
பட மூலாதாரம், Getty Images
எத்தியோப்பியா என்ற பெயரைக் கேட்டவுடன் உங்கள் மனதில் பல்வேறு விதமான படங்கள் தோன்றும். ஆனால் அது நீங்கள் எங்கு உள்ளீர்கள் என்பதைப் பொருத்து மாறுபடும்.
உதாரணமாக நீங்கள் ஐரோப்பிய கண்ணோட்டத்தில் பார்த்தால் எண்பதுகளில் எத்தியோப்பியாவில் பரவிய பயங்கரமான பஞ்சத்தின் படங்கள் உங்கள் மனதில் ஓடும். ஆனால் ஆப்பிரிக்க மக்களைப் பொருத்தவரை இது காலனித்துவ சக்திகளால் ஆக்கிரமிக்கப்படாத நிலம். அவர்களுக்கு இது ஆப்பிரிக்க ஒற்றுமை மற்றும் சுயமரியாதையின் சின்னம்.
எத்தியோப்பியா ஆப்பிரிக்காவில் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நவீன நாடும் ஆகும். அதன் தலைமை 2019 இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்ட ஒரு பிரதமரின் கைகளில் உள்ளது. ஆனால் ஓராண்டிற்கு பிறகு எத்தியோப்பியாவில் உள்நாட்டுப் போர் வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். எத்தியோப்பிய சமுதாயத்தில் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ தேவாலயம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த உள்நாட்டுப் போர் எத்தியோப்பியன் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுக்குள் பிளவுகளுக்கு வழிவகுத்தது. இந்த நாட்டில் 44 சதவிகித மக்கள் தங்களை ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களாகக் கருதிய காலம் ஒன்று இருந்தது. எத்தியோப்பிய சமூகம் மற்றும் அரசியலில் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் செல்வாக்கு ஓங்கி இருந்தது. ஆனால் இப்போது படிப்படியாக மற்ற பிரிவினரில் சேருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தங்களை ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. உலகின் முதல் கிறிஸ்தவ நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மதம் மாறுவது ஏன்? எத்தியோப்பிய மக்களுக்கு ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ தேவாலயத்தின் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறதா? என்பதை தெரிந்துகொள்ள முயற்சிப்போம்.
தேவாலயத்தில் வேறுபாடுகளின் விரிசல்

பட மூலாதாரம், Getty Images
எத்தியோப்பியாவின் ஆர்த்தடாக்ஸ் தேவாஹெடோ கிறிஸ்தவ தேவாலயம் உலகின் பழமையான கிறிஸ்தவ கிளைகளில் ஒன்றாகும். தேவாஹெடோ என்றால் ‘ஒற்றுமை’.
எத்தியோப்பியாவின் ஆட்சியாளர்கள் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள சாலமன் மற்றும் மைக்காடா மன்னர் ஆகியோரின் வழித்தோன்றல்கள் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.
பல நூற்றாண்டுகளாக எத்தியோப்பியாவில் ஆர்த்தடாக்ஸ் தேவாஹெடோ சர்ச் அபரிமிதமான செல்வாக்கைக் கொண்டுள்ளது என்று லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் மூத்த ஆராய்ச்சியாளரான மெப்ராது கெலேச்சா கூறுகிறார். இது நாட்டின் அடையாளத்தின் முக்கிய அம்சமாகும். ஆர்த்தடாக்ஸ் சர்ச்சில் ஏற்கனவே வேறுபாடுகள் இருந்தன. ஆனால் 2020 நவம்பரில் டிக்ரேயில் உள்நாட்டுப் போர் தொடங்கிய பின்னர் அவை ஆழமடைந்தன. ஒரோமியா பகுதியில் நடந்த கிளர்ச்சியும் இதற்கு ஒரு காரணம்.
ஓரோமியா பகுதியில் உள்ள தேவாலயத்தின் நிர்வாக அமைப்பு குறித்து விமர்சனம் உள்ளது. அங்குள்ள மக்களுடன் தொடர்புகொள்வதற்கு தாய்மொழியைப் பயன்படுத்துவதில் திருச்சபை தவறிவிட்டதாக மக்கள் கூறுகின்றனர்.
பழங்கால மொழியான ’கைஸ் மொழி’ அங்கு பயன்படுத்தப்படுகிறது. இது எத்தியோப்பியாவின் உயர் வகுப்பினரின் மொழியாக இருந்த அம்ஹாரிக் மொழியுடன் தொடர்புடையது. ஆனால் 1974 இல் எத்தியோப்பியாவின் மன்னர் ஹெய்லே செலாஸியை ஆட்சியில் இருந்து அகற்றிய பிறகு, அந்த உயர் வர்க்கம் ஓரங்கட்டப்பட்டது. அந்த நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இதில் எத்தியோப்பிய மன்னர் மற்றும் திருச்சபையின் ’பேட்ரியாக்’ அதாவது திருச்சபையின் தலைவரும் கொல்லப்பட்டனர். அதன் பிறகு அபுனா மெர்கோரியஸ் தேவாலயத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1974 இல் மன்னர் செலாஸி அகற்றப்பட்டதில் இருந்து மாறிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வதில் தோல்வியடைந்ததாக தேவாலயத்தின் மீது குற்றம் சாட்டப்படுகிறது என்கிறார் மெப்ராது கெலேச்சா. எத்தியோப்பியாவில் ராணுவ ஆட்சி வந்து அரசியல் சூழ்நிலை மாறிவிட்டது.
பல வருட உறுதியற்ற நிலைக்குப் பிறகு 1991 இல் எத்தியோப்பியாவில் ஒரு புதிய அரசு ஆட்சிக்கு வந்தது. இந்த முறை எத்தியோப்பியன் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தலைவர் வெளிநாடு சென்றுவிட்டார். நாடு கடந்து எத்தியோப்பியன் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சை நிறுவினார்.
அதே நேரம் எத்தியோப்பியாவில், அபூனா பவுலஸ் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தலைவரானார். 2018 வரை தேவாலயத்தின் பொறுப்பை நிர்வகித்தார். ஆனால் 2018 இல், ஆபி அகமது பிரதமரானார். மேலும் அவர் அபுனா மெர்கோரியஸை மீண்டும் நாட்டிற்கு அழைத்தார். அபுனா மெர்கோரியஸ் மற்றும் தற்போதைய தேவாலயத் தலைவர் அபுனா மத்தாயஸுக்கு இடையே ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால் இவர்கள் இருவரையும் ஒன்றாக வைத்திருப்பது எளிதான செயல் அல்ல.
”தேவாலயத்திற்குள் ஏற்பட்ட பிளவுகளின் காயங்களை குணப்படுத்தும் பொருட்டு பிரதமர் நாடு கடத்தப்பட்ட மதத் தலைவரை மீண்டும் நாட்டிற்கு அழைத்தார். ஆனால் இது இருவருக்குமிடையே தேவாலயத்தின் கட்டுப்பாட்டிற்கான போட்டியை ஆரம்பித்து வைத்தது,” என்று மெப்ராது கெலேச்சா குறிப்பிட்டார்.
பிரதமரான பிறகு ஆபி, நாட்டின் அதிகார கட்டமைப்பை மாற்ற நடவடிக்கை எடுத்தார். இதன் காரணமாக அவர் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே உள்நாட்டுப் போர் வெடித்தது. 2020 நவம்பரில் டிக்ரே பகுதி மத்திய அரசிடமிருந்து பிரிந்தது. இது எத்தியோப்பியன் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் ஒற்றுமையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் போரின் முதல் பெரிய தாக்குதல் எத்தியோப்பியன் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் மையமாகக் கருதப்படும் அக்ஸும் நகரத்தின் மீது நடந்தது.
கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களுக்குப் புனிதமான ’ஆர்க் ஆஃப் கோவேனெட்’, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நகரின் ’சர்ச் ஆஃப் மேரி- அவர் லேடி ஆஃப் ஜாயோன்’ தேவாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாக எத்தியோப்பியர்கள் நம்புகிறார்கள். தாக்குதலின் போது இந்த தேவாலயம் குறிவைக்கப்பட்டது. மேலும் இந்த தேவாலயத்தில் தஞ்சம் அடைந்த நூற்றுக்கணக்கான மக்கள் வெளியே அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், தேவாலயங்கள் சூறையாடப்பட்டதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கை கூறுகிறது.
2021 மே 7 ஆம் தேதி டிக்ரேயின் நான்கு பேராயர்கள் இணைந்து ஒரு சுதந்திரமான கட்டமைப்பை உருவாக்குவதாக அறிவித்தனர். தேவாலயம் போரை எதிர்க்கவில்லை என்றும் அபி அரசுடன் நெருக்கமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
“ஆப்பிரிக்க ஒன்றியத்தின் மத்தியஸ்த முயற்சியுடன் எத்தியோப்பிய அரசு மற்றும் டிக்ரே விடுதலை முன்னணிக்கு இடையே பிரிட்டோரியாவில் கையெழுத்திடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் காரணமாக வன்முறை நின்றது. ஆயினும் நாட்டின் பல சர்ச்சைக்குரிய பிரச்சனைகள் மற்றும் டிக்ரேயின் எதிர்காலம் தொடர்பான சர்ச்சைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. எத்தியோப்பியன் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுக்குள் ஏற்பட்ட பிளவும் நாட்டின் உறுதியற்ற தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நான் நினைக்கிறேன்,” என்று மெப்ராது கெலேச்சா தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
எத்தியோப்பியாவில் ஆர்த்தடாக்ஸ் தேவாலயம்
எத்தியோப்பியாவில் ஆர்த்தடாக்ஸ் சர்ச் நான்காம் நூற்றாண்டின் மத்தியில் நிறுவப்பட்டது என்கிறார் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு மிஷன் ஆய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் ரால்ஃப் லீ. அதாவது ஐரோப்பாவின் கிறிஸ்தவமயமாக்கலுக்கு முன்பே இது நிறுவப்பட்டுள்ளது. அப்போதிருந்து 1974 இல் கம்யூனிஸ்ட் புரட்சி துவங்கும் வரை அது நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக இருந்தது. ஆனால் ஆர்த்தடாக்ஸ் சர்ச் எத்தியோப்பியாவின் முக்கிய தேவாலயமாக, கிறிஸ்தவத்தின் முக்கிய கிளையாக எப்படி மாறியது?
“அது முதன்முதலில் அங்கு நிறுவப்பட்டதால் எத்தியோப்பியாவின் முக்கிய தேவாலயமாக அது ஆனது. அதற்கு முன் எத்தியோப்பியாவில் என்ன மதங்கள் இருந்தன என்பது பற்றிய தகவல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. இஸ்லாத்தின் எழுச்சிக்கு முன்பே இது அங்கே வேரூன்றிவிட்டது. அங்கு முஸ்லிம்கள் இருந்தனர். ஆனால் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் செல்வாக்கு மிகவும் அதிகம்,” என்று ரால்ஃப் லீ கூறினார்.
அதாவது எத்தியோப்பியா உலகின் முதல் கிறிஸ்தவ நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இஸ்லாத்தின் வரலாற்றைப் பார்த்தால் அதன் ஆரம்ப ஆண்டுகளில் எத்தியோப்பியாவிலும் இஸ்லாம் பரவியது. எத்தியோப்பியாவின் மற்றொரு பெயர் அபிசீனியா. துன்புறுத்தப்பட்ட முஸ்லிம்களை அபிசீனியாவில் தஞ்சம் அடையுமாறு நபிகள் நாயகம் குர்ஆனில் அறிவுறுத்தினார். ஏனெனில் அவர்கள் அங்கு பாதுகாப்பாக இருக்க முடியும் என்று கருதப்பட்டது. யூத மதமும் எத்தியோப்பியாவில் பரவியது. ஆனால் எத்தியோப்பியாவை வரையறுத்தது கிறிஸ்தவ ஆர்த்தடாக்ஸ் சர்ச்.
”கடந்த ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளில் எத்தியோப்பியாவின் சமூகம், அரசியல் மற்றும் கலாச்சாரத்தை வடிவமைப்பதில் கிறிஸ்தவ ஆர்த்தடாக்ஸ் சர்ச் முக்கிய பங்கு வகித்துள்ளது. நாட்டின் முக்கிய மதமாக இருந்ததால் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது,” என்கிறார் ரால்ஃப் லீ.
“பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து 1970களில் எத்தியோப்பியாவின் மன்னர் ஹெய்லி செலாஸி வரை நாட்டின் எல்லா மன்னர்களும் தங்களை மன்னர் சாலமன் மற்றும் ராணி ஷீபாவின் வழித்தோன்றல்களாகக் கருதினர். ராணி ஷீபா எத்தியோப்பியாவில் பிறந்தார் என்றும் ராணி ஷீபாவும் சாலமன் மன்னரின் மகனும் ’ஆர்க் ஆஃப் தி கோவெனென்ட்’ ஐ எத்தியோப்பியாவிற்கு கொண்டு வந்தனர் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.
’ஆர்க் ஆஃப் தி கோவெனென்ட்’என்பது மரத்தாலும் தங்கத்தாலும் செய்யப்பட்ட ஒரு பெட்டி என்று கிறிஸ்தவர்களும் யூதர்களும் நம்புகிறார்கள். அதில் கிறிஸ்தவத்தின் பத்து அடிப்படைக் கோட்பாடுகள் எழுதப்பட்ட தகடு உள்ளது என்று நம்பப்படுகிறது. இந்த மத சின்னம் கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் மிகப்புனிதமான ஒன்றாகும். ஆனால் பைபிளில் எத்தியோப்பியா பற்றிய குறிப்பு தொடர்பான விஷயத்தை பொருத்தவரையில், அதில் சில சந்தேகங்கள் இருப்பதாக ரால்ஃப் லீ தெரிவிக்கிறார்.
“கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ள பழைய ஏற்பாட்டில் உள்ள எத்தியோப்பியா என்ற வார்த்தை, ஒரு குறிப்பிட்ட புவியியல் நாட்டை விவரிக்கவில்லை. எகிப்தின் தெற்கே ஒரு இடத்தைக் குறிக்கிறது. ஆனால் இது நிச்சயமாக எத்தியோப்பியாவின் அடையாளத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களைத் தவிர பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் பல நூற்றாண்டுகளாக எத்தியோப்பியாவில் வசித்து வருகின்றனர். குறிப்பாக அங்கு பெரிய முஸ்லிம் மக்கள் தொகை உள்ளது. இருப்பினும் அங்கு முஸ்லிம் ஆட்சி இருந்ததில்லை,” என்றார் அவர்.

பட மூலாதாரம், reuters
ஆபி அகமது
தேவாலயம் மற்றும் நாட்டின் சிதைவு
யோஹானஸ் வோல்டேமரியம், அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளர் மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக்கா பற்றிய நிபுணரானவர். பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள எத்தியோப்பியாவுக்கும் நவீன எத்தியோப்பியாவுக்கும் இடையே குறைவான தொடர்பே உள்ளது என்று அவர் கருதுகிறார். “மூவாயிரம் ஆண்டுகளாக இருப்பதாக கூறப்படும் தொடர் உறவு என்பது உண்மையில் ஒரு கட்டுக்கதை. மேற்கத்திய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த எத்தியோப்பிய மன்னர்கள் இந்த கட்டுக்கதையை பயன்படுத்தினர்,” என்று அவர் குறிப்பிட்டார்.
1974 இல் கடைசி மன்னர் ஹெய்லி செலாஸி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இவ்வாறு செலாஸி வம்சத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு ஒரு மார்க்சிஸ்ட் அரசு ஆட்சிக்கு வந்தது. அது டெர்க் என்று அழைக்கப்பட்டது. அது மதத்தை ஊக்குவிக்கவும் இல்லை, அடக்கவும் இல்லை.
டெர்க், 1991 இல் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டது. பல இனக்குழுக்களின் கூட்டணியான எத்தியோப்பிய மக்கள் புரட்சி ஜனநாயக முன்னணி EPRDF ஆட்சிக்கு வந்தது. இதற்குப் பிறகு, மாற்றத்திற்கான புதிய செயல்முறை தொடங்கியது. விளம்புகளில் இருந்த இனக்குழுக்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
“எத்தியோப்பியாவில் பல இன மற்றும் பிராந்திய சவால்களை, ஒரு கூட்டணியை உருவாக்குவதன் மூலம் தீர்க்க EPRDF முயற்சித்தது. வடக்கு எத்தியோப்பியாவில் உள்ள ஆர்த்தடாக்ஸ் சர்ச் சக்தி வாய்ந்தது. ஆனால் ஒற்றுமை இருக்கவில்லை. அதற்குள்ளும் பிரிவினைகள் இருந்தன. ஆபி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த பிளவு இன்னும் தெளிவாகத் தெரிகிறது,” என்று யோஹானஸ் வோல்டேமரியம் குறிப்பிட்டார்.
எரித்திரியாவுடன் எல்லை பிரச்னை தொடர்பான போரை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதற்காக ஆபி அகமதுக்கு 2019 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. நாட்டில் அரசியல் கட்டுப்பாட்டை நீக்கியதற்காகவும் அவர் பாராட்டப்பட்டார். அவர் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன.
ஒரோமோ சமூகத்தைச் சேர்ந்த ஆபி அகமதின் தந்தை முஸ்லிம். தாய் கிறிஸ்துவர். ஆனால் அவர் ஒரு முஸ்லிம் அல்ல. ஒரோமா சமூகம் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ஆபி, ஆதிக்கம் செலுத்தும் ஓம்ஹாரா அல்லது திக்ராயன் இன சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல, ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவரும் அல்ல. அத்தகைய சூழ்நிலையில் அவர் தலைமை பொறுப்பை ஏற்றது எத்தியோப்பிய சமூகத்தில் ஒரு பெரிய விஷயமாக இருந்தது.
“இது எத்தியோப்பியாவிற்கு கடினமான நேரம். எத்தியோப்பியா உடைந்து வருகிறது என்று நான் நினைக்கிறேன். EPRDF க்கு எதிரான கோபம் மற்றும் எதிர்ப்புகள் காரணமாக 2018 இல் ஆபி பிரதமரானார். ஒரோமியா மக்கள் எத்தியோப்பியாவில் பெரும்பான்மையாக இருந்தாலும் பல ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டுள்ளனர். அவர் ஓம்ஹாரா பகுதி மக்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டார்,” என்று யோஹானஸ் வோல்டேமரியம் குறிப்பிட்டார்.
இந்த நிலைமைகள் காரணமாக 2020 இல் சண்டை தொடங்கியது. ஆனால் மத்திய அரசுக்கும் டிக்ரே பாதுகாப்புப் படைக்கும் இடையில் பிரிட்டோரியாவில் ஏற்பட்ட ஒப்பந்தத்திற்குப் பிறகு, 2022 இல் சண்டை நிறுத்தப்பட்டது. ஆனால் இது ஒரு அரசியல் ஒப்பந்தம் மட்டுமே. எனவே இது தேவாலயத்திற்குள் விரிசல்களைக் குறைக்கவில்லை. ஆனால் தேவாலயத்தின் முன் இது தவிரவும் பல சவால்கள் உள்ளன.

பட மூலாதாரம், Getty Images
புதிய சூழ்நிலை, புதிய போக்குகள்
எத்தியோப்பியாவில் கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் மக்களின் மத நாட்டங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உலக கிறிஸ்தவத்தின் இணைப் பேராசிரியர் யோர்க் ஹுஸ்டீன் தெரிவிக்கிறார்.
“எத்தியோப்பியா எப்போதும் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் நாடாகவே இருந்துள்ளது. ஆனால் கிறிஸ்தவத்திற்குள்ளேயே பலர் ஆர்த்தடாக்ஸ் கிறித்தவத்தை விட்டு புராட்டஸ்டன்ட் பிரிவை நோக்கி திரும்புகின்றனர். இதற்கு ஒரு காரணம் பெந்தகோஸ்தேக்களின் ஆளை கவர்ந்திழுக்கும் இயக்கமும் அதன் வளர்ந்து வரும் பிரபலமும் ஆகும்.”
எத்தியோப்பியாவில் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் தொகை இப்போது மொத்த மக்கள் தொகையில் ஐம்பது சதவிகிதத்திற்கும் கீழே சென்றுவிட்டதாக சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. எத்தியோப்பியாவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அறுபது சதவிகிதம் பேர் 25 வயதுக்குட்பட்டவர்கள். இந்த இளைஞர்கள் பைபிளுடன் இணைக்கப்பட்ட எத்தியோப்பியாவின் உருவத்தால் ஏமாற்றமடைந்தார்களா அல்லது பிரபலமான ரஸ்தாஃபேரியன் கலைஞரான பாப் மார்லியின் இசை மற்றும் ரஸ்தாஃபேரியன் இயக்கம் அவர்களை கவர்ந்துள்ளதா?
“அந்த கட்டுக்கதை நீண்ட காலத்திற்கு முன்பே முடிந்துவிட்டது. 1974 புரட்சிக்குப் பிறகு முற்றிலுமாக அழிந்துவிட்டது. நகரமயமாக்கல் போன்ற பல காரணங்களால் எத்தியோப்பியாவின் இளைஞர்கள் நவீன சித்தாந்தத்தை நோக்கி நகர்கின்றனர். அவர்களது விருப்பம் புராட்டஸ்டன்ட் பெந்தகோஸ்டலிசத்தை நோக்கி நகர்கிறது. ஏனெனில் பெந்தகோஸ்தேவாதம் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை வலியுறுத்துகிறது,” என்று யோர்க் ஹுஸ்டீன் சுட்டிக்காட்டினார்.
ஆனால் எத்தியோப்பியாவில் வேகமாக வளர்ந்து வரும் மதமாக இஸ்லாம் மாறியுள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். நாட்டின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தங்களை முஸ்லிம்களாக கருதுகின்றனர். ஆபி அகமது வளர்ச்சி மற்றும் அமைதியின் புதிய நம்பிக்கையுடன் ஆட்சிக்கு வந்தார். ஆனால் அது விரைவில் மங்கத் தொடங்கியது. அவருக்கு இருக்கும் ஒரு சிக்கல் என்னவென்றால் எத்தியோப்பியா ஒரு பெரிய மற்றும் சிக்கலான நாடு. அதே நேரத்தில், சோமாலியா, சூடான், தெற்கு சூடான் மற்றும் எரித்திரியா போன்ற அதன் அண்டை நாடுகளுடனான அதன் உறவும் எளிதானது அல்ல.
”எத்தியோப்பியாவில் மத்திய மற்றும் பிராந்திய அரசுகளுக்கு இடையே நீண்ட காலமாக மோதல்கள் உள்ளன. பல மத, பல இன மற்றும் பன்மொழி நாட்டில் வளங்களின் சமமான பகிர்வு எப்போதும் சவாலானது. ஆனால் எத்தியோப்பியாவின் பன்முகத்தன்மையை சரியான திசையில் கொண்டு செல்வதும், அனைத்து இன மற்றும் கலாச்சார குழுக்களிடையே அமைதி மற்றும் ஒற்றுமையை பேணுவதும் நாட்டின் முன் பெரும் சவாலாக உள்ளது,” என்று யோர்க் ஹுஸ்டீன் கூறினார்.
எனவே இப்போது முக்கிய கேள்விக்குத் திரும்புவோம். எத்தியோப்பியர்களுக்கு ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ தேவாலயத்தின் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறதா?
இந்த தேவாலயத்தின் வேர்கள் எத்தியோப்பியாவின் வரலாற்றில் ஆழமாக செல்கின்றன. நீங்கள் அங்கு சென்றால், கற்களை வெட்டிக் கட்டப்பட்ட அழகிய தேவாலயங்களின் நேர்த்தியான செதுக்கல்களால் ஈர்க்கப்படாமல் முடியாது. இவற்றில் பல தேவாலயங்கள் ஐரோப்பாவின் தேவாலயங்களை விட பழமையானவை. இங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ’ஆர்க் ஆஃப் தி கோவெனென்ட்’ பாதுகாக்கப்பட்டு வருவதாக மக்கள் கூறுகின்றனர்.
பல நூறு ஆண்டுகளாக ஆர்த்தடாக்ஸ் சர்ச் மீது லட்சக்கணக்கான மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இப்போது பலர் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாத்தின் பிற கிளைகளுக்குத் திரும்புவதால் அவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் எத்தியோப்பியாவில் எல்லா இடங்களிலும் தேவாலய மணிகள், ஆஸான் மற்றும் பெந்தேகோஸ்தே பிரார்த்தனைகளின் ஒலியை நீங்கள் கேட்கலாம்.
மதத்தின் மீதான நம்பிக்கை சுயபுரிதலை மேம்படுத்தி நல்ல முறையில் வாழ உதவுகிறது என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் ஆர்த்தடாக்ஸ் தேவஹெடோ சர்ச் மட்டுமே இதற்கான ஒரே வழி என்று இப்போது பலர் கருதவில்லை.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்