
பரபரப்பான சென்னையின் காலைப் பொழுதில் நேரு உள் விளையாட்டரங்கம் வழக்கத்திற்கு மாற்றமாக புது முகங்களை கொண்டிருந்தது. அந்த முகங்களில் மணிப்பூர் பற்றிய சோகக் கதைகளும் மறைந்திருந்தன.
விளையாட்டிற்கு பெயர் போன மாநிலமாக முன்பு அறியப்பட்ட மணிப்பூர், இப்போது வன்முறைச் சம்பவங்களால் உலகின் கவனத்தை பெற்றிருக்கிறது. மோசமான சூழலால் பயிற்சிக்கு வழியில்லாமல் தவித்த தேசிய மற்றும் சர்வதேச வாள்வீச்சு வீரர்களுக்கு தமிழ்நாடு அடைக்கலம் கொடுத்து அரவணைத்திருக்கிறது.
மணிப்பூர் வீரர்களுக்கு அழைப்பு விடுத்த தமிழக முதல்வர்
விளையாட்டுப் போட்டிகளில் திறமைக்கு பெயர் பெற்ற மணிப்பூரின் நிலையை தமிழ்நாடு கவலையோடும் வேதனையோடும் பார்ப்பதாக கடந்த ஜூன் 23ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
தேசிய, சர்வதேச போட்டிகளுக்கு பயிற்சியளிக்க மணிப்பூரில் சாதகமற்ற சூழல் நிலவுவதால் அங்குள்ள விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டில் பயிற்சிகளை தொடரலாம் என அழைப்பு விடுத்திருந்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதற்காக விண்ணப்பித்த தேசிய மற்றும் சர்வதேச வாள் வீச்சுப் போட்டிகளில் விளையாடி வரும் 10 வீரர்கள், 5 வீராங்கனைகள், 2 பயிற்சியாளர்கள் என மணிப்பூரைச் சேர்ந்த மொத்தம் 17 பேர் கொண்ட குழு, ஆகஸ்ட் 14ம் தேதி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது. இவர்கள் அனைவரும் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காலை, மாலை இரு வேளைகளில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பயிற்சி மேற்கொள்கின்றனர்.
‘வீட்டை பிரிஞ்சி இருக்கிற மாதிரி தோணவில்லை’
2019 ஆசிய ஃபென்சிங் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடிய சிங்கெய்ன்கம்பியைச் சந்தித்தோம்.
“மணிப்பூர்ல அசாதாரண சூழல்னால எங்க பயிற்சி மையத்தை மூடிட்டாங்க. எங்களால சரியா பயிற்சி பெற முடியல. இங்க வந்து எங்க விளையாட்ட தொடர்றதுக்கு வாய்ப்பு கிடைச்சது ரொம்ப சந்தோசமா இருக்கு. நாங்க எங்க வீட்ல இருக்கிற மாதிரியே இங்க ஃபீல் பண்றோம். வீட்டை விட்டு பிரிஞ்சி இருக்கிற மாதிரி பெருசா தோணல. இங்க இருக்கிறது நல்லா இருக்கு” என்றார் புன்னகையுடன்.

சிங்கெய்ன்கம்பி
மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பயிற்சியில் கவனம் செலுத்துவது முற்றிலுமாக தடைபட்டுவிட்டதாக மற்றொரு வாள்வீச்சு வீரரான யய்ஃபாபா கூறினார்.
“மே மாசத்துல இருந்தே எங்களால விளையாட முடில. 2 நாள் விளையாடினா அப்புறம் ஊரடங்கு வந்துரும். பயிற்சி பண்ணவே முடியாது. முக்கியமான போட்டிகள்லாம் வருது.
அம்மாக்கிட்ட டெய்லி நைட் சாப்ட பிறகு பேசுவேன். நண்பர்கள்கிட்டையும் பேசுவேன். அங்க நிலைமை சரியாயிட்டு வர்றதா சொல்றாங்க. ஒருவேளை நான் கவலைப்படக் கூடாதுனு அப்படி சொல்றாங்களானு தெரில. உண்மையிலேயே அங்க இப்ப எப்படி இருக்குனு தெரியல.” என யய்ஃபாபாவின் வார்த்தைகளில் கவலை வெளிப்பட்டது. சென்னையை குறித்து கேட்டபோது, கவலைகளை மறந்து அவரது வார்த்தைகளில் உற்சாகம்.
“மணிப்பூர்ல இருந்து எங்கள இங்க அழைச்சுட்டு வந்து, விளையாடவும் வச்சு, தங்கவும் இடம் தந்து, உணவும் ஏற்பாடு செஞ்சி தர்றது சந்தோசமா இருக்கு. இங்க உள்ள சாப்பாடும் பிடிச்சு போச்சு. இட்லி சாம்பார்லாம் சாப்டுறோம். இங்க உள்ளவங்க நல்லா பழகுறாங்க. பீச்லாம் இருக்குனு கேள்விபட்டோம். சென்னையை சுற்றிப் பார்க்கணும். பயிற்சிக்கே நேரம் சரியா இருக்கு. சென்னை ரொம்ப நல்லா இருக்கு. இதை ஏற்பாடு செஞ்சவங்களுக்கு ரொம்ப நன்றி” என்றார் யய்ஃபாபா
“உங்க பேரு என்ன?” கொஞ்சும் தமிழில் மணிப்பூர் வீரர்கள்

மணிப்பூர் வீரர்களுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த வா ள்வீச்சு வீரர்களும் இணைந்தே பயிற்சி மேற்கொள்கின்றனர். தருமபுரியை பூர்வீகமாகக் கொண்டு தற்போது சென்னையில் தங்கி பயிற்சி பெற்று வரும் கோகுலிடம் மணிப்பூர் வீரர்கள் குறித்து விசாரித்தோம்.
“நம்மகிட்டையும் ரொம்ப அன்பா பழகுறாங்க. நாங்களும் ஜாலியா பழகுறோம். இங்கிலீஷ்ல பேசிப்போம். நேஷ்னல், இண்டெர்னேஷ்னல் கேம்ஸ்ல விளையாடினவங்களும் எங்க கூட பயிற்சி செய்றாங்க. அவங்களோட விளையாடும்போது நிறைய டெக்னிக்ஸ் கத்துக்க முடியிது. நாங்க நிறைய புது விஷயங்களையும் அவங்ககிட்ட இருந்து தெரிஞ்சுகறோம். தமிழ் சொல்லிக் கொடுப்போம். அவங்க மொழியையும் நாங்கள் கேட்போம். ரொம்ப ஜாலியா போகுது. மணிப்பூர் பிரச்னை சம்மந்தமா எதுவும் பேசிக்க மாட்டாங்க.” என்றார் கோகுல்.
மணிப்பூர் வீரர்கள் தமிழில் சில வார்த்தைகளை தெரிந்து கொண்டு நம்மிடமும் அதைப் பேச முயற்சித்தனர். யய்ஃபாபா உடனான பேட்டிக்குப் பிறகு ‘உங்க பேரு என்ன’ என்று தமிழில் சிரித்துக் கொண்டே கேட்டது நம்மை ஆச்சரியப்படுத்தியது. தமிழ்நாட்டு வீராங்கனை ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற, அதில் ஆர்வத்தோடு பங்கேற்ற மணிப்பூர் வீரர்கள் பரஸ்பரம் கேக் ஊட்டி மகிழ்ந்ததையும் பார்க்க முடிந்தது.
மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்தளித்த தமிழ்நாடு
10 ஆண்டுகளாக தேசிய மற்றும் சர்வதேச வீரர்களுக்கு பயிற்சியளித்து வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஜிஜோநிதியை சந்தித்தோம். இந்தியாவுக்காக விளையாடியது மட்டுமின்றி, வீரர்களுக்கும் பயிற்சியளித்துள்ள ஜிஜோநிதி, மணிப்பூரிலும் பணியாற்றியிருக்கிறார். இதனால் மணிப்பூர் வீரர்களை அவர் அணுகுவது மிக எளிதாகிவிட்டது.

ஜிஜோநிதி (இடமிருந்து இரண்டாவது)
“மணிப்பூரில் நிலவும் அசாதாரண சூழலால் அங்கிருந்து வந்த வீரர்கள் மனதளவில் சோர்வாக உணர்ந்தனர். உளவியல் ரீதியான நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தனர். ஆனால் சென்னை வந்து பயிற்சியை தொடங்கிய சில நாட்களில் அவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைத்தது. தமிழ்நாட்டு வீரர்களும் மிகுந்த அன்போடு பழகுவதால் இரு மாநில வீரர்களும் இப்போது தங்களை ஒரு குடும்பமாகவே உணர்கின்றனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு தமிழை கற்றுக் கொடுப்பது, அவர்கள் மணிப்பூரி வார்த்தைகளை சொல்லித் தருவதுமாக இரு மாநில மக்களுக்கிடையே வலுவான உறவு ஏற்பட்டிருக்கிறது. உளவியல் சிக்கல்களில் இருந்து விடுபட்டு தற்போது புத்துணர்ச்சியுடன் பயிற்சியில் கவனம் செலுத்துகின்றனர். எதிர்வரும் தேசிய போட்டிகளில் இவர்கள் பதக்கங்களை வெல்லும் பட்சத்தில் அதில் தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கும் ஒரு பங்கு நிச்சயம் இருக்கும்.” என்கிறார் ஜிஜோநிதி
“தமிழ்நாட்டில் சுதந்திரமாக, பாதுகாப்பாக உணர்கிறோம்”
வீரர்களுக்கு பயிற்சியளித்துக் கொண்டிருந்த மணிப்பூரைச் சேர்ந்த பயிற்சியாளர் நந்தினி தேவி, நம்மிடம் அதிக விஷயங்களை பகிர்ந்துகொண்டார். பெற்றோர் குறித்து பேசும்போது அவரது குரல் சற்று தடுமாறியது.
“எங்க பகுதிகள்ல பாதிப்பு அதிகம் இல்லைனாலும், மற்ற இடங்கள்ல நடக்குறத பார்க்கும்போது நம்ம வீட்லையும் இப்படி நடந்துருமோனு வீரர்கள் பயப்படுறாங்க. ஒன்னும் நடக்காது பாதுகாப்புப் படையினர் இருக்காங்க. வீட்ல எல்லாரும் பத்திரமா இருப்பாங்கனு ஆறுதல் சொல்றேன். கேம்ல ஃபோகஸ் பண்ணுங்கனு அட்வைஸ் பண்றேன். நானும் குடும்பத்தை மிஸ் பண்றேன். அம்மா – அப்பாவ பார்க்கணும். அம்மாவுக்கு கொஞ்சம் உடல்நிலை சரி இல்ல. தினமும் ஃபோன்ல பேசுறேன். ஆனா அவங்க முகத்தை பார்க்கணும்.
மணிப்பூர் அரசுக்கும் மத்திய அரசுக்கும் நான் சொல்ல வர்றது… எந்த கவலையும் இல்லாம மணிப்பூர்ல எங்களுக்கு விளையாட இடம் குடுங்க.. சீக்கிரமா பிரச்னைக்கு ஒரு தீர்வ பாருங்க. எங்க எப்போ என்ன நடக்குமோனு பயப்படுற நிலைமை இல்லாம நாங்க சுதந்திரமா விளையாடுறதுக்கு உதவி செய்யுங்க. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ பண்ணுங்க.” என்றார் நந்தினி தேவி

மணிப்பூர் பயிற்சியாளர் நந்தினி தேவி
“தமிழ்நாடு மக்கள் சகோதரத்துவத்துடன் பழகுறாங்க”
“தமிழ்நாடு அரசும், விளையாட்டுத்துறையும், இங்க உள்ள பயிற்சியாளர்களும் எங்களுக்கு பண்ண உதவி ரொம்ப பெருசு. சின்னச் சின்ன விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்றாங்க. என்ன வேணும்னு அடிக்கடி கேட்டு நல்லா கவனிச்சிகறாங்க. தமிழ்நாடு மக்கள் எங்கள சொந்த சகோதர, சகோதரியா நினைச்சு பழகுறாங்க. இப்படி ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்காது.” என சிரித்துக் கொண்டே சொல்கிறார் நந்தினி தேவி.
சென்னையில் பயிற்சி மேற்கொண்டிருக்கும் இவர்கள், செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் மணிப்பூர் திரும்புகின்றனர். எதிர்வரும் தேசிய அல்லது சர்வதேச போட்டிகளில் இந்த 15 பேரில் யாரேனும் ஒருவர் பதக்கங்களை வென்றாலும் மணிப்பூருடன் சேர்ந்து தமிழ்நாடும் பெருமிதம் அடையும்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்