
பா.ஜ.கவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அ.தி.மு.க. அறிவித்துவிட்ட நிலையிலும், இது தொடர்பாக பா.ஜ.க. தலைமை இன்னும் தெளிவான முடிவை அறிவிக்கவில்லை.
‘கூட்டணி அமையும்’ என்கிறார் பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி. அண்ணாமலை தனது பாதயாத்திரையை சில நாட்கள் ஒத்திவைத்துவிட்டு தில்லி சென்றிருக்கிறார். தமிழ்நாடு பா.ஜ.கவில் என்ன நடக்கிறது?
முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை 1950களில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியது குறித்து பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை பேசிய பேச்சையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையில் வெடித்த மோதல், கூட்டணி முறிவில் வந்து முடிந்திருக்கிறது.
அ.தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்திய அ.தி.மு.க. பா.ஜ.கவுடான கூட்டணி முறிந்ததாக அறிவித்துவிட்டது.
சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த எடப்பாடி பழனிசாமி
இந்த முடிவு அறிவிக்கப்பட்ட பிறகும், நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் மீண்டும் கூட்டணி உருவாகலாம் என பலரும் பேசிவந்த நிலையில், அப்படி நடக்காது என கே.பி. முனுசாமி பேட்டியளித்தார்.
அதற்குப் பிறகும், பா.ஜ.கவுடனான கூட்டணி குறித்து, கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி கே. பழனிச்சாமி எதுவும் சொல்லவில்லை என்று ஊடக விவாதங்களில் பலர் பேசிவந்த நிலையில், திங்கட்கிழமையன்று தனது பேச்சின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார் எடப்பாடி கே. பழனிச்சாமி.
சேலம் அ.தி.மு.க. மாநகர் மாவட்ட, சூரமங்கலம் பகுதி கழக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில், பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.கவில் உள்ள இரண்டரை கோடி தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் விதமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக முடிவெடுத்தோம். இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை என்று பலர் கூறி வருவதற்கு முற்றுபுள்ளி வைக்கிறேன். விவாத மேடையில் பங்கெடுப்பவர்கள் அதிமுகவை புரிந்து கொள்ள வேண்டும்,” என்றார். இந்தப் பேச்சின் மூலம் பல சந்தேகங்களுக்கு முடிவுகட்டியிருக்கிறார் அவர்.

பட மூலாதாரம், ANI
பா.ஜ.க கூட்டமும் மீண்டும் கிளம்பிய குழப்பமும்
ஆனால், இவ்வளவு நடந்த பிறகும், கூட்டணி தொடர்பாக தேசியத் தலைமை முடிவுசெய்யும் என்பதே பா.ஜ.க. தரப்பின் பதிலாக இருந்துவந்தது. இந்த நிலையில்தான் பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தில்லிக்குச் சென்றார். அங்கு அவர் யார், யாரைச் சந்தித்தார் என்பது குறித்த விவரங்களை தேசியத் தலைமை வெளியிடவில்லை.
இதற்கிடையில் திங்கட்கிழமையன்று மாலையில், பா.ஜ.கவின் மாநிலப் பொறுப்பாளராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாயின. சிறிது நேரத்திலேயே அது தவறான தகவல் எனக் கூறப்பட்டது.
ஆனால், நிதியமைச்சரை அண்ணாமலை சந்தித்த படங்கள் வெளியாயின.
அக்டோபர் 3-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, கட்சியின் மாநிலத் தலைமையகத்தில் மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் ஒன்றுக்கு அண்ணாமலை ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், அவர் தில்லியில் இருந்து திரும்பாத நிலையில், அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இருந்தபோதும், பெருங்கோட்டப் பொறுப்பாளர்களின் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில்தான், செவ்வாய்க்கிழமை காலையில் செய்தியாளர்களிடம் மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.பி. துரைசாமி அளித்த பேட்டி ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெருங்கோட்டப் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் சிறிது நேரம் பங்கேற்றுவிட்டுப் புறப்பட்ட வி.பி. துரைசாமியிடம் செய்தியாளர்கள் அ.தி.மு.க. கூட்டணி நீடிக்குமா என்று கேட்டபோது, “நீடிக்கும் நீடிக்கும். கூட்டணி நீடிக்கத்தானே பெரியவங்க எல்லாம் பேசுறாங்க. நல்லபடியா முடியும்,” என்று பதில் சொன்னார்.

பட மூலாதாரம், @NARAYANANTBJP/TWITTER
இதெல்லாம் தேவையில்லாத பரபரப்பு என்கிறார் பா.ஜ.கவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி
‘மத்தியத் தலைமைதான் முடிவெடுக்கும்’
அ.தி.மு.க.வுடனான கூட்டணி குறித்து யாரும் எதுவும் பேச வேண்டாம் என தேசியத் தலைமை கூறியிருக்கும் நிலையில் வி.பி. துரைசாமி இப்படிப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஊடகங்கள் அடுத்தடுத்து செய்திகளை வெளியிட, மாடியில் கூட்டத்தில் இருந்த மூத்த நிர்வாகிகள் அதிர்ந்துபோனார்கள்.
உடனடியாக ஊடக நிர்வாகிகளை அழைத்து, கூட்டணி குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்றும் இது போன்ற செய்திகளை வெளியிட வேண்டாமென்றும் பா.ஜ.க. தரப்பிலிருந்து கேட்டுக்கொள்ளப்பட்டது.
இருந்தபோதும், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்பான செய்திகள் மறுபடியும் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக ஆரம்பித்திருக்கின்றன. ஆனால், இதெல்லாம் தேவையில்லாத பரபரப்பு என்கிறார் பா.ஜ.கவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.
“வி.பி. துரைசாமி பேசியதைப் பொறுத்தவரை, ஊடகத்தினர் கேட்ட கேள்விக்கு அவர் ஆம், இல்லை என்பதுபோல பதிலளித்தார். அவராக எதையும் சொல்லவில்லை. பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த இரு நாட்களாக தில்லியில் இருக்கிறார். மூத்த தலைவர்களைச் சந்தித்துப் பேசிவருகிறார். ஆகவே கூட்டணி தொடர்பாக மத்தியத் தலைமைதான் முடிவெடுக்கும்,” என்கிறார் நாராயணன் திருப்பதி.

நிர்மலா சீதாராமனைச் சந்தித்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்
இதற்கு நடுவில் கோயம்புத்தூரில் மத்திய அரசின் சார்பில் பல்வேறு நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தைத் துவக்கிவைக்க வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே. செல்வராஜ், அமுல் கந்தசாமி ஆகியோர் சந்தித்துப் பேசினர். இதுவும் திடீரென பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், தென்னை விவசாயிகள் சார்பாக கோரிக்கை மனு ஒன்றை அளிக்கவே மத்திய நிதியமைச்சரைச் சந்தித்ததாகவும் அந்த சந்திப்பிற்குப் பின்னால் அரசியல் காரணங்கள் ஏதும் கிடையாது என்றும் அ.தி.மு.க. – பா.ஜ.க.கூட்டணி குறித்து ஏதும் பேசவில்லை என்றும் விளக்கமளித்தார் பொள்ளாச்சி ஜெயராமன்.
அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி என்பது முடிந்துபோன கதை என்கிறார் மூத்த பத்திரிகையாளரான தராசு ஷ்யாம். “கூட்டணி இல்லையென்று எடப்பாடியே சொன்ன பிறகு, அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. அவர் இரண்டு தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டதாகச் சொல்கிறார். மீண்டும் கூட்டணி என்றால், இரண்டு கோடி தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக செல்கிறார் என்று அர்த்தமாகும். அப்படிச் செய்வாரா?” எனக் கேள்வி எழுப்புகிறார் தராசு ஷ்யாம்.
பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை மாற்றப்பட்டாலும்கூட, அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி அமையாது என்கிறார் அவர். “அ.தி.மு.கவில் இருக்கும் சிலர் பா.ஜ.க. வாக்கு தங்களுக்குக் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கலாம். அதேபோல, பா.ஜ.கவில் இருக்கும் சிலர், அ.தி.மு.க. வாக்கு தங்களுக்குக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கலாம். ஆனால், எடப்பாடி கே. பழனிச்சாமியைப் பொறுத்தவரை, 2026-ஆம் ஆண்டு தேர்தல்தான் இலக்கு. அப்படியிருக்கும்போது, அவர் மீண்டும் எதற்கு பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்க விரும்ப வேண்டும்?” என்கிறார் ஷ்யாம்.
அ.தி.மு.க. தலைவர்களைப் பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் வேறு மாற்றங்கள் எதுவுமே இல்லை என்கிறார்கள். “பொள்ளாச்சி ஜெயராமனைப் பொறுத்தவரை, தென்னை மர உரிமையாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தவே சந்தித்தார். கூட்டணியைப் பொறுத்தவரை, ஏற்கனவே எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை,” என்பதோடு முடித்துக் கொண்டார் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்