
பட மூலாதாரம், BBC Sport
பிரேசில் – அர்ஜென்டினா அணிகள் மோதிய உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் திடீரென ரசிகர்கள் மோதிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. அப்போது “ஒரு சோகம் நடந்திருக்கலாம்” என்று அர்ஜென்டினாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அச்சம் தெரிவித்துள்ளார்.
வீரர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இருந்ததாக அவர் கூறியுள்ளார். மரகானா மைதானத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்பாக ரசிகர் கூட்டத்தின் ஒரு பகுதியில் கைகலப்பு நடந்தது. இதைத் தொடர்ந்து, ரசிகர்களைக் கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸியும், சக வீரர்களும் டிரஸ்ஸிங் அறைக்கு திரும்புவதற்கு முன் ரசிகர்களை அமைதிப்படுத்த முயன்றனர்.
“இது மோசமாக இருந்தது, ஏனென்றால் அவர்கள் மக்களை எப்படி அடிக்கிறார்கள் என்பதை நாங்கள் பார்த்தோம்,” என்று மெஸ்ஸி கூறினார்.
“லிபர்டடோர்ஸ் இறுதிப் போட்டியில் நடந்தது போல், காவல்துறை கட்டைகளால் மக்களை தாகியது. நாங்கள் லாக்கர் அறைக்குச் சென்றோம், ஏனென்றால் எல்லாவற்றையும் அமைதிப்படுத்த இது சிறந்த வழியாகும், அது சோகத்தில் முடிந்திருக்கலாம்.
நீங்கள் குடும்பங்களைப் பற்றி நினைக்கிறீர்கள், அங்கு இருப்பவர்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அந்த நேரத்தில் பெரிதாக முக்கியத்துவம் இல்லாத ஒரு போட்டியில் விளையாடுவதை விட நாங்கள் அதைப் பற்றி அதிகம் அக்கறை கொண்டிருந்தோம்.” என்று அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், BBC Sport

பட மூலாதாரம், BBC Sport
பிரேசில் – அர்ஜென்டினா போட்டிக்கு முன் என்ன நடந்தது?
ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரகானா மைதானத்தில் வீரர்கள் வந்த பிறகு தேசிய கீதம் ஒலித்த போது, ஒரு கோல் கம்பத்திற்கு பின்னால் இருந்த பகுதியில் கூடியிருந்த ரசிகர்கள் மோதிக்கொண்டதால் பிரச்சனை தொடங்கியது. அப்போது அர்ஜென்டினா கால்பந்து ரசிகர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். சிலர் மீது தடியடி நடத்த வேண்டியதாயிற்று.
சில ரசிகர்கள் இருக்கைகளை பிடுங்கி போலீசார் மீது வீசினர், மற்றவர்கள் இந்த மோதலில் இருந்து தப்பிக்க ஆடுகளத்தில் கூடினர்.
அர்ஜென்டினா வீரர்கள் மற்றும் பிரேசில் அணி வீரர்கள் சிலர் நிலைமையை அமைதிப்படுத்த முயன்றனர். எமிலியானோ மார்டினெஸ் ஒரு போலீஸ் அதிகாரியின் கையிலிருந்து ஒரு தடியடியைப் பிடிக்க முயன்றார்.
அர்ஜென்டினா ரசிகர்களை மைதானத்தின் ஒரு தனிப் பகுதிக்குள் போலீசார் கூட்டிச் சென்ற பிறகே வீரர்கள் மைதானத்தை விட்டுத் திரும்பினர். இந்த களேபரத்தால் சுமார் 30 நிமிட தாமதத்திற்குப் பிறகு ஆட்டம் தொடங்கியது.
கோபா லிபர்டடோர்ஸ் இறுதிப் போட்டிக்கு முன், பிரேசிலிய அணியான ஃப்ளூமினென்ஸ் மற்றும் அர்ஜென்டினா கிளப் போகா ஜூனியர்ஸ் ரசிகர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்ட பதினைந்து நாட்களுக்குப் பிறகு இது நடந்துள்ளது.
அர்ஜென்டினா வீரர்களுடன் ஆடுகளத்தில் நிதானமாக இருக்க அழைப்பு விடுத்த பிரேசில் கேப்டன் மார்கியூனோஸ், “மைதானத்தில் பீதியில் இருக்கும் குடும்பங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பற்றி நாங்கள் கவலைப்பட்டோம். ஆடுகளத்தில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது எங்களுக்கு கடினமாக இருந்தது, இது மிகவும் பயங்கரமான சூழ்நிலை.” என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், BBC Sport
அர்ஜென்டினாவிடம் பிரேசில் தோல்வி
இந்தப் போட்டியில், நிக்கோலஸ் ஓட்டமெண்டி அடித்த கோலின் மூலம் உலக சாம்பியனான அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது.
பிரேசியல் அணியின் மிட் பீல்டர் ஜோலிண்டன் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டார்.
ஐந்து முறை உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணி, தற்போது தென் அமெரிக்க தகுதிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் உள்ள அர்ஜென்டினாவை விட அந்த அணி எட்டு புள்ளிகள் பின்தங்கியுள்ளது.
வரலாற்று வெற்றியாக இருந்தபோதிலும், அர்ஜென்டினா அணி மேலாளர் லியோனல் ஸ்கலோனி, கத்தாரில் நடந்த உலகக் கோப்பையை வென்ற அணியை வழிநடத்திய ஆட்டத்திற்குப் பிறகு – ராஜினாமா செய்வது குறித்து பரிசீலிப்பதாகக் கூறினார்.
2018ல் பொறுப்பேற்ற 45 வயதான அவர் கூறுகையில், “அர்ஜென்டினாவுக்கு அனைத்து ஆற்றலும் உள்ள மற்றும் நன்றாக இருக்கும் ஒரு பயிற்சியாளர் தேவை.” என்று அவர் தெரிவித்துளளார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்