
பட மூலாதாரம், Getty Images
மகேந்திர சிங் தோனி 123 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 148 ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றிபெற வைத்தார்.
விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவ்து டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தார். ஜெய்ஸ்வால் 290 பந்துகளில் 209 ரன்களை எடுத்தார். அவரது முதல் சர்வதேச இரட்டை சதம்.
ஜெய்ஸ்வாலின் இரட்டை சதத்தால் விசாகப்பட்டினம் கிரிக்கெட் மைதானம் மீண்டும் தன்னை ‘டீம் இந்தியாவின் சென்டிமென்ட் மைதானம்’ என நிரூபித்துள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இங்கு கடந்த காலங்களில் இந்தியா விளையாடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சதம் மற்றும் இரட்டை சதங்கள் பதிவாகியுள்ளன. இந்த மைதானத்திற்கு ‘பேட்டிங்கின் சொர்க்கபுரி’ என்ற மற்றொரு பெயரும் உள்ளது மீண்டும் நிரூபணமாகியுள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தோனிக்கு கிக்-ஸ்டார்ட் கொடுத்த மைதானம்

பட மூலாதாரம், Getty Images
விசாகா கிரிக்கெட் மைதானம் (கோப்புப்படம்)
ஜெய்ஸ்வாலின் இரட்டை சதத்தால் விசாகப்பட்டினம் மைதானத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் அடித்த சதங்களை கிரிக்கெட் ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்த மைதானத்தில் இந்திய அணி எந்த மாதிரியான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது என்பது குறித்த விவாதமும் நடக்கிறது.
விசாகப்பட்டினத்தில் விளையாடப்பட்ட கிரிக்கெட் பற்றிய விவரங்கள் குறித்து கிரிக்கெட் பயிற்சியாளரும் ஆந்திரா பல்கலைக்கழக உடற்கல்வி துறையின் பொறுப்பாளருமான விஜய்குமாரிடம் பிபிசி பேசியது. விசாகா ஸ்டேடியம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரி போன்றது என்றும், ஒவ்வொரு போட்டியிலும் சதங்கள் அடிக்கப்படும் இடம் என்றும் அவர் கூறினார். ஆனால் பெரும்பாலும் இந்திய அணி வீரர்களே இங்கு சதம் அடித்துள்ளனர் என்றும் விஜய்குமார் கூறினார்.
விசாகா மைதானத்தில் இந்திய அணிக்கு ஒரு சென்டிமென்ட் இருப்பதாகவும், இங்கு சதம் அடித்தவர்கள் இந்திய கிரிக்கெட்டில் நட்சத்திரங்களாக மாறிவிட்டனர் என்றும் அவர் கூறினார். அதற்கு எம்.எஸ்.தோனி, ரோகித் ஷர்மா ஆகியோர் உதாரணம் என்றும் அவர் நினைவுபடுத்தினார்.
கடந்த 2005ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தோனி எடுத்த 148 ரன்கள் அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஒரு கிக்-ஸ்டார்ட் கொடுத்தது என்கிறார் விஜய்குமார். அதன்பிறகு அவர் தனது வாழ்க்கையில் திரும்பிப் பார்க்கவே இல்லை, அன்று விசாகப்பட்டினத்தில் தோனியின் பேட்டிங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள் என்றும் கூறினார்.
நட்சத்திர வீரர்களை அடையாளம் காட்டும் மைதானம்

பட மூலாதாரம், Getty Images
விசாகப்பட்டினத்தில் மயங்க் அகர்வால் 215 ரன்கள் எடுத்தார்.
விசாகப்பட்டினத்தில் இதுவரை நடந்த டெஸ்ட் போட்டிகளில் புஜாரா, விராட் கோலி, ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் சதம் அடித்துள்ளனர். புஜாரா தனது முதல் டெஸ்ட் சதத்தை 2016இல் இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் அடித்தார்.
விசாகப்பட்டினத்தில் மயங்க் அகர்வால் மற்றும் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்த நிலையில், புஜாரா, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சதம் அடித்துள்ளனர். டெஸ்ட் போட்டியின் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் ரோகித் சர்மா சதம் அடித்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் விராட் கோலி 167 ரன்களும், புஜாரா 119 ரன்களும் எடுத்தனர். இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. பின்னர் 2019இல் விசாகப்பட்டினத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் ரோகித் சர்மா முதல் இன்னிங்ஸில் 176 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 127 ரன்களும் எடுத்தார். இந்தப் போட்டியில் மயங்க் அகர்வால் 215 ரன்கள் எடுத்தார். விசாகப்பட்டினத்தில் பதிவான முதல் இரட்டை சதம் இது.
அதன்பிறகு தற்போது இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் குவித்து தனது முதல் இரட்டை சதத்தை அடித்துள்ளார். விசாகா மைதானத்தில் பதிவான இரண்டாவது இரட்டை சதம் இது.
விசாகப்பட்டினத்தில் இந்திய அணி சார்பில் இதுவரை நான்கு சதங்களும், இரண்டு இரட்டை சதங்களும் பதிவாகியுள்ளன. இந்திய வீரர்களைத் தவிர மற்ற இரண்டு பேட்ஸ்மேன்களும் இங்கு சதம் அடித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்க பேட்டர்களான டீன் எல்கர் (160), டி காக் (111) ஆகியோர் 2019இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்தனர். இவற்றையும் சேர்த்தால் விசாகப்பட்டினத்தில் மொத்தம் 8 டெஸ்ட் சதங்கள் பதிவாகியுள்ளன.
சாதனை படைக்கும் இடமாக மாறிய விசாகப்பட்டினம்

பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தார்.
விசாகப்பட்டினத்தில் மொத்தம் 14 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றன. அதில் மூன்று போட்டிகள் ஒன் டவுனில் உள்ள இந்திரா பிரியதர்ஷினி மைதானத்திலும், மீதமுள்ள 11 போட்டிகள் ஏசிஏ-விசிடிஏ மைதானத்திலும் நடைபெற்றன. தற்போது இந்திரா பிரியதர்ஷினி மைதானத்தில் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை.
ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி ஏசிஏ-விசிடிஏ கிரிக்கெட் ஸ்டேடியம் 2003இல் இருந்து செயல்படத் தொடங்கியது. அங்கு முதல் போட்டி 2005இல் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் தோனி 148 ரன்கள் குவித்தார். இந்தப் போட்டியின் மூலம் தோனியின் ‘ஹெலிகாப்டர் ஷாட்’ ரசிகர்களுக்கு அறிமுகமானது.
இந்திய அணி விசாகப்பட்டினத்தில் விளையாடிய 14 போட்டிகளில் 10இல் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளில் தோற்றது, ஒரு போட்டி சமனில் முடிந்தது. 2001இல் ஆஸ்திரேலியாவுக்கும், 2013இல் மேற்கிந்திய தீவுகளுக்கும், 2023இல் ஆஸ்திரேலியாவுக்கும் எதிரான ஆட்டங்களில் இந்தியா தோற்றது. 2018இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டம் டிராவில் முடிந்தது.
விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த 14 ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 15 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதில் 8 இந்திய அணியும், 7 சதங்களை மற்ற அணிகளும் பதிவு செய்தன. விசாகப்பட்டினத்தில் நவ்ஜோத் சித்து சிங் (114 நாட் அவுட்) 1994இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தியாவுக்காக முதல் சதம் அடித்தார்.
ரோகித் ஷர்மாவின் அதிகபட்ச ஸ்கோர் விசாகப்பட்டினத்தில்தான் அடிக்கப்பட்டது. 2019இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் அவர் 159 ரன்கள் எடுத்தார். 2018இல் விசாகப்பட்டினத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகத் தனது சதத்தின்(157) மூலம், கோலி ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.
விசாகாவில் வெளிநாட்டு அணிகள் சார்பில் ஜெயவர்த்தன (101), மேத்யூ ஹைடன் (111), ஷாய் ஹோப் (123 நாட் அவுட்), மைக்கேல் கிளார்க் (111 நாட் அவுட்) ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெறவிருந்த மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்தியா ஒருநாள் போட்டி புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
டி20 போட்டிகளின் நிலைமை என்ன?

பட மூலாதாரம், Getty Images
42 பந்துகளில் 80 ரன்கள் குவித்த இந்திய கேப்டன் சூர்ய குமார் யாதவ் ‘போட்டியின் ஆட்டநாயகன்’ ஆனார்.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி, சதங்கள் அடிப்படையில் முன்னணியில் இருக்கும் இந்திய அணி டி20யில் பின்தங்கியுள்ளது.
விசாகப்பட்டினத்தில் நான்கு டி20 போட்டிகள் நடந்துள்ளன. இதில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா அணி, 2019இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது. 2023 நவம்பரில் நடந்த டி20 போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றது.
இந்த நான்கு போட்டிகளிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் எவராலும் சதம் அடிக்க முடியவில்லை. நவம்பர் 2023இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 80 ரன்கள் எடுத்ததே இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர்.
விசாகப்பட்டினத்தில் 2023ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்காக ஜோஸ் இங்கிலீஷ் சதம் (110) அடித்தார். இதன் மூலம் விசாகா மைதானத்தில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) சதங்கள் பதிவாகியுள்ளன.
விசாகாவில் 22 போட்டிகள், 24 சதங்கள்

பட மூலாதாரம், Getty Images
மொத்தத்தில், விசாகப்பட்டினம் அனைத்து வடிவங்களிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) 22 சர்வதேச போட்டிகளை நடத்தியுள்ளது, அதில் 14 ஒருநாள் போட்டிகள், மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் நான்கு டி20 போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன.
ஒரு நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது. 21 போட்டிகளில் 24 சதங்கள் பதிவாகியுள்ளன. இதில், டெஸ்டில் 8, ஒருநாள் போட்டிகளில் 15, டி20யில் 1 சதம் எனப் பதிவாகியுள்ளன. இந்தியா சார்பில் மொத்தம் 14 சதங்கள் பதிவாகியுள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இது வரும் 6ஆம் தேதி வரை நடக்கும்.
பேட்ஸ்மேன்களின் சொர்க்கம்: காப்பாளர் மல்லையா

பட மூலாதாரம், Getty Images
விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானம் பேட்ஸ்மேன்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியிலும் ஒரு சதம் அடிக்கப்பட்டதால் இந்த பெயர் வந்தது.
விசாகப்பட்டினத்தில் உள்ள ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஏற்றது. பேட்ஸ்மேன்கள் அங்கு வந்தால், ரன்களை குவிக்கலாம். தோனி, ரோகித் சர்மா போன்ற பேட்ஸ்மேன்கள் இங்கு அடித்த ரன்களே அதற்கு சான்று.
இங்குள்ள காலநிலையும் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளது. இதன் மூலம் பேட்ஸ்மேன்கள் தங்கள் மகிமையைக் காட்டுகின்றனர். அதனால் இது பேட்ஸ்மேன்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது,” என்று ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தின் காப்பாளர் மல்லையா கூறினார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்