ஜப்பான்: கார்த்தி நடிக்கும் திரைப்படம் இந்த உண்மையான திருடனின் கதையா?

ஜப்பான்: கார்த்தி நடிக்கும் திரைப்படம் இந்த உண்மையான திருடனின் கதையா?

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை, நீராவி முருகன், கார்த்தி, ஜப்பான்

பட மூலாதாரம், Japan Movie Team

கார்த்தி நடித்து இந்த வாரம் வெளியாகவிருக்கும் ‘ஜப்பான்’ திரைப் படத்தின் கதை, திருச்சியில் உள்ள மிகப்பெரிய நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்த திருடன் ஒருவரின் உண்மைக் கதை எனக் கூறப்படுகிறது.

கார்த்தி, மற்றும் அனு இம்மானுவேல் ஆகியோரின் நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் நவம்பர் 10-ஆம் தேதியன்று வெளியாகிறது ‘ஜப்பான்’ திரைப்படம். ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ஜித்தன் ரமேஷ், கே.எஸ். ரவிக்குமார், சுனில் வர்மா ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தின் கதாநாயகன் ஒரு திருடன். ஒரு மிகப் பெரிய நகைக் கடையில் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளைத் திருடிவிடுகிறார். அவரைக் காவல்துறை துரத்துகிறது. பிறகு என்ன ஆகிறது என்பதே கதை எனக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் கதை, சில ஆண்டுகளுக்கு முன்பாக திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் என்ற நீராவி முருகனின் கதை எனக் கூறப்படுகிறது. இந்த முருகன் ஈடுபட்ட அந்தக் கொள்ளைச் சம்பவம் இந்தியாவையே அதிரவைத்தது.

இந்த உண்மைச் சம்பவம்தான் இப்படத்தின் கதையா?

எப்படி நடந்தது இந்தக் கொள்ளைச் சம்பவம்?

2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி அதிகாலை 2 மணி.

மழை பெய்து கொண்டிருந்தது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையமும் மெல்லமெல்ல அமைதியாக ஆரம்பித்திருந்தது. இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து சற்று தூரத்தில் இருக்கிறது லலிதா ஜுவல்லரி நகைக்கடை.

அந்தக் கடையின் மேற்குப் புறமாக வந்த சிலர், மெல்ல தங்கள் வேலையை ஆரம்பித்தனர். அந்தக் கடைக்கு நான்கு பாதுகாவலர்கள் இருந்தனர். அருகில் இருந்த ஒரு கட்டடத்திலும் ஒரு பாதுகாவலர் இருந்தார். இவர்களுக்கு சத்தம் கேட்காமல் அவர்கள் கடைக்குள் புக வேண்டும்.

கடையின் மேற்குப் புறச் சுவரை ரம்பம் வைத்து அறுக்க ஆரம்பித்தனர். ஒரு ஆள் நுழையும் அளவுக்குச் சுவற்றை அறுத்து எடுக்க மொத்தம் இரண்டரை மணி நேரம் ஆனது.

அறுத்து முடித்தபின் முகத்தில் பொம்மை முகமூடிகளை மாட்டிக்கொண்டு இரண்டு பேர் உள்ளே புகுந்தனர். ஒருவர் பெயர் முருகன். மற்றொருவர் கணேசன். இரண்டு பேரும் நகைக்கடையின் ஷோகேஸ்களில் இருந்த நகைகளை வரிசையாக எடுத்து தங்கள் பைக்குள் வைத்தனர். பிறகு சத்தமில்லாமல் வந்த வழியே வெளியேறினர். மொத்தமாக 13 கோடி ரூபாய் மதிப்புள்ள 28 கிலோ நகைகள் இந்தச் சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்டன.

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை, நீராவி முருகன், கார்த்தி, ஜப்பான்
படக்குறிப்பு,

கடையின் சுவற்றை அறுத்து, பொம்மை முகமூடி அணிந்திருந்த இருவர் உள்ளே நுழைந்தனர்

தமிழ்நாட்டையே அதிரவைத்த சம்பவம்

அடுத்த நாள் காலையில் தமிழ்நாடே அலறியது. கடையின் உள்ளே இருந்த சிசிடிவியைப் போட்டுப் பார்த்த காவல்துறைக்கு அதிர்ச்சிதான் எஞ்சியது. எல்லோரும் முகமூடி அணிந்திருந்தார்கள். இவ்வளவு பெரிய கொள்ளையை, இந்த பாணியில் செய்ய வேண்டுமென்றால் அது, வட இந்தியக் கொள்ளையர்களால்தான் முடியும் என நினைத்து, அந்தத் திசையில் விசாரணையைத் துவங்கியது காவல்துறை.

நகைகளைக் கொள்ளையடித்தவர்கள் அதை உடனடியாக இடமாற்றம் செய்வார்கள் எனக் கருதி தமிழ்நாடு முழுவதும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இதற்கு நடுவில், கொள்ளையடித்த நகைகளை மதுரைக்கு எடுத்துச் சென்ற முருகன் கும்பல், வாடிப்பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவரது வீட்டில் வைத்து தராசு மூலம் நிறுத்திப், பங்கு பிரித்துக்கொண்டனர். இதற்குப் பிறகு முருகன் திருவெறும்பூருக்கு அருகில் உள்ள வேங்கூருக்குச் சென்றுவிட்டார். சுரேஷ் திருவாரூர் சென்றார்.

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை, நீராவி முருகன், கார்த்தி, ஜப்பான்
படக்குறிப்பு,

உள்ள லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் என்ற நீராவி முருகன்

கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

ஆனால், திருவாரூர் சீராத்தோப்பைச் சேர்ந்த இன்னொரு கூட்டாளியான மணிகண்டன் வடிவத்தில் விதி காத்திருந்தது. திருவாரூர் மடப்புரம் பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 4.7 கிலோ தங்க நகைகள் இருந்தன. அந்த வாகனத்தில் வந்தவர் மணிகண்டன்தான்.

அவரைப் பிடித்து விசாரித்தபோது படபடவென்று கொள்ளையில் ஈடுபட்ட பலரது பெயரைச் சொன்னார். இதையடுத்து கனகவல்லி, கணேசன், வெல்டர் ராதாகிருஷ்ணன் என மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.

காவல்துறை பிடிப்பதற்கு முன்பாகவே முருகனும் மற்றொரு முக்கியக் குற்றவாளியான முருகனின் மருமகன் சுரேஷும் தப்பித்திருந்தனர். பிறகு, தமிழகக் காவல்துறை முருகனின் உறவினர்கள் அனைவரையும் வளைத்து நெருக்கடி கொடுக்க, பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அக்டோபர் 11-ஆம் தேதி சரணடைந்தார் முருகன். சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் அக்டோபர் 10-ஆம் தேதி சரணடைந்தார்.

பெங்களூரில் முருகன் மீது கொள்ளை வழக்கு நிலுவையில் இருந்ததால், அங்கே சரணடைந்த அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது பெங்களூர் நகர காவல்துறை. கர்நாடக மாநிலத்தில் மட்டும் சுமார் 110 திருட்டுச் சம்பவங்களில் முருகனுக்கு தொடர்பிருந்தது. இதனால் அவரை ஆறு நாட்களுக்கு போலீஸ் காவலில் எடுத்தது பெங்களூர் காவல்துறை. அப்போதுதான் தான் லலிதா ஜுவல்லரியில் திருடிய நகைகளை புதைத்துவைத்த இடத்தைச் சொன்னார் முருகன்.

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை, நீராவி முருகன், கார்த்தி, ஜப்பான்
படக்குறிப்பு,

மொத்தமாக 13 கோடி ரூபாய் மதிப்புள்ள 28 கிலோ நகைகள் இந்தச் சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்டன

ஆற்றுப் படுகையிலிருந்து மீட்கப்பட்ட நகைகள்

திருச்சிக்கு வந்த பெங்களூர் நகர காவல்துறை திருவெறும்பூர் அருகேயுள்ள பூசைத்துறை காவிரி ஆற்றுப் படுகையில் புதைத்துவைக்கப்பட்டிருந்த அந்த நகைகளை மீட்டது. மொத்தமாக சுமார் 12 கிலோ தங்க, வைர நகைகள் கிடைத்தன. அந்த நகைகளை எடுத்துக்கொண்டு பெங்களூர் காவல்துறை புறப்பட்டது. இதையறித்த திருச்சி நகரக் காவல்துறையினர் அவர்களை பெரம்பலூர் அருகில் மடக்கி, அந்த நகைகள் லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டவை என்று கூறி நகைகளைக் கேட்டனர். ஆனால், பெங்களூர் நகரக் காவல்துறை, அந்த நகைகளை பெங்களூர் நகர நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்போவதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டது.

முருகன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், வாடிப்பட்டியைச் சேர்ந்த கணேசன் கைதுசெய்யப்பட்டார். அவர் வீட்டில்தான் நகைகள் பங்குபோடப்பட்டன. அவரிடமிருந்து 6.2 கிலோ நகை கைப்பற்றப்பட்டது. சமயநல்லூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் கைதுசெய்யப்பட்டு அவரிடமிருந்து 950 கிராம் நகை மீட்கப்பட்டது.

முருகனிடமும் முருகனின் மருமகன் சுரேஷிடம் காவல்துறை விசாரணை நடத்தியபோது அவர்கள் தெரிவித்த தகவல்கள் அதிரவைப்பதாக இருந்தன.

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை, நீராவி முருகன், கார்த்தி, ஜப்பான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

லலிதா ஜுவல்லரி கொள்ளைக்கு முன்பாக திருச்சி சமயபுரத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 457 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன (மாதிரிப் படம்)

சினிமா கனவு கண்ட நீராவி முருகன்

கொள்ளையடித்த நகைகளைப் பணமாக மாற்றி அதைவைத்து ஏகப்பட்ட திட்டம் தீட்டியிருந்தார் முருகன். தனது அக்காள் மகனான சுரேஷ் மீது முருகனுக்கு பாசம் அதிகம். அவரை ஹீரோவாக்கிப் பார்க்க நினைத்தார் முருகன். ஏற்கனவே சுரேஷை நாயகனாக வைத்து துவங்கப்பட்ட இரண்டு தெலுங்குப் படங்கள் நின்று போயிருந்தன. அதனால், இந்த முறை ஒரு தமிழ்ப் படத்தில் சுரேஷை களமிறக்க நினைத்திருந்தார் முருகன்.

போலீஸ் அவரைக் கஸ்டடியில் எடுத்தபோது, “நீங்கள் என்னைப் பிடிக்காமல் இருந்திருந்தால், தமிழின் சிறந்த படத்தைக் கொடுத்திருப்பேன்,” என்று சொல்லி, அலறவிட்டிருக்கிறார் முருகன்.

‘கொள்ளையடித்த நகையை சினிமா நடிகைக்கு கொடுத்தோம்’

லலிதா ஜுவல்லரி கொள்ளைக்கு முன்பாக திருச்சி சமயபுரத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஒரு கொள்ளை நடந்திருந்தது. அதில் 457 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. அந்தக் கொள்ளையைச் செய்தது தாங்கள்தான் என்றும் மொத்தமாகக் கொள்ளையடித்த பணத்தில் முருகன் ஒரு சினிமா படத்தை எடுத்ததாகவும் முருகனின் மருமகன் சுரேஷ் தெரிவித்தார்.

இந்தப் படத்திற்கு நாயகியாக ஒருவரை தேர்வுசெய்த முருகன், அந்த நடிகைக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகையில் இருந்து பத்து பவுன் நகையைக் கொடுத்ததாகச் சொன்னார் சுரேஷ்.

பிறகு, சென்னையில் பல இடங்களில் தாங்கள் கொள்ளை அடித்திருப்பதாகவும் மாட்டிக்கொண்ட போதெல்லாம் அதிலிருந்து விடுபட காவல்துறையினர் சிலருக்கு பெரிய அளவில் பணம் கொடுத்ததாகவும் கூறினார்.

இதற்குப் பிறகு, சுரேஷ், மணிகண்டன், கனகவல்லி ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர். பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் பெரும்பகுதி சுரேஷ் கொடுத்த தகவல்களின் மூலம் மீட்கப்பட்டது.

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை, நீராவி முருகன், கார்த்தி, ஜப்பான்

பட மூலாதாரம், Japan Movie Team

படக்குறிப்பு,

கொள்ளையடித்த பணத்தை வைத்து சினிமா எடுக்கத் திட்டமிட்டிருந்த முருகனின் வாழ்க்கை இப்போது சினிமாவாக வெளிவரவிருக்கிறது

‘சினிமா பார்த்து சிக்காமல் கொள்ளையடிக்கக் கற்றுக்கொண்டேன்’

சுரேஷை திருச்சி நீதிமன்றத்திற்கு அழைத்துவரும்போதெல்லாம் காவல்துறையினர் மீது குற்றம்சாட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். திருவாரூரில் வாகன சோதனையில் பிடிபட்டபோது தன்னிடம் 5.7 கிலோ தங்கம் இருந்ததாகவும் ஆனால், காவல்துறையினர் 4.7 கிலோ தங்கத்தையே கணக்குக் காட்டியதாகவும் குற்றம்சாட்டினார்.

ஆனால், முருகன் காவல்துறையினரைச் சமாதானப்படுத்தும் விதத்திலேயே பேசுவார்.

1995ஆம் ஆண்டு முதல் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்த முருகன், கோயம்புத்தூரில் நடந்த ஒரு கொள்ளையில் காவல்துறையினரிடம் சிக்கிக் கொண்டார். அந்த வழக்கில் அவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை கிடைத்தது. இதற்குப் பிறகு, கொள்ளை தொடர்பான சினிமா படங்களைப் பார்த்து, சிக்காமல் கொள்ளையடிக்கக் கற்றுக்கொண்டதாகச் சொன்னார் முருகன்.

கொள்ளையடிக்கச் செல்லும்போது இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் யாரும் செல்போனை பயன்படுத்த மாட்டார்கள். சிறிய வாக்கி டாக்கி ஒன்றை பயன்படுத்துவார்கள். அதையும் காவல்துறை கண்டுபிடித்துவிட்டதால், லலிதா ஜுவல்லரி கொள்ளைக்குச் செல்லும்போது இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு உள்ளே செல்வார்கள். வெளியில் பிரச்சனை என்றால், வெளியில் உள்ள நபர் கயிற்றை இழுத்து சிக்னல் கொடுப்பார்.

இதற்குப் பிறகு முருகனுக்கு என்ன ஆனது?

முருகன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் கைதுசெய்யப்படுவதற்கு முன்பாகவே பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். குறிப்பாக எயிட்ஸ் நோய் அவரைத் தாக்கியிருந்தது. உடல்நலம் மோசமடைந்ததை அடுத்து அவர் பெங்களூரூவில் உள்ள சிவாஜி நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

பிறகு அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டுப் பேசமுடியாமலும் போனது. தொடர் சிகிச்சையில் இருந்துவந்த முருகன், 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 26-ஆம் தேதி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

அதன்பின் முருகனின் கூட்டாளிகள் ஒவ்வொருவராக ஜாமீனில் வெளிவந்தனர். இறுதியாக கடந்த ஆண்டு சுரேஷும் வெளியில் வந்துவிட்டார்.

முருகன் இறக்கும்போது அவர்மீது சென்னையில் 12 வழக்குகளும் கர்நாடக மாநிலத்தில் 46 வழக்குகளும், ஆந்திர மாநிலத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் இருந்தன.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *