மக்களவை தேர்தல் 2024: வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் புதிதாக பெறுவது எப்படி? சந்தேகங்களும் பதில்களும்

மக்களவை தேர்தல் 2024: வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் புதிதாக பெறுவது எப்படி? சந்தேகங்களும் பதில்களும்

2024 மக்களவை தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை நேற்று வெளியிட்டது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் பலரும் ஏப்ரல் 19 அன்று வாக்களிப்பதற்காகத் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். தேர்தல் என்றவுடன் மக்களுக்கு நினைவுக்கு வரும் மற்றொரு முக்கியமான விஷயம், வாக்காளர் அடையாள அட்டை.

வாக்காளர் அடையாள அட்டை என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனும் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய ஆவணமாகப் பார்க்கப்படுகிறது.

புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி? 17 வயது நிரம்பியவர்கள்கூட அதற்கு விண்ணப்பிக்கலாமா? வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றங்களைச் செய்வது எப்படி? இப்படிப் பல கேள்விகளுக்கான பதிலை இந்தக் கட்டுரையில் காணலாம்.

17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாமா?

2024 மக்களவை தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் தேர்தலில் வாக்களிப்பதற்கான வயது 18 என்பது அனைவருக்கும் தெரியும். தங்கள் பிள்ளைகளுக்கு 18 வயது நிரம்பியவுடன் அவர்களுக்கான ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை போன்ற அடிப்படை ஆவணங்களைப் பெறுவதில் வழக்கமாக பெற்றோர் ஆர்வம் காட்டுவார்கள்.

ஆனால் 17 வயது நிரம்பியவர்களும் வாக்காளர் அடையாள அட்டைக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர், எந்த ஆண்டு உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விரும்புகிறீர்களோ அந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி உங்களுக்கு 18 வயது முடிந்திருக்க வேண்டும் என்ற விதி இருந்தது.

ஆனால் பலரும் வாக்காளர் அடையாள அட்டைக்கு உரிய நேரத்தில் விண்ணப்பிக்கத் தவறி விடுகின்றனர். பின்னர் தேர்தல் நெருங்கும் நேரத்தில் விண்ணப்பிக்கும்போது, பல குளறுபடிகளால் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் போவது போன்ற தவறுகள் நடக்கின்றன.

இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் நடத்தப்படும் தேர்தல்களில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். இதைக் கருத்தில் கொண்டு 2022ஆம் ஆண்டு ஒரு புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தால், அவர்களுக்கு 18 வயது பூர்த்தியானவுடன் வாக்காளர் பட்டியலில் உடனடியாகப் பெயர் சேர்க்கப்படும்.

இதற்கு ஜனவரி 1ஆம் தேதி தவிர்த்து, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் விண்ணப்பிப்பவர்களுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளது தேர்தல் ஆணையம்.

அதாவது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும். எந்த காலாண்டில் 18 வயது பூர்த்தியாகுமோ, அதைக் கணக்கில் கொண்டு முன்னரே ஆன்லைன் மூலமும் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் () பதிவு செய்து, படிவம் 6ஐ (Form 6) பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து மீண்டும் பதிவேற்ற வேண்டும். இதில் நீங்கள் அளித்த விவரங்களைச் சரிபார்ப்பதற்கான ஆவணங்களையும் இணைக்க வேண்டும். அரசின் இ-சேவை மையம் மூலமாகவும் இதைச் செய்ய முடியும்.

அல்லது உங்கள் தொகுதி தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தை அணுகி படிவம் 6ஐ பெற்று, பூர்த்தி செய்து அவரிடம் கொடுக்கலாம். 17 வயது நிரம்பியவர்கள் மட்டுமல்லாது புதிதாக விண்ணப்பிப்பவர்களும் இதே முறையைப் பின்பற்றலாம்.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சேர்ப்பது எப்படி?

2024 மக்களவை தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் சேர்த்துக் கொள்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் தேசிய வாக்காளர் சேவை இணையதளம் அல்லது செயலியைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.

இணையம் மூலமாகச் செய்ய இயலவில்லை என்றால் உங்கள் பகுதியில் நடக்கும் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்கள் அல்லது உங்கள் பகுதியின் தேர்தல் அதிகாரிகளிடம் நேரடியாகச் சென்று அதற்கான விண்ணப்பத்தை வழங்கலாம்.

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சேவைகளுக்கான இணையதளமான என்ற இணையதளத்தின் முகப்பில் உள்ள அல்லது VOTER HELPLINE செல்பேசி செயலியின் முகப்புப் பக்கத்தில் உள்ள FORMS எனும் பக்கத்திற்குச் சென்று இவற்றை நீங்கள் செய்யலாம்.

இணைதளம் அல்லது VOTER HELPLINE செயலி மூலம் நீங்கள் இவற்றைச் செய்ய உங்கள் செல்பேசி எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை (Electoral Photo Identity Card – EPIC) எண் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு கணக்கை உருவாக்க வேண்டும். பெயர் நீக்கம், வாக்காளர் அட்டையில் உள்ள விவரங்கள் திருத்தம் ஆகியவற்றுக்கு வாக்காளர் அடையாள அட்டை எண் அவசியம்.

வாக்காளராகச் சேர விரும்புபவர்கள் படிவம் 6ஐ பூர்த்தி செய்ய வேண்டும். ஒரு தொகுதியில் இருந்து இன்னொரு தொகுதிக்கு நீங்கள் மாறினால் அப்பொழுதும் படிவம் 6 தான் உங்களுக்குப் பொருந்தும். ஏனென்றால் வேறு தொகுதியில் ஏற்கெனவே வாக்காளராக இருந்தாலும் இந்தத் தொகுதியில் நீங்கள் ஒரு புதிய வாக்காளராகவே சேர்க்கப்படுவீர்கள்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் படிவம் 6Aஐ பூர்த்தி செய்ய வேண்டும். உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கும் உங்களுடைய ஆட்சேபனைகளை எழுப்புவதற்கும் படிவம் 7ஐ பூர்த்தி செய்ய வேண்டும்.

ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் முகவரி மட்டும் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் படிவம் பூர்த்தி 8Aஐ செய்ய வேண்டும்.

அரசின் இ-சேவை மையங்களிலும் இவற்றை நீங்கள் செய்யலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாச்சியர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் போன்ற அரசு அலுவலர்களின் வளாகங்களிலோ தனியாகவோ இ-சேவை மையங்கள் அமைந்திருக்கும்.

வாக்காளர் அடையாள அட்டையின் நிலையைத் தெரிந்துகொள்வது எப்படி?

உங்களது வாக்காளர் அட்டைக்கான விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை தேர்தல் ஆணையத்தின் இணையதளம் () மூலமாகத் தெரிந்துகொள்ளலாம். நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, ஒரு குறிப்பு எண் தரப்படும்.

அதைப் பயன்படுத்தி உங்கள் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அனைத்து விவரங்களும் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட பின், புதிய வாக்காளர் அடையாள அட்டை உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். உங்கள் வாக்காளர் அட்டை குறித்த பிற விவரங்களையும் அதே தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

வாக்காளர் அட்டையில் முகவரியை மாற்றுவது எப்படி?

2024 மக்களவை தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

ஆன்லைன் மூலம் வாக்காளர் அடையாள அட்டையில் முகவரியை மாற்றுவதை எளிதாக்கியுள்ளது தேர்தல் ஆணையம். ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் உங்கள் மாநிலம், தொகுதியைத் தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர் ‘Online Voter Registration’ என்ற பகுதியை கிளிக் செய்யவும். அடுத்ததாக படிவம் 8ஐ தேர்ந்தெடுக்கவும். இந்தப் படிவத்தில் உங்களுடைய பெயர், முகவரி, மாநிலம், தொகுதி மற்றும் உங்கள் புதிய முகவரி போன்ற விவரங்களை, கேட்கப்பட்டுள்ள இடங்களில் கவனமாக நிரப்பவும்.

உங்களின் தற்போதைய முகவரியைக் குறிப்பிடும் ஓர் ஆவணத்தைப் பதிவேற்ற வேண்டும் (வங்கி பாஸ் புத்தகம், ஆதார் அட்டை போன்ற ஏதேனும் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணம்).

ஆவணங்களைப் பூர்த்தி செய்து பதிவேற்றியவுடன், ஆன்லைனில் படிவத்தைச் சமர்ப்பிக்கவும். அடுத்ததாகக் கிடைக்கும் ஒரு குறிப்பு எண்ணைப் பயன்படுத்தி, உங்கள் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் தேர்தல் அதிகாரிகளால் சரிபார்க்கப்படும். சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்தால், குறிப்பிடப்பட்டுள்ள உங்களின் தற்போதைய முகவரியுடன் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.

அல்லது உங்கள் தொகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இருந்து வாக்காளர் பட்டியலில் மாற்றம் செய்வதற்கான படிவம் 8ஐ பெறவும். அதில் உங்கள் முழுப்பெயர், மாநிலம், தொகுதி, முகவரி போன்ற விவரங்களை நிரப்பவும். அதனுடன் மின்சார வாரிய ரசீது, வங்கி பாஸ் புத்தகம் போன்ற உங்களின் தற்போதைய வீட்டு முகவரிக்கான ஆதாரத்தை இணைக்க வேண்டும். பின்னர் அதை தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.

சமர்பிக்கப்பட்ட பின் உங்களுக்கு எண் ஒன்று வழங்கப்படும். அதை நீங்கள் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் நிலையைக் கண்காணிக்கப் பயன்படுத்தலாம். உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு, வெற்றிகரமாகப் புதுப்பிக்கப்பட்ட முகவரி அச்சிடப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை உங்களுக்கு வழங்கப்படும்.

வாக்காளர் அட்டையில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

உங்கள் பெயர், வயது, முகவரி, புகைப்படம், பிறந்த தேதி, தந்தை அல்லது கணவர் பெயர், பாலினம் உள்ளிட்டவற்றில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அந்தத் தவறை உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்வதற்கு படிவம் 8ஐ பூர்த்தி செய்ய வேண்டும்.

இதற்கு தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்தில் இருந்து படிவம் 8ஐ பதிவிறக்கம் செய்து, தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதனுடன் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக ஆவணங்களையும் இணைக்க வேண்டும். அதை இணையதளத்தில் பதிவேற்றினால் உங்களுக்குக் கிடைக்கும் குறிப்பு எண் கொண்டு விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ள முடியும்.

நீங்கள் அளித்த விவரங்கள், ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் திருத்தப்பட்ட வாக்க்காளர் அடையாள அட்டை உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.

வாக்குச் சாவடியை மாற்ற முடியுமா?

2024 மக்களவை தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

ஒரு தொகுதிக்கான வாக்குச்சாவடி என்பது மாவட்ட தேர்தல் அதிகாரியால் முடிவு செய்யப்படுவது. தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடியை மாற்ற வாக்காளர்களுக்கு உரிமை இல்லை எனக் கூறுகிறது இந்திய தேர்தல் ஆணையம். எனவே தேர்தல் நாளன்று உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடியில் மட்டுமே உங்களால் வாக்களிக்க முடியும்.

வாக்காளர் அட்டை சரிபார்ப்பது எப்படி?

இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சேவை போர்ட்டல் மூலமாக (https://electoralsearch.eci.gov.in/) வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சரிபார்த்துக் கொள்ளலாம்.

அதில் உங்கள் பெயர், மாவட்டம் மற்றும் உங்கள் தொகுதியின் பெயரை உள்ளீடு செய்தால், உங்கள் சட்டமன்றத் தொகுதியின் அனைத்து வாக்குச் சாவடிகளின் பட்டியலும் காட்டப்படும்.

உங்கள் வாக்குச்சாவடி எதுவோ, அதைத் தேர்வு செய்யவும். குறிப்பிட்ட வாக்குச் சாவடியில் உள்ள வாக்காளர்களின் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்று நீங்கள் சரி பார்க்கலாம். அதில் தவறு இருந்தால் திருத்தும் கோரி விண்ணப்பிக்கலாம்.

தேசிய வாக்காளர் தேடல் இணையதளத்தில் உங்கள் பெயர், வயது, தாய்/ தந்தை/ கணவர் பெயர், மாநிலம், மாவட்டம், தொகுதியின் பெயர் ஆகியவற்றை உள்ளீடு செய்து உங்கள் வாக்காளர் அட்டை விவரத்தை விவரத்தைப் பார்க்க முடியும்.

வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்கள்

இணையம் அல்லது செல்பேசி வசதி இல்லாதவர்கள் அவ்வப்போது உங்கள் பகுதியில் நடத்தப்படும் வாக்காளர் முகாம்களில் இந்தப் படிவங்களை நேரில் சென்று நிரப்பலாம்.

படிவத்தை நிரப்பி புகைப்படம், முகவரிக்கான அடையாள அட்டை உள்ளிட்டவற்றை வழங்கி நீங்கள் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் சேர்க்கவோ, நீக்கவோ, உங்கள் விவரங்களைத் திருத்தம் செய்யவோ முடியும்.

இந்த முகாம்கள் வழக்கமாக தேர்தல் நேரங்களில் வாக்குச்சாவடியாக எந்தக் கட்டடம் செயல்படுமோ, அங்கு நிகழும். பெரும்பாலும் இவை உங்கள் பகுதியில் இருக்கும் பள்ளிகளாகவே இருக்கும். இந்த முகாம்கள் நடக்கும் தேதி முன்கூட்டியே அரசால் அறிவிக்கப்படும்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *