ஹமாஸ் குழுவை ஐ.எஸ். அமைப்பு இவ்வளவு தீவிரமாக வெறுப்பது ஏன்?

ஹமாஸ் குழுவை ஐ.எஸ். அமைப்பு இவ்வளவு தீவிரமாக வெறுப்பது ஏன்?

ஹமாஸ்

பட மூலாதாரம், Getty Images

கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய வரலாறு காணாத தாக்குதலுக்குப் பிறகு, அக்குழு இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்) அமைப்புடன் ஒப்பிடப்படுகிறது.

இருப்பினும், இந்த ஒப்பீடு செய்யப்படும்போது, இந்த இரு அமைப்புகளுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்துவரும் ஆழமான கருத்தியல் வேறுபாடுகளும், போட்டி மனப்பான்மையும் அவ்வளவாகக் கவனிக்கப்படுவதில்லை.

இந்த ஒப்பீடு குறித்து ஐ.எஸ் ஆதரவாளர்கள் கோபம் தெரிவித்துள்ளனர். ஏனெனில் இஸ்லாமிய அரசு ஹமாஸை ‘காஃபிர்’ அமைப்பாக பார்க்கிறது. காஃபிர் என்பது ஒரு அரபு வார்த்தை, அதன் பொருள் ‘கடவுளை நம்பாதவர்’.

இந்த ஒப்பீடு குறித்து ஐ.எஸ் அமைப்பும் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்துள்ளது. ஏனெனில் ஹமாஸை ஒரு மதத் துரோக அமைப்பாகப் பார்ப்பதோடு, இரானிய ஆட்சியின் பினாமி அமைப்பாகவும் அது செயல்படுவதாக ஐ.எஸ் குற்றம் சாட்டுகிறது.

ஹமாஸ் குழு அரசியல் மற்றும் தேசியவாத நோக்கங்களை நிறைவேற்றுவதுடன் தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்கிறது என்று இஸ்லாமிய அரசு கூறுகிறது.

மேலும், ஹமாஸ் குழு ஷரியாவைப் பின்பற்றவில்லை என்றும் ஜிஹாதிகளை சித்திரவதை செய்வதாகவும் ஐ.எஸ் குற்றம் சாட்டுகிறது.

இந்த வேறுபாடுகள் எப்படி உருவாயின?

‘ஹமாஸ் மீதான நிலைப்பாடு மாறவில்லை’

ஹமாஸ் தாக்குதல் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட சூழ்நிலை குறித்து ஐ.எஸ் ஆரம்பத்தில் மௌனம் காத்தது. ஆனால் தாக்குதலுக்கு 15 நாட்களுக்குப் பிறகு, மேற்கத்திய நாடுகளில் உள்ள யூத இலக்குகள் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ் அழைப்பு விடுத்துள்ளது.

எனினும், ஐ.எஸ் அமைப்பும் அதன் ஆதரவாளர்களும் ஹமாஸ் மீதான தங்கள் நிலைப்பாடு மாறவில்லை என்று கூறியுள்ளனர்.

மேலும் ஹமாஸின் ‘மதத் துரோகக் கொடியின் கீழ்’ எந்தவித பயங்கரவாதச் செயலையும் மேற்கொள்ள வேண்டாம் என தனது ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல், பாலத்தீனம், ஹமாஸ், இஸ்லாமிக் ஸ்டேட், ஐ.எஸ் அமைப்பு

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகஹு, ஐ.எஸ் நசுக்கப்பட்டது போல், ஹமாஸும் நசுக்கப்படும், என்று கூறியுள்ளார்

ஹமாஸ் ஏன் ஐ.எஸ் அமைப்போடு ஒப்பிடப் படுகிறது?

கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, பல இஸ்ரேலிய அதிகாரிகளும் சமூக ஊடக பயனர்களும் ஹமாஸ் சித்தாந்தத்திலும் நடத்தையிலும் ஐ.எஸ் அமைப்பிலிருந்து வேறுபட்டதல்ல, எனவே இஸ்லாமிய அரசைப் போலவே ஹமாஸையும் கையாள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகஹு, “ஹமாஸ் ஐ.எஸ் தான். ஐ.எஸ் நசுக்கப்பட்டது போல், ஹமாஸும் நசுக்கப்படும்,” என்று கூறியுள்ளார்.

ஹமாஸ் தாக்குதலில் ஏராளமான இஸ்ரேலிய பொதுமக்கள் கொல்லப்பட்டதே இந்த ஒப்பீட்டிற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதலில் இதுவரை 1400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலின் போது பொதுமக்களுக்கு ஹமாஸ் நடத்திய அட்டூழியங்கள் தொடர்பான செய்திகளும் இத்தகைய ஒப்பீடுக்கு காரணமாக இருக்கலாம்.

எனினும், இந்த தாக்குதலில் பொதுமக்களை குறிவைக்கவில்லை என ஹமாஸ் குழு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் ‘அல்-அக்ஸா வெள்ளம்’ என்று ஹமாஸ் பெயரிட்டுள்ளது. மேலும் இஸ்ரேலின் அறிக்கைகளைப் பொய் என்று கூறியுள்ளது.

இஸ்ரேல், பாலத்தீனம், ஹமாஸ், இஸ்லாமிக் ஸ்டேட், ஐ.எஸ் அமைப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது கொல்லப்பட்ட ஹமாஸ் போராளியின் உடைமைகளில் இருந்து எடுத்ததாக ஒரு ஐ.எஸ் கொடியி படத்தை இஸ்ரேல் பகிர்ந்திருக்கிறது

ஹமாஸின் தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பினர் ஈடுபட்டார்களா?

ஐ.எஸ் அமைப்பின் சில ஆதரவாளர்கள் ‘அல்-அக்ஸா வெள்ளம்’ நடவடிக்கையில் தீவிரமாகப் பங்கு பெற்றதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.

இதற்கு ஆதாரமாக அங்கு இருந்த ஐ.எஸ் அமைப்பின் கொடியின் படம் ஒன்றையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் எல்லைக்கு அருகே கிப்புட்ஸ் சூஃபா என்ற இடத்தின் மீதான தாக்குதலின் போது கொல்லப்பட்ட ஹமாஸ் போராளியின் உடைமைகளில் இருந்து இந்த கொடி கிடைத்ததாக இஸ்ரேல் கூறுகிறது.

ஹமாஸை ஐ.எஸ் அமைப்பாகக் கருதுவதற்கு ஆதாரமாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் ட்விட்டரில் ‘HamasIsISIS’ என்ற ஹேஷ்டேக்கை ஊக்குவித்துள்ளது.

இதேபோல், ‘Daesh-Hamas’ என்ற ஹேஷ்டேக்கும் அரபு மொழியில் உருவாக்கப்பட்டது. டேஷ் என்ற வார்த்தை ஐ.எஸ் அமைப்பை இழிவுபடுத்தும் வார்த்தையாக பயன்படுத்தப்படுகிறது.

ஐ-எஸ் அமைப்பை ஆதரிக்கும் செல்வாக்கு மிக்க டெலிகிராம் கணக்கான ‘சாத்-அல்-ஸர்காவி’, ஐ.எஸ் அமைப்பிற்கும் பிற மதத் துரோக அமைப்புகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தெளிவுபடுத்தப் பிரச்சாரங்களைப் பரப்புவதற்காக இந்த ஹேஷ்டேக்குகளைக் குறிவைக்கும்படி பின்தொடர்பவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஹமாஸ் தாக்குதலில் ஐ.எஸ் ஆதரவாளர்களின் தொடர்பு குறித்து, பிரச்னைக்குரிய ஆன்லைன் ஜிஹாதி பிரிவான அபு இமாத் அல்-நெராபி, சிலர் ‘முவாஹிதீன்கள்’ (ஐ.எஸ் அமைப்பை ஆதரிப்பவர்கள்) தங்கள் சொந்த முடிவின்பேரில் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது பற்றிய தகவல் தங்களுக்கு கிடைத்துள்ளது என்று ஒப்புக்கொண்டுள்ளது.

ஆனால் இந்த பிரிவு தேசியவாத ஹமாஸுடன் சண்டையிடுவதற்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இஸ்ரேல், பாலத்தீனம், ஹமாஸ், இஸ்லாமிக் ஸ்டேட், ஐ.எஸ் அமைப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஜிஹாதிகள் தங்கள் செய்தியை பரப்ப இஸ்ரேல் மீது நடந்த தாக்குதலைப் பயன்படுத்துகின்றனர்

ஹமாஸ் பற்றி ஐ.எஸ் அமைப்பு என்ன நினைக்கிறது?

பல ஜிஹாதிகள் மற்றும் சில தீவிர இஸ்லாமிய அமைப்புகள் ஹமாஸ் அமைப்பை நீண்ட காலமாக சந்தேகத்துடன் பார்த்து வருகின்றனர். இதற்கு ஹமாஸுக்கும் இரானுக்கும் உள்ள நெருங்கிய உறவும் ஒரு காரணம். ஆனால், ஐ.எஸ் அமைப்பு ஹமாஸ் குழுவை வெறுக்கிறது.

2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஐ.எஸ் அமைப்பின் வடகிழக்கு எகிப்தை மையமாகக் கொண்ட சினாய் கிளை, ஹமாஸுக்கு எதிராகப் போரை நடத்த அழைப்பு விடுக்கும் வீடியோவை வெளியிட்டபோது, இது தெளிவாகத் தெரிந்தது. இந்த வீடியோவில், அரசியல் நோக்கத்திற்காக ஹமாஸ் குழு மதத்தை நாடியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இது மட்டுமின்றி, ஹமாஸ் குழு காஸாவில் ஜிஹாதிகளை ஒடுக்கியதாகவும், இரானுக்கு ஆதரவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு ‘காஃபிர்’ என்று அடையாளம் கொடுக்கப்பட்டு அவர்களுக்கு எதிராகப் போராட வேண்டும் என்றும் கூறப்படிருந்தது. இந்த வீடியோவில், ஹமாஸுடன் தொடர்புடைய ஒருவரை ஐ.எஸ் கொல்வதும் காட்டப்பட்டது.

இந்த வீடியோவில் 2009-இல் ஹமாஸ் அமைப்பினர் ரஃபாவில் உள்ள மசூதிக்குள் நுழைவது போன்ற காட்சிகளும் உள்ளது. இஸ்லாமிய அமீரகத்திற்கு எதிராக போருக்கு அழைப்பு விடுத்த தீவிர ஜிகாதி மதகுரு கொல்லப்பட்டதையும் இந்த வீடியோ காட்டுகிறது.

இந்த வீடியோ வெளியான சமயத்தில், ஹமாஸ் இந்த நடவடிக்கைகளுக்காக ஆன்லைன் ஜிஹாதி சமூகத்தில் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

ஆனால் இதுபோன்ற பழைய புகைப்படங்களைப் பகிர்வது ஐ.எஸ் அமைப்புக்கு ஹமாஸ் குழுவுடன் இருக்கும் பழைய போட்டியைக் காட்டுகிறது.

இஸ்ரேல், பாலத்தீனம், ஹமாஸ், இஸ்லாமிக் ஸ்டேட், ஐ.எஸ் அமைப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஹமாஸ் தாக்குதலின் போது மறைந்திருந்த இஸ்ரேலிய மக்கள்

பாலத்தீன விவகாரத்தில் ஐ.எஸ் அமைப்பின் நிலைப்பாடு தெளிவாக இல்லை

இந்த வீடியோ வெளியான சில நாட்களுக்குப் பிறகு, ஐ.எஸ் அமைப்பு ஒரு விளக்கப்படத்தை வெளியிட்டு ஹமாஸுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை விளக்க முயன்றது.

இந்த விளக்கப்படத்தில், ஹமாஸ் தனது மதத்தைத் துறந்து ஜனநாயகச் செயல்பாட்டில் பங்கேற்றதை ஏழு புள்ளிகள் மூலம் விளக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேலும் ஹமாஸின் அரசியல் கூட்டாளிகள் சர்வாதிகாரிகளாகவும் மதத் துரோகிகளாகவும் அறிவிக்கப்பட்டனர்.

ஐ.எஸ் அமைப்பைப் பொறுத்தவரை, ஷியா ஆதிக்கத்தில் உள்ள இரானுடன் ஹமாஸின் நெருங்கிய உறவுகள் கவலைக்குரிய விஷயம்.

தன் செய்திகளில், ஐ.எஸ் அமைப்பு, ஹமாஸை இரானின் முகவராகக் குறிப்பிட்டு, புனித பூமியில் ஷியா செல்வாக்கு பரவுவதை ஹமாஸ் ஆதரிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

ஐ.எஸ் அமைப்பு மீதான விரோதம் காரணமாக, அந்த அமைப்பு தேசியவாதமாகக் கருதும் பாலத்தீனத்தின் மீது ஹமாஸ் குழு கவனம் செலுத்துகிறது.

ஐ.எஸ் அமைப்பின் கூற்றுப்படி, எந்தவொரு தேசியவாதமும் இஸ்லாமுக்கு மாறான பலதெய்வக் கொள்கைக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும். ஆனால், பாலத்தீன விவகாரத்தில் ஐ.எஸ் அமைப்பு தனது நிலைப்பாட்டை வரலாற்று ரீதியாக தெளிவுபடுத்தாதது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. மேலும், பாலத்தீனப் பிரச்சினையைப் பற்றிப் பேசுபவர்களை அந்த அமைப்பு விமர்சிக்கிறது.

இப்பிரச்சினையை இன, தேசிய, மற்றும் அரசியல் மோதலாக பார்க்காமல் மத மோதலாகப் பார்க்க வேண்டும் என்று ஐ.எஸ் வாதிடுகிறது. அதே சமயம், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கும் ‘காஃபிர்’களுக்கும் இடையே நடந்து வரும் மோதலின் ஒரு பகுதியாக இந்த மோதலைப் பார்க்கிறது.

இஸ்ரேல், பாலத்தீனம், ஹமாஸ், இஸ்லாமிக் ஸ்டேட், ஐ.எஸ் அமைப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள யூதர்களின் பகுதிகளை குறிவைக்க ஐ.எஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது

‘அல்-அக்ஸா வெள்ளம்’ நடவடிக்கைக்குப் பிறகு ஐ.எஸ் நிலைப்பாட்டில் மாற்றமா?

ஒரே வார்த்தையில் பதில் சொல்ல வேண்டுமெனில் – இல்லை.

உலகில் உள்ள மற்ற ஜிஹாதி அமைப்புகளைப் போலவே, ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்களும் காஸாவின் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு எதிராகக் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜிஹாதிகள் தங்கள் செய்தியை பரப்பவும், புதிய ஆட்களை சேர்ப்பதற்காகவும் இஸ்ரேல் மீது நடந்த தாக்குதலைப் பயன்படுத்துகின்றனர்.

எவ்வாறாயினும், ஐ.எஸ் அமைப்பு மற்றும் அதன் ஆதரவாளர்கள் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை ஆதரிக்கும் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

மாறாக, தாக்குதல் நடத்திய ஹமாஸ் குழுவினரை, அமெரிக்கா மீதான 9/11 தாக்குதல் நடத்திய ‘ஹீரோக்கள்’ என்று அல்-காய்தா வர்ணித்தது.

ஆனால், இதுகுறித்து ஐ.எஸ் அமைப்பு கருத்து தெரிவிக்கவில்லை. ஹமாஸ் புகழடைவது குறித்து ஐ.எஸ் அமைப்பு எச்சரிக்கையாக இருக்கலாம்.

ஆனால், அக்டோபர் 20-ஆம் தேதி தனது வாராந்திரச் செய்தித்தாளான அல்-நபா இதழில், ஐ.எஸ் அமைப்பு யூதர்கள் மீது தாக்குதல் நடத்த முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்தது.

குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள யூதர்களின் பகுதிகளை குறிவைக்க ஐ.எஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. காஸா மீது இஸ்ரேலின் நடத்தும் குண்டுவீச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள் மற்றும் யூத இலக்குகள் மீது முஸ்லிம்கள் தாக்குதல் நடத்த வேண்டும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் காஸாவுக்குள் நுழைந்தால் எதிர்கொள்ள முஸ்லிம்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் இந்த அமைப்பு எழுதியுள்ளது. ஆனால் இந்த எதிர்ப்பு எந்தவொரு தேசியவாதக் கொள்கையின் கீழும் இருக்கக் கூடாது என்றும் கூறியிருக்கிறது.

இஸ்ரேல், பாலத்தீனம், ஹமாஸ், இஸ்லாமிக் ஸ்டேட், ஐ.எஸ் அமைப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஐ.எஸ் அமைப்பு ஹமாஸ் அமைப்பை மதத் துரோகிகளாகப் பார்க்கின்றனர்

ஐ.எஸ் அமைப்பின் அணுகுமுறை ஏன் இன்னும் மாறவில்லை?

அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல் மற்றும் இஸ்ரேலின் எதிர்த் தாக்குதலில் இருந்து, ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் வன்முறையைத் தூண்டும் செய்திகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால் இந்த ஜிஹாத் அல்லாவின் பெயரால் நடத்தப்பட வேண்டுமே தவிர ஹமாஸ் போன்ற அமைப்புகளின் பெயரால் அல்ல என்று ஐ.எஸ் அமைப்பினர் தெளிவாகக் கூறி வருகின்றனர்.

அக்டோபர் 7-க்குப் பிறகும் ஹமாஸ் மீதான இஸ்லாமிய அரசின் அணுகுமுறை சிறிதும் மாறவில்லை. ஹமாஸ் ஒரு தேசியவாத இயக்கத்தை நடத்தி வருவதாகவும், ஷரியா ஆட்சியை நிறுவ முயலவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர் அபு இமாத் அல்-நெராபி, ஹமாஸின் ‘காஃபிர் பதாகையின்’ கீழ் ஜிஹாதை எதிர்த்துப் போராடுவது இஸ்லாத்தின் படி தவறானது என்று எச்சரித்துள்ளார்.

ஹமாஸுக்குக் கிடைக்கும் பிரபலத்தால் ஐ.எஸ் அமைப்பு மகிழ்ச்சியடையவில்லை என்றும் தெரிகிறது. ஐ.எஸ் அமைப்பின் ஆதரவு டெலிகிராம் சேனலான சாத் அல்-ஸர்காவி, அதன் ஆதரவாளர்களை ஹமாஸின் பலம் மற்றும் புகழ் பற்றி பேசுவதை புறக்கணிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

அந்தக் குழுவில், ‘ஹமாஸின் பிம்பத்தை மெருகூட்ட வேண்டிய அவசியமில்லை. அவர்களுடைய மதத் துரோகத்தையோ யூதர்களுக்கு எதிரான போரையோ புகழ்ந்து பேச வேண்டிய அவசியமில்லை,’ என்று கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலுடனான போரில் ஹமாஸ் அரசியல் நோக்கங்களைப் பின்பற்றுவதாகச் சமூக ஊடகங்களில் ஐ.எஸ் ஆதரவாளர்கள் விமர்சித்து வருகின்றனர். எதிரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஹமாஸ் தயாராக இருப்பதிலும் ஐ.எஸ் மகிழ்ச்சியடையவில்லை.

அதே சமயம், ஹமாஸ் தாம் கடத்திய இஸ்ரேலியர்களுக்கு அளிக்கும் மென்மையான அணுகுமுறையையும் ஐ.எஸ் கேலி செய்கிறது.

ஐ.எஸ் அமைப்பு ஆக்கிரமித்துள்ள இராக்கின் மொசூல் நகரம், சிரியாவின் பகுஸ் மற்றும் ரக்கா நகரங்கள் மீதான தாக்குதல்களுடன் ஒப்பிடும்போது காஸாவில் நடப்பது ஒன்றுமே இல்லை என்று ஐ.எஸ் கூறுகிறது.

2019-இல் கிழக்கு சிரியாவில் உள்ள பாகுஸ் மீது வான்வழி குண்டுவீச்சை ஐ.எஸ் ஆதரவு சமூக ஊடக கணக்குகள் நினைவுபடுத்துகின்றன. இந்த நகரம் ஐ.எஸ் அமைப்பின் கடைசி கோட்டையாக இருந்தது.

இது முஸ்லீம்களுக்கு எதிரான பெரிய போராட்டம் என்றும், ஜிகாத் மூலம் மட்டுமே இதை எதிர்கொள்ள முடியும் என்றும் ஐ.எஸ் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *