
பட மூலாதாரம், Getty Images
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் என்று வரும்போது அவை பெரும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலும் இவை மிகப்பெரிய மோதல் என்று வர்ணிக்கப்படுகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போட்டிகள் நிகழ்துள்ளன. வீரர்களுக்கு இடையே வாக்குவாதங்களும் நிகழ்ந்துள்ளன.
ஆனால் களத்தில் காணப்படும் இந்த மோதல்களைத் தாண்டி இந்தியா – பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையிலான உறவில் மேலும் பல வர்ணங்களும் உள்ளன.
இந்த உறவு 1947க்கு முன் இந்தியப் பிரிவினை நிகழ்ந்திராத காலகட்டத்தில் இருந்தே தொடர்கிறது.
சுதந்திரத்திற்கு முன் ஒரே ஒரு இந்திய அணி மட்டுமே இருந்தது. அது சர்வதேச அளவில் இந்தியாவுக்காக விளையாடியது.
இதில் லாலா அமர்நாத், சிகே நாயுடு, அப்துல் ஹஃபீஸ் கார்தார், ஃபசல் மஹ்மூத், அமீர் இலாஹி மற்றும் குல் முகமது போன்ற வீரர்கள் இருந்தனர்.
அப்துல் ஹஃபீஸ் கார்தார், அமீர் இலாஹி மற்றும் குல் முகமது ஆகியோர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்காகவும் விளையாடியுள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முதல் போஸ்டர் பாய்களில் ஒருவராகக் கருதப்படும் லாகூர் பந்துவீச்சாளர் ஃபசல் மஹ்மூத்தை இங்கே குறிப்பிடுவது முக்கியம்.

பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் போஸ்டர் பாய், ஃபசல் மஹ்மூத்.
இந்திய அணி 1947ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட இருந்தது. ராய் சிங், லாலா அமர்நாத், ஃபசல் மஹ்மூத் என வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த வீரர்களும் தேர்வுக்காகக் காத்திருந்தனர்.
ஃபசல் மஹ்மூத் 19 வயதில் அணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு அடுத்து நடந்தது வரலாறானது.
“1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி புனேவில் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள லாகூரிலிருந்து வர வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பே என்னிடம் கூறப்பட்டது. 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி நான் லாகூரில் இருந்தேன். ஆனால் அதற்குள் பிரிவினை நடந்துவிட்டது.
பிரிவினைக்குப் பிறகு லட்சக்கணக்கான மக்கள் புலம் பெயர்ந்து கொண்டிருந்த நேரத்தில் நான் லாகூரிலிருந்து புனேவுக்கு சென்று கொண்டிருந்தேன். கலவரத்தால் பஞ்சாப் எரிந்து கொண்டிருந்தது. அது மிகவும் ஆபத்தான பயணமாக இருந்தது,” என்று ஃபசல் மஹ்மூத் தனது சுயசரிதையான ‘டான் டு டஸ்க்’ இல் எழுதியுள்ளார்.
ஆரம்ப திட்டத்தின்படி இந்தியாவுக்குப் பின்னர் சுதந்திரம் கிடைப்பதாக இருந்தது. எனவே புதிய சூழ்நிலையைச் சமாளிக்க இந்திய கிரிக்கெட் தேர்வாளர்கள் தயாராக இருக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
பிரிவினைக்குப் பிறகு முதல்முறையாக 1954ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்தது.
“இறுதியாக 1947இல் இந்திய கிரிக்கெட் அணி கலைக்கப்பட்டது. மதக் கலவரங்களுக்கு மத்தியில் புனேவில் இருந்து இப்போது பாகிஸ்தானாக மாறியுள்ள லாகூரில் உள்ள எனது வீட்டிற்கு எப்படித் திரும்புவது என்பதுதான் எனக்கு முன்னால் இருந்த மிகப்பெரிய சவால்.
நான் புனேவிலிருந்து ரயிலில் பம்பாய்க்கு வந்தேன். என்னுடன் சி.கே.நாயுடுவும் இருந்தார். ரயிலில் இருந்த சில வெறியர்களின் பார்வை என் மீது விழுந்தது. அவர்கள் எனக்கு தீங்கு செய்ய நினைத்தார்கள். ஆனால் சி.கே.நாயுடு என்னைக் காப்பாற்றினார்.
அவர் தனது கிரிக்கெட் மட்டையுடன் எல்லோருக்கும் முன்னால் நின்றுகொண்டு, என்னை விட்டு விலகி இருக்குமாறு கூறினார்,” என்று ஃபசல் மஹ்மூத் தனது வாழ்க்கை வரலாற்றில் எழுதியுள்ளார்.
சி.கே.நாயுடு பிரிக்கப்படாத இந்தியாவின் முதல் கேப்டனாகவும், பழம்பெரும் வீரர்களில் ஒருவராகவும் இருந்தார். மேலும் அவரது பெயரில் கர்னல் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது நிறுவப்பட்டது.
பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் அணி 1952இல் முதல் முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தது. அந்த சுற்றுப் பயணத்தில் லாலா அமர்நாத் மற்றும் அப்துல் ஹஃபீஸ் கார்தார் போன்ற பல வீரர்கள் இருந்தனர். அவர்கள் பிரிக்கப்படாத இந்தியாவுக்காக ஒன்றாக விளையாடியவர்கள். லாகூரில் வசிக்கும்போது மிண்டோ பூங்காவில் ஒன்றாகப் பயிற்சி செய்தவர்கள்.
பாகிஸ்தான் அணி வந்ததும் அவர்களை வரவேற்க லாலா அமர்நாத் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த வீரர்கள் வந்து செல்வது தொடர்ந்தது. நட்புக் கதைகளும் உருவாயின.
இம்ரான் கான் மற்றும் சுனில் கவாஸ்கருக்கு இடையிலான பரஸ்பர உறவாக இருந்தாலும் சரி, ஜாவேத் மியாந்தாத் மற்றும் திலீப் வெங்சர்க்கருக்கு இடையிலான பரஸ்பர உறவாக இருந்தாலும் சரி, நட்பின் கதைகள் தொடர்ந்தன.
இந்திய பாகிஸ்தான் அணிகள் இணைந்து விளையாடிய ஹோலி பண்டிகை

பட மூலாதாரம், Getty Images
1933ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான பம்பாய் டெஸ்டில் சி.கே. நாயுடு (இடது) மற்றும் லாலா அமர்நாத் (வலது)
இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளில் இப்போது நாம் 1986-87 பற்றிப் பேசுவோம். அப்போது பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்திருந்து.
பெங்களூருவில் டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருந்தது. டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே ஒரு நாள் ஓய்வு அளிக்கப்பட்ட காலம் அது.
போட்டியின் மூன்றாவது நாள் ஓய்வு நாளாக இருந்தது. அது இந்தியாவில் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை தினம்.
பாகிஸ்தான் வீரர்களான அப்துல் காதர், இம்ரான் கான், வாசிம் அக்ரம், ரமீஸ் ராஜா, ஜாவேத் மியான்தாத், சலீம் மல்லிக், தௌசிப் அகமது, இக்பால் காசிம் போன்ற வீரர்கள் ஹோட்டலில் இருந்தனர்.
பாகிஸ்தான் அணியினர் தங்கள் நாளை ஆரம்பிப்பதற்கு முன்பே இந்திய அணி வர்ணங்களின் விளையாட்டை ஆரம்பித்தது. இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரேயும் அணியில் இடம்பெற்றிருந்தார். அவரும் அன்று ஹோலி விளையாடினார்.
“கடந்த 1987இல் பெங்களூருவில் டெஸ்ட் போட்டி நடந்தது. ஹோலி தினத்தன்று இரு அணியினரும் ஹோட்டல் முழுவதிலும் சிவப்பு வண்ணம் பூசினர். நீச்சல் குளமும் சிவப்பு நிறமாக மாறியிருந்தது. பாகிஸ்தான் வீரர்கள் மிகவும் உற்சாகமாக இருந்தனர்.
ஹோட்டல் எங்களை எச்சரித்ததுடன் அபராதமும் விதித்தது. 50,000 ரூபாய் அபராதம் என்று நினைக்கிறேன். அந்த நேரத்தில் அது மிகப்பெரிய தொகை. அடுத்த நாள் போட்டியில் ஒருவரை ஒருவர் எதிர்த்து கடுமையாகப் போராடினோம். ஆனால் அது உற்சாகமாக இருந்தது,” என்று பிபிசியிடம் பேசிய அவர் தெரிவித்தார்.
“விளையாட்டு, மக்களை ஒன்றிணைக்கும் பணியைச் செய்கிறது. இதுவொரு முக்கியமான பணி. திலீப் வெங்சர்க்கார் மற்றும் பிற வீரர்கள் 2004ஆம் ஆண்டு ஜாவேத் மியான்தத்தின் வீட்டிற்குச் சென்றிருந்தனர்.
அப்போது நான் தேர்வாளராக இருந்தேன். அவர் எங்களை இரவு உணவிற்கு அழைத்திருந்தார். அவர்களுடன் விளையாடுவது உற்சாகமாக இருந்தது. குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த வீரர்களுக்கு இடையே ஸ்லெட்ஜிங்கும் (கோபத்தை தூண்டக்கூடிய செயல்கள்) இருந்தது.
போட்டியின்போது நாங்கள் முழுமையாக எதிர்த்துப் போராடுகிறோம். ஆனால் மைதானத்திற்கு வெளியே இந்தியா பாகிஸ்தான் வீரர்கள் ஒன்றுகூடி இருப்பார்கள். வேடிக்கையாக, பாடல்களைப் பாடுவார்கள்,” என்று ஃபசல் மஹ்மூத் மேலும் எழுதுகிறார்.
மனிந்தர் சிங் மற்றும் சலீம் மல்லிக்கின் நட்பு

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் மனிந்தர் சிங்.
ஹோலிக்கு அடுத்த நாள் ஆட்டத்தைப் பார்த்தால், பல வீரர்களின் கைகளில் வர்ணம் இருப்பதைக் காணலாம் என்று விஷயம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். 1987இல் நடந்த இந்த டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஆனால் அந்தத் தொடரின் பல வீரர்கள் ஹோலியின்போது செய்த குறும்புத்தனமான விளையாட்டுகளுக்காகவும் அதை நினைவில் கொள்கிறார்கள். அந்த இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் மனிந்தர் சிங்கும் இடம் பெற்றிருந்தார்.
“பாகிஸ்தான் அணி 1987ஆம் ஆண்டில் இந்தியா வந்தபோது, பாகிஸ்தானுக்காக சலீம் மல்லிக் பேட்டிங் செய்து கொண்டிருந்தார், நான் இந்தியாவுக்காக பந்துவீசிக் கொண்டிருந்தேன். சலீம் மல்லிக் என் பந்தை அடிக்க முயன்றார், நான் அவரைத் தடுக்க முயன்றேன்,” என்று பிபிசியின் ஆதேஷ் குமார் குப்தாவிடம் பேசும்போது மனிந்தர் சிங் தெரிவித்தார்.
“இப்போது விஷயம் என்னவென்றால் அவருடன் எனக்கு நல்ல நட்பு இருந்தது. மாலையில் சந்திக்கும்போது ஒருவருக்கொருவர் ஜாலியாக சவால் விடுவோம். நாளை ஆடுகளத்தில் உங்களைப் பார்த்துக்கொள்கிறேன் என்று சலீம் மல்லிக் சொல்வார்.
நீங்கள் எப்படி ரன் அடிக்கிறீர்கள் என்று பார்க்கிறேன் என்றும் நானும் கூறுவது வழக்கம். ஆடுகளம் எப்படி இருந்தாலும், நான் உங்களுக்கு எதிராக ரன்களை அடிக்கப் போகிறேன் என்று அன்று மாலை அவர் என்னிடம் சொன்னார்.
எங்களுக்கு இடையே இது எப்போதும் தொடரும் ஒன்றாக இருந்தது. பெங்களூர் டெஸ்ட் போட்டியில் நான் அவரை டிஸ்மிஸ் செய்தேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடையத் தொடங்கின. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் பயணங்கள் குறைந்தன.
இம்ரான் மற்றும் கவாஸ்கருக்கு இடையிலான உறவு

பட மூலாதாரம், Getty Images
2016 டி20 உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன் இரு நாட்டு முன்னாள் வீரர்களும் ஒரே மேடையில்.
ஆதேஷ் குமார் குப்தா கடந்த பல தசாப்தங்களாக கிரிக்கெட் செய்திகளை வழங்கி வருகிறார்.
“பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா இந்த சம்பவத்தை விவரித்த ஒரு நிகழ்ச்சியில் நானும் இருந்தேன். இந்தியாவுக்கு எதிரான போட்டியின்போது இம்ரான் கான், ரமீஸ் ராஜாவிடம், ’நீங்கள் பேட்டிங் கற்றுக்கொள்ள விரும்பினால் இங்கே வாருங்கள்’ என்று கூறினார்.
அப்போது கவாஸ்கர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அவர் ரமீஸ் ராஜாவை ஃபார்வேர்ட் ஷார்ட் லெக்கில் நிறுத்தினார். அரை மணிநேரம் கழித்து ரமீஸ் ராஜா இம்ரான் கானிடம் ’என்னை ஏன் இங்கு நிற்க வைத்தீர்கள். கவாஸ்கர் ஒரு பந்தைக்கூட விளையாடவில்லை. எல்லா பந்துகளையும் விட்டுவிடுகிறார் ‘ என்று சொன்னார். ’நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது இதுதான்’ என்று இம்ரான் கான் பதில் கூறினார்,” என்று ஆதேஷ் குமார் குப்தா குறிப்பிட்டார்.
சுனில் கவாஸ்கர் 2018இல் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் இம்ரான் கானுக்காக ஒரு கட்டுரை எழுதினார்.
”நான் ஓய்வு பெறப் போவதாக இம்ரானிடம் கூறியபோது இம்ரான் என்னிடம், “நீங்கள் இப்போது ஓய்வுபெற முடியாது. பாகிஸ்தான் அடுத்த ஆண்டு இந்தியா வருகிறது. இந்தியாவில் இந்தியாவை தோற்கடிக்க விரும்புகிறேன். நீங்கள் அணியில் இல்லை என்றால் இந்த வெற்றிக்கு அர்த்தம் இருக்காது. கடைசியாக நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்’ என்று சொன்னார்.
இது 1986இல் நடந்தது. நாங்கள் லண்டனில் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். 1971இல் இம்ரான் கவுண்டி அணியில் இடம்பிடிக்க முயன்ற காலத்தில் இருந்தே நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் அறிவோம்,” என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் பாலிவுட்டும்

பட மூலாதாரம், Getty Images
இம்ரான் கான் ஒரு கிரிக்கெட் வீரராக இந்தியாவில் மிகவும் பிரபலமானவர்.
பாகிஸ்தானின் மூத்த செய்தியாளர் ரஷித் ஷகுர், ’தி செகண்ட் இன்னிங்’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். 1979-80இல் இந்தியா வந்தது தொடர்பான தனது நினைவுகளை பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சிக்கந்தர் பக்த் அவரது சேனலில் பகிர்ந்து கொண்டார்.
“நடிகை ரீனா ராய் மற்றும் அவரது குடும்பத்தினருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் அணிக்காக விருந்து கொடுக்க விரும்புவதாக ஒருமுறை ரீனா ராய் கூறினார். அமிதாப், ஃபிரோஸ், ரேகா அனைவரும் விருந்துக்கு வந்தனர். இது தவிர லக்ஷ்மிகாந்த்-பியாரேலால் ஜோடியின் லஷ்மிகாந்துடன் எனக்கு நட்பு ஏற்பட்டது,” என்று சிக்கந்தர் பக்த் தெரிவித்தார்.
“பாகிஸ்தான் பள்ளிப் பேருந்துகளில் உங்கள் பாடலான ’சல் சல் மேரே பாய்’ நன்றாக ஒலிக்கிறது என்று நான் அவரிடம் சொன்னபோது லக்ஷ்மிகாந்த் ஆச்சரியப்பட்டார். அப்போது அந்தப் படம் வெளியாகியிருக்கவில்லை, பாடலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் என்னை கிஷோர் குமாரின் பாடல் பதிவுக்கு அழைத்துச் சென்றார். ஜூனூன் படத்தைப் பார்க்கவேண்டும் என்று நான் விருப்பம் தெரிவித்தேன். அவர் எனக்காக ஒரு சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்தார்.
நானும் பிரேம் சோப்ராவும் நண்பர்களாக இருந்தோம். நாங்கள் ஒருவருக்கொருவர் கடிதம் எழுதிக்கொண்டோம். எங்களிடையே இத்தகைய உறவு இருந்தது,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் மற்றும் இந்திய வீரர்களுக்கு இடையே போட்டியுடன் கூடவே இந்த வகையான உறவுகளும் தொடர்ந்து இருந்து வருகிறது. ஜஸ்பிரீத் பும்ரா தந்தையானதற்கு ஷாஹின் அஃப்ரீதி அன்பளிப்பை வழங்கியதை ஆசியக் கோப்பை போட்டிகளின்போது நாம் பார்த்தோம்.
கடந்த ஆண்டு தொடக்கத்தில், பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூஃப்பின் மகளுடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
தூதாண்மை மற்றும் கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images
2008ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியில் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப், தோனியை பாராட்டினார்.
இந்தியாவுடனான உறவுகளின் ஏற்ற இறக்கங்களில் பலமுறை தூதாண்மையின் வடிவமாக கிரிக்கெட் பயன்படுத்தப்பட்டது. 2004ஆம் ஆண்டு செளரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் சென்றபோது, ஆட்டத்தை மட்டுமல்ல மனதையும் வெல்லுங்கள் என்று அப்போதைய பிரதமர் வாஜ்பாயி கூறியிருந்தார்.
கடந்த 2005 ஏப்ரலில் பர்வேஸ் முஷாரஃப் கிரிக்கெட் போட்டியைக் காண இந்தியா வந்தார். 2011இல், அரையிறுதிப் போட்டியின்போது இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானியை அழைத்தார்.
முன்னதாக 1987ஆம் ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஜியா உல் ஹக் கிரிக்கெட் போட்டியைக் காண இந்தியா வந்திருந்தார். இரு நாட்டு ராணுவத்தினரிடையே பெரும் பதற்றம் நிலவிய காலகட்டம் அது.
கிரிக்கெட் தூதாண்மையின் இந்தப் பழைய முயற்சிகளுக்கு மத்தியில் இப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நடுநிலை மைதானங்களில் மட்டுமே விளையாடுகின்றன. அதாவது போட்டிகள் இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ நடைபெறுவதில்லை. மூன்றாவது நாட்டில் நடைபெறுகின்றன.
இரு அணிகளுக்கிடையே போட்டிகள் நடக்கின்றன. வெற்றி தோல்விகளும் நிகழ்கின்றன. ஆனால் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் சந்தர்ப்பங்களும், திரைப்படங்களும் பழைய காலத்தின் நினைவாகிவிட்டன.
ஆனாலும் சில புகைப்படங்கள் அவ்வப்போது இந்த நட்பை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். உதாரணமாக பிஷன் சிங் பேடி நோயின் பிடியிலிருந்து மீண்டு 2022இல் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப்புக்கு சென்றபோது, அவரது பாகிஸ்தான் கிரிக்கெட் நண்பர்களான இந்திகாப் ஆலம் மற்றும் ஷஃப்கத் ராணா ஆகியோர் அவரை குருத்வாராவில் சந்திக்க வந்தனர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த மூன்று நண்பர்களும் கட்டி அணைத்தனர். பழைய பாடல்களைப் பாடி அழுதனர். ஒன்றாக அமர்ந்து உணவு உண்டனர். புதிய நினைவுகளை ஏற்படுத்திக்கொண்டனர்.
பாகிஸ்தானுக்காக விளையாடிய இதே இந்திகாப் ஆலம்தான் 2004இல் இந்தியாவில் பஞ்சாப் ரஞ்சி அணியின் பயிற்சியாளராக ஆனார். இதே பஞ்சாபின் ஹோஷியார்பூரில்தான் 1941இல் அவர் பிறந்தார். அதாவது அவரது வாழ்க்கையின் சக்கரம் தொடங்கிய அதே இடத்திற்கு மீண்டும் வந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்