
பட மூலாதாரம், Getty Images
இந்தியப் படைகளை மாலத்தீவில் இருந்து அகற்றுவதில் தாம் உறுதியாக இருப்பதாக, அந்நாட்டில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அதிபர் முகமது முய்சு சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவு மோசமடையுமா என்ற கவலைகள் எழுந்துள்ளன. அதைவிட, மாலத்தீவில் சீனாவின் ஆதிக்கம் வலுப்படுமா என்ற அச்சங்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில் மாலத்தீவின் புதிய அரசாங்கத்துடன் எல்லா பிரச்னைகளையும் பேசித் தீர்ப்பதற்கு இந்தியா ஆர்வமாக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமையன்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷியிடம் முகமது முய்சுவின் அறிக்கை குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அரிந்தம் பக்ஷி, புதன்கிழமை மாலை, மாலத்தீவுக்கான இந்திய தூதர் முனு மஹவர் முகமது, அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முய்சுவை சந்தித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் வாழ்த்துச் செய்தியை அளித்ததாகக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “அப்போது, பல விஷயங்களில் இருவருக்கும் இடையே நல்ல உரையாடல் நிகழ்ந்தது. பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் தொடர்பான விஷயங்களும் அந்த உரையாடலில் இடம் பெற்றன,” என்றார்.
இந்த நெருக்கடிக்கு மத்தியில், சீன போர்க்கப்பல்கள் மாலத்தீவு நோக்கி நகர்ந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. சுந்தா மற்றூம் லாம்போக் ஜலசந்தி வழியாக சீன போர்க்கப்பல்கள் நகர்வதை இந்திய கடற்படையும் உறுதி செய்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், முகமது முய்சுவின் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் யார் கலந்து கொள்வார்கள் என்பதை இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவிக்கவில்லை.
கடந்த 2018ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி அப்போதைய மாலத்தீவு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இப்ராகிம் சோலியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். அது இந்தியாவின் எதிர்பாராத நிலைப்பாடாகப் பார்க்கப்பட்டது.
சீனாவுக்கு சாதகமானதாகப் பார்க்கப்படும் முய்சுவின் வெற்றி
கடந்த வாரம்தான், மாலத்தீவின் தலைநகரான மாலேவின் மேயராக இருந்த முகமது முய்சு 19,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிபர் இப்ராஹிம் சோலியை தோற்கடித்தார்.
இருவருக்கும் இடையே 8% வாக்கு வித்தியாசம் மட்டுமே இருந்தது. மாலத்தீவின் இந்தத் தேர்தல் முடிவு இந்தியாவுக்கு எதிரானதாகவும், சீனாவுக்கு சாதகமானதாகவும் பார்க்கப்பட்டது.
இப்ராஹிம் சோலியின் அரசாங்கத்துடன் இந்தியாவின் ஒத்துழைப்பு மிகவும் ஆழமானது. இந்தியாவின் நலன்களுக்கு எதிராக செல்லாத அதிபராக அவர் பார்க்கப்பட்டார்.
ஆனால், முய்சுவின் தேர்தல் பிரசாரத்தில் இந்தியா ஒரு முக்கியமான பிரச்னையாக இருந்தது. அவர், ‘இந்தியாவே வெளியேறு’ என்ற பிரசாரத்தைத் துவங்கினார். மாலத்தீவின் இறையாண்மையை சமரசம் செய்வதன் மூலம் தனது அரசாங்கம் எந்த நாட்டையும் நெருங்காது என்றும் முய்சு கூறியிருந்தார்.
‘இந்தியப் படைகள் வெளியேற்றப்படும்’

பட மூலாதாரம், Getty Images
மாலத்தீவில் இருந்து இந்தியப் படைகள் அகற்றப்படும் என்று முகமது முய்சு கூறியது குறித்து இந்திய வெளியுறவுத்துறை தெளிவாக எதுவும் கூறவில்லை.
கடந்த செவ்வாயன்று, முய்சுவின் மற்றொரு அறிக்கை மாலத்தீவு ஊடகங்களில் தலைப்புச் செய்திகளில் வெளியானது.
அதில் அவர், மாலத்தீவில் இந்திய ராணுவ வீரர்கள் இருப்பதை மக்கள் விரும்பவில்லை. வெளிநாட்டுப் படைகள் மாலத்தீவு மண்ணை விட்டு வெளியேற வேண்டும், என்று கூறியிருந்தார்.
தி ஹிந்து நாளிதழில் வெளிவந்த ஓர் அறிக்கையில், இந்தியப் பெருங்கடலில் இந்திய ராணுவம் இருப்பது புதிய விஷயம் அல்ல. 2013 முதல் அப்து மற்றும் லம்மு தீவுகளில் இந்திய கடற்படை மற்றும் விமானப் படை வீரர்கள் உள்ளனர், என்று கூறியிருந்தது.
அந்த அறிக்கை, மேலும், நவம்பர் 2021இல், மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படை, மாலத்தீவில் மொத்தம் 75 இந்திய ராணுவ வீரர்கள் இருப்பதாக நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்தது. பிப்ரவரி 2021இல், மாலத்தீவின் எதிர்க்கட்சிகள் இந்தியாவுடனான கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தத்தை எதிர்த்தன, என்று கூறியிருந்தது.
“மாலத்தீவுக்கு இந்தியா இரண்டு ஹெலிகாப்டர்களை வழங்கியது, இது தொடர்பாகவும் சர்ச்சை எழுந்தது. 2018ஆம் ஆண்டில், அப்துல்லா யாமீனின் அரசாங்கம் இந்தியாவிடமிருந்து பரிசாகப் பெற்ற இரண்டு கடற்படை ஹெலிகாப்டர்களை திரும்பப் பெறச் சொன்னது. இந்த ஹெலிகாப்டர்களை மாலத்தீவுக்கு நிவாரணப் பணிகளுக்காக இந்தியா வழங்கியிருந்தது,” என்று தெரிவித்திருந்தது.
மாலத்தீவில் இருந்து இந்தியப் படைகள் அகற்றப்படும் என்று முகமது முய்சு கூறியது குறித்து அரிந்தம் பக்சி தெளிவாக எதுவும் கூறவில்லை. அவர், “மாலத்தீவுடனான இந்தியாவின் பரஸ்பர நெருக்கம், பொதுவான சவால்கள் மற்றும் முன்னுரிமைகளில் உள்ளது. அண்டை வீட்டாராகிய நாம் ஒன்றாகச் செயல்படுவது முக்கியம்,” என்றார்.
மாலத்தீவில் இந்தியாவின் இருப்பு

பட மூலாதாரம், Getty Images
முந்தைய மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் சோலியின் அரசாங்கத்துடன் இந்தியாவின் ஒத்துழைப்பு மிகவும் ஆழமானது.
மாலத்தீவின் சமூகத்திலும் கலாசாரத்திலிம் இந்தியாவின் தாக்கம் மிக நீண்டது.
இந்தியத் திரைப்படங்கள், ஆடைகள், மற்றும் உணவு வகைகள் மாலத்தீவில் மிகவும் பிரசித்தம். திருவனந்தபுரம் மாலத்தீவின் தலைநகரான மாலேவுக்கு அருகில் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மாலத்தீவு குடிமக்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள், குறிப்பாக மருத்துவச் சிகிச்சைக்காக.
ஒரு தீவுக் குழுவால் உருவான இந்தச் சிறிய நாட்டின் பாதுகாப்பில் இந்தியா முக்கியப் பங்காற்றியுள்ளது. 1988இல் ராஜீவ் காந்தி ராணுவத்தை அனுப்பி மௌமூன் அப்துல் கயூமின் அரசைக் காப்பாற்றினார். கடந்த 2018ஆம் ஆண்டு மாலத்தீவு மக்கள் குடிநீர் பிரச்னையை எதிர்கொண்டபோது, பிரதமர் மோதி குடிநீர் அனுப்பி வைத்தார்.
இதற்குப் பிறகு இந்திய அரசு மாலத்தீவை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காகப் பலமுறை கடன் கொடுத்தது.
நெருக்கடியின் ஆரம்பம்

பட மூலாதாரம், Getty Images
முந்தைய மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் சோலி இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் செல்லாத அதிபராகப் பார்க்கப்பட்டார்.
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவுகள் 2018இல் மிகவும் கசப்பாக இருந்தன. இது 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி மாலத்தீவின் உச்ச நீதிமன்றத் தீர்ப்புடன் துவங்கியது.
அதிபர் அப்துல்லா யாமீன் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சிறையில் அடைத்ததன் மூலம் அரசியல் சாசனம் மற்றும் சர்வதேச விதிகளை மீறியதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
முன்னாள் அதிபர் முகமது நஷீத் உட்பட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் விடுவிக்கும் படியும் நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்க அதிபர் அப்துல்லா யாமீன் மறுத்துவிட்டார்.
இதையடுத்து யாமீன் நாட்டில் அவசரநிலையைப் பிரகடனம் செய்தார். இந்த அவசரநிலை 45 நாட்கள் நீடித்தது. இதை இந்தியா எதிர்த்தது. மாலத்தீவில் அனைத்து அரசமைப்பு நிறுவனங்களும் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும் அவசரநிலையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் இந்தியா கூறியிருந்தது.
மாலத்தீவில் ஏற்பட்ட நெருக்கடியால் இந்தியா சீனா ஆகிய இரு நாடுகளும் கவலைக்குள்ளாயின. இந்த நெருக்கடிக்கு மத்தியில், யாமீன் தனது தூதர்களை சீனா, பாகிஸ்தான் மற்றும் சௌதி அரேபியாவுக்கு அனுப்பினார். இதன் பின்னர், மாலத்தீவின் உள்விவகாரங்களில் எந்த நாடும் தலையிடக் கூடாது என்றும், சர்வதேச சமூகம் இதில் ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்க வேண்டும் என்றும் சீனா எச்சரித்தது. எந்தச் சூழ்நிலையிலும் மாலத்தீவின் இறையாண்மையை மீறக்கூடாது என்று சீனா கூறியிருந்தது.
மறுபுறம், மாலத்தீவின் எதிர்க்கட்சித் தலைவர் நஷீத் இந்தியா உதவ வேண்டும் என்று விரும்பினார்.
நீதிபதிகள் காவலில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு இந்தியாவிடமிருந்து ராணுவத் தலையீட்டையும் அவர் எதிர்பார்த்தார். அவர் அமெரிக்காவிடமும் உதவி கோரினார்.
மாலத்தீவிற்கு சென்ற சீனாவின் போர்க்கப்பல்கள்

பட மூலாதாரம், Getty Images
சுந்தா மற்றும் லாம்போக் ஜலசந்தி வழியாக சீன போர்க்கப்பல்கள் நகர்வதை இந்திய கடற்படையும் உறுதி செய்துள்ளது.
இந்த நெருக்கடிக்கு மத்தியில், ஒரு சீன செய்தி இணையதளத்தை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், சீன போர்க்கப்பல்கள் மாலத்தீவு நோக்கி நகர்ந்ததாகச் செய்தி வெளியிட்டிருந்தது.
சுந்தா மற்றும் லாம்போக் ஜலசந்தி வழியாக சீன போர்க்கப்பல்கள் நகர்வதை இந்திய கடற்படையும் உறுதி செய்துள்ளது.
இருப்பினும், இந்தியப் பெருங்கடலில் சீன போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்படுவது புதிய விஷயமல்ல. ஜிபூட்டியில் சீனாவுக்கு ஏற்கெனவே ராணுவ தளம் உள்ளது.
மாலத்தீவில் சீனாவின் இருப்பு இந்தியப் பெருங்கடலில் அதன் மூலோபாய நடவடிக்கையின் ஒரு பகுதியாக உள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு, மாலத்தீவு ஒரு தீவை வெறும் 40 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு ஒரு சீன நிறுவனத்திற்கு 50 ஆண்டு குத்தகைக்கு வழங்கியது.
மறுபுறம், இந்தியாவுக்கும் மாலத்தீவு முக்கியத்துவம் வாய்ந்த நாடுதான். மாலத்தீவு இந்தியாவுக்கு மிக அருகில் இருக்கிறது. அங்கு சீனா காலூன்றினால், இந்தியாவுக்குக் கவலை ஏற்படுவது இயல்பு.
மாலத்தீவு இந்தியாவின் லட்சத்தீவில் இருந்து 700 கி.மீ. தொலைவிலும், இந்தியாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து 1,200 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
மாலத்தீவும், சீனா மற்றும் பாகிஸ்தானின் லட்சியத் திட்டமான ‘ஒன் பெல்ட் ஒன் ரோடு’ திட்டத்திற்கு வெளிப்படையாக ஆதரவளித்து வருகிறது. இந்தியா மாலத்தீவில் இருந்து விலகிச் சென்றால், தெற்காசியாவின் மற்ற சிறிய நாடுகளிலும் சீனாவின் செல்வாக்கு அதிகரிக்கும்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்