
பட மூலாதாரம், Getty Images
கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து களமிறங்கியிருக்கிறது பாகிஸ்தான் அணி.
ஹைதராபாத் நகரில் நடக்கும் இந்தப் போட்டியில் 300 ரன்கள் வரை குவிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஹைதராபாத் ஆடுகளத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ரன் குவிப்பு 288. வெற்றி பெறுவதற்கான ரன் சராசரி 322.
1992-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியைப் போல மீண்டும் உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
1992-ஆம் ஆண்டுக்குப் பிறகு முழுமையான ரவுண்ட் ராபின் முறையில் ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் நடப்பதும் அதற்கு முக்கியமான காரணம்.

பட மூலாதாரம், Getty Images
பெருமளவு காலியாக உள்ள இருக்கைகள்
உலகக் கோப்பை தொடக்கப் போட்டி நடந்த ஆமதாபாத் மைதானத்தில் இருக்கைகள் காலியாக இருந்தது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக இருந்தது.
ஹைதராபாத் மைதானத்திலும் பாகிஸ்தான் – நெதர்லாந்து போட்டியை நேரில் பார்க்க ரசிகர்கள் அவ்வளவாக ஆர்வம்காட்டவில்லை. பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருக்கின்றன.
ஏற்கெனவே ஹைதராபாத் மைதானம் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்று பாகிஸ்தான் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் குறைகூறியிருந்தனர்.
1992-இல் என்ன நடந்தது?
1992-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்வதற்கு வாய்ப்பே இல்லாத அணியாகக் கருதப்பட்டது.
முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் தோல்வி அடைந்தது.
அடுத்ததாக இங்கிலாந்து அணியுடனான போட்டி. வெறும் 74 ரன்களுக்குச் சுருண்டது பாகிஸ்தான். தோல்வி உறுதி என்ற நிலையில் மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்தானது. இரு அணிகளுக்கும் ஒரு புள்ளிகள் கிடைத்தன. இது இங்கிலாந்துக்கு ஏமாற்றமாகவும் பாகிஸ்தானுக்கு சாதகமாகவும் போனது.
அடுத்ததாக இந்தியாவை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி மற்றொரு தோல்வியைச் சந்தித்து. டெண்டுல்கர், அசாருதீன் ஆகியோரின் கணிசமான ரன் குவிப்பால் இந்திய அணி 216 ரன்களை எடுத்தது. ஆனால் 173 ரன்களுக்குச் சுருண்டு தோல்வியடைந்தது பாகிஸ்தான்.
முதல் 5 போட்டிகளில் ஜிம்பாப்வே அணியை மட்டும் பாகிஸ்தானால் வீழ்த்த முடிந்தது. அடுத்ததாக பலமான ஆஸ்திரேலியாவையும், நியூலாந்தையும் எதிர்கொள்ள வேண்டும். இலங்கையுடனான மற்றொரு போட்டியும் இருந்தது.
அந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்வது பற்றி யாருமே கணித்திருக்க மாட்டார்கள். ஆனால் வியக்கத்தக்க வகையில் ஆஸ்திரேலியாவை வென்ற பாகிஸ்தான் அடுத்ததாக இலங்கையையும் வீழ்த்தியது.

பட மூலாதாரம், Getty Images
கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் மோதியது. மொத்தமாக 8 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் அதுவரை ஒரு போட்டியில் கூட நியூசிலாந்து தோற்கவில்லை. அப்படிப்பட்ட அணியை 166 ரன்களுக்குச் சுருட்டியது பாகிஸ்தான். அரைச் சதமும், சதமும் அடித்துக் கொண்டிருந்த கேப்டன் மார்ட்டின் க்ரோவ் அந்தப் போட்டியில் 20 பந்துகளைச் சந்தித்து 3 ரன்களை எடுத்தார்.
ஆஸ்திரேலிய அணி அரையிறுதிப் போட்டிக்கு வரக்கூடாது என்பதற்காக பாகிஸ்தானுக்கு நியூசிலாந்து விட்டுக் கொடுத்ததாகவும் அப்போது பரவலாகப் பேசப்பட்டது. ஏனென்றால் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்துவது எளிது என நியூசிலாந்து அணி கணித்திருக்கலாம் என்று கருதப்பட்டது.
ஆனால் ஆக்லாந்து மைதானத்தில் நடந்த அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்களது வேறு முகங்களைக் காட்டினார்கள். கேப்டன் இம்ரான் கான், மியான் தத், ரமீஸ் ராஜா, இன்சமாம் உல் ஹக் என அனைத்து வீரர்களும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். 37 பந்துகளில் 60 ரன்களைக் குவித்த இன்சமாம் தனது அதிரடியை உலகுக்கு நிரூபித்த தருணங்களுள் முக்கியமானது அது.
அந்தப் போட்டியில் வென்ற பாகிஸ்தான், இறுதிப் போட்டியில் இங்கிலாந்தையும் வீழ்த்தியது. ஒன்றை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். லீக் போட்டியில் வெறும் 74 ரன்களுக்குச் சுருண்ட அதே பாகிஸ்தான் அணிதான் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வெறுங்கையுடன் வெளியேற்றியது. பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் மிரட்டிய வாசிம் அக்ரம், கோப்பையைக் கைப்பற்றுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்