செய்யாறு சிப்காட்: திமுக இரட்டை நிலைப்பாடா? ஜெயலலிதா போலவே ஸ்டாலினும் செயல்படுகிறாரா?

செய்யாறு சிப்காட்: திமுக இரட்டை நிலைப்பாடா? ஜெயலலிதா போலவே ஸ்டாலினும் செயல்படுகிறாரா?

திமுக இரட்டை நிலைப்பாடு

பட மூலாதாரம், Getty Images

விவசாயிகள் பிரச்னையை திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அணுகிய விதத்திலும், ஆளும்கட்சியான பின்னர் அணுகும் விதத்திலும் முரண்பாடுகள் உள்ளதாக விவசாயிகள் மற்றும் ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.

ஆனால், இதுகுறித்து திமுக தரப்பில் யாரும் கருத்து தெரிவிக்க முன்வரவில்லை.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் அமைப்பதற்கு எதிரான போராடிய விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பின்னர் அந்த வழக்கை ரத்து செய்துள்ளது தமிழ் நாடு அரசு. ஆனால், விவசாயிகளுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை, திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா கிராமத்தில் பட்டா நிலத்தில் தேத்துறை கிராமத்தை சேர்ந்த மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பச்சையப்பன் தலைமையில் தென்னங்கீற்று கொட்டகை அமைத்து ஜுலை மாதம் 2 ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் தொடர்ச்சியாகஇ நவம்பர் 4 ஆம் தேதி கிருஷ்ணகிரியைத் சேர்ந்த மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க நிர்வாகி அருள் மற்றம் அந்த அமைப்பைச் சேர்ந்த 19 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 19 பேரில் அருள் மற்றும் ஆறு பேர் திருவண்ணாமலை ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டனர்.

இதற்கு விவசாயிகள் சங்கம் மற்றம் சிவில் அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு வந்தது. அதன் பிறகு, தமிழ் நாடு அரசு, அருள் என்பவரைத் தவிர்த்து மற்ற ஆறு பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போடப்பட்டிருந்த வழக்கை ரத்து செய்தது.

என்ன சொன்னது தமிழ்நாடு அரசு?

பத்திரிகைச் செய்தி

பட மூலாதாரம், TNDIPR

இது குறித்து தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், குண்டர் சட்டத்தின் கீழ் கைதான பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி மற்றும் பாக்கியராஜ் ஆகியோரின் குடும்பத்தினர் செய்யார் சட்டமன்ற உறுப்பினரை நேற்று (நவம்பர் 17) நேரில் சந்தித்து, அவர்களை விடுக்க கோரிக்கை வைத்ததாக கூறினர். அதே கோரிக்கையினை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவ வேலுவிடமும் வைத்ததாக அந்த அறிக்கையில் கூறினர்.

“இவர்கள் அளித்த மனுவில் வரும் காலங்களில் இதுபோன்ற அரசு திட்டங்களைக் காரணமில்லாமல் எதிர்க்க மாட்டோம் என்றும், இத்தகைய தவறுகளை வெளியாட்களின் தூண்டுதலின் பேரில் செய்துவிட்டோம் என்றும் தெரிவித்து, தங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களை விடுக்குமாறு கோரிக்கை வைத்ததனர்,” என அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கைது செய்யப்பட்டவர்களின் மீது பதிய்பட்டிருந்த குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அருளை மட்டும் விடுவிக்காததும், கைது செய்யப்பட்டர்களின் குடும்பத்தினரிடம் மனு பெற்றது குறித்து கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

விவசாயிகள் பிரச்னையில் திமுக இரட்டை நிலைப்பாடா?

விவசாயிகள் போராட்டம்

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர் பாண்டியன், தமிழ் நாடு அரசின் இந்த அறிக்கையையும், குண்டர் சட்டத்தில் இருந்து விடுவித்த விதமும், குண்டர் சட்டத்தை விட கொடூரமானது என்றார்.

மேலும், விவசாயிகள் விஷயத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடும், ஆளும்கட்சியாக வந்த பிறகு ஒரு நிலைப்பாடும் எடுப்பதாக பிஆர் பாண்டியன் குற்றம்சாட்டினார்.

“இதுபோன்ற விவசாயிகள் நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில், திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக,வை கடுமையாக எதிர்த்தது. மேலும், தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் நலம் பாதுகாக்கப்படும் என்றும், விவசாய நிலங்களை கையகப்படுத்தும்போது, அவர்களின் ஒப்புதலுடனே அனைத்தும் நடக்கும் என்றார்கள். ஆனால், இன்று ஆட்சிக்கு வந்த பிறகு, நிலைமை தலைகீழாக உள்ளது,” என்றார் பிஆர் பாண்டியன்.

விளைநிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆட்சிக்கு வந்ததும் அத்திட்டத்தினை விரிவாக்கம் செய்வதற்கும் ஒப்புதல் கொடுக்கப்படவில்லை. ஆனால், திட்டத்தினை மறைமுகமாக அதிகாரிகள் மூலம் அமல்படுத்த திமுக முயற்சிப்பதாக சந்தேகிப்பதாக பிஆர் பாண்டியன் குற்றம்சாட்டினார்.

“தற்போது அவர்கள் அத்திட்டத்தினை அமல்படுத்துகிறோம் என்று கூறவில்லை. மாறாக, முன்னதாகவே பதிக்கப்பட்ட குழாய்களை அகற்ற வேண்டும், பழுது பார்க்க வேண்டும் உள்ளிட்ட காரணங்களைக் கூறி, மீண்டும் விளை நிலங்களை தோண்ட முயற்சிக்கின்றனர். ஆனால், நாங்கள் எதுவாயினும் அது அப்படியே இருக்கட்டும். விளை நிலத்தை மீண்டும் தோண்ட அனுமதிக்க மாட்டோம் எனக் கூறிவருகிறோம். இதன் மூலம் அவர்கள் மறைமுகமாக ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்த முயற்சிப்பதாக சந்தேகிக்கிறோம்,” என்றார்.

திருவண்ணாமலை செய்யாறு சம்பவத்தில், கைது நடவடிக்கையை கண்டித்த பிஆர் பாண்டியன், இதுதொடர்பாக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து, ஒருங்கிணைந்த மிகப்பெரிய போராட்டத்தை நடத்தவுள்ளதாகவும் கூறினார்.

ஜெயலலிதா செய்ததையே ஸ்டாலினும் செய்கிறாரா?

விவசாயிகள் போராட்டம்

இதேபோல, தமிழ்நாட்டில் மேற்கு மாவட்டங்களில் சில திட்டங்களை எதிர்த்த விவசாயிகளுக்கு எதிர்கட்சியாக இருந்தபோது ஆதரவு தெரிவித்த திமுக, தற்போது ஆளும்கட்சியாக வந்த பின்னர், அவற்றை அமல்படுத்த முயற்சிப்பதாக தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கந்தசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

“கோவையில் இருந்து கரூர் வரையிலான கிழக்கு சுற்றுவழிச்சாலைத் திட்டம் விளைநிலங்களின் வழியே வருகிறது. இத்திட்டத்திற்காக ஏக்கர் கணக்கில் நிலம் கையகப்படுத்தப்படும் நிலையில், அவற்றுக்கு உரிய விலை கொடுக்க அரசு மறுக்கிறது. வளர்ச்சித் திட்டங்களுக்கு விவசாய நிலங்களிலிருந்து தான் எடுக்க முடியும். ஆனால், அரசு கையகப்படுத்தும் அளவிற்கான நிலத்தை வேறு இடத்தில் வாங்கும் அளவிற்கு விலை கொடுக்க வேண்டும்,” என்றார்.

நிலம் கையகப்படுத்தும்போது அரசு கொடுக்கும் இழப்பீட்டு தொகை வழிகாட்டு மதிப்பின்படி கொடுக்கப்படுவதாகவும், ஆனால், வழிகாட்டு மதிப்பிற்கும், சந்தை மதிப்பிற்கும் இடையில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளதாகவும் கந்தசாமி கூறினார்.

“அதனால், தமிழ்நாடு அரசு வழிகாட்டு மதிப்பின்படி இழப்பீடு கொடுக்காமல், சந்தை மதிப்பின்படி இழப்பீடு கொடுத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைவார்கள்,” என்றார் அவர்.

மேலும், விவசாயிகள் பிரச்னையை அனைத்துக் கட்சிகளும் ஒரே மாதிரியாக கையாள்வதாக கந்தசாமி வருத்தம் தெரிவித்தார்.

“எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மாணிக்கம் மற்றும் முருகன் ஆகியோர் தர்மபுரி மாவட்டத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று போராட்டத்தை தூண்டியதாக அப்போதைய முதல்வர் ஜெ ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, அவர்கள் இருவரையும் கைது செய்தது. பின்னர் தான், தாங்கள் செய்த தவறை உணர்த்து, அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்தனர். தற்போது, அதையேதான் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் செய்கிறது,” என்றார் கந்தசாமி.

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திரும்பப்பெறாதது ஏன்?

விவசாயிகள் போராட்டம்

நீண்ட காலமாக அரசு மற்றும் தனியார் திட்டங்களுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்காக 1894 இல் கொண்டுவரப்பட்ட சட்டம் தான் பின்பற்றப்பட்டு வந்தது. பின், சுதந்திர இந்தியாவில் 2013ஆம் ஆண்டில், காங்கிரஸ் ஆட்சியில்தான் நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றம் மீள்குடியேற்றச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இச்சட்டத்தின்படி, எந்த ஒரு பகுதியில் நிலம் கையகப்படுத்தினாலும், அந்தப் பகுதியில் உள்ள குறைந்தது 70% மக்களிடம் ஒப்புதலுடன்தான் கையகப்படுத்த முடியும், அதேபோல, கையகப்படுத்தும் நிலத்தில் அதே அளவில் இழப்பீடாக நிலம் வழங்கப்பட வேண்டும், இழப்பீடு பணமாகக் கொடுத்தால், இது இரண்டு முதல் நான்கு மடங்கு இருக்க வேண்டும் உள்ளிட்ட சரத்துகள் இருந்துள்ளன.

“இதனை மத்தியில் பாஜக, வந்ததும் மாற்ற முயற்சித்தது. ஆனால், விவசாயிகளின் கடும் எதிர்ப்பால், அது கைவிடப்பட்டது. இந்த நிலையில், விவசாயம் பொதுப்பட்டியலில் இருந்ததால், 2015-16 இல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து, ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்றனர்,” என்றார் ஜெயராமன்.

ஆனால், இந்த சட்டத்திருத்தத்தை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான முக ஸ்டான் எதிர்த்தார்.

“அப்போது எதிர்க்கட்சியாக இருந்த முக ஸ்டாலின், ஈரோட்டில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு, திமுக ஆட்சிக்கு வந்த பின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்வோம் என்றார். இந்த வாக்குறுதி, தற்போது கைதாகி சிறையில் உள்ள கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அருள் அருகில் வைத்துதான் சொன்னார். இதுதான் திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது,” என்றார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *