
பட மூலாதாரம், NASA
நாசாவின் ஒசைரிஸ்-ரெக்ஸ் (Osiris-Rex) விண்கலத்தில் உள்ள கொள்கலன் வரும் ஞாயிற்றுக்கிழமை பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும். இது ஒரு துப்பாக்கித் தோட்டாவை விட 15 மடங்கு வேகத்தில் வரும்.
அது வளிமண்டலத்தில் நுழையும் போது வானத்தில் ஒரு தீப்பிழம்பாய் தோன்றும். ஆனால் அதன் வெப்பக் கவசம் மற்றும் பாராசூட்டுகள் அது இறங்கும் வேகத்தை குறைத்து, அமெரிக்காவின் யூடா மாகாணத்தின் மேற்குப் பாலைவனத்தில் மெதுவாகத் தரையிறக்கும்.
இந்தக் கொள்கலனுக்கு அப்படி என்ன சிறப்பு?
இது ஒரு விலையுயர்ந்த பொருளை எடுத்து வருகிறது.
இது ‘பென்னு’ என்னும் எரிகல்லில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை கொண்டுவருகிறது.
‘பென்னு’ என்பது ஒரு மலை அளவு பெரிய விண்வெளிப் பாறை.
இதிலிருந்து எடுத்து வரப்படும் மண் மிகவும் ஆழமான கேள்விகளுக்கு விடையளிக்கும் என்று நம்பப்படுகிறது.
அந்தக் கேள்வி: பூமி எப்படி உருவானது?

பட மூலாதாரம், NASA/GODDARD/UNIVERSITY OF ARIZONA
‘பென்னு’ என்பது ஒரு மலை அளவு பெரிய விண்வெளிப் பாறை
பூமியின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சி
இந்த விண்வெளி ஆராய்ச்சியின் முதன்மை ஆராய்ச்சியாளரான தாந்தே லாரெட்டா, பென்னு எரிகல்லில் இருந்து எடுக்கப்பட்ட 250 கிராம் மண், பூமி உருவாவதற்கு முன்னரே உருவானது, ஏன் ஒருவேளை நமது சூரிய குடும்பத்திற்கு முன்பே உருவானதாகக் கூட இருக்கலாம், என்று கூறுகிறார்.
“நாங்கள் நமது பூமியின் தொடக்கத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். பூமி எப்படி உருவானது? இது ஏன் நாம் வாழக் கூடிய வகையில் இருக்கிறது? பெருங்கடல்கள் தண்ணீரை எங்கிருந்து பெற்றன? நமது வளிமண்டலத்தில் காற்று எங்கிருந்து வந்தது? மிக முக்கியமாக, உயிர் அங்கக மூலக்கூறுகளின் ஆதாரம் என்ன?” என்கிறார் லாரெட்டா.

பென்னு எரிகல்லின் அளவு
ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலத்தின் பாதையில் இறுதி மாற்றங்களைச் செய்ய பொறியாளர்கள் கட்டளையிட்டுள்ளனர். இந்த விண்கலத்திலிருக்கும் கொள்கலன், இந்த வார இறுதியில் பூமியில் தரையிறங்குவதற்கான கட்டளை மட்டுமே எஞ்சியுள்ளது.
பென்னுவிலிருந்து கற்களையும் மண்ணையும் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி 2016-இல் துவங்கியது. இதற்காக நாசா இந்த 500மீ (1,640 அடி) அகலமான எரிகல்லை நோக்கி ஒசைரிஸ்-ரெக்ஸ் ஆய்வுக்கலனை அனுப்பியது. பென்னு எரிகல்லை அடைய இந்த விண்கலம் இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. மேலும் இரண்டு ஆண்டுகள் செலவிட்டு, ஆராய்ச்சிக் குழு, எரிகல்லில் எங்கிருந்து ‘மண்’ மாதிரியை எடுக்கலாம் என்பதைத் தீர்மானித்தது.

பட மூலாதாரம், BBC/KEVIN CHURCH
பிரிட்டனின் ராக் இசைக் கலைஞர் மற்றும் வானியற்பியல் விஞ்ஞானியான முனைவர் சர் பிரையன் மே (Dr Sir Brian May) இந்த ஆராய்ச்சியில் இந்தத் தேர்வில் முக்கியமான நபராகத் திகழ்ந்தார்
கலையும் அறிவியலும் இணைந்த முயற்சி
இந்தத் தேர்வில் முக்கியமான நபராகத் திகழ்ந்தவர் பிரிட்டனின் ராக் இசைக் கலைஞர் மற்றும் வானியற்பியல் விஞ்ஞானியான முனைவர் சர் பிரையன் மே (Dr Sir Brian May).
‘Queen’ என்ற ராக் இசைக்குழுவின் கிட்டார் கலைஞராக இருந்த இவர் ஸ்டீரியோ இமேஜிங்கிலும் (stereo imaging) நிபுணர் .
ஒரு பொருளை இருவேறு கோணங்களிலிருந்து எடுக்கப்பட்ட இரண்டு படங்களைச் சரியான கோணத்தில் பொருத்தி, அதனை ஒரு முப்பரிமாணக் காட்சியாக மாற்றும் திறன் இவருக்கு உண்டு.
பென்னு எரிகல்லில் மண் மாதிரி எடுப்பதற்கான தளங்களைக் கண்டறிய இவரும், இவரது கூட்டாளியான கிளாடியா மன்சோனியும் வேலை செய்தனர்.
“கலை மற்றும் அறிவியல் இரண்டுமே முக்கியம் என்று நான் எப்போதும் சொல்வேன்,” என்று சர் பிரையன் பிபிசியிடம் கூறினார்.
“விண்கலம் கீழே விழ வாய்ப்பிருக்கிறதா, அல்லது ‘நைட்டிங்கேல்’ என்று அழைக்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த இறங்குதளத்தின் விளிம்பில் இருந்த ஒரு பாறையில் சென்று மோதுமா என்பதை அறிய நிலப்பரப்பை நாம் உணர வேண்டும். அப்படி நடந்திருந்தால் அது பேரழிவாக இருந்திருக்கும்,” என்கிறார் பிரையன் மே.

ஒசைரிஸ்-ரெக்ஸ், பென்னுவின் தரை வரை தாழ்வாகச் சென்றது. பிறகு, அதன் 3 மீட்டர் (10 அடி) நீளமான ‘கரத்தால்’ மண்ணை அள்ளி எடுக்கும் பொறிமுறையைப் பிடித்துக் கொண்டது
மண்ணைச் சேகரித்த ‘அற்புத தருணம்’
2020-ஆம் ஆண்டு, அக்டோபர் 20-ஆம் தேதி, பென்னு எரிகல்லில் ‘மண்’ மாதிரி எடுக்கப்பட்ட தருணம் அற்புதமான ஒன்றாக இருந்தது.
ஒசைரிஸ்-ரெக்ஸ், பென்னுவின் தரை வரை தாழ்வாகச் சென்றது. பிறகு, அதன் 3 மீட்டர் (10 அடி) நீளமான ‘கரத்தால்’ மண்ணை அள்ளி எடுக்கும் பொறிமுறையைப் பிடித்துக் கொண்டது.
பென்னுவின் மேற்பரப்பைத் தாக்கி, அதே நேரத்தில், கற்கள் மற்றும் மண்ணை மேலெழ வைக்க நைட்ரஜன் வாயுவை வெடிக்கச் செய்வதே திட்டமாக இருந்தது.
ஆனால், அடுத்து நடந்தது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.
விண்கலத்தின் பொறிமுறை பென்னுவைத் தொடர்பு கொண்டபோது, அதன் மேற்பரப்பு ஒரு திரவம் போலப் பிரிந்தது.
நைட்ரஜன் வாயு செலுத்தப்பட்ட போது, பொறியின் வட்டு 10செ.மீ cmகீழே இருந்தது. நைட்ரஜனின் அழுத்தம் 8 மீ (26 அடி) விட்டம் கொண்ட ஒரு பள்ளத்தை உருவாக்கியது. கல்லும் மண்ணும் எல்லா திசைகளிலும் பறந்தன. ஆனால் முக்கியமாக சேகரிப்புப் பொறிமுறையின் கொள்கலனுக்குள்ளும் சென்றன.

பட மூலாதாரம், BBC/KEVIN CHURCH
லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் (Natural History Museum) சேர்ந்த முனைவர் ஆஷ்லீ கிங், இந்த மண் மாதிரியை தீண்டும் முதல் விஞ்ஞானிகளில் ஒருவராக இருப்பார்
‘இது மிக அரிய ஆராய்ச்சி’
இப்போது சில மணி நேரங்களில், ஏழு ஆண்டுகள் பயணித்த ஒசைரிஸ்-ரெக்ஸ், தனது 700 கோடி கிலோமீட்டர் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு பென்னுவின் மண் மாதிரியை பூமிக்குக் கொண்டுவரும்.
அதன் கொள்கலன் பாதுகாப்பாக தரையில் வைக்கப்பட்டவுடன், அது டெக்சாஸில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்திற்கு கொண்டு செல்லப்படும். அங்கு இந்த மண் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்ய ஒரு துப்புரவான பிரத்யேக அறை அமைக்கப்பட்டுள்ளது.
லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் (Natural History Museum) சேர்ந்த முனைவர் ஆஷ்லீ கிங், இந்த மண் மாதிரியைத் (கையுறைகள் அணிந்து) தீண்டும் முதல் விஞ்ஞானிகளில் ஒருவராக இருப்பார். ஆரம்ப பகுப்பாய்வைச் செய்யும் குழுவின் உறுப்பினராக அவர் உள்ளார்.
“ஒரு எரிகல்லில் இருந்து மாதிரிகளைக் கொண்டு வருதல் அடிக்கடி செய்யப்படும் ஒன்றல்ல. எனவே அதன் முதல் அளவீடுகளைச் செய்வது மிகநன்றாக செய்ய வேண்டும்.,” என்று அவர் கூறுகிறார். “இது நம்பமுடியாத அளவிற்கு உற்சாகமாக இருக்கிறது,” என்கிறார்.

விண்வெளியில் பென்னுவின் பாதை, அறியப்பட்ட எந்த ஒரு எரிகல்லையும்விட பூமியைத் தாக்கும் அதிக சாத்தியக்கூறைப் பெற்றிருக்கிறது.
மிகவும் ஆபத்தான எரிகல், ஆனால்…
நாசா, பென்னுவை சூரிய குடும்பத்தில் இருக்கும் மிகவும் ஆபத்தான ஒரு பாறையாகக் கருதுகிறது. விண்வெளியில் அதன் பாதை, அறியப்பட்ட எந்த ஒரு எரிகல்லையும் விட பூமியைத் தாக்கும் அதிக சாத்தியக்கூறைப் பெற்றிருக்கிறது.
ஆனால் பயப்பட வேண்டாம், அது நிகழ்வதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. ஒரு நாணயத்தைத் டாஸ் போட்டு ஒரே வரிசையில் 11 தலைகளைப் பெறுவது போன்றது. அடுத்த நூற்றாண்டின் பிற்பகுதி வரை எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.
பென்னுவில் நிறைய நீர் இருக்கவும் வாய்ப்புள்ளது. அதன் எடையில் 10% உள்ள இந்த நீர் அதன் தாதுக்களில் பிணைக்கப்பட்டுள்ளது. இந்த நீரில் உள்ள பல்வேறு வகையான ஹைட்ரஜன் அணுக்களின் விகிதம் பூமியின் பெருங்கடல்களில் உள்ளதைப் போலவே உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்வார்கள்.
சில வல்லுநர்கள் நம்புவது போல, ஆரம்ப காலத்தில் பூமி மிகவும் சூடாக இருந்ததாலேயே தன் நீரின் பெரும்பகுதியை இழந்திருந்தால், பென்னுவுடன் H₂O பொருத்தத்தைக் கண்டறிவது, நமது பெருங்கடல்களுக்கு அவற்றின் கொள்ளளவை வழங்குவதில் எரிகற்களின் தாக்குதல் எவ்வளவு முக்கியமானதாக இருந்தது என்பது தெரிந்துவிடும்.

இந்த விண்வெளி ஆராய்ச்சியின் முதன்மை ஆராய்ச்சியாளரான தாந்தே லாரெட்டா
‘பூமியில் உயிர்கள் எப்படி வந்தன என்பதற்கான விடையைத் தேடுகிறோம்’
பென்னுவில் எடையில் 5-10% கார்பன் இருக்கலாம்.
இதில்தான் நாம் அதிக ஆர்வமாக உள்ளோம்.
நமக்கு தெரிந்தபடி, பூமியில் உயிர் கரிம வேதியியலை அடிப்படையாகக் கொண்டது.
விண்வெளியில் இருந்து சிக்கலான மூலக்கூறுகள் பூமிக்கு வந்ததால்தான் இங்கு உயிர்கள் தோன்றினவா?
“பென்னுவின் மண் மாதிரியில் செய்யப்படும் முதல் பகுப்பாய்வுகளில் ஒன்று, அதில் உள்ள கார்பன் அடிப்படையிலான மூலக்கூறுகளின் பட்டியலைத் தயாரிப்பது,” என்று NHM-இன் பேராசிரியர் சாரா ரஸ்ஸல் கூறுகிறார்.
“விண்கற்களைப் பார்ப்பதன் மூலம், எரிகற்களும் வெவ்வேறு கரிம மூலக்கூறுகளைக் கொண்டிருக்கக் கூடும் என்பதை நாம் அறிவோம். ஆனால் விண்கற்களில் உள்ள மூலக்கூறுகள் பெரும்பாலும் மிகவும் அசுத்தமானவை. எனவே பென்னுவின் மண் மாதிரி நமக்கு உண்மையான கரிமக் கூறுகள் என்ன என்பதைக் கண்டறிய வாய்ப்பளிக்கும்,” என்கிறார் அவர்
பேராசிரியர் லாரெட்டா மேலும் கூறுகையில், இந்த மாசுபாட்டின் காரணமாக, புரதங்களில் பயன்படுத்தப்படும் அமினோ அமிலங்கள் விண்கற்களில், உள்ளனவா என்று நாங்கள் தேடவில்லை. “எனவே எரிகற்கள் பூமியில் உயிர்கள் தோன்ற ஆதாரமாக இருந்தனவா என்ற புரிதலை மேம்படுத்தப் போகிறோம்,” என்கிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்