
பட மூலாதாரம், ACTC
இருக்கைகள் , போக்குவரத்து உள்ளிட் ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் முறையாக செய்யவில்லை என்றும் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சென்னை ஈசிஆர் சாலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசைநிகழ்ச்சியில், பலர் கூட்டநெரிசலில் சிக்கித் தவித்ததும், கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதும் பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மானின் நிகழ்ச்சிக்கு ஜனத்திரள் கூடும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டிருந்தபோதும், இந்த நிகழ்வில் பொதுமக்களின் வாகனங்கள், முதல்வரின் வாகனம் உள்பட பல வாகனங்கள் சிக்கிக்கொண்டது அதிகமாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வால் ஏற்பட்ட குழப்பங்கள், வாகன நெரிசலுக்கான காரணங்கள் குறித்த ஆய்வு தொடங்கியுள்ள நிலையில், அதிக மக்கள் திரளும் நிகழ்வுகளுக்கான விதிமுறைகள் இந்த நிகழ்வில் மீறப்பட்டுள்ளனவா என்ற கேள்வியும் எழுகிறது.

பட மூலாதாரம், Getty Images
சமீபத்தில் சென்னையில் நடந்த ‘இசைப்புயல்’ ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கான ஏற்பாடுகள் முறையாக செய்தாததால் பலர் அவதிப்பட்டனர்.
பெரிய நிகழ்வுகளை ஒருங்கிணைக்க என்ன விதிமுறைகள் பின்பற்றபடவேண்டும் என்றும், ஏ ஆர் ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ நிகழ்வில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்தும் முன்னாள் டிஜிபி நட்ராஜிடம் கேட்டோம். சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர் இவர்.
முதல் காரணம், நிகழ்வுக்காக தேர்வு செய்யப்பட்ட இடம் தவறானது என்று நேரடியாக சொல்கிறார் நட்ராஜ்.
”சென்னை நகரத்தில் அதுவும் ஞாயிற்றுக் கிழமை நடக்கும் நிகழ்வு, அதிலும் குறிப்பாக இசைநிகழ்ச்சி, ஏ ஆர் ரஹ்மான் போன்ற நட்சத்திர அந்தஸ்து உள்ள நபரின் நிகழ்வு என்றால், அதில் கட்டாயம் போக்குவரத்து பிரச்னைகள் வரும் என்பது இயல்பாக யூகிக்கக்கூடிய ஒன்று. இருந்தும், அந்த நிகழ்வு நடந்த இடம்தான் தவறான தேர்வு என்பது என் கருத்து. சென்னை நகரத்தின் பிரதான பகுதிகளான ராயப்பேட்டை, சைதாப்பேட்டை, அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளில் கூட அதிக கூட்டம் வரும். ஆனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் நிகழ்வு நடக்கும். ஆனால் ஈசிஆர் சாலையில், குறுகலான சாலையில், போக்குவரத்து மாற்றங்களுக்கான சாத்தியங்கள் குறைவாக உள்ள இடத்தில் நிகழ்வு நடத்தப்பட்டதுதான் தவறு, ”என்கிறார்.

பட மூலாதாரம், Facebook
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இந்த பெரிய நிகழ்வுக்கான சோதனை ஓட்டத்தை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும் என்கிறார் முன்னாள் டிஜிபி நட்ராஜ்.
சென்னையில் பெரிய நிகழ்வுகளை எப்படி நடத்துகிறார்கள்?
இதுபோன்ற அதிக மக்கள் கூடும் நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்பே, ‘Dry Run’ என்று சொல்லப்படும், சோதனை ஓட்டம் நடத்தியிருக்கவேண்டும். அதனை நடத்தினார்களா என்பது கேள்விகுறி என்கிறார் அவர்.
”நிகழ்ச்சி தொடங்குவதற்கு இரண்டு நாளுக்கு முன்னர் அல்லது முந்தைய நாளில் இருந்தே போக்குவரத்து தடங்கள் மாற்றி அமைக்கப்படும். இந்த நிகழ்வில் அதுபோன்ற மாற்றங்கள் முன்னர் செய்யவில்லை. வாகனங்கள் பல மணிநேரம் சாலைகளில் தேங்கியிருந்த பின்னர்தான் போக்குவரத்து மாற்றங்களை செய்திருக்கிறார்கள் என்பதால்தான் பலமணிநேரம் ஆயிரக்கணக்காக மக்கள் நெரிசலில் சிக்கியிருக்கிறார்கள்,”என்கிறார் நட்ராஜ்.
எடுத்துக்காட்டாக, சுதந்திரதினம், குடியரசுதினம், மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் 63நாயன்மார்கள் வீதி உலா நிகழ்வு உள்ளிட்ட நிகழ்வுகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகின்றன. போக்குவரத்து மாற்றம் குறித்த திட்டமிடல் காரணமாக தான் இந்த நிகழ்வுகள் தடங்கல் இன்றி நடைபெறுகின்றன என்றார்.
முதல்வரின் வாகனம் சிக்கிக்கொண்ட விபரீதம்
முதல்வரின் வாகனம் கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது பற்றி கேட்டபோது, அது மிகவும் வியப்பை ஏற்படுத்தியதாக கூறுகிறார்.
பொதுவாக முதல்வர் ‘கான்வாய்’ (convoy) வாகனம் செல்லும்போது, முதல்வர் பயணிக்கும் வாகனம், உள்பட குறைந்தபட்சம் ஆறு வாகனங்கள் செல்லவேண்டும். அதாவது,முதல்வரின் வாகனம், இரண்டு எஸ்கார்ட் வாகனங்கள்(escort), ஒரு மருத்துவ குழு வாகனம், இரண்டு சிறப்புபாதுகாப்பு வாகனங்கள்(striking force) என ஆறு வாகனங்கள் செல்லும் என்று விளக்குகிறார். அதோடு அவர் செல்லும் இடத்தைப் பொறுத்து, நகர பகுதிகளில் ஒரு விதமாகவும், பிற மாவட்டங்களுக்கு செல்லும்போது மற்றொரு விதமாகவும், அதிக பாதிப்புள்ள பகுதி/பாதிக்கப்பட்ட பகுதி அல்லது தீவிர பிரச்னை/ஆபத்து உள்ள பகுதிகளுக்கு செல்லும்போது, பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை மாறுபடும் என்கிறார் அவர்.
ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்வு காரணமாக, முதல்வரின் வாகனமும் நெரிசலில் சிக்கியது விபரீதமான சம்பவம்தான் என்கிறார்.
”நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் சோதனை ஓட்டத்தில் பங்குபெற்றார்களா? போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வரின் வாகனம் கூட்ட நெரிசல் மிகுந்த இடத்திற்கு செல்லவிருக்கிறது என்று தெரியுமா? ஏனெனில், முதல்வர் மற்றும் சிறப்பு அந்தஸ்து உள்ளவர்களின் வாகனங்கள் செல்லும் பாதையில் நெரிசல் இல்லாமல் கண்காணிக்கப்படவேண்டும் என்பதற்கான செய்தி கண்டிப்பாக, முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருக்கும். இதெல்லாம் மீறி, எப்படி நெரிசல் ஏற்பட்டது என்பது வியப்பாக உள்ளது,”என்கிறார் நட்ராஜ்.
கூட்ட நெரிசல் பற்றிய விசாரணை தொடக்கம்
சென்னை தாம்பரம் காவல் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் நிகழ்வு நடைபெற்றுள்ளதால், அந்த நிகழ்வு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் காவல் ஆணையர் அமல்ராஜிடம் பேசினோம்.
இசைநிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து மக்கள் வெளியேறுவதுவரை பல சிக்கல்கள் ஏற்பட்டது எப்படி என்றும் நிகழ்வு ஒருங்கிணைப்பிற்கான விதிமுறைகள் எவ்வாறு பின்பற்றப்பட்டன என்று கேட்டோம்.
”இந்த பிரச்னை இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்தது. தற்போது இது பற்றிய விசாரணை நடத்திவருகிறோம். இது குறித்து உடனடியாக பேசமுடியாது “ என்று தெரிவித்துவிட்டார்.
பெண்கள் மீதான பாலியல் சீண்டல்

பட மூலாதாரம், Twitter
நிகழ்ச்சிக்கு வந்த பெண்கள் கூட்ட நெரிசலில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டதாக தெரிவித்தனர்.
நிகழ்வுக்காக சென்ற பெண்கள் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கியதால் நிகழ்வுக்கு செல்லமுடியாத பெண்கள் சிலர், மோசமான பாலியல் சீண்டல் அனுபவத்தை பெற்றதாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். பெண்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை சாதாரணமாக கடந்துபோய்விடக்கூடாது என்கிறார் தமிழ்நாடு பெண்கள் ஆணையத்தின் தலைவியான குமாரி.
பிபிசி தமிழிடம் பேசிய குமாரி, இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்தார்.
”பெண்கள் பலரும் மோசமான பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக சொல்வதை கேட்டபோது, அதிர்ச்சியாக இருந்தது. இதுபோன்ற கூட்டம் நிறைந்த இடத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தனிப்பட்ட உதவி மையம் அமைந்திருக்கவேண்டும். இவ்வளவு பெரிய நிகழ்ச்சியில் பல ஆயிரம் பெண்கள் கலந்துகொள்ள வருவார்கள் என்று தெரிந்திருந்தும், ஏன் பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை என்பது வேதனை தருகிறது. சில பெற்றோர் தங்களது குழந்தைகளை காணவில்லை என்று கூறியதை கேட்கும்போது அவர்கள் எவ்வளவு வலியை அனுபவித்திருப்பார்கள் என்று புரிகிறது,”என்கிறார் குமாரி.
நிகழ்வை நடத்தியவர்கள் என்ன முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்திருந்தார்கள் என்று விரிவான அறிக்கையாக தரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Instagram
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நிறுவனம், இந்த அசௌகரியத்துக்கு தங்கள் நிறுவனம் மட்டுமே பொறுப்பு, ஏ ஆர் ரஹ்மான் பொறுப்பல்ல என்று தெரிவித்துள்ளது
பெரிய நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்னதாக, என்ன செய்திருக்கவேண்டும் என தனியார் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் நிறுவனத்தை நடத்தும் அருணிடம் கேட்டோம். திரைப்பட நட்சத்திரங்களின் திருமண நிகழ்வுகள் மற்றும் திரைப்பட ரசிகர்களுக்கான சிறப்பு சந்திப்பு நிகழ்வுகளை இவர் நடத்துகிறார்.
”கூட்ட நெரிசல் திடீரென ஏற்பட வாய்ப்பில்லை. முதலில், டிக்கெட் விற்பனைக்கு ஏற்ப இருக்கைகள் என்பத்தைத்தாண்டி, கூடுதலாக ஒரு மடங்கு அளவு மக்கள் திரளும் அளவில்தான் இதுபோன்ற பெரிய நிகழ்வுகளை நடத்தவேண்டும். திரைப்பட நட்சத்திரங்கள், அதுவும் ரஹ்மான் நிகழ்ச்சி என்பதால், ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரள்வார்கள் என்பதால், வெறும் டிக்கெட் எண்ணிக்கைக்கான அளவை மட்டுமே நாம் கணக்கில் வைத்துக்கொண்டு ஏற்பாடுகளை செய்யக்கூடாது,”என்கிறார் அருண்.
தற்காலிக சோதனை சாவடிகள், குடிநீர், கழிவறை வசதிகள், தீயணைப்பு வாகனம் வந்துசெல்வதற்கான சிறப்பு பாதை போன்றவற்றை கணக்கில்கொண்டுதான் நிகழ்வு இடமும், மேடையும் அமையவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
மேலும், பல ஆயிரம் நபர்கள் சூழும் இடம் என்பதால், அவ்வப்போது, முக்கிய தகவல்களை சொல்வதற்கு உதவி மையங்கள் இருந்திருக்கவேண்டும் என்கிறார்.
”நிகழ்வு நடக்கும் இடத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில், கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்திருக்கவேண்டும். ஏனெனில், ஞாயிற்றுகிழமை, அதுவும் இசைநிகழ்ச்சி என்பதால், மக்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பார்கள், குறிப்பாக வந்தவர்கள் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக வெளியேறும்வரை, உதவி மையங்கள் செயல்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். காவல்துறை பாதுகாப்பு மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைத்த நிறுவனத்தின் பாதுகாப்பு அலுவலர்கள் என இரண்டு தரப்பும் நெரிசல் ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவரச காலங்களில் கூட்டத்தை சமாளிக்கமுடியும்,”என்கிறார் அருண்.
ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ நிகழ்வை ஒருங்கிணைத்த ஏசிடிசி நிறுவனத்தை தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண் வேலைசெய்யவில்லை என்ற செய்திதான் கிடைத்தது.

பட மூலாதாரம், Getty Images
போக்குவரத்து நெரிசலில் முதல்வரின் வாகனமும் சிக்கிக் கொண்டது.
ஏசிடிசி நிறுவனத்தின் தலைவரான ஹேமந்த் ராஜா இன்ஸ்டாகிராமில் ஒரு காணொளியை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நிகழ்வில் ஏற்பட்ட எல்லா அசௌகரியத்திற்கும் தனது நிறுவனமே பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.
”நிகழ்வில் நடந்த அசௌகரியங்களுக்கு ரஹ்மான் பொறுப்பில்லை. முழு பொறுப்பும் எங்கள் நிறுவனத்தையே சேரும். நாங்கள் எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருந்தோம். அரசாங்கத்தின் விதிகளை பின்பற்றித்தான் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். நாங்கள் இந்த நிகழ்ச்சிக்காக ஒதுக்கியிருந்த டிக்கெட் எண்ணிக்கையை தாண்டி, பலர் போலியாக டிக்கெட்டை கொண்டுவந்திருந்தனர். அதிக மக்கள் கூடியதும், போலியான டிக்கெட் வைத்திருந்தவர்கள் வந்ததால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது,”என்று காணொளியில் தெரிவித்துள்ளார்.
இருந்தபோதும், அவரது காணொளி செய்திக்கு பதில் பதிவிட்ட பலர், எப்படி போலியான டிக்கெட் வைத்திருந்த நபர்கள் நிகழ்வில் பங்குகொள்ளமுடிந்தது என்று கேள்வி எழுப்பிவருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்