
பட மூலாதாரம், Getty Images
தீபாவளி பண்டிகைக்கு இன்னமும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் அதற்குத் தேவையான புத்தாடை, இனிப்புகள், வெடிகள் போன்ற பொருட்களை வாங்குவதில் மக்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். குழந்தைகள் புத்தாடையை தாண்டி வீட்டில் என்ன பட்டாசு வாங்கி தர உள்ளார்கள், எந்த பட்டாசு வாங்க வேண்டுமென தங்களது தேர்வுகளை செய்து வருகின்றனர்.
பல்வேறு பட்டாசுகள் சந்தையில் வந்துள்ளன. இதில் பாதுகாப்பான பட்டாசுகளை சந்தையில் இருந்து தேர்வு செய்து வாங்குவது எப்படி? சீனப் பட்டாசு, பசுமை பட்டாசு, நாட்டு வெடிகளுக்கு இடையேயான வேறுபாடுகள் என்ன?.
காற்றில் ஏற்படும் மாசு அளவை கட்டுப்படுத்த தீபாவளி தினத்தில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பட்டாசு மற்றும் சரவெடிகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காலையில் 1 மணி நேரம், மாலையில் 1 மணி நேரம் என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சரவெடிக்கு அனுமதி வழங்கக் கோரிய வழங்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவுகளை வழங்கி இருந்தது.
இதனைப் பின்பற்றி பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க அவற்றை சரியாக தேர்வு செய்து அவசியம். அரசு பசுமை பட்டாசு மட்டுமே தயார் செய்ய அனுமதி வழங்கி இருக்கிறது. ஆனால், சந்தையில் அரசின் விதிமுறைகளை மீறி தயார் செய்யப்படும் சீனப்பட்டாசுகளுடன் நாட்டு வெடிகள் சிலவும் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றை பிரித்து அறிந்து கொள்வது எப்படி?

பசுமை பட்டாசு என்றால் என்ன?
பட்டாசு வெடிக்கும் போது அதில் பச்சை நிறம் வந்தால் அது பசுமை பட்டாசு என்பது தவறான கருத்து ஆகும். பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசு செய்தால் மட்டுமே பச்சை நிறம் வரும், அரசு அந்த வேதிப் பொருளுக்குத் தடை விதித்து உள்ளது.
இதனால் பொட்டாசியம் நைட்ரேட் கலந்து நீலம், சிவப்பு, மஞ்சள் நிறத்தில் மட்டுமே குழந்தைகளை கவரும் வண்ண மத்தாப்பு, புஸ்வானம் வான வேடிக்கை வெடிகள் தயார் செய்யப்படுகின்றன. பட்டாசு பெட்டியின் மீது “பசுமை பட்டாசு” என லோகோ இருக்கும். இதனை மக்கள் தேர்வு செய்வது பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடலாம்.
சில பட்டாசு ஆலைகள் அரசின் அனுமதியை மீறி பேரியம் நைட்ரேட்டை பயன்படுத்தி வெடி தயார் செய்கின்றனர்.
நாட்டு வெடியால் என்ன ஆபத்து?
“பசுமை பட்டாசுகள் மற்ற பட்டாசுகளின் விலைக்குதான் விற்கப்படும். ஆனால், பசுமை பட்டாசில் இருந்து வெளியேறும் மாசின் அளவு 30% குறைவாக இருக்கும் என்று அரசு கூறியிருக்கிறது” என்கிறார் சிவகாசியில் 30 ஆண்டுகளாக பட்டாசு ஆலையில் கண்காணிப்பாளராக பணியாற்றும் குணசேகரன் பிபிசி தமிழிடம் கூறினார்.
மேலும் “நாட்டு வெடியில் பசுமை பட்டாசை விட அதிக அளவில் வெடிமருந்து கலக்கப்படுகிறது. இது கிராம புறங்களில் நடக்கும் சுப நிகழ்ச்சியில் வெடிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
இதில் அதிக மாசு ஏற்படும். அரசு அனுமதி வழங்கிய 126 டெசிபெலுக்கு மேல் ஒலி வரும், பசுமை பட்டாசுகளை ஒப்பிடுகையில் 10-20% குறைவான விலைக்கு கிடைக்கும். இதனை தயார் செய்யும் போது தான் பட்டாசு ஆலையில் வெடி விபத்துகள் அதிக அளவில் நடக்கின்றன” என்றார்.

குணசேகரன், பட்டாசு ஆலை தொழிலாளர்
பசுமை பட்டாசும் உடல் நலனுக்கு கேடா?
பசுமைப் பட்டாசு சீனப் பட்டாசில் இருப்பதை விட சில வேதிப்பொருட்கள் தவிர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
இதனால் புகையில் நச்சுத்தன்மை குறையலாம். ஆனாலும் பசுமை பட்டாசு வெடிக்கும் போதும் ஆர்செனிக், லித்தியம், காட்மியம், பாதரசம் போன்ற உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வேதித்துகள் வெளியாகின்றன. இதனால், லட்சக்கணக்கான மக்கள் ஆண்டு ோறும் பாதிக்கப்படுகின்றனர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பட்டாசு காற்றின் தரத்தை இவ்வளவு மோசமாக்குமா?
ஆரோக்கியமான காற்று என்பது (Air Quality index) 0 முதல் 50 AQI வரை இருக்க வேண்டும். சாதாரண நாட்களில் தென் சென்னையில் இதன் நிலை 50 முதல் 60 AQI ஆக இருக்கும்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜீயோ டாமின், “கடந்த ஆண்டு தீபாவளி நாளில் சென்னையின் காற்று தரம் 786 AQI என பதிவாகி இருப்பதாக மாசு காட்டுப்பாடு வாரிய தெரிவித்தது. இந்தக் காற்று மாசு அளவு என்பது ஒரு நபர் ஒரே நாளில் 31 சிகரெட் புகைப்பதற்குச் சமம்.” என்று எச்சரிக்கிறார்.
தீபாவளி அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை காற்றுத் தர குறியீடு சென்னையில் சென்ற ஆண்டில் பார்க்கும் போது அதிகபட்சமாக சவுகார் பேட்டையில் 786 AQI, நுங்கம்பாக்கத்தில் 545 AQI பதிவாகியது.
குறிப்பாக, சென்னையில் இரவு 11 முதல் 12 மணி வரை முன்பு எப்போதும் இல்லாத அளவாக நுண்துகள் அளவு 950 ug/ m3 ஆக பதிவானது.
“சீனப் பட்டாசு, பசுமை பட்டாசு என பட்டாசு இரண்டுமே உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடுவதை மக்கள் தவிர்ப்பதே சிறந்தது” என ஜீயோ டாமின் கூறுகிறார்.

பசுமை பட்டாசு வெடித்தால் காற்று மாசுபடுவது குறையும்
தீபாவளி, போகி போன்ற பண்டிகை நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் ஊடகத்தின் மூலமும், துண்டு பிரசுரம் வழங்கியும் காற்று மாசை தடுப்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்படுகிறது.
ஆனால், பொதுமக்கள் தாமாக முன்வந்து அரசு அனுமதித்த நேரத்தில் மட்டுமே பசுமை பட்டாசை வாங்கி வெடித்தால் காற்றில் ஏற்படும் மாசின் அளவை குறைக்கலாம்.

இந்த ஆண்டு காற்று மாசு குறையுமா?
இந்த ஆண்டு அதிக அளவு பசுமை பட்டாசுகள் விற்பனைக்கு வந்து உள்ளன. காற்று மாசு குறைகிறதா என கண்டறிய தமிழகம் முழுவதும் அதன் அளவுகளை கணக்கிடப்படும் என்று தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.
மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன், “ பசுமை பட்டாசினால் காற்று மாசு குறைகிறதா என்பதை இந்த ஆண்டு அளவீடு செய்து பார்த்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்னும், பின்னும் காற்று மாசு அளவு பரிசோதனை தமிழ்நாடு முழுவதிலும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் எடுக்கப்பட உள்ளது.
இதன் மூலம் சென்ற ஆண்டின் காற்று மாசு அளவுடன் ஒப்பிட்டு பார்த்து காற்று மாசு எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியும்” என்கிறார்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்