ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோதி – பா.ஜ.க வியூகம் என்ன?

ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோதி - பா.ஜ.க வியூகம் என்ன?

பிரதமர் மோதி அடிக்கடி தமிழகத்திற்குப் பயணம் செய்வது ஏன்?

பட மூலாதாரம், @BJP4TamilNadu/X

கடந்த ஏழு நாட்களுக்குள் இரண்டாவது முறையாக தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் நரேந்திர மோதி, அரசியல் கூட்டங்களிலும் பங்கேற்றிருக்கிறார். ஆளும் தி.மு.கவைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். ஆனால், இந்தக் கூட்டங்களில் கவனிக்க வேண்டிய வேறு சில அம்சங்களும் இருக்கின்றன.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரனுடன் உரையாடினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து:

கடந்த சில நாட்களுக்குள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு பயணம் செய்துவிட்டார். தேர்தலே அறிவிக்காத நிலையிலும் அரசியல் கூட்டங்களிலும் பங்கேற்றுப் பேசியிருக்கிறார். என்ன காரணம்?

இன்னும் பத்து நாட்களில் பல மாநிலங்களுக்குப் பயணம் செய்து, பல திட்டங்களைத் துவக்கி வைக்கவிருக்கிறார். அவரது பயணத் திட்டத்தின் அடிப்படையில்தான் தேர்தலே அறிவிக்கப்படப் போகிறது. 7 நாட்களுக்குள் தமிழ்நாட்டிற்கு இரண்டாவது முறையாக வந்திருக்கிறார். காலை தெலங்கானா வந்துவிட்டு, மதியம் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். மீண்டும் தெலங்கானா சென்று இரவு தங்குகிறார். பா.ஜ.க. 370 – 400 தொகுதிகளைப் பெற வேண்டும் என நினைக்கிறார்கள். அந்த அளவு தொகுதிகளைப் பெறுவோமா என்ற சந்தேகம் வந்துவிட்டது. இதன் காரணமாக எல்லா மாநிலங்களுக்கும் தொடர்ந்து பயணம் செய்கிறார்.

உண்மையிலேயே வளர்ச்சி, சாதனைகளைச் செய்திருந்தால் இத்தனை பயணங்கள் தேவையில்லை. ஒரு முறை மன் கீ பாத் பேசுவதைப் போல பேசிவிட்டுப் போய்விடலாம். ஊர் ஊராக பிரசாரம் செய்யத் தேவையில்லை. இதற்கு முன்பாக 303 இடங்களை உச்சபட்சமாக பெற்றார்கள். மீண்டும் அந்த அளவுக்கு இடங்களைப் பெறுவார்களா என்பது அவர்களுக்கே சந்தேகமாக இருக்கிறது. இந்தியா கூட்டணி கலகலத்துப் போய்விடும் என்றார்கள். ஆனால், உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைந்துவிட்டது. பிகாரில் அமைந்துவிட்டது. டெல்லியில், குஜராத்தில், மத்திய பிரதேசத்தில் அமைந்துவிட்டது. இப்படியாக ’இந்தியா’ கூட்டணி வலுவடைந்து வருகிறது.

திங்கட்கிழமை பேசும்போது மோதி சொன்னார், “நான் சென்னை வரும்போதெல்லாம் சிலருக்கு அடிவயிற்றைக் கலக்குகிறது” என்றார். ஆனால், உண்மையில் இவர்கள்தான் பயந்துபோயிருக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின்

370- 400 என்ற எண்ணிக்கையில் இடங்களை உறுதிப்படுத்த வேண்டுமென்றால், அவர்கள் வலுவாக இருக்கும் மாநிலங்களிலேயே இதைச் செய்யலாமே… தமிழ்நாடு போல கட்சி பலவீனமாக இருக்கும் மாநிலத்தில் ஏன் செய்ய வேண்டும்?

இங்கே 39 இடங்களையும் தி.மு.க. பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. ஆனாலும் மோதி இங்கே வருகிறார். தி.மு.க. ஆட்சிக்கு எதிரான அதிருப்தி இருக்கிறது. ஆனால், மோதி எதிர்ப்பு என்ற ஒற்றை விஷயத்தின் காரணமாக தி.மு.க. அதனை அறுவடை செய்கிறது. தி.மு.கவை வீழ்த்த பா.ஜ.க. மட்டும் போதாது. அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகியவையும் வேண்டும். இப்படி ஒரு வலுவான கூட்டணியை அமைத்தால், 12- 15 இடங்களைப் பிடிக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அது உண்மையும்கூட. தி.மு.க. வீழ்த்த வலிமையான கூட்டணி தேவை. இது அவர்களுக்கும் தெரியும். அதனால், இப்போதுவரை அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த வாரத்தில் மட்டும் ஐந்தாறு முறை பா.ஜ.கவின் தூதர்கள் சந்தித்துவிட்டார்கள். முதலில் வாசன் சந்தித்தார். பிறகு அமித் ஷாவின் நண்பர் ஒருவர் வந்து பார்த்தார். சில நாட்களுக்கு முன்பாக முன்னாள் நீதிபதி ஒருவர் வந்து சந்தித்தார். அப்படி ஒரு கூட்டணி அமைந்தால், அந்தக் கூட்டணிக்கு 12 இடங்களும் அதில் பா.ஜ.கவுக்கு 4-5 இடங்களும் கிடைக்காதா என்ற நோக்கம்தான் மோதியை திரும்பத் திரும்ப இங்கே வர வைக்கிறது.

கடந்த கூட்டத்தில் அ.தி.மு.கவின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா ஆகியோரைப் புகழ்ந்து பிரதமர் பேசினார். அது அ.தி.மு.கவின் வாக்குகளை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சி என அரசியல் நோக்கர்கள் கருதினார்கள். ஆனால், நீங்கள் பா.ஜ.க. இன்னமும் அ.தி.மு.க. கூட்டணிக்கு முயல்வதாகச் சொல்கிறீர்கள். முரணாக இருக்கிறதே..

ஜெயலலிதா

பட மூலாதாரம், GETTY IMAGES

மோதி பேசிய பேச்சு எதிர்மறையாகிவிட்டது. எடுபடவில்லை. எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசினால், அ.தி.மு.க. தொண்டர்கள் தங்கள் பக்கம் வருவார்கள், எடப்பாடி பழனிசாமி இறங்கிவருவார் என நினைத்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை. எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் பேசிய மோதி, ஏன் எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசவில்லை என தொண்டர்கள் நினைக்கிறார்கள். ஒன்று, அவரது ஆட்சி மோசம் என சொல்ல வேண்டும். இல்லையென்றால், நல்லாட்சி எனச் சொல்ல வேண்டும். எதுவுமே சொல்லவில்லையென்றால் எப்படி என்றுதான் கேட்பார்கள்.

பல்லடத்தில் பேசிய பேச்சுக்கு பலன் இல்லை என்றவுடன் திருநெல்வேலியில் தி.மு.கவை கடுமையாகத் தாக்கிப் பேசினார் மோதி. தி.மு.கவைத் தாக்கிப் பேசும்போது, தி.மு.க. கொள்ளையடித்த பணத்தை மீட்போம் என்கிறார். மூன்றாண்டுகளாகிவிட்டன, எவ்வளவு பணத்தை மீட்டார்கள்?

அ.ம.மு.கவின் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பா.ஜ.க. கூட்டணியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், கடந்த இரு கூட்டங்களிலும் அவர்கள் பங்கேற்கவில்லை. என்ன காரணம்? அவர்கள் கூட்டணிக்குத் தேவையில்லையென பா.ஜ.க. கருதுகிறதா?

ஓ.பன்னீர்செல்வம்

பட மூலாதாரம், GETTY IMAGES

எடப்பாடி பழனிசாமி கோபித்துக் கொள்ளக்கூடாது என நினைக்கிறார்கள். அதுதான் காரணம். பா.ஜ.கவின் கூட்டணிக் குழு, ஜான் பாண்டியன், ஜி.கே. வாசன், தமிழருவி மணியன் போன்றோரையெல்லாம் சந்திக்கிறது. ஆனால், தென் மாவட்டங்களில் 3.5 – 4 சதவீதம் வாக்கு வங்கியுள்ள டிடிவி தினகரனை சந்திக்கவில்லை. இத்தனைக்கும் ஓ.பன்னீர்செல்வம் பேச்சைக் கேட்டு, பா.ஜ.க. கூட்டணியில்தான் இருப்பதாக அவர் திரும்பத் திரும்பச் சொல்கிறார். இருந்தபோதும் சந்திக்க மறுக்கிறார்கள். கடந்த நான்கைந்து தடவைகளாக, பா.ஜ.க. தலைவர்கள் யார் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்திப்பதில்லை.

சில வாரங்களுக்கு முன்பாக பா.ஜ.கவின் தலைவர் ஜே.பி. நட்டா சென்னைக்கு வந்தார். அப்போது அவரைச் சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் விரும்பினார். அவரைச் சந்திப்பதற்காக விமான நிலையத்திலும் லீ மெரிடியன் ஹோட்டல் வாசலிலும் காத்திருந்தார் ஓ. பன்னீர்செல்வம். இருந்தபோதும் வாய்ப்பளிக்கப்படவில்லை.

பல்லடம் கூட்டத்தில் கூட்டணித் தலைவர்கள் அனைவரும் மேடை ஏற்றப்பட்டார்கள். ஆனால், ஓ.பி.எஸ். – டிடிவி அழைக்கப்படவில்லை. சென்னையிலும் அவர்கள் மேடையேற்றப்படவில்லை. காரணம், எடப்பாடி பழனிசாமிக்காக பா.ஜ.க. காத்திருக்கிறது.

பிரதமர் சென்னைக்கும் வரும் நாளில் முதல்வர் மயிலாடுதுறைக்குப் போய்விட்டார். பிரதமர் வரும்போது முதல்வர் ஊரில் இல்லாத வகையில் பார்த்துக் கொண்டதற்கு என்ன காரணம்?

தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் இருக்கும் மேடையில் முதலமைச்சர் இருக்க விரும்பவில்லை. அதேபோல, பிரதமருடன் மேடையில் இருந்தால் அவர் கட்டி அணைப்பார், மிக நெருக்கமாக இருப்பதாகக் காண்பிப்பார். அது தவறான சமிக்ஞைகளைத் தந்துவிடக்கூடாது என மு.க. ஸ்டாலின் நினைக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளத்தின் துவக்க விழாவில் பங்கேற்க எ.வ. வேலுவை அனுப்பினார். இத்தனைக்கும் அது அரசு விழா. அப்படியிருந்தாலும் ஒரே மேடையில் இருக்க முதலமைச்சர் விரும்பவில்லை. அதைப்போலத்தான் சென்னையில் இருந்தால், அவரைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் தவிர்த்துவிட்டார் முதலமைச்சர்.

கடந்த திருநெல்வேலி கூட்டத்தில் தி.மு.கவை பிரதமர் கடுமையாகத் தாக்கிப் பேசினார். தங்கள் திட்டங்களுக்கு தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக குறிப்பிடுகிறார். இந்தப் பேச்சுக்கு மக்கள் மத்தியில் தாக்கம் இருக்கும் என நினைக்கிறீர்களா?

மு.க.ஸ்டாலின் - நரேந்திர மோதி

பட மூலாதாரம், @MKSTALIN

படக்குறிப்பு,

மு.க.ஸ்டாலின் – நரேந்திர மோதி (கோப்புப்படம்)

சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. நிவாரண உதவியாக தமிழ்நாடு அரசு 37,000 கோடி ரூபாயைக் கேட்டது. தன் பங்களிப்பாக மத்திய அரசு ஏதாவது கொடுத்ததா? எதுவும் கொடுக்கவில்லை. ஆனால், தாங்கள் கொடுக்கும் பணத்தில்தான் மாநில அரசு நிதி தருவதாக மேடையில் சொல்கிறார் பிரதமர்.

சமீபத்திய சட்டமன்றக் கூட்டத் தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு தகவலைத் தெரிவித்தார். அதாவது பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பெருமளவு நிதியை மாநில அரசுதான் தருவதாக புள்ளிவிவரங்களுடன் அவர் குறிப்பிட்டார். இப்படி மாநில அரசு அதிக நிதி தரும் திட்டத்திற்கு பிரதமரின் பெயர் சூட்டப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அதேபோல, மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை பணம் தரவில்லை, இதனால் மாநில அரசே முழுச் செலவையும் ஏற்க வேண்டியிருப்பதாகவும் நிதியமைச்சர் கூறுகிறார். ஆனால், மெட்ரோ திட்டத்திற்கு பொத்தாம்பொதுவாக தாங்கள்தான் நிதி அளித்ததாகச் சொல்கிறார் பிரதமர்.

ஒரு நிதியமைச்சர் சட்டமன்றத்திலேயே குற்றம்சாட்டிய பிறகு, சென்னைக்கு வரும் பிரதமர் மோதி அதற்குப் புள்ளிவிவரங்களுடன் பதில் சொல்லியிருக்க வேண்டாமா?

கடந்த இரண்டு முறைகளாக தி.மு.கவை கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறார் பிரதமர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு இது பலனளிக்குமா?

“ஆயுஷ்மான் பாரத்” திட்டத்தில் ஒரே மொபைல் நம்பரில் பல லட்சம் பேர் காப்பீடு பெற்றிருப்பது உட்பட பா.ஜ.க. அரசு மீது சி.ஏ.ஜி. பல விஷயங்களில் குற்றம்சாட்டியது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்ததோடு பா.ஜ.க. நிறுத்திக்கொண்டது. எந்த விளக்கமும் சொல்லவில்லை. ரயில் பாதை போடுவதற்கு அதிக செலவு, சுங்கச்சாவடிகளில் மோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. எதற்குமே பதில் இல்லை.

தமிழ்நாட்டில் மழை – வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டபோது தமிழக அரசு ஊடக மேலாண்மை செய்ததாக குற்றம்சாட்டுகிறார் மோதி. சமீபத்தில் திறக்கப்பட்ட மும்பை – நாக்பூர் சாலையில் ஒட்டை விழுந்திருக்கிறதே… இது யார் செய்த தவறு? எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

போதைப் பொருள் பிடிக்கப்பட்டது குறித்தும் பேசியிருக்கிறார் பிரதமர். இது தி.மு.கவுக்கு பாதகமாக அமையுமா?

இந்தியா முழுமையுமே போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் அதிகரித்திருக்கிறது. அதைத் தடுக்க தி.மு.க. தடுமாறியிருக்கிறது. ஒப்புக்கொள்ளலாம். ஆனால், 2021க்கு முன்பாக தமிழ்நாட்டில் போதைப் பொருள் கிடையாதா? இப்போதுதான் வருகிறதா?

ஆனால், சமீப காலமாக போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பது வேதனையானதுதான். பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால், இந்தப் பொருட்கள் எங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வருகின்றன? குஜராத்தில் உள்ள இரு துறைமுகங்கள் வழியாக வருகின்றன.

போதைப் பொருள் அதிகரிப்பது குறித்து பிரதமர் கவலைப்படுவது நியாயம். ஆனால், இதைத் தடுக்க வேண்டிய தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு என்ன செய்கிறது? தி.மு.க. மீது குற்றம்சாட்டலாம். ஆனால், இதையெல்லாம் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *