
பட மூலாதாரம், Getty Images
நன்றே பர்கரின் துல்லியமான பந்துவீச்சு, டோனி ஜோர்ஜியின் முதல் சதம் ஆகியவற்றால் ஜீபெரா நகரில் நேற்று நடந்த 2வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி.
முதலில் பேட் செய்த இந்திய அணி 46.2 ஓவர்களில் 211 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 212 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்கை துரத்திச் சென்ற தென் ஆப்பிரிக்க அணி, 45 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது. அது மட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து 4-வது ஒருநாள் வெற்றியை இந்திய அணி பதிவு செய்யவிடாமல் தென் ஆப்பிரிக்கா தடுத்துவிட்டது.
அடுத்துவரும் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டியையும் தென் ஆப்பிரிக்கா வென்றால்தான் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி தனது பெயரையும் காப்பாற்றிக்கொள்ள முடியும்.
ஏனென்றால், கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சொந்த மண்ணில் நடந்த எந்த ஒருநாள் தொடரையும் தென் ஆப்பிரிக்க அணியால் கைப்பற்ற முடியவில்லை. ஒருவேளை இந்தியாவிடம் 3வது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்தால், தொடர்ந்து 4-வது ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் இழந்து தென் ஆப்பிரிக்கா அவப்பெயரைப் பெறும்.
இந்திய அணிக்கு எதிராக தனது 4-வது போட்டியிலேயே சதம் விளாசி வெற்றிக்குத் துணை புரிந்த டோனி ஜோர்ஜி (119) ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடக்க வீரர் ஹென்ட்ரிக்ஸ் (52), டூசென் (36) ஆகியோர் வெற்றிக்கு காரணமாக அமைந்தனர். இதில் தொடக்க விக்கெட்டுக்கு ஹென்ட்ரிக்ஸ், ஜோர்ஜி இருவரும் 130 ரன்கள் சேர்த்து வெற்றியை எளிதாக்கினர்.
ஆடுகளத்தின் தன்மை அறியவில்லையா?
இந்தப் போட்டி நடந்த மைதானம், ஜோகன்னஸ்பர்க் ஆடுகளம் போல் அதிக ரன்களை அடிக்கும் விக்கெட் இல்லை. இந்த மைதானத்தில் சர்வதேச ஒருநாள் போட்டி 4 ஆண்டுகளுக்குப்பின் நேற்றுதான் நடந்தது. கடந்த 12 ஆண்டுகளில் இங்கு 8 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. அதில் ஒரு போட்டியில்கூட எந்த அணியும் 300 ரன்களை எட்டியது இல்லை.
இந்த ஆடுகளம் மெதுவான, பந்துகள் தாழ்வாக வரும் விக்கெட்டைக் கொண்டது. தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் மைதானங்களில் குறைந்த தரம் கொண்ட மைதானத்தில் முக்கியமானதாகும்.
இத்தகைய விவரங்களைத் தெரிந்திருந்தாலும் இந்திய அணியின் பேட்டர்கள் நேற்றைய ஆட்டத்தில் சிறிதுகூட பொறுமை காட்டவில்லை. இந்திய பேட்டர்கள் பேட் செய்யும் போது பந்து எந்த வேகத்தில் வருகிறது, நின்று வருகிறதா அல்லது ஸ்விங், சீமிங் இருக்கிறதா என்பதை பெரிதாக கவனித்தது போல் தெரியவில்லை.
ஏனென்றால், கெய்க்வாட் ஆட்டமிழந்தவிதம், பந்தின் வேகத்தை சற்றுகூட கவனிக்காமல் கால்காப்பில் வாங்கி பர்கர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஆடுகளத்தின் தன்மையை நன்கு புரிந்துகொண்ட தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் லிசாட் வில்லியம்ஸ், பர்கர், ஹென்ட்ரிக்ஸ் ஆகிய மூவரும் தொடக்கத்திலிருந்து லைன் லென்த்தை நகற்றாமல் பந்துவீசி நெருக்கடியில் தள்ளினர்.

பட மூலாதாரம், Getty Images
ஒட்டுமொத்தத்தில் இந்திய அணியின் பேட்டிங் பலவீனம், இதுபோன்ற சவாலான ஆடுகளத்தில் வெளிப்பட்டுவிட்டது.
தாக்குப்பிடிக்காத இந்திய பேட்டர்கள்
தென் ஆப்பிரிக்காவின் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களான நார்ஜே, ரபாடா, யான்சென் ஆகியோர் இல்லாத நிலையில் 2-வது நிலை பந்துவீச்சாளர்களுக்கே இந்திய அணி பேட்டர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.
இந்த ஆடுகளத்தில் பெரிய ஸ்கோர் அடிப்பது கடினமானது. 250 ரன்கள் சேர்த்துவிட்டாலே சேஸிங் செய்வது கடினம் என்பது தெரியும். அதற்கு ஏற்றாற்போல் விக்கெட்டை நிலைப்படுத்தும் அளவுக்குகூட இந்திய பேட்டர்கள் விளையாடவில்லை. ஆனால், இந்திய பேட்டர்கள் புரிந்து கொண்டதைவிட, தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தை நன்கு புரிந்துகொண்டு பந்துவீசினர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்த இந்த வெற்றி வேகப்பந்து வீச்சாளர்கள் பெற்றுக் கொடுத்த வெற்றியாகும். தொடக்கத்திலேயே இந்திய பேட்டிங்கை நிலைகுலைய வைத்து, பெரிய ரன்ஸ்கோர் செய்யவிடாமல் தடுத்துவிட்டனர்.
3 வேகப்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து 28 ஓவர்கள் பந்துவீசி 113 ரன்கள் கொடுத்து 6 இந்திய அணியின் 6 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த 3 பந்துவீச்சாளர்களும் சேர்ந்து வீசிய ஓவரில் மட்டும் 118 டாட் பந்துகள் வீசப்பட்டுள்ளன. அதாவது இவர்கள் வீசிய 28 ஓவர்களில் 20 ஓவர்கள் டாட் பந்துகளாகும். மீதமுள்ள 8ஓவர்களில்தான் இந்திய பேட்டர்கள் 113 ரன்களை அடித்துள்ளது என்பதாகும்.

பட மூலாதாரம், Getty Images
3 வேகப்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து 28 ஓவர்கள் பந்துவீசி 113 ரன்கள் கொடுத்து 6 இந்திய அணியின் 6 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர்
கோர்ஸியை ஆட்டமிழக்கச் செய்ய 8 பந்துவீச்சாளர்கள்
தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டர்களும் இந்த விக்கெட்டில் இந்த ஸ்கோர் சேஸிங் செய்யக்கூடியது என்றாலும் எளிதானது அல்ல என்பதைப் புரிந்து பேட் செய்தனர். இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் 3 பேரும் லைன் லென்த்தில் வீசி தொடக்கத்தில் நெருக்கடி அளித்தனர். இதனால் தொடக்கத்தில் தென்ஆப்பிரிக்கா ரன்ரேட் மெதுவாகவே உயர்ந்தது.
ஆனால், இந்திய பந்துவீச்சாளர்கள் தவறான லென்த்தின் பந்துவீசிய போதெல்லாம் டோனி கோர்ஸி, ஹென்ட்ரிக்ஸ் இருவரும் சேர்ந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். இதில் டோனி கோர்ஸியை ஆட்டமிழக்கச் செய்யவும், முதல் விக்கெட்டை எடுக்கவும் 8 பந்துவீச்சாளர்களை கேப்டன் ராகுல் பயன்படுத்தியும் நீண்ட முயற்சிக்குகப்பின்புதான் பலன் கிடைத்தது.
பேட்டிங் பலவீனம் வெளிப்பட்டதா?
ஒட்டுமொத்தத்தில் இந்திய அணியின் பேட்டிங் பலவீனம், இதுபோன்ற சவாலான ஆடுகளத்தில் வெளிப்பட்டுவிட்டது. இளம் வீரர்களுக்கு பேட்டிங் அனுபவம் இன்னும் தேவை என்பதை வெளிக்காட்டியுளளது.
குறிப்பாக கெய்க்வாட், திலக் வர்மா, சஞ்சு சாம்ஸன், ரிங்கு சிங் ஆகியோர் இந்தியாவில் உள்ள பேட்டிங்கிற்கு சாதகமான, அல்லது எந்த நாட்டிலும் இருக்கும் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில்தான் விளையாடுவதற்கு தகுதியுள்ளவர்கள். இதுபோன்ற சவாலான ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய பொறுமையும் இல்லை, ஷாட்களை தேர்ந்தெடுத்தவிதமும், பந்துகளை கையாண்டவிதமும் மோசமாக இருந்தது.
அதிலும் இந்திய அணிக்கு நடுவரிசை, ஒன்டவுன் வரிசைக்கு நல்ல பேட்டர் தேவை என்பதால், திலக் வர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இப்போதுவரை பெரிதாக எந்த ஸ்கோரும் அவர் செய்யவில்லை.

பட மூலாதாரம், Getty Images
அனுபவம் வாய்ந்த பேட்டரான சாம்ஸன் 12 ரன்களில் ஹென்ட்ரிக்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார்
‘மாறாத’ சஞ்சு சாம்ஸன்
நிலைத்தன்மை இல்லாத காரணத்தால்தான் இந்திய அணிக்குள் நிலையாக இடம் பெறமுடியாமல் சஞ்சு சாம்ஸன் தவித்து வந்தார். அதை மீண்டும் இந்த ஆட்டத்தில் நிரூபிதித்துவிட்டார். அனுபவம் வாய்ந்த பேட்டரான சாம்ஸன் 12 ரன்களில் ஹென்ட்ரிக்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார்.
சாம்ஸனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து தேர்வாளர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கினர், ஆனால், அதிலும் சாம்ஸன் சொதப்பிவிட்டார். இனிவரும் காலங்களில் சாம்ஸனுக்கான வாய்ப்பை மங்கச் செய்திருக்கிறது.
ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல், இந்த ஆட்டத்திலும் சிறப்பாக பேட் செய்யவில்லை. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வரும் ரிங்கு சிங் தொடர்ந்து 3வது ஆட்டமாக சொதப்பியுள்ளார். கடைசி டி20 போட்டி, முதல் ஒருநாள் ஆட்டத்தைத் தொடர்ந்து இந்த ஆட்டத்திலும் மிகசொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்திய அணி கடைசி 4 விக்கெட்டுகளை வெறும் 42 ரன்களுக்கு இழந்தது.
நம்பிக்கை நாயகன் சுதர்ஷன்
இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய நம்பிக்கை சாய் சுதர்ஷன். தொடர்ந்து 2வது அரைசதத்தை அடித்து இந்திய அணி ஸ்கோர் உயர்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்தார். தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர்கள் வீசும் எந்த தவறான பந்தையும் தண்டிக்க சுதர்ஷன் தவறவில்லை. ரஞ்சிக் கோப்பைத் தொடரில் விளையாடிய அனுபவத்தால் மிகவும் நிதானமான ஆட்டத்தை சுதர்ஷன் கையாண்டார். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடிய சுதர்ஷன், நேற்று கேசவ் மகராஜ் ஓவரில் சிக்ஸர் அடித்து அசத்தினார்.
நிதானமாக ஆடிய சுதர்ஷன் 65 பந்துகளில் தனது 2-வது அரைசதத்தை நிறைவு செய்து 62 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல்-சுதர்ஷன் இருவரும் சேர்ந்து 3-வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர். இதுதான் இந்திய அணியில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். அதன்பின் கேப்டன் ராகுலுக்கு ஒத்துழைத்து பார்ட்னர்ஷி அமைக்க எந்த வீரர்களும் தயாராக இல்லை என்பதால்தான் ஸ்கோர் குறைவுக்கு காரணமாகும்.
பெரிய ஸ்கோருக்கு ஏன் செல்லவில்லை?
136 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி, அடுத்த 75 ரன்களுக்குள் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்ஸன் (12), ரிங்கு சிங் (17) அக்ஸர் படேல் (7) என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இந்திய அணியில் சாம்ஸன், ரிங்குசிங், அக்ஸர், திலக் வர்மா, கெய்க்வாட் ஆகிய 4 பேட்டர்கள் சாராசரியாக 20 ரன்கள் சேர்த்திருந்தாலே, இந்திய அணியின் ஸ்கோர் 280 ரன்களைத் தொட்டிருக்கும். இந்திய அணியின் ஸ்கோரில் கேப்டன் ராகுல் சேர்த்த 56 ரன்கள், சுதர்ஷன் சேர்த்த 62 ரன்களைத் தவிர்த்துப் பார்த்தால், 90 ரன்கள் கூட மற்ற 8 பேட்டர்களும் சேர்க்கவில்லை என்பது வருத்ததத்குரியது என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
தென் ஆப்பிரிக்க பேட்டர்களும் இந்த ஸ்கோர் சேஸிங் செய்யக்கூடியது என்றாலும் எளிதானது அல்ல என்பதைப் புரிந்து பேட் செய்தனர்
தோல்விக்கு என்ன காரணம்?
இதுபோன்ற சவாலான ஆடுகளத்தில் இந்திய அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் வலிமை என்ன என்பதை இந்த ஆட்டம் வெளிப்படுத்திவிட்டது. சுதர்ஷன், ராகுல் போன்ற நிதானமான ஆட்டத்தைக் கையாளக் கூடிய, பாரம்பரிய ஆட்டத்தை கையாள்பவர்கள்தான் இந்த ஆடுகளத்தில் நிலைக்க முடியும் என்பதை மற்ற பேட்டர்களுக்க உணர்த்திவிட்டனர்.
இந்திய அணி பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் கடும் நெருக்கடி அளித்து, லைன் லென்த்தில் பந்துவீசியதால், ஹென்ட்ரிக்ஸ், ஜோர்ஜி இருவரும் மிகவும் பொறுமையாக ஷாட்களை தேர்ந்தெடுத்து ஆடினர். இதனால், முதல் 35 பந்துகளில் ஹென்ட்ரிக்ஸ் 22 ரன்களும், ஜோர்ஜி முதல் 31 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தனர்.
ஆனால், தவறான லைன்லென்த்தில் பந்துவீசப்பட்டபோது ஜோர்ஜி, ஹென்ட்ரிக்ஸ் அதை பவுண்டரிக்கு அனுப்பி தண்டித்தனர். இதனால் அர்ஷ்தீப், முகேஷ் இருவரும் தங்களின் முதல் ஸ்பெல்லில் கட்டுப்பாக பந்துவீசி சராசரியாக 15 ரன்களுக்குள்ளாகவே கொடுத்தனர்.
ஆவேஷ்கான் பந்துவீச்சில் அதிகமான ஷார்ட் பந்துகள் வீசப்பட்டதால், ஹென்ட்ரிக்ஸ், ஜோர்ஜி பவுண்டரிகளாக விளாசி ரன்களைச் சேர்த்தனர். குல்தீப் யாதவ், ஆவேஷ் கான் பந்துவீச்சை குறிவைத்த இருவரும் பவுண்டரி, சிக்ஸர்களா விளாசி வெற்றியை எளிதாக்கினர்.
குல்தீப் யாதவும், ஆவேஷ்கானும் ஓவருக்கு 6 ரன்கள் வீதத்தில் விட்டுக்கொடுத்து தென் ஆப்பிரிக்க பேட்டர்களின் பணியை எளிதாக்கினர். இதுபோன்ற குறைவான ஸ்கோரை டிபெண்ட் செய்யும்போது, பந்துவீச்சாளர்கள் எந்த அளவு சிக்கனமாக ரன்களை விட்டுக்கொடுத்து, கட்டுக் கோப்பாக பந்துவீசுகிறார்களோ அந்த அளவுக்கு போட்டி கடும் இறுக்கமாகச் செல்லும். ஆனால், குல்தீப், ஆவேஷ் கான் பல தவறான பந்துகளை வீசி ரன்களை வாரி வழங்கினர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்