
பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டி எடுத்துள்ளது. மிக்ஜாம் புயல் கரையை கடப்பதற்கு முன்பே சென்னை மிகப்பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் வந்தாலே சென்னை மற்றும் அதனை ஒட்டிய திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு மேலோங்குகிறது.
இதற்கு முக்கிய காரணம் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம். 2015ல் பெய்த 33மிமீ மழையால் செங்கல்பட்டு, தாம்பரம் பகுதியில் கனமழை பெய்து செம்பரம்பாக்கம், புழல் ஏரி திறந்து விடப்பட்டதால் சென்னையே வெள்ளக்காடாக காட்சியளித்தது.
அந்த வெள்ள பாதிப்பு சென்னையின் மழை நீர் வடிகால் உட்கட்டமைப்பு மற்றும் மழைநீரை வெளியேற்றும் திட்டமிடலில் தமிழ்நாட்டின் தலைநகரம் பின் தங்கி இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இதனைத் தொடர்ந்து மழைநீர் வடிகால்களை சீரமைக்கும் பணியை அரசு மேற்கொண்டு வந்தது. இருந்த போதிலும் அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் வர்தா, நீவர் புயல்கள் டிசம்பர் மாதத்தில் சென்னையை தாக்கின.
இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என சென்னை மக்கள் தொடர்ச்சியாக அரசை கேட்டு வந்தனர். தமிழ்நாடு அரசு சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு கடந்த இரண்டரை ஆண்டுகளாக 3,031 கிலோ மீட்டருக்கு மழை நீர் வடிகால்கள், 33 மைக்ரோ ஏரிகள், 16 இதர ஏரிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து மிக்ஜாம் புயல் சென்னைக்கு அருகே கரையைக் கடப்பதால் சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதீத கனமழை அறிவிக்கப்பட்டு இருந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் 40 செ.மீ மழை பெய்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மழைநீர் வடிகால் பிரச்னைதான் காரணமா?
குறுகிய காலத்தில் அதிக மழையே சென்னை வெள்ள பாதிப்புக்கு மிக முக்கிய காரணம் என அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.
உண்மையில் மழையால் சென்னை அடிக்கடி பாதிக்கப்படுவதற்கான காரணங்கள் குறித்து பூவுலகின் நண்பர்களைச் சேர்ந்த சுந்தர்ராஜனிடம் பிபிசி தமிழ் பேசியது.
அவர் கூறுகையில், “சென்னையின் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மழையை சமாளிக்கலாம் என்கிறார். மீனவ கிராமமாக இருந்த பழைமையான நகரம் சென்னை பின்னாளில் வளர்ச்சி அடைந்து பெருநகரமாக மாற்றியமைக்கப்பட்டது. தற்போது, ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் 28 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். சென்னை தனது திறனை தாண்டி மக்கள் தொகையை தாங்கிக் கொண்டு இருப்பதால் மழை வெள்ளத்தை சமாளிக்க இயலவில்லை.” என அவர் தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், “தொழிற்சாலை வளர்ச்சி பணிகளை சென்னையை தாண்டி மற்ற மாவட்டங்களுக்கு நகர்த்தினால் மட்டுமே வரும் காலங்களில் ஏற்படும் மழை பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.” எனத் தெரிவித்தார்.
சென்னை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டால் வெள்ள பாதிப்பை தவிர்க்கலாமா என்ற கேள்விக்கு பதிலளித்த சுந்தர்ராஜன், “பள்ளிக்கரணை, நங்கநல்லூர், முடிச்சூர் போன்ற பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகள் என்றால் குடிசை பகுதி மட்டுமல்ல பெரிய கட்டிடம், வணிக வளாகம் போன்றவற்றையும் அகற்றி, நீர் நிலைகளை ஆழப்படுத்தி பராமரித்தால் மட்டுமே மழையில் இருந்து சென்னை மக்கள் தப்பிக்க முடியும்” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Sundarrajan
பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்
சென்னையால் எவ்வளவு மழையை தாங்க முடியும்?
“24 மணி நேரத்தில் 40 செ.மீ மழையால் என்ன பாதிப்பு?
சென்னையில் இன்று பெய்த மழைக்கு எந்த நகரமும் தாக்குப்பிடிக்காது. சென்னையில் 10 முதல் 20 செ.மீ மழையை தாங்கும் அளவிற்கு மழைநீர் வடிவமைக்கப்பட்டு இருக்கலாம்” எனக் கூறுகிறார் சுந்தர்ராஜன்
மேலும் கூறுகையில், “ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் 40 செ.மீ மழையை கொட்டித் தீர்த்து இருக்கிறது. இப்படி பேய் மழை பெய்தால் எந்த நகரமாக இருந்தாலும் வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளும். சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 100 மிமீ முதல் 1100 மி.மீ ஆக இருக்கிறது. அதில் மூன்றில் ஒரு பங்கு கடந்த 24 மணி நேரத்தில் பெய்து இருக்கிறது”, என்றார்.
புயல், மழை தாக்கம் டிசம்பர் 4ம் தேதி இரவு வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலசந்தர் பிபிசியிடம் பகிர்ந்தார்.
அவர் கூறுகையில், “தமிழ்நாட்டின் சராசரி மழை அளவு 92 செ.மீ. இந்த ஆண்டு தற்போது வரை 36 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 4 செ.மீ குறைவுதான்.
கடந்த காலங்களில் டிசம்பர் மாதம் மட்டும் தமிழ்நாட்டில் மழை அளவை பார்க்கும் போது 2015 ஆம் ஆண்டு 38 செ.மீ, 2016-ஆம் ஆண்டு 34 செ.மீ 2017-ல் 13 செ.மீ, 2018-ல் 15 செ.மீ மழை 2019-ல் 12 செ.மீ, 2020-ல் 20 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. 2021-ஆம் ஆண்டு அதிகபட்சமாக 43 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது.
சென்னை மாவட்டத்தில் 73 ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த ஆண்டு மீனம்பாக்கத்தில் மட்டும் 25 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 35 செ.மீ மழை பதிவானது. இதற்கு முன்பாக 2005 ஆம் ஆண்டு 28 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது”, என கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
சென்னையில் எவ்வளவு மழை பெய்துள்ளது?
தமிழ்நாட்டிற்கான மழை சாரசரியை மட்டுமே பார்த்து வருகிறோம், சென்னை மட்டும் ஆண்டுக்கான மழைப் பொழிவு கணக்கீட்டைப் பார்க்க வேண்டும் இந்த ஆண்டை பொறுத்த வரையில் டிச.1ஆம் தேதி 26.3 மிமீ, டிச.2-ல்- 2.1 மிமீ, டிச. 03-ல் 60 மிமீ மழை பதிவாகி இருக்கிறது. டிசம்பர் 3ம் தேதி மட்டும் புயல் தாக்கத்தால் அதிகபட்சமாக 208 மிமீ மழை பதிவாகியுள்ளது என கூறினார்.
நீர்நிலைகளை தூர்வாரினால் வெள்ளப் பெருக்கை தடுக்கலாம் என்கிறார் தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஜனகராஜன்.
அவர் கூறுகையில், “சென்னையில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத பெரு மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கான காரணம், புறநகர் பகுதிகளான செம்பரம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் ஏரி முழுக் கொள்ளளவை எட்டி திறந்துவிடப்பட்டது தான்.
இந்த ஆண்டு சென்னை நகர்ப் பகுதியில் 400மிமீ அளவுக்கு மழை பெய்து உள்ளது. சில இடங்களில் 200மிமீ மழை என்பது பதிவாகி இருக்கிறது.” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
சென்னையில் மழைநீர் வடிகால் வசதி எப்படி?
“உலகத்தில் உள்ள எந்த பெரிய நகரத்திலும் வெள்ளத்தை கட்டுப்படுத்த தொழில்நுட்பம் இல்லை. ஆனால் ஒரு நாள் பெய்ய வேண்டிய மழை ஒரு மணி நேரத்தில் பெய்தாலும் 6:00 மணி நேரத்துக்குள்ளாக மழை நீர் வடிந்தால் சிறப்பான மழைநீர் வடிகால் கட்டமைப்பு இருக்கிறது என கூற முடியும்”, என்கிறார் ஜனகராஜன்.
மேலும் அவர் கூறுகையில், “தொடர்ந்து பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு பெய்த மழையால் பாதிப்புகள் குறைந்து இருக்கிறது என்பதை பார்க்கிறோம். இந்த அரசாங்கம் சென்னை நகரப் பகுதியில் உள்ள அனைத்து மழை நீர் வடிகால்களை இணைத்து உள்ளது.
சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நகரங்களில் விளையாட்டு மைதானம், பார்க், வாகனம் நிறுத்துமிடத்திற்கு கீழேயே நீர் நிலைகளை அமைத்து பராமரித்து வருகின்றனர்.” எனக் கூறினார்.
இதற்கான தீர்வு குறித்து கூறுகையில், “நமது நகரப் பகுதிகளில் அது போல நீர் நிலையை உருவாக்கச் சொல்லவில்லை. சென்னையை சுற்றி மட்டும் 3500க்கு மேற்பட்ட ஏரி, குளம் குட்டைகள் உள்ளன.
இவற்றை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி இரண்டு மடங்கு ஆழப்படுத்தினால் வரும் காலத்தில் வெள்ளப் பாதிப்பால் மக்கள் சந்திக்கும் இடர்பாடுகள் குறையும் என கூறுகிறார்.” என ஜனகராஜன் கூறினார்.

பட மூலாதாரம், Radhakrishnan
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
கடல் சீற்றத்தால் சென்னையில் வெள்ள பாதிப்பு – ஆணையர் ராதாகிருஷ்ணன்.
“சென்னை பெருநகரின் அடையாறு, கொசஸ்தலை ஆறு, கூவம் நதி, பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலில் மழை நீரை வெளியேற்ற வடிகால் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. ஆனால், இந்த மிக்ஜாம் புயலால் எதிர்பாராத நிகழ்வாக சில மணி நேரங்களிலேயே அதிக அளவு மழை கொட்டி உள்ளது.” என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில். “சென்னையில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழைநீர் வடிகால்கள் வழியாக மழை நீர் சென்று நான்கு பெரிய வடிகால் பாதை மூலம் கடலை நோக்கி செல்கிறது. இருந்தாலும், கடல் பரப்பிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் புயல் நிலை கொண்டு இருப்பதால் கடல் சீற்றம் ஏற்பட்டு வெள்ள நீரை உள்ளே ஏற்றுக் கொள்ளாமல் எதிர்த்து தள்ளி வெள்ள நீர் நகருக்குள் திரும்பி வருவதால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வருகிறது,”என அவர் தெரிவித்தார்.
கடல் மழை நீரை ஏற்றுக் கொண்டால் மட்டுமே வெள்ள பாதிப்புகள் தவிர்க்கப்படும் என்றும் அதனை எதிர் நோக்கி கண்காணித்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 3031 கிலோமீட்டர் தூரத்திற்கு மழை நீர் வடிகால்கள் சென்னையில் போடப்பட்டு உள்ளன.
டிசம்பர் 4-ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு மேல் மழை காற்றின் வேகம் குறைந்து கடல் சீற்றம் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அல்லது டிசம்பர் 5-ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு மழை குறைந்து வெள்ள நீர் நான்கு மழைநீர் வடிகால்கள் வழியாக கடலுக்குள் சென்றால் மட்டுமே நகரத்தில் ஏற்பட்டிருக்க கூடிய பாதிப்புகளை சீர் செய்ய முடியும்,”என்றார்.
சென்னையில் பெரும்பாலான இடங்களில் பாதிப்பு இல்லை. 20 செ.மீ மழையைத் தாங்கக்கூடிய அளவு மழை நீர் வடிகால் வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன என்றும் ஆனால் இது அதற்கு எதிர் மாறாக அதீத மழை பெய்துள்ளது என்றும் இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
மெரினா கடற்கரையில் தேங்கி நிற்கும் மழைநீர்
“நீர்நிலைகள் ஆக்கிரமிப்பே வெள்ளத்திற்கு காரணம்”
பிபிசி தமிழிடம் பேசிய தனியார் வானிலை மற்றும் காலநிலை மாற்ற நிறுவனத்தின் தலைவர் ஜி.பி ஷ்ர்மா, நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதே சென்னை வெள்ளத்திற்கு காரணம் என்கிறார்.
அவர் கூறுகையில், “சென்னையில் முன்பு இருந்த நீர் நிலைகள் அனைத்தும் நகரமயமாக்கல், விரிவாக்கம் என்ற அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. தற்போது பெய்யும் அதீத மழை தனது நீர் நிலையை தேடி வந்து உள்ளது.
சென்னை பெங்களூரு மும்பை போன்ற பெரு நகரங்கள் 50 ஆண்டுகால திட்டத்தை தீட்டாமல் குறுகிய காலத்திற்கு திட்டம் செயல்படுத்துவதாலேயே புயல், மழை போன்ற இயற்கை பேரிடர்கள் காலங்களில் மோசமான பாதிப்பை சந்திக்கின்றன.” என்றார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்