
பட மூலாதாரம், GETTY IMAGES
பில்கிஸ் பானு
பில்கிஸ் பானு பாலியல் வன்முறை மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் 11 பேரின் விடுதலையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் சுதந்திர தினத்தன்று, குஜராத் அரசு கைதிகளை சிறையிலிருந்து விடுவித்தது மற்றும் அவர்களின் தண்டனையை குறைத்தது.
உச்ச நீதிமன்றம் கூறுகையில், குஜராத் அரசுக்கு தண்டனை விதிக்கவோ அல்லது எந்த முடிவையும் எடுக்கவோ அதிகாரம் இல்லை. இந்த வழக்கில் முடிவெடுக்க மகாராஷ்டிரா அரசே அதிக தகுதி வாய்ந்தது என தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளித்த ஏஐஎம்ஐஎம் எம்பி அசாதுதீன் ஒவைசி, பில்கிஸ் பானுவின் பாலியல் வழக்கில் குற்றவாளிகள் விடுதலைக்கு பாஜக மட்டுமே காரணம் என்று கூறினார்.
பில்கிஸ் பானு தனது சொந்த நீதிக்காக போராடினார், அவரை சித்திரவதை செய்த வன்முறையாளர்களை பாஜக மன்னித்துள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“பாஜக மக்கள், தங்கள் (வன்முறையாளர்கள் ) கழுத்தில் மாலை போடுகிறார்கள்” என்று ஓவைசி கூறினார். பெண்கள் பற்றி பாஜக விவாதிக்கும் தலைப்புகள் மூலம் அவர்கள் யார் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த வன்முறையாளர்கள் குஜராத் அரசு ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
“அடிப்படை பிரச்னை என்னவென்றால், குஜராத் பாஜக அரசாங்கம் வன்முறையாளர்களுக்கு உதவியது. இந்த வன்முறையாளர்களை விடுவிக்க இரண்டு பாஜக எம்எல்ஏக்கள் பரிந்துரைத்தனர்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?
நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர், குற்றவாளிகளை மன்னிப்பதன் மூலம் குஜராத் அரசாங்கம் ஆதாரங்களை புறக்கணித்ததாக 2022 மே மாதம் அறிவித்தனர். அடுத்த இரண்டு வாரங்களுக்குள், ஒவ்வொரு கைதிகளும் சிறை நிர்வாகத்தின் முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
2002இல் குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு மீதான கூட்டுப் பாலியல் வன்முறை மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி, நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த மனுவை விசாரித்த பின்னர் தீர்ப்பை ஒத்திவைத்தது.
பில்கிஸ் பானு தரப்பு வழக்கறிஞர் கூறியது என்ன?

பட மூலாதாரம், ANI
வழக்கறிஞர் விருந்தா குரோவர்
பில்கிஸ் பானு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விருந்தா குரோவர், “இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு குஜராத் அரசு பொது மன்னிப்பு ழங்கியுள்ளது அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்று கூறினார்.
வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் பிபிசியிடம் கூறுகையில், இந்தத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றும், அனைத்து மக்களுக்கும் சட்டம் சமம் என்பதை இந்த முடிவு காட்டுகிறது என்றும் கூறினார்.
குஜராத்தில் நிலவும் சாதகமற்ற சூழல்தான் இந்த வழக்கு மகாராஷ்டிராவில் விசாரணைக்கு வருவதற்கு காரணம் என்று அவர் விளக்கினார்.
இந்திரா ஜெய்சிங் கூறுகையில், இந்த வழக்கில் குற்றவாளிகள் விண்ணப்பத்தை தாக்கல் செய்ய விருப்பம் உள்ளது, ஆனால் சிபிஐ நீதிமன்றம் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது என்று ஏற்கனவே அறிவித்துள்ளது.
அவர் மேலும் தொடர்கையில், “இந்த வழக்கில் குற்றவாளிகள் என்ன செய்தாலும் குஜராத் அரசு ஆதரிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என்றால் ஏன் மறுஆய்வு மனு தாக்கல் செய்யவில்லை?” என்று கேட்டார்.

பட மூலாதாரம், CHIRANTANA BHATT
பில்கிஸ் பானு கூறியது என்ன?
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்துப் பேசிய பில்கிஸ் பானு, “ஒன்றரை ஆண்டுகளில் முதல்முறையாக சிரிக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு பில்கிஸ் பானு தனது வழக்கறிஞர் மூலம் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழ் வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது அறிக்கையில், “இன்று எனக்கு உண்மையிலேயே புத்தாண்டு. நான் கண்ணீர் விட்டு அழுதேன். ஒன்றரை ஆண்டுகளில் முதல் முறையாக நான் சிரிக்கிறேன். என் நெஞ்சில் சுமையாக இருந்த ஒரு மலை அகன்றது போல் உணர்கிறேன். எனக்கு சுவாசமே திரும்ப வந்தது போல் இருக்கிறது.”
இது நீதி. எனக்கும், என் குழந்தைகளுக்கும், அனைத்து பெண்களுக்கும் சம நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை வழங்கிய உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளார்.
பில்கிஸ் பானுவின் கணவர் யாகூப் பிபிசியிடம் கூறுகையில், “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் பில்கிஸுக்கு கிடைத்த நீதியால் தானும் தனது குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.
“நாட்டின் நீதி அமைப்பு மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. இன்று உச்சநீதிமன்றம் எங்கள் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளது உச்ச நீதிமன்றத்திற்கு மிக்க நன்றி” என்றும் அவர் கூறினார்.
குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது எப்போது?

பட மூலாதாரம், GETTY IMAGES
பில்கிஸ் பானு
குஜராத் அரசின் பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் ஜஸ்வந்த், கோவிந்த், ஷைலேஷ் பட், ராதேஷ்யாம் ஷா, விபின் சந்திர ஜோஷி, கேஷர்பாய் வோஹானியா, பிரதீப் மோத்வாடியா, பகபாய் வோஹானியா, ராஜூபாய் சோனி, மிதேஷ் பட் மற்றும் ரமேஷ் சந்த்னா ஆகியோர் கோத்ரா சப் சிறையில் இருந்து ஆகஸ்ட் 15, 2022 அன்று விடுவிக்கப்பட்டனர்.
பில்கிஸ் பானு மீதான கூட்டுப் பாலியல் வன்முறை மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் 2008ல் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தண்டனைக்கு மும்பை உயர்நீதிமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த வழக்கில், ஒவ்வொரு குற்றவாளியும் ஏற்கனவே கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் சிறைவாசத்தை முடித்துள்ளனர். அவர்களில் ஒருவரான ராதேஷ்யாம் ஷா, தண்டனையில் விலக்கு கோரியிருந்தார்.
குஜராத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை), ராஜ் குமார், கைதிகளின் விடுதலையின் போது, சிறையில் இருக்கும் கைதிகளின் “14 ஆண்டுகள் நிறைவடைதல்” மற்றும் “வயது, குற்றத்தின் தன்மை சிறையில் நடத்தை போன்ற பிற கூறுகளின் அடிப்படையில் தண்டனை குறைக்கப்படும். இதன் பின்னர் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்” என்றார்.
ஆயுள் தண்டனை உண்மையில் எத்தனை ஆண்டுகள்?

பட மூலாதாரம், GETTY IMAGES
பில்கிஸ் பானுமற்றும் அவரது கணவர் யாகூப் ரசூ
உண்மையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் குறைந்தது 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது வழக்கு மீண்டும் ஒருமுறை பரிசீலனை செய்யப்படுகிறது. வயது, குற்றத்தின் வகை, கைதியின் நடத்தை மற்றும் பிற காரணிகள் அவர்களின் தண்டனையை குறைக்கலாம்.
கைதியின் குற்றத்திற்காக வழங்கப்பட்ட தண்டனை பொருத்தமானது என்று அரசாங்கம் தீர்மானித்தால் அவர் விடுவிக்கப்படலாம். கைதி உண்மையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அவர்களின் விடுதலைக்கு அது மற்றொரு பொதுவான காரணமாகும்.
பல நேரங்களில் தண்டனை வாழ்நாள் முழுவதும் வைக்கப்படுகிறது. ஆனால் இந்த விதியின் கீழ், சிறிய குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட கைதிகள் விடுவிக்கப்படுகிறார்கள். தீவிரமான வழக்குகளில் இது நடக்காது.
பொது மன்னிப்பு கோரிக்கையை ஆய்வு செய்யுமாறு குஜராத்தின் அரசுக்கு உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இதையடுத்து பஞ்சமஹால் மாவட்ட ஆட்சியர் சுஜல் மயாத்ரா ஒரு குழுவை உருவாக்கினார்.
அந்த குழுவின் பரிந்துரையை ஏற்று குற்றவாளிகளை விடுவிக்க குஜராத் அரசு உத்தரவிட்டது. குஜராத் அரசின் இந்த முடிவு விமர்சனத்துக்குள்ளானது.
பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் இந்த தேர்வு குறித்து கேள்வி எழுப்பினர்.
பில்கிஸ் பானு சந்தித்தது என்னென்ன?

பட மூலாதாரம், GETTY IMAGES
பில்கிஸ் பானு
பிப்ரவரி 27, 2002 அன்று கோத்ராவிற்கு அருகில் “கர சேவகர்களை” ஏற்றிச் சென்ற சபர்மதி எக்ஸ்பிரசின் சில பெட்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் 59 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் விளைவாக குஜராத் கலவரம் ஏற்பட்டது. அவரது மூன்றரை வயது மகள் சலேஹா மற்றும் பதினைந்து பேருடன், பில்கிஸ் பானு கலவரக்காரர்களால் தாக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக தங்களது ஊரை விட்டு வெளியேறினார். அப்போது அவர் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார்.
பக்ரித் தினத்தன்று தாஹோத் மற்றும் அண்டை பகுதிகளில் உள்ள கலவரக்காரர்கள் ஏராளமான வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர்.
பில்கிஸின் குடும்பம் மார்ச் 3, 2002 அன்று சப்பர்வாட் கிராமத்திற்கு வந்து வயல்களில் தஞ்சம் புகுந்தது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில், பில்கிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது 12 பேர் மேல் 20 முதல் 30 நபர்கள் தடி மற்றும் சங்கிலியால் தாக்கியதாக கூறப்பட்டுள்ளது.
பில்கிஸ் உடனிருந்த நான்கு பெண்கள் இறந்த பிறகு, அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். அவர்களில் பில்கிசின் தாயும் இருந்தார். இந்தத் தாக்குதலில், ரந்திக்பூரின் பதினேழு முஸ்லிம்களில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் பில்கிசின் குடும்பமும் பில்கிஸின் மகளும் இருந்தாள்.
அவர்கள் பில்கிசை கோத்ரா நிவாரண முகாமுக்கு அழைத்து வந்தனர். அதன்பின், மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டார்.
சிபிஐ விசாரணையில் வெளிவந்த உண்மைகள்
காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அதிகாரிகள் ஆதாரம் இல்லாததால் வழக்கை முடித்துவிட்டனர். இதைத் தொடர்ந்து பில்கிஸ் மனித உரிமை ஆணையத்தைத் தொடர்பு கொண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
உச்ச நீதிமன்றம் அறிக்கையை நிராகரித்ததையடுத்து, விசாரணையை மீண்டும் தொடங்க சிபிஐக்கு உத்தரவிடப்பட்டது. குற்றப்பத்திரிகையில் உள்ளவர்களில் 18 பேர் குற்றவாளிகள் என சிபிஐ அறிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஆதாரங்களை சிதைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஐந்து காவல்துறையினரும் இரண்டு மருத்துவர்களும் இதில் அடங்குவர்.
சிபிஐயின் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதற்காக இறந்தவருக்கு முறையற்ற பிரேத பரிசோதனை நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வழக்கை கைப்பற்றிய சிபிஐ, இறந்தவர்களின் உடல்களை தோண்டி எடுக்க உத்தரவிட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதற்காக இறந்தவருக்கு முறையற்ற பிரேத பரிசோதனை நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வழக்கை கைப்பற்றிய சிபிஐ, இறந்தவர்களின் உடல்களை தோண்டி எடுக்க உத்தரவிட்டது. பிரேதப் பரிசோதனையைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத வகையில் இறந்தவர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
நீதிக்காக தொடரும் போராட்டம்

பட மூலாதாரம், GETTY IMAGES
பில்கிஸ் பானுவுக்கு ஆதரவாக கொல்கத்தாவில் ஆர்ப்பாட்டம்
இதையடுத்து பில்கிஸ் பானுவுக்கு கொலை மிரட்டல் வரத் தொடங்கியது. மிரட்டல்களால் இரண்டு ஆண்டுகளில் இருபது முறை வீடு மாற்ற வேண்டியதாயிற்று.
பில்கிஸ் நீண்ட காலமாக நீதிக்காக போராடினார். தனக்கு மிரட்டல் வந்ததாலும், தனக்கு நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தாலும் தனது வழக்கை குஜராத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றத்தை நாடினார். அதன் பின் இந்த வழக்கு மும்பை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
ஜனவரி 2008 இல், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 11 பேரைக் குற்றவாளிகள் என அறிவித்தது. இந்த நபர்கள் மீது பாலியல் வன்முறை, கர்ப்பிணிப் பெண்ணைக் கொன்றது மற்றும் சட்டவிரோதமாக ஒரே இடத்தில் கூடியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
போதிய ஆதாரங்கள் இல்லாததால் ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டனர். விசாரணையின் போது ஒருவர் உயிரிழந்தார். அதன் 2008 தீர்ப்பில், சிபிஐ நீதிமன்றம் ஷைலேஷ் பட்டின் தலையில் அடிபட்டதில் சலேஹா கொல்லப்பட்டார் என்றும், ஜஸ்வந்த், கோவிந்த் மற்றும் நரேஷ் குமார் மோடியா ஆகியோர் பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கண்டறிந்தது. மற்ற குற்றவாளிகள் கொலை மற்றும் பாலியல் வன்முறை ஆகிய இரண்டிலும் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்