருந்தது. இதன் காரணமாகவும் சென்னையில் அதி கன மழை பெய்துள்ளது. பொதுவாக மணிக்கு 10 முதல் 18 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும், மணிக்கு வெறும் 7 கிலோமீட்டராக மெதுவாக சென்றது, மேலும் 5 கிலோமீட்டர் வேகத்தில் கிட்டத்தட்ட ஸ்தம்பித்து நின்றது என்று வானிலை ஆய்வு மைய தகவல்கள் கூறுகின்றன.

பட மூலாதாரம், IMD
வெள்ளம் கடலுக்குள் செல்ல விடாமல் மிக்ஜாம் புயல் தடுத்தது எப்படி?
கிரிக்கெட் ஆட்டத்தில் எப்படி, நின்று ஆடினார் என பேட்ஸ்மேன்கள் குறித்து கூறப்படுமோ, அது போல மிக்ஜம் புயல் சென்னைக்கு மிக அருகிலேயே நின்றுக் கொண்டு நகரவும் இல்லாமல் அதன் தாக்கத்தை சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் காண்பித்துள்ளது.
சென்னை அதிகனமழை பெறுவதற்கான காரணங்கள் இவை என்றால், பெய்த மழை நீர் வடியாமல் இருந்ததற்கு மற்றொரு காரணம் உள்ளது. மிக்ஜம் புயல் சென்னை கரையை ஒட்டி நிலைக் கொண்டிருக்கும் போதே, அது தீவிரமடைந்தது.
இதன் காரணமாக இரண்டு விசயங்கள் நடந்தன. ஒன்று நீடித்த கனமழை பெய்தது. மற்றொன்று, கடல் கொந்தளிப்புடன் இருந்ததால், ஆறுகளிலிருந்து செல்லும் மழைநீர் கடலில் கலக்க வழியில்லை.
அதாவது, அடையாறு, கூவம், ஆறுகள் வழியாக பெருக்கெடுத்து ஓடிய மழை நீர், கடலுக்குள் கலக்கவிடாமல், கடலில் நிலைக்கொண்டிருந்த தீவிர புயல் தடுத்துக் கொண்டிருந்தது என வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
எனவே இந்த ஆறுகளில் வடியாத நீர், அருகில் உள்ள பகுதிகளில் வெளியேறியது.
சென்னையில் திங்கட்கிழமை 24 செ.மீ. மழை பெய்தது, 2015 ஆம் ஆண்டில் பதிவான 29 செ.மீ. மழையை விட சற்று குறைவு. இருப்பினும், இந்திய வானிலை ஆய்வு மையம் 21 செ.மீ. மற்றும் அதற்கு மேற்பட்ட மழையை ‘அதீத கனமழை’ என்று வகைப்படுத்துகிறது, இது தற்போதைய நிலைமையின் தீவிரத்தன்மையைக் குறிக்கிறது.
2015 ஆம் ஆண்டு வெள்ளம், முக்கியமாக செம்பரம்பாக்கம் ஏரியின் வெள்ளக்கதவுகள் திறக்கப்பட்டதால் ஏற்பட்டது, தற்போதைய வெள்ளம் சூறாவளி புயலின் நேரடி விளைவாகும்.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் திங்கட்கிழமை மாலை வரை 35 மணி நேரத்தில், நுங்கம்பாக்கத்தில் 43 செ.மீ. மழை பெய்தது. இந்த விளைவுகளிலிருந்து இன்னும் மீளாத இந்த நகரம், மிக்ஜாம் தாக்கத்திலிருந்து வெளிவர இன்னும் சில நாட்கள் ஆகலாம்.

செம்பரம்பாக்கம் ஏரி : 2023-ல் நிலை என்ன?
2015 பெருவெள்ளத்தின் போது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஒரே நேரத்தில் திறந்துவிடப்பட்ட 29000 கன அடி நீரே வெள்ளத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது. அதன் பிறகு, செம்பரம்பாக்கம் ஏரி நீர் மிகவும் எச்சரிக்கையுடனே திறந்து விடப்படுகிறது.
மிக்ஜம் புயலின் தாக்கம் தொடங்கிய போது, திங்கட்கிழமை காலை 4 மணிக்கு, ஏரியின் நீர்மட்டம் 21.01 அடியாக பதிவானது, இது அதன் அதிகபட்ச கொள்ளளவான 24 அடிகளுக்கு அபாயகரமான அளவில் நெருக்கமாக இருந்தது. ஏரிக்கு நீர் வரத்து 6,881 கன அடியாக இருந்தது.
மாலை 5 மணிக்குள், நீர்மட்டம் 22.41 அடியாக உயர்ந்தது. எனவே, நீர்வளத் துறை உபரி நீரை விநாடிக்கு 6,000 கன அடி வீதத்தில் திறந்து விடப்பட்டது, பின்னர் படிப்படியாக வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது.
மற்றொரு முக்கியமான நீர்நிலையான பூண்டி ஏரியும், அதன் நீர்பிடிப்பு பகுதியிலிருந்து சுமார் 6,000 கன அடி நீர் வரத்து காரணமாக 17,000 கன அடி நீரை வெளியேற்றி வந்தது. இந்த நடவடிக்கைகள் ஆபத்தான வெள்ளம் போன்ற சூழலை தவிர்க்க அவசியம் என்றாலும், சென்னையில் ஏற்கனவே சவாலான புயல் சூழலை மேலும் சவாலாக்கியது.

செம்பரம்பாக்கம் ஏரி : 2015-ல் நிலை என்ன?
2015 டிசம்பரில், தற்போது மிக்ஜம் புயல் பாதிப்பிலிருந்து வேறுபட்ட ஒரு பேரழிவு வெள்ளத்தை சென்னை எதிர்கொண்டது. செம்பரம்பாக்கம் ஏரி, அதன் முழு திறனுக்கு அருகில் இருந்தபோது, அடையாற்றில் திடீரென வேகமாக தண்ணீரை வெளியேற்றத் தொடங்கினர். அப்போது தான் நெருக்கடி தொடங்கியது.
2015 டிசம்பர் 1 அன்று, தொடர்ச்சியான மழையால் ஏரியில் 3,396 மில்லியன் கன அடி நீர் நிரம்பியது. மாலைக்குள், கால்வாய் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக பொறியாளர்கள் கருதியதால், 29,400 கன அடி தண்ணீரை வெளியேற்றினர். அதற்கு முன்பு வரை 900 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டது. திடீரென 30 மடங்கு நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது.
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர், 18,729 பேர் நிவாரண முகாம்களில் உள்ளனர். செவ்வாய்க்கிழமைக்குள், நகரில் உள்ள முக்கிய சாலைகள் திறக்கப்பட்டன, சுமார் 5,000 மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்தல் மற்றும் மீட்பு பணிகளுக்காக மற்ற மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டனர்.
சுமார் 170 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு செவ்வாய்க்கிழமை அதிகாலையில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கியது, ஆனால் புறநகர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
சென்னை மெட்ரோ ரயில் அதிகரிக்கப்பட்ட எண்ணிக்கையிலான சேவைகளுடன் இயங்குகின்றன. மேடவாக்கம், கீழ்க்கட்டளை, முடிச்சூர் போன்ற தாழ்வான பகுதிகள் உட்பட பல பகுதிகள் 3-4 அடி தண்ணீரில் மூழ்கின.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்