
பட மூலாதாரம், REUTERS
சலே-அல்-அரூரி
ஹமாஸ் குழுவிவின் தலைவர்களில் ஒருவரான சலே-அல்-அரூரி ஒரு ‘துல்லியத் தாக்குதல்’ மூலம் கொல்லப்பட்டிருப்பதாக லெபனான் நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
லெபனானின் தலைநகரான பெய்ரூட்டின் தெற்கிலிருக்கும் ஹமாஸ் அலுவலகத்தின் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அரூரி கொல்லப்பட்டதாக லெபனானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் இச்சம்பவத்தைக் கண்டித்திருக்கிறது. அதே சமயம் ஹமாஸின் கூட்டாளியான ஹிஸ்புல்லா இது லெபனானின் இறையாண்மை மீதான தாக்குதல் என்று கூறியிருக்கிறது.
ஆனால், இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியதாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இது லெபனான் மீதான தாக்குதல் அல்ல என்று தெரிவித்துள்ளது.
இஸ்ரேலை எதிர்ப்பவர்கள் அரூரியின் மரணத்திற்கு இஸ்ரேல் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரி வருகிறார்கள்.
இதற்கிடையில், லெபனானின் பிரதமர், இஸ்ரேல் ‘லெபனானை… மோதலுக்கு இழுக்க’ முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
என்ன நடந்தது இச்சம்பவத்தில்?
யார் இந்த அரூரி?
ஹமாஸின் துணை அரசியல் தலைவரான அரூரி, தெற்கு பெய்ரூட்டில் நடத்தப்பட்ட ஒரு ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக லெபனான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவரோடு ஹமாஸின் இரண்டு இராணுவத் தளபதிகள் மற்றும் நான்கு உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அரூரி ஹமாஸின் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படைப்பிரிவில் முக்கிய நபராகவும், ஹமாஸ் தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் நெருங்கிய கூட்டாளியாகவும் இருந்தவர். அவர் லெபனானில் ஹமாஸ் குழுவிற்கும் ஹிஸ்புல்லாவிற்கும் இடையே ஒரு இணைப்பாக செயல்பட்டார்.
57 வயதான அரூரி, கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, நடக்கும் போரில் கொல்லப்பட்ட ஹமாஸின் மிக மூத்த தலைவர் ஆவார்.
இஸ்ரேலிய ஊடக அறிக்கைகளின்படி, மேற்குக் கரையில் ஹமாஸின் ராணுவப் பிரிவின் உண்மையான தலைவராக அரூரி கருதப்பட்டார், அங்கு தாக்குதல்களை மேற்பார்வையிட்டார்.
2014-இல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் மூன்று இஸ்ரேலிய இளைஞர்களைக் கடத்திச் சென்று கொன்றதில் அவர் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. மேலும் பிற தாக்குதல்களுக்காக இஸ்ரேலிய சிறைகளில் தண்டனை அனுபவித்தவர் என்று தகவல்கள் கூறுகின்றன.
இரான் மற்றும் ஹெஸ்புலாவுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய ஹமாஸ் அதிகாரிகளில் அவரும் ஒருவர் என்று டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் கூறுகிறது.

பட மூலாதாரம், Reuters
சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் கட்டடத்தைச் சுற்றி தீயணைப்புப் படையினரும் துணை மருத்துவப் பணியாளர்களும் திரண்டிருக்கும் காட்சி
என்ன நடந்தது?
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு நிருபர், பெய்ரூட்டின் தாஹியே பகுதியில் சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் இடத்தில் இருந்தார். அங்கு ஒரு உயரமான கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் ஒரு பெரிய துளை இருப்பதைக் கண்டார். மேலும் அக்கட்டடத்தைச் சுற்றி தீயணைப்புப் படையினரும் துணை மருத்துவப் பணியாளர்களும் திரண்டிருப்பதைக் கண்டார்.
சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ காட்சிகள், ஒரு கார் தீப்பிடித்து எரிவதையும், பரபரப்பான குடியிருப்புப் பகுதியான அப்பகுதியில் உள்ள கட்டிடங்களுக்கு பெருமளவு சேதம் ஏற்பட்டிருப்பதையும் காட்டுகின்றன.
தாஹியே ஹெஸ்புலாவின் கோட்டையாக அறியப்படுகிறது.
ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவரான ஹனியே, இந்தத் தாக்குதல் “கோழைத்தனமான… பயங்கரவாதச் செயல், லெபனானின் இறையாண்மையை மீறுவது,” என்று கூறினார்.
அரூரியின் மரணத்தைப் பற்றிக் கருத்து தெரிவித்த ஹெஸ்புலா, “லெபனான், அதன் மக்கள், அதன் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் அரசியல் மீதான கடுமையான தாக்குதல்” என்று கூறியிருக்கிறது.
மேலும் இந்தத் தாக்குதல் “போரின் போது நடந்த ஒரு ஆபத்தான சம்பவம்… மேலும் ஹெஸ்புலாவில் உள்ள நாங்கள் இதற்குக் கண்டிப்பாக பதிலடி தரப்படும் உறுதிப்படுத்துகிறோம்,” என்று கூறியது.
ஹமாஸ், ஹெஸ்புலா ஆகிய இரு குழுக்களின் முக்கிய ஆதரவாளரான இரான், அரூரியின் கொலை ‘மற்றுமொரு எதிர்ப்பலையைத் தூண்டும்’ என்று கூறியிருக்கிறது.
இஸ்ரேலின் நிலைப்பாடு என்ன?
இஸ்ரேலிய செய்தித் தொடர்பாளர் மார்க் ரெகேவ் இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது என்று தெளிவாக உறுதிப்படுத்தவில்லை.
இது இஸ்ரேலிய அரசின் பொதுவான நிலைப்பாடு தான். ஆனால் அமெரிக்க தொலைக்காட்சி ஊடகமான MSNBC-யிடம் பேசிய அவர், “இத்தாக்குதலை யார் செய்திருந்தாலும், அது லெபனான் அரசின் மீதான தாக்குதல் அல்ல என்பதை தெளிவாகப் புரிகிறது. இது பயங்கரவாத அமைப்பான ஹெஸ்புலா மீது கூட நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. இதைச் செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் ஹமாஸ் தலைமைக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்திருக்கிறார்கள். இதைச் செய்தவர்களுக்கு ஹமாஸ் மீது பகை உள்ளது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது,” என்றார்.
காஸா போருக்குப் பிந்தைய திட்டம் குறித்து விவாதிக்க செவ்வாய் (ஜனவரி 2) மாலை திட்டமிடப்பட்டிருந்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
ஹமாஸ் தலைவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை அகற்றுவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னர் தெரிவித்திருந்தார்.
அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 240 பேரை பணயக்கைதிகளாக காஸாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக ஹமாஸை அழிக்கும் நோக்கத்துடன் இஸ்ரேல் ராணுவ தாக்குதலை நடத்தியது.
காஸாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 22,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் – பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் – கொல்லப்பட்டுள்ளனர்.
காஸா போரின் போது ஹெஸ்புலா இஸ்ரேல் மீது ஏராளமான ராக்கெட்டுகளை ஏவியது மற்றும் இஸ்ரேலிய படைகளுடன் பல மோதல்களையும் நடத்தியது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்