
மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுர சைவ மடத்தின் மடாதிபதியை பணம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவரது பெயரை நீக்கவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. அது உண்மையா, இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது?
மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்திருக்கிறது தருமபுர ஆதீனம். இந்த ஆதீனத்தின் 27-வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் என்பவர் மடாதிபதியாக இருந்து வருகிறார்.
மடாதிபதியின் சகோதரரான விருதகிரி என்பவர், அவருடைய உதவியாளராகவும் இருந்து வருகிறார். அவர் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதியன்று மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்தப் புகாரில் ‘ஆடுதுறையைச் சேர்ந்த வினோத் என்பவரும் திருவையாறைச் சேர்ந்த மடாதிபதியின் சேவகராகப் பணிபுரியம் செந்தில் என்பவரும் சேர்ந்துகொண்டு, மடாதிபதி சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோவும் ஆடியோவும் தங்களிடம் இருப்பதாகவும் அதை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்றும் கூறி மிரட்டியதுடன் என் கழுத்தை நெரித்துக் கொலைசெய்யவும் முயற்சி செய்தார்கள்,’ எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், ‘எங்கள் சார்பில் திருவெண்காட்டைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் தொடர்புகொள்வார்’ என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
என்ன நடந்தது?

மேலும், ‘விக்னேஷ் என்பவர் இந்தப் பணத்தைக் கேட்டு தன்னை கழுத்தை நெரித்து கொல்ல முயற்சித்ததாகவும்’ செம்பனார் கோவிலில் உள்ள கலைமகள் பள்ளிக்கூடத்தின் உரிமையாளர் கொடியரசு, செய்யூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், விஜயகுமார், பா.ஜ.கவின் மாவட்டத் தலைவர் அகோரம் ஆகிய நான்கு பேரின் தூண்டுதலின் அடிப்படையிலேயே விக்னேஷும் வினோத்தும் தன்னையும் மடாதிபதியையும் மிரட்டுவதாகவும் இதன் காரணமாக மடத்தில் உள்ளவர்கள் மன உளைச்சலில் இருப்பதால், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்தார்.
இதைனையடுத்து வினோத், விக்னேஷ், கொடியரசு, செந்தில், ஜெயச்சந்திரன், விஜயகுமார், அகோரம் ஆகியோர் மீது 323, 307, 389, 506, 120 B ஆகிய பிரிவுகளின் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
இந்த வழக்கின் அடிப்படையில் ஆடுதுறை வினோத், செம்பனார் கோவிலில் உள்ள கலைமகள் பள்ளிக்கூடத்தின் உரிமையாளர் கொடியரசு, சீர்காழி ஒன்றிய பா.ஜ.கவின் முன்னாள் தலைவர் திருவெண்காடு விக்னேஷ், திருவிடைமருதூர் நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் ஆகிய நான்கு பேரை மயிலாடுதுறை காவல்துறை கைதுசெய்துள்ளது. மேலும் ஐந்து பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
மடம் சார்பாக விளக்கம்

பட மூலாதாரம், Dharumapuram Adheenam
தருமபுர மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தற்போது உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் நிலையில், இந்தப் புகாரை விருதகிரி அளித்திருக்கிறார். தவிர, மடாதிபதியின் உதவியாளரான செந்தில் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரும் உத்தரப்பிரதேசம் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் மடத்தின் சார்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. “சில நாட்களாக தருமபுரி மடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து மடம் சம்பந்தமான சில போலியான ஆடியோ மற்றும் வீடியோக்களைத் தயாரித்து, மடத்தில் வேலை செய்பவர்களையும் மடத்தின் விசுவாசிகளையும் அணுகி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர். இதை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டுமென நாங்கள் காவல்துறையை நாடினோம். காவல்துறை தமிழக முதல்வரின் ஆணைப்படி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகத் துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளது.
“மிகத் துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும் எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த காவல்துறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். தருமபுர மடத்தையும் எங்களையும் ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்த தமிழ்நாடு முதல்வருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்,” என கூறப்பட்டிருந்தது.
இதற்குப் பிறகு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இந்த கைது தொடர்பாக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது.
திடீர் திருப்பம்

இதற்கிடையில் திடீர் திருப்பமாக மடத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்ட செந்தில் என்பவரின் பெயரை நீக்க காவல்துறையிடம் விருதகிரி மனு ஒன்றை அளித்ததாக செய்திகள் வெளியாயின. இந்த மனுவை மடத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் எடுத்துவந்து மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்ததாகச் சொல்லப்படுகிறது.
அந்தக் கடிதத்தில், “நான் தங்களிடம் கொடுத்துள்ள புகாரில் எங்கள் மடத்தில் சேவை செய்யும் செந்தில் என்பவரும் கூட்டாக, தொடர்பு கொண்டு என்று பதற்றத்தில் கணிணியாக்கம் செய்யும்போது கவனமின்மையால் குறிப்பிட்டுவிட்டேன்.
“அவர் எங்கள் மடத்தின் நேர்மையான உண்மையான பணியாளர். ஆதீனத்தின் நேரடி உதவியாளராகப் பணிபுரிந்து இதுநாள்வரை தவறான நிலைப்பாட்டை எடுத்ததில்லை.
“நான் அவரை புகாரில் குறிப்பிட்டுள்ளது எனது கவனமின்மையே காரணமாகும் அவருக்கும் இந்தப் புகாருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆகவே நான் கொடுத்துள்ள புகாரின் பேரில் பதியப்பட்டுள்ள வழக்கிலிருந்து அவரை விடுவிக்கவேண்டும்,” எனக் கூறியிருந்தார்.
“அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்து விஷயத்தை பிரச்சனையில்லாமல் முடித்துக்கொள்ளுங்கள், வீணாக ரவுடிகளிடம் பிரச்சனை வைத்துக்கொள்ளாதீர்கள். அவர்கள் சொல்வதைச் செய்யக்கூடியவர்கள் என மடாதிபதியின் உதவியாளர் செந்தில் கூட்டாகச் சேர்ந்துகொண்டு மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்,” என்று முதல் தகவல் அறிக்கையில் புகார் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரை புகாரிலிருந்து விடுவிக்க மனு கொடுக்கப்பட்டதாக வெளியான செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இப்படி மாற்றி மாற்றி செய்திகள் வெளியான நிலையில், புகார்தாரரும் மடாதிபதியின் சகோதரருமான விருதகிரியிடம் தொடர்புகொண்டு பேசியபோது, “நான் எந்த புகாரையும் வாபஸ் வாங்கவில்லை. இதுபோல செய்தி வெளியிடுவதற்கு முன்பாக என்னிடம் எந்த ஊடகமாவது உறுதிசெய்திருக்க வேண்டாமா? செந்தில் மீது தான் அளித்த புகார் அப்படியே இருக்கிறது,” என்று குறிப்பிட்டார். இது தவிர வேறு எந்தக் கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை.
தருமபுர மடாதிபதி ஊரில் இல்லாத நிலையில், காவல்துறையில் இவ்வளவு பெரிய புகார் அளிக்கப்பட்டிருப்பதும் அது தொடர்பாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்