
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் ஜிகஜினகி
‘பா.ஜ.க.வில் தலித் தலைவர்கள் முன்னேற வாய்ப்பே இல்லை’ என கர்நாடகா மாநிலம் பீஜாப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் பா.ஜ.க எம்.பி.யும், மூத்த தலித் தலைவருமான ரமேஷ் ஜிகஜினகி தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
முதலமைச்சராகவும், பிரதமராகவும் ஒருவரை ஆக்குவதில் தலித்துகள் பங்களிப்பதாகவும் ஆனால் தலித்துகளுக்கு ஒரு பிரச்னை என்று வரும்பொழுது யாரும் தலித்துகளை ஆதரிப்பதில்லை என்றும் அவர் கூறுகிறார்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் கூட கர்நாடகாவில் ஒரு தலித் முதலமைச்சராக வரவில்லை என்று பிபிசி ஹிந்திக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் ஜிகஜினகி கூறினார். அதேசமயம், அருகில் உள்ள மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் தலா ஒரு தலித் தலித்துகள் முதல்வராகியிருக்கின்றனர் என்று கூறினார்.
‘பெரிய சமூகத்தைச்’ சேர்ந்தவர்களாக கூறிக்கொள்ளும் இவர்களுக்கு ஏன் பெரிய இதயங்கள் இல்லை என்று நான் கேட்க விரும்புகிறேன் என்றார்.

பட மூலாதாரம், BYVIJAYENDRA
பி.ஒய். விஜயேந்திரா
பாஜகவில் தலித் தலைவர்களின் நிலைமை குறித்து என்ன கூறினார்?
கர்நாடக முன்னாள் முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான பி.எஸ். எடியூரப்பாவின் மகன் பி.ஒய். விஜயேந்திரா சமீபத்தில் மாநில பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டார்.
இது குறித்து 70 வயதான ஜிகஜினகி கூறுகையில், “தலித்துகள் ஆதிக்க சாதி மக்களை ஆதரித்து வருகின்றனர். லிங்காயத்துகளையும் பாட்டீல்களையும் தலித்துகள் ஆதரித்து வருகின்றனர். அவர்களின் முன்னேற்றத்திற்கு நாங்கள் துணையாக இருக்கிறோம். ஆனால் அதற்கு பதிலாக அவர்கள் எங்களை ஆதரிக்கவில்லை. இந்த கட்சியில் (பா.ஜ.க) தலித் தலைவர்களால் எளிதில் உச்சத்தை அடைய முடியவில்லை. இது மிகவும் வருத்தமளிக்கிறது. ஆனால் நாங்கள் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு முன்னேறுவோம்,” என அவர் தெரிவித்தார்.
பி.ஒய்.விஜயேந்திரா ஷிகாரிபூர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
ஜிகாஜினகியிடம், மாநிலத்தில் பா.ஜ.கவின் தலைவராக விரும்புகிறீர்களா என பிபிசி இந்தி கேட்டது.
இந்தக் கேள்விக்கு, “நான் தூக்கத்தில் கூட பா.ஜ.க தலைவராக வேண்டும் என்று நினைத்ததில்லை. ஒரு தலித் ஜனாதிபதியானால், கட்சியில் உள்ள பலர் அவரை ஆதரிக்க மாட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்,” என்றார்.
கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான ராமகிருஷ்ண ஹெக்டேவை நினைவு கூர்ந்த ரமேஷ் ஜிகஜினகி, அவர் சிறந்த அந்தஸ்துள்ள தலைவர் என்றும், கட்சியில் உள்ள தனது சகாக்களுடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுப்பார் என்றும் கூறினார்.
ஜிகஜினகி, “அப்படிப்பட்ட தலைவர்கள் இப்போது இல்லை. நான் இளமையாக இருந்தபோதும், ஹெக்டே என்னிடம் ஆலோசனை நடத்துவார். அவர் எங்கள் மீது ஆழ்ந்த மரியாதை வைத்திருந்தார். நான் பிராமணர்களை ஆதரிக்கிறேன், ஆனால் பிராமணியத்தை அல்ல,” என்றார்.
“கர்நாடகாவில் பா.ஜ.க அதிக வாக்குகளைப் பெற்றாலும், அவர்களுக்கு தலித்துகளின் ஆதரவு தொடர்ந்து கிடைத்தாலும், தலித்துகள் மீதான பாகுபாடு குறையவில்லை” என்றார்.
“சாதியின் அடிப்படையில் பாகுபாடு தொடர்கிறது. தலித்துகள் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து அவர்களுக்கு வாக்களித்து அவர்களின் தனிப்பட்ட முன்னேற்றத்திற்காக வாக்களிக்கிறார்கள். இது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளின் நிர்ப்பந்தம். தனிப்பட்ட முன்னேற்றத்திற்காக இந்தக் கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள். சித்தாந்தரீதியாக வாக்களிப்பது இங்கே நடப்பதில்லை,” என்றும் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
‘அமைச்சராக இருந்த என்னை கோயிலுக்குள் விடவில்லை’
தான் அமைச்சராக இருந்தபோது தலித் என்பதால் கோவிலுக்குள் செல்ல தான் அனுமதிக்கப்படாத சம்பவத்தையும் ஜிகஜினகி குறிப்பிட்டுள்ளார்.
பிபிசியிடம் பேசிய அவர், “1983-இல் நான் கர்நாடகாவின் உள்துறை அமைச்சராக இருந்தேன். அந்த நேரத்தில், ஒரு கோவில் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்கள். ஆனால் நாற்பத்தி 50,000 மக்கள் கூட்டத்திற்கு மத்தியில், நான் கோவிலுக்குள் செல்லவிருந்தேன். அப்போது ஒரு ஸ்வாமி ஜி, ’ஏன் இவர்களை எல்லாம் கோயிலுக்கு உள்ளே அனுமதிக்கிறீர்கள்?’ எனக் கேட்டார். அது யாரோ என் காதுகளில் கண்ணாடியை வைத்து குத்தியது போல் இருந்தது,” என அவர் தெரிவித்தார்.
“இந்தச் சம்பவத்துக்கு 20-25 வருடங்களுக்கு முன், கோவிலுக்குள் நாம் நுழைவது பாவம் என்று எனது அம்மா தெரிவித்திருந்தார். அந்த ‘பாவத்தை’ நான் அதன் பிறகு செய்யவே இல்லை. இந்த நாட்டின் இதயம் பெரிதாகி தலித்துகளுக்கு அவர்களுக்கான உரிமை வழங்கப்படும் வரை இட ஒதுக்கீடு தேவை,” என ஜிகஜினகி தெரிவித்தார்.
கோவில்கள் மீதான அரசின் கட்டுப்பாட்டிற்கு எதிரான பா.ஜ.க.வின் நிலைப்பாடு பற்றி அவர் எதுவும் கூறவில்லை, ஆனால் கோவில்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று கூறினார்.
ஜிகஜினகி, ‘ஒதுக்கீட்டிற்குள் இடஒதுக்கீடு’ வேண்டும் என பரிந்துரைத்தார். தெலுங்கானாவில் தலித் சமூகமான மாதிகாவிற்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோதியின் வாக்குறுதி குறித்து பேசிய அவர் அத்தகைய இட ஒதுக்கீட்டை தேவை என்று கூறினார்.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை அவர் வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. பீகாரில் நடத்தப்பட்ட ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் பல குறைபாடுகள் உள்ளதாகவும் ஆனால் கர்நாடகாவில் அதற்கான அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், X/Ramesh Jigajinagi
ஜிகஜினகியின் அரசியல் பயணம்
மறைந்த, பிளவுபடாத ஜனதா கட்சியின் தலைவரும், கர்நாடகாவின் மூன்று முறை முதலமைச்சருமான ராமகிருஷ்ண ஹெக்டேயின் வழிகாட்டுதலின் கீழ் அவசரநிலைக்கு எதிராக கிளர்ச்சி செய்து அரசியலில் நுழைந்தார் ஜிகஜினகி.
கரும்பு மையமாக கருதப்படும் சிக்கோடியில் இருந்து எம்.எல்.ஏ.வாக நீண்ட காலம் பதவி வகித்தபோது, பிரபலமான தலித் தலைவராக உருவெடுத்தார்.
1998-ஆம் ஆண்டு தனது முதல் மக்களவைத் தேர்தலில், முன்னாள் மத்திய அமைச்சரும், ஏழு முறை காங்கிரஸ் எம்பியுமான பி. சங்கரானந்தைத் தோற்கடித்த பிறகு, பிரபலத்தின் உச்சத்தை எட்டினார்.
அவர் லோக் சக்தி கட்சியில் இருந்து ஐக்கிய ஜனதா தளத்திற்கு மாறினாலும், அடுத்த மூன்று முறை அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
இதன் பிறகு லோக்சக்தி ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்தது. அதன் அவர் பிறகு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்