
பட மூலாதாரம், TWITTER@DPRADHANBJP
இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜி20 மாநாடு தொடர்பாக அனுப்பியுள்ள இரவு உணவு அழைப்பிதழ் ஒன்று தொடர்பாக செவ்வாய்க்கிழமை அரசியல் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
அந்த அழைப்புக் கடிதத்தில், ‘பாரத்’தின் ஜனாதிபதி’ (President of Bharat) எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
‘இந்தியா’ என்ற வார்த்தையை நாட்டின் பெயராகப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, தற்போது அதை ‘பாரத்’ என்று மட்டுமே அழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகினறன.
எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசிடமிருந்தோ அல்லது குடியரசுத் தலைவர் அலுவலகத்திடமிருந்தோ அதிகாரப்பூர்வமான பதில் எதுவும் வரவில்லை.
ஆனால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சமூக ஊடகக் கணக்கில் வெளியிடப்பட்ட ஒரு பதிவு இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியிருக்கிறது. செப்டம்பர் 9-ஆம் தேதி இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்படவிருக்கும் இரவு உணவு நிகழ்ச்சிக்காக தர்மேந்திர பிரதானுக்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தை அவர் தனது X சமூக ஊடகப் பக்கத்தில் (முன்னதாக Twitter) பகிர்ந்திருந்தார்.
புதிதாகக் கட்டப்பட்டுள்ள ‘பாரத் மண்டபத்தில்’ இரவு விருந்து நடைபெறவுள்ளதால், அழைப்பிதழ்களில் வழக்கமான ‘President of India’ என்று எழுதாமல், ‘President of Bharat’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அழைப்புக் கடிதத்தின் படத்தைப் பகிர்ந்து, “ஜன கன மன ஆதிநாயக ஜெய ஹே, பாரத பாக்ய விதாதா. ஜெய் ஹோ. #PresidentOfBharat” என்ற வாக்கியத்தையும் தர்மேந்திர பிரதான் பகிர்ந்திருந்தார்.
பா.ஜ.க.வைச் சேர்ந்த மற்றொரு அமைச்சரான கிரிராஜ் சிங்கும் தனக்கு வந்த அழைப்புக் கடிதத்தை எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்)இல் பகிர்ந்திருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் எதிர்வினை
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கூறுகையில், “ஜி20 மாநாட்டுக்கான விருந்தினர்களுக்கு குடியரசுத் தலைவர் அனுப்பிய அழைப்புக் கடிதத்தில் இந்திய குடியரசு என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘பாரத் குடியரசு’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘INDIA’வைக் கண்டால் அவ்வளவு பயமா? இது எதிர்க்கட்சிகளின் மீதான மோதி அரசின் வெறுப்பா, அல்லது பயந்துபோன ஒரு சர்வாதிகாரியின் தனிப்பட்ட விருப்பமா?” என்று X-இல் பதிவிட்டிருக்கிறது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் X-இல் பதிவிட்டுள்ள குறிப்பில், “இந்தச் செய்தி உண்மைதான். செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற உள்ள ஜி-20 விருந்து நிகழ்ச்சிக்கு குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பியிருக்கும் அழைப்பிதழில், பொதுவாகப் பயன்படுத்தப்படும் ‘இந்திய குடியரசுத் தலைவர்’ என்பதற்குப் பதிலாக, ‘பாரதக் குடியரசுத் தலைவர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1 ‘இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்’ என்று குறிப்பிடுகிறது. ஆனால் இப்போது இந்த ‘மாநிலங்களின் ஒன்றியம்’ தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது,” என்று கூறியிருக்கிறார்.
மேலும், ஜெய்ராம் ரமேஷ், “மோதி தொடர்ந்து வரலாற்றை சிதைத்து, மாநிலங்களின் ஒன்றியமான இந்தியாவைப் பிரிக்கலாம். ஆனால் நாங்கள் பின்வாங்க மாட்டோம். எல்லாவற்றிற்கும் மேலாக, INDIA கூட்டணிக் கட்சிகளின் நோக்கம் என்ன? இந்தியா கூட்டணி கட்சிகளின் நோக்கம் என்ன? BHARAT—Bring Harmony, Amity, Reconciliation And Trust. பாரதம் ஒன்றுபடும். இந்தியா வெல்லும்.” என்று பதிவிட்டிருந்தார்.

பட மூலாதாரம், ANI
இந்தச் சர்ச்சை குறித்து, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் காங்கிரஸை விமர்சித்திருக்கிறார்.
‘பாரத் vs இந்தியா’ சர்ச்சை குறித்து பாஜக தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?
இந்தச் சர்ச்சை குறித்து, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் காங்கிரஸை விமர்சித்திருக்கிறார்.
அவர், “அவர்களுக்கு எல்லாவற்றிலும் பிரச்சனை இருக்கிறது. நான் அவர்களிடம் எதுவும் சொல்ல விரும்பவில்லை. நான் ஒரு பாரதக் குடிமகன். எனது நாட்டின் பெயர் பாரத். அது எப்போதுமே பாரத் என்றுதான் இருக்கும். இதில் காங்கிரசுக்கு பிரச்சனை என்றால் அதை அவர்கள்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும்,” என்றார்.
அதே சமயம் பா.ஜ.க எம்.பி.யான சுஷில் மோதி, “அரசியலமைப்பு சட்டத்தில் பாரதம், இந்தியா என இரண்டு பெயர்களும் உள்ளன. 75 ஆண்டுகளாக இந்திய ஜனாதிபதி என்று எழுதினால், இப்போது பாரத ஜனாதிபதி என்று எழுதுவதில் என்ன ஆட்சேபனை? ‘இந்திய மாதா கி ஜெய்’ என்று சொல்வதில்லை, ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று தான் சொல்கிறோம்,” என்றார்.
மேலும் பேசிய அவர், “நான் பாரதத்தில் வசிப்பவன், பாரதத்தைப் பற்றிச் சொல்கிறேன் என்று ஒரு பிரபலமான பாடலும் உள்ளது. இது ராமர், கிருஷ்ணர் மற்றும் பரதன் என்ற பாரம்பரியத்தின் அடிப்படையில் வந்த பெயர். ‘இந்தியா’ என்ற பெயர் வெளிநாட்டினரால் வழங்கப்பட்டது. ஆர்.ஜே.டி மற்றும் ஜே.டி.யு மக்கள் பாரதம் என்ற பெயரைக் கண்டு எரிச்சல் அடைந்தால், அவர்கள் அவர்கள் இந்தியா என்ற பெயரை வைத்துக்கொள்ளட்டும்,” என்றார்.
பா.ஜ.க எம்.பி.யான ஹர்நாத் சிங் யாதவ், “நான் இந்த பிரச்சாரத்தை நடத்தவில்லை. முழு நாடும் இதை விரும்புகிறது. இந்தக் கோரிக்கை எல்லா மூலைகளிலிருந்தும் வருகிறது. எங்கள் ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவரும் ‘பாரத்’ என்ற பெயரைப் பயன்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளார்,” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
‘இந்தியா ஒளிர்கிறது’, ‘டிஜிட்டல் இந்தியா’ போன்ற பா.ஜ.க.வின் திட்டங்களை நினைவுபடுத்திய காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இதனை விமர்சித்திருக்குறார்
மற்ற காங்கிரஸ் தலைவர்களின் எதிர்வினை
‘இந்தியா ஒளிர்கிறது’, ‘டிஜிட்டல் இந்தியா’ போன்ற பா.ஜ.க.வின் திட்டங்களை நினைவுபடுத்திய காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “’இந்தியா ஒளிர்கிறது’ என்ற முழக்கத்தை முன்வைத்தது பா.ஜ.க. என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்குப் பதிலாக காங்கிரஸ் ‘சாமானியர்களுக்கு என்ன கிடைத்தது என்று கேட்டது.
“ ‘டிஜிட்டல் இந்தியா’, ‘ஸ்டார்ட் அப் இந்தியா’, ‘நியூ இந்தியா’ போன்ற திட்டங்களைக் கொண்டு வந்தது பா.ஜ.க தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்குப் பதிலாக காங்கிரஸ் ‘பாரத் ஜோடோ யாத்திரை’யை தொடங்கியது. நாளை மறுநாள் அதன் ஓராண்டு,” என்று பதிவிட்டிருந்தார்.
இந்தச் சர்ச்சை குறித்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் பவன் கேரா, “மோதிஜிக்கு ‘இந்தியா’ என்ற பெயரில் சிக்கல் உள்ளது. இப்போது அதன் பெயரை ‘பாரத்’ என்று மாற்றுகிறார். இன்று உலகம் முழுவதும் உங்களைப் பார்த்து சிரிக்கிறது. நீங்கள் எங்களையும் எங்கள் சித்தாந்தத்தையும் வெறுக்கிறீர்கள், அதில் பிரச்சனை இல்லை. ஆனால் இந்தியாவை வெறுக்காதீர்கள், இந்தியர்களை வெறுக்காதீர்கள்,’ என்று கூறுகிறீர்கள்.
மற்றொரு காங்கிரஸ் தலைவரான கவுரவ் கோகோய், “நாங்கள் ‘இந்தியா’ மற்றும் ‘பாரத்’ என்ற இரு பெயர்களிலும் பெருமை கொள்கிறோம். இஸ்ரோ, ஐஐடி, ஐஐஎம், ஐபிஎஸ் – இவை அனைத்திலும் ‘ஐ’ என்றால் இந்தியா. ஆனால் பாஜக அரசு ‘INDIA’ கூட்டணியைக் கண்டு பயப்படுகிறது,” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தச் சர்ச்சை துகுறித்து கருத்து தெரிவித்த தில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், “நாடு 140 கோடி மக்களுக்கு சொந்தமானது. எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமல்ல,” என்று கூறியிருக்கிறார்
அர்விந்த் கெஜ்ரிவால் என்ன சொன்னார்?
இந்தச் சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், “நாடு 140 கோடி மக்களுக்கு சொந்தமானது. எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமல்ல. நாளை ‘INDIA’ கூட்டணி அதன் பெயரை ‘பாரத்’ என்று மாற்றினால், பின்னர் மீண்டும் பா.ஜ.க நாட்டின் பெயரை மாற்றுமா? பி.ஜே.பி. என்று வைக்குமா?
“இது என்ன நகைச்சுவை? நமது நாடு பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது, ‘INDIA’ கூட்டணி உருவானதால் தான் அதன் பெயர் மாற்றப்படுகிறது. இப்படிச் செய்வதால் ‘INDIA’ கூட்டணிக்குச் சில வாக்குகள் பறிபோகும் என பா.ஜ.க. நினைக்கிறது. இது நாட்டுக்கு எதிரான துரோகம்,” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்