குடியுரிமைத் திருத்தச் சட்டம்: பாஜகவுக்கு என்ன லாபம்? கூட்டணி கட்சிகளுக்கு என்ன சிக்கல்?

குடியுரிமைத் திருத்தச் சட்டம்: பாஜகவுக்கு என்ன லாபம்? கூட்டணி கட்சிகளுக்கு என்ன சிக்கல்?

குடியுரிமைத் திருத்தச் சட்டம்

பட மூலாதாரம், ANI

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்தியதன் மூலம் தனது இந்து வாக்கு வங்கியை முழுவீச்சில் பயன்படுத்திக் கொள்ள பாஜக முனைவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரம், இஸ்லாமிய வாக்காளர்களின் ஆதரவைப் பெற்ற மற்ற கட்சிகளும் பாஜக-வுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளன. அவர்களின் நிலை என்ன என்ற கேள்வியும் எழுகிறது.

மற்றொருபுறம் தேசிய மக்கள் பதிவேட்டின் மூலம் தங்கள் குடியிரிமை பறிபோய்விடும் என்ற அச்சமும் இஸ்லாமிய சமூகத்தினரிடம் இருக்கிறது. அனைத்திற்கும் மேலாக, மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஏன் இச்சட்டம் அமலாக்கப்பட்டது என்ற கேள்வியும் எழுகிறது.

சிஏஏ அமல்படுத்தப்பட்ட இந்நிலையில் அரசியல் களத்தில் என்ன நடக்கக்கூடும்?

மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதாவது சிஏஏ-வை அமல்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 11ஆம் தேதி அரசு வெளியிட்டது.

இந்தச் சட்டத்தின் கீழ், 31 டிசம்பர் 2014-க்கு முன் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த இந்து, சீக்கியர், பௌத்தர், சமணம், பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் தேதிகள் எந்த நாளிலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த நடவடிக்கையை அடுத்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாகத் தாக்கி வருகின்றன.

உண்மையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பிறகு, குடியுரிமை திருத்த மசோதா 12 டிசம்பர் 2019 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று அது சட்டமாக மாறியது. ஆனால் அதற்குப் பிறகும் இச்சட்டம் அமல்படுத்தப்படவில்லை. ஏனெனில் அதைச் செயல்படுத்துவதற்கான விதிகள் அப்போது அறிவிக்கப்படவில்லை.

கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதும் நாட்டின் பல பகுதிகளிலும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்ள் நடத்தினர். இதைத்தொடர்ந்து டெல்லியில் கலவரங்கள் நடந்தன.

மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு என்ன நன்மை?

குடியுரிமைத் திருத்தச் சட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கடந்த 2019ஆம் ஆண்டு இச்சட்டத்தை எதிர்த்து நாடெங்கிலும் பல போராட்டங்கள் நடைபெற்றன.

மூத்த பத்திரிகையாளர் நீரஜா சவுத்ரி, சிஏஏ காரணமாக வாக்குகள் பிளவுபடும் என்கிறார். “குறிப்பாக மேற்கு வங்கத்தில் இதன்மூலம் இந்து வங்காளிகள் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வந்து குடியேறிய இந்துக்களின் வாக்குகளைப் பெற முடியும் என்று பாஜக நம்புகிறது. இங்கு பாஜக 2019ஐ விட அதிக மக்களவைத் தொகுதிகளை வெல்ல விரும்புகிறது,” என்கிறார்.

மேற்கு வங்கத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 42 இடங்களில் பாஜக 18 இடங்களில் வெற்றி பெற்றது. அங்கு மூன்று முதல் நான்கு இடங்களில் பாஜக வெற்றி பெறுவதில் மட்டுவா சமூகம் பெரும் பங்களிப்பு ஆற்றுவதாகக் கருதப்படுகிறது.

மட்டுவா சமூகம் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு தலித் இந்து சமூகம். அம்மாநிலத்தில் மட்டுவா சமூகத்தில் ஏராளமான வாக்காளர்கள் உள்ளனர். மேற்கு வங்கத்தின் சுமார் 15 சட்டமன்றத் தொகுதிகளின் முடிவு மட்டுவா வாக்காளர்களைப் பொறுத்தது என்று நம்பப்படுகிறது.

மட்டுவா சமூகம் முன்பு திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு ஆதரவாக இருந்தது. பின்னர் மட்டுவா சமூகம் பாஜகவை ஆதரிக்கத் துவங்கியது. ஆனால் 2019 லோக்சபா தேர்தலுக்குப் பிறகு, மட்டுவா சமூகம் தொடர்ந்து பாஜகவில் இருந்து விலகி இருப்பதாக நம்பப்படுகிறது.

மட்டுவா சமூகத்தின் பின்னணி என்ன?

குடியுரிமைத் திருத்தச் சட்டம்
படக்குறிப்பு,

சிஏஏ அமலாக்கப்பட்டதை மேற்கு வங்கத்தில் மட்டுவா சமூக மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு, 1947இல் இந்தியப் பிரிவினையின் போதும், 1971இல் வங்கதேசம் சுதந்திரம் பெற்றபோதும் மட்டுவாக்கள் அதிக எண்ணிக்கையில் வந்து குடியேறினர். பாஜக எம்பியும், மத்திய அமைச்சருமான சாந்தனு தாக்கூர் மாட்டுவா சமூகத்தின் தலைவர்.

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக 40%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. அதன்பின், 2021இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், பாஜக 38% வாக்குகளைப் பெற்றது.

ஆனால், 2022ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தல் மற்றும் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல்களில் பாஜகவின் வாக்கு சதவீதம் சுமார் 15%-ஆகக் குறைந்தது. மட்டுவா சமூகம் பாஜகவில் இருந்து விலகியதும் இதில் பெரும் பங்கு வகித்ததாக நம்பப்படுகிறது.

அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, நாகாலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் இருந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அதிக எதிர்ப்பு வந்துள்ளது. ஏனெனில் இந்த மாநிலங்கள் வங்கதேச எல்லைக்கு மிக அருகில் உள்ளன.

இந்த எதிர்ப்பின் காரணமாகவே மத்திய அரசு சிஏஏ-வை அமல்படுத்த இவ்வளவு காலம் எடுத்ததாக நம்பப்படுகிறது. அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் இங்கு சட்டவிரோதமாகக் குடியேறி வருவதாகக் கூறப்படுவதால், இந்த மாநிலங்களில் எதிர்ப்பு உள்ளது. குடியுரிமை பெற்ற பிறகு, மாநிலத்தின் வளங்கள் மீதும் அவர்களுக்கு உரிமை இருக்கும்.

இது பாஜக-வின் மத அரசியலா?

குடியுரிமைத் திருத்தச் சட்டம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சிஏஏ-வின் அமலாக்கத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

நாட்டில் சமூகங்களுக்கு இடையே பாகுபாடு ஏற்பட்டால், “நான் அமைதியாக இருக்க மாட்டேன்” என்று மமதா பானர்ஜி கூறியுள்ளார். சிஏஏ மற்றும் என்.ஆர்.சி (தேசிய குடிமக்கள் பதிவேடு) ஆகியவை மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் மிக உணர்வுப்பூர்வமான பிரச்னைகள் என்றும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் எந்த அமைதியின்மையையும் தான் விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மூத்த பத்திரிக்கையாளர் சுரூர் அகமது கூறுகையில், “மட்டுவா சமூகத்தைக் கவரும் இந்த முயற்சியில், அசாமில் பாஜவுக்கு நஷ்டம் ஏற்படலாம். இந்திய பிரிவினைக்குப் பின், அசாம், கிட்டத்தட்ட தனித்துவிடப்பட்டு அதன் பொருளாதாரம் அழிந்தது,” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், தேயிலைத் தோட்டங்கள், மரம் மற்றும் பிற வனப்பொருட்களை சேகரிப்பதன் மூலம் அசாமில் மக்களுக்கு வேலை கிடைத்தது. இன்றும், மிகக் குறைவான அளவிலேயே அசாம் மக்கள் வேலைக்காக வெளி மாநிலங்களுக்குச் செல்கின்றனர். அசாமில் இருக்கும் வேலைகளை மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களும், பிகாரை சேர்ந்தவர்களும், வியாபாரத்தில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஆக்கிரமித்துள்ளனர், என்றார்.

அசாமின் உள்ளூர் மக்கள் வங்கதேச முஸ்லிம்கள் குடியேற்றத்தை எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல், புலம்பெயர்ந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதையும் எதிர்க்கின்றனர்.

அசாம் மாநிலத்தில் சிஏஏ-வுக்கு இருக்கும் எதிர்ப்பு குறித்து, முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், சிஏஏ-வை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் இருவருமே அசாமில் உள்ளனர். இந்த சட்டத்தை ஏற்காதவர்கள் நீதிமன்றத்தை நாடலாம், என்றார்.

உண்மையில், சிஏஏ மற்றும் என்.ஆர்.சி (தேசிய குடிமக்கள் பதிவேடு) மூலம் பாஜக தனது இந்து வாக்கு வங்கியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வதாகக் கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, செய்தியாளர்களிடம் பேசுகையில், 2024 தேர்தல் அறிவிப்புக்கு சற்று முன்பு சிஏஏ அமல்படுத்தப்பட்டது. தேர்தலுக்கு முன் மதப் பாகுபாட்டைப் பயன்படுத்த பாஜக விரும்புகிறது என்பதைக் காட்டுகிறது என்றும், இது பாஜகவின் பழைய அரசியல் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “400 இடங்களில் வெல்வோம் என்று பாஜகவினர் கூறினர். ராமர் கோவில் கட்டிய பிறகு தங்கள் வெற்றி உறுதியானதாகக் கூறினர். ஆனால், இப்போது அவர்கள் தங்கள் நிலை பலவீனமாக இருப்பதாகக் கருதுவதால், தேர்தலுக்கு முன்பு இதுபோன்ற தந்திரங்களைக் கையாண்டு வருகின்றனர்,” என்றார்.

பாஜகவின் கூட்டணி கட்சிகளுக்கு நஷ்டம் ஏற்படுமா?

குடியுரிமைத் திருத்தச் சட்டம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

ஆந்திராவில் தனது போட்டியாளரான ஜெகன் மோகன் ரெட்டிக்கு முன் சந்திரபாபு நாயுடு பலவீனமாக இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே அவர் மாநிலத்தில் பலம் பெற தேசிய அளவிலான கட்சியான பாஜகவுடன் ஒப்பந்தம் செய்துள்ளார், என்றார் மூத்த பத்திரிக்கையாளர் ரஷித் கித்வாய்.

பாஜக வாக்குகளை மதரீதியாகப் பிளவுபடுத்த முயல்வதாக குற்றம் சாட்டப்படலாம், ஆனால் அது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல கூட்டாளிகளைக் கொண்டுள்ளது. அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் ஆதரவைப் பெற்றவர்கள் என்று நம்பப்படுகிறது.

பிகாரில் முதல்வர் நிதிஷ் குமாரின் கட்சியான ஜனதா தளம், ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கட்சி தெலுங்கு தேசம் கட்சி, மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் பிரிவு, மற்றும் பல சிறிய கட்சிகள் இதில் அடங்கும்.

அப்படியென்றால் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது அத்தகைய தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

இந்த விஷயத்தில் ஐக்கிய ஜனதாதளம் தற்போது எச்சரிக்கையுடன் செயல்படுவதாகத் தெரிகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் யாரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் கே.சி.தியாகி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான், சிஏஏ அமலாக்கத்தை வரவேற்றுள்ளார். ஒடிசாவின் பிஜு ஜனதா தளமும் இதை வரவேற்றிருக்கிறது.

மூத்த பத்திரிக்கையாளர் ரஷித் கித்வாய், நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாயக் போன்ற தலைவர்கள் தங்கள் பிம்பங்களின் மூலம் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றனர் என்றார். “ஆனால் அரசியல் கட்சித் தலைவர்கள் புத்திசாலிகள். அவர்கள் தேர்தல் கணிதத்தைப் புரிந்துகொண்டுதான் முடிவெடுப்பார்கள்,” என்றார்.

அவரைப் பொறுத்தவரை, தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் எந்தக் கட்சிகள் செல்கின்றனவோ, அவற்றுக்கு சொந்த நிர்பந்தம் உள்ளது. நிதிஷ் தனது அரசியல் நம்பகத்தன்மையைக் காப்பாற்றவும், தனது அரசியலை இன்னும் சில காலம் நீட்டிக்கவும் பாஜகவுடன் இணைந்துள்ளார். அவர்களுக்கு முஸ்லிம்களின் வாக்குகள் கிடைக்காமல் போகலாம் ஆனால் பா.ஜ.க காரணமாக இந்து வாக்குகளில் பெரும் பங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கும்.

ஆந்திராவில் தனது போட்டியாளரான ஜெகன் மோகன் ரெட்டிக்கு முன் சந்திரபாபு நாயுடு பலவீனமாக இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே அவர் மாநிலத்தில் பலம் பெற தேசியக் கட்சியான பாஜகவுடன் ஒப்பந்தம் செய்துள்ளார், என்றார் கித்வாய்.

இது தவிர, நவீன் பட்நாயக் ஒடிசாவில் 24 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்துள்ளார். அம்மாநிலத்தில் அவருக்கு எதிரான வாக்குகள் பாஜக மற்றும் காங்கிரசுக்கு சென்றிருக்கும் என்று நம்பப்படுகிறது. நவீன் பட்நாயக் பாஜகவுடன் இணைந்து இதைச் சமாளிக்க விரும்புகிறார்.

வாஜ்பேயி ஆட்சியின்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தபோது, மமதா பானர்ஜி, நிதிஷ் குமார், ராம்விலாஸ் பாஸ்வான் போன்ற தலைவர்கள் ராமர் கோவில், 370வது சட்டப்பிரிவு, பொது சிவில் சட்டம் ஆகிய பிரச்னைகளை பின்னுக்குத் தள்ளினார்கள். ஆனால், இப்போது மோதியைத் தவிர வேறு தலைவர் இல்லை என்று ரஷித் கித்வாய் கூறுகிறார். மேலும் இந்த விஷயங்களில் அமித் ஷாவை கட்டாயப்படுத்த முடியாது என்று அவர் கூறுகிறார்.

கடந்த 1955ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம் என்பது இந்தியக் குடியுரிமை தொடர்பான சட்டமாகும், இது ஒரு நபருக்கு இந்தியக் குடியுரிமையை எவ்வாறு வழங்குவது என்பதை விளக்குகிறது.

சிஏஏ அமலுக்கு வந்த பிறகு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்.பி.ஆர்) அறிமுகப்படுத்தப்படும். இது தங்கள் குடியுரிமையைப் பறிக்கக்கூடும் என்ற அச்சம் முஸ்லிம் சமூகத்தினரிடையே உள்ளது.

என்.ஆர்.சி-யால் குடியுரிமையை இழக்கும் அச்சம்

பிகாரில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சாதிவாரி சர்வே தரவுகளின்படி, அம்மாநிலத்தில் சுமார் 17% முஸ்லிம்கள் உள்ளனர். நிபுணர்களின் கூற்றுப்படி, நிதிஷ் குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பிய நேரத்தில், முஸ்லிம் மற்றும் மதச்சார்பற்ற வாக்குகளை அவர் இழக்க நேரிடும் என்று கருதப்பட்டது.

இது தவிர, ஆந்திர பிரதேசத்தில் 7% முஸ்லிம்களும், ஒடிசாவில் 6% முஸ்லிம்களும், மகாராஷ்டிராவில் சுமார் 12% முஸ்லிம்களும் உள்ளனர். இந்த இஸ்லாமிய வாக்குகள் கிடைக்காவிட்டால், தங்களுக்குப் பெரிய நஷ்டம் இல்லை என்று பாஜக-வின் கூட்டணிக் கட்சிகள் நினைக்கின்றன.

மூத்த பத்திரிக்கையாளர் சுரூர் அகமது கூறுகையில், “சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த யாரும் காஷ்மீர் திரும்பவில்லை. ஆனால் 370வது பிரிவை ரத்து செய்ததன் அரசியல் ஆதாயம் பாஜகவுக்கு கிடைத்துள்ளது. சிஏஏ விஷயத்திலும் அதுவே நடக்கும்,” என்றார்.

சுரூர் அகமதுவின் கூற்றுப்படி, இந்திய அரசாங்கம் ஏற்கெனவே வெளிநாட்டினருக்கு குடியுரிமை அளித்து வருகிறது. மேலும் குடியுரிமைச் சட்டத்தில் ஏற்கெனவே திருத்தங்கள் இருந்தன. எனவே இந்த விஷயம் சிஏஏ பற்றியது அல்ல, ஆனால் என்.ஆர்.சி பற்றியது. இதனால் குடியுரிமையை இழக்க நேரிடும் எனப் பலர் கருதுவதும் சர்ச்சைக்குரிய விஷயமாக உள்ளது.

உண்மையில், என்.ஆர்.சி, அதாவது தேசிய குடிமக்கள் பதிவேட்டின் கீழ், மக்கள் இந்தியாவில் தங்கள் குடியுரிமைக்கான சரியான ஆவணங்களைக் காட்ட வேண்டும். அதன் அடிப்படையில் நாட்டில் மக்கள் தொகைப் பதிவேடு தயாரிக்கப்படும்.

ரஷித் கித்வாயின் கூற்றுப்படி, சிஏஏ-வின் மூலம் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். மறுபுறம், என்.ஆர்.சி-யின் கீழ், ஏற்கெனவே இந்தியாவில் வசிக்கும் மக்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும்.

தேர்தல் பத்திர விஷயத்தில் இருந்து திசைதிருப்பும் முயற்சியா?

குடியுரிமைத் திருத்தச் சட்டம்
படக்குறிப்பு,

என்.ஆர்.சி-யால் குடியுரிமையை இழக்க நேரிடும் எனப் பலர் கருதுவதும் சர்ச்சைக்குரிய விஷயமாக உள்ளது.

ரஷித் கித்வாய் மேலும் கூறும்போது, “ஆதார் அட்டை அமல்படுத்தப்பட்டபோது, அதை யாரும் எதிர்க்கவில்லை. இப்போதும், அரசியல் மட்டத்தில், குடிமக்களுக்கு உறுதியான ஆவணங்களைத் தருவோம் என்று கூறப்படாமல், தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது விசித்திரமானது. இந்தியாவில் பாஜக பெரும்பான்மை அரசியலைச் செய்கிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அது சிறுபான்மைவாத அரசியலைச் செய்கிறது,” என்றார்.

உண்மையில், நாட்டின் பல பகுதிகளில், ஏழை, பின்தங்கிய அல்லது படிக்காத குடும்பங்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கத் தேவையான ஆவணங்களை வைத்திருக்க மாட்டார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மற்றொருபுறம், தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப மத்திய அரசு முயல்வதாகவும், சிஏஏ-வை அமல்படுத்துவதற்கான முடிவு அதற்கானது என்றும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

கடந்த திங்கட்கிழமை (மார்ச் 11), உச்சநீதிமன்றம், கடுமையான உத்தரவுகளுடன், மார்ச் 12, செவ்வாய்க்கிழமை மாலைக்குள் தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்கள் பற்றிய தகவல்களை ஒப்படைக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது.

இந்தத் தகவலை மார்ச் 15ஆம் தேதிக்குள் இணையதளத்தில் வெளியிடவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே சிஏஏ-வை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *