
பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சஞ்சய் கிஷோர்
- பதவி, மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்தி
-
கிரிக்கெட்டில் இந்திய துணைக் கண்டத்தின் மகுடத்திற்கான ஆட்டம் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவுள்ளது. கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானம் ஒன்பதாவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியை நடத்துவதற்காக தயாராக இருக்கிறது.
ஒன்பதாவது ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவுள்ளது.
இந்தியாவில் இன்னும் மூன்று வாரங்களில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஆசியக் கோப்பையை வெல்வது இந்திய அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2011ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி இரண்டாவது முறையாக உலக கோப்பையை வென்றதை போன்று மீண்டும் நிகழ்த்தி காட்டும் அழுத்தம் ரோகித் சர்மா மற்றும் அவரது தலைமையிலான அணி மீது உள்ளது.
ஆசிய கோப்பையில் இதுவரை இந்திய அணியின் செயல்பாடு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாகவே உள்ளது.
நடைபெறவுள்ள உலகக் கோப்பையில் இந்திய அணி மீண்டும் சரித்திரம் படைக்கும் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் மத்தியில் ரோஹித் சர்மா தலைமையிலான அணியால் ஏற்படுத்த முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
ஆசியக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் பாதை பாகிஸ்தானுக்கு எதிரான மோசமான ஆட்டத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேபாளத்திற்கு எதிரான வலிமையான வெற்றி மூலம் இந்திய அணிக்கு சூப்பர் ஃபோர் சுற்றில் இடம் கிடைத்தது.
லீக் ஆட்டத்தில் மழை காரணமாக இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் பாதிக்கப்பட்டதை போன்றே சூப்பர் ஃபோர் சுற்றிலும் இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ரிசர்வ் டே அன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
முதல் போட்டியில் மழை குறுக்கீட்டிற்குப் பிறகு, இரண்டு நாள் ஆட்டத்தில் பாகிஸ்தானை மோசமாக வீழ்த்திய இந்தியா, பின்னர் இலங்கைக்கு எதிராக திரில் வெற்றியைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
அதேநேரம் சூப்பர் ஃபோரின் இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, இந்திய அணி மூலம் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மறுபுறம், இலங்கை அணி தனது சொந்த மைதானத்தில் இறுதிப் போட்டியை விளையாடுகிறது. பல்லாயிரக்கணக்கான உள்ளூர் ரசிகர்கள் சூழ்ந்திருக்க இலங்கையை அதன் மண்ணில் வீழ்த்துவது என்பது அத்தனை எளிதல்ல.
இந்த ஆட்டத்தில் வென்று கோப்பையை வசப்படுத்த ரோகித் சர்மா தலைமையிலான அணி கவனிக்க வேண்டிய ஐந்து விஷயங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
1. சொந்த மண்ணில் புலியாக சீறும் இலங்கை அணி
உள்ளூர் மைதானத்தில் தங்களை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம் என்பதை இந்திய அணிக்கு இலங்கை அணி கடந்த வாரம் உணர்த்தியது.
இந்திய அணியை 213 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்கியது இலங்கை. இந்தியாவின் 10 விக்கெட்களையும் இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றினர். துனித் வெல்லாலகே 5 விக்கெட்களையும் அசலங்கா 4 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.
பிரேமதாசா மைதானம் மெதுவானதாகவும் பந்து நன்றாக திரும்புவதற்கு ஏதுவானதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஆட்டத்தின் நடு ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். அதேநேரம் இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு பெரிய பின்னடைவாக, சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷனா ஆட்டத்தில் இடம்பெறவில்லை.
அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ஷகான் அரசீகே சேர்க்கப்பட்டுள்ளார். துனித் வெல்லாலகே, தனஞ்ஜெய் டி செல்வா ஆகியோர் அணியில் உள்ளது இலங்கைக்கு பலம். கடந்த ஆட்டத்தில், விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மன் கில், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்ட்யா என முக்கிய விக்கெட்களை துனித் வெல்லாலகே கைப்பற்றியிருந்தார். எனவே, நிச்சயம் இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மென்களுக்கு நெருக்கடி அளிப்பார்கள்.

பட மூலாதாரம், Getty Images
2. குசால் – சதீர ஆகியோரை விரைவாக வீழ்த்த வேண்டியது அவசியம்
குஷால் மெண்டீஸை இலங்கை அணி பெரிதும் நம்பி இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 91 ரன்களை எடுத்தது மூலம் தான் நல்ல ஃபார்மில் இருப்பதை அவர் நிரூபித்திருக்கிறார்.
நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் 5 ஆட்டங்களில் விளையாடி 253 ரன்கள் எடுத்து அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 2வது இடத்தில் அவர் இருக்கிறார். முதல் இடத்தில் இந்திய வீரர் சுப்மன் கில் உள்ளார்.
கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 91 ரன்கள் அடித்ததை தவிர்த்து, பாகிஸ்தான் அணிக்கு எதிராக மற்றொரு ஆட்டத்தில் 50 ரன்கள், ஆஃப்காகின்ஸ்தான் அணிக்கு எதிராக 92 ரன்கள் என அவர் எடுத்திருக்கிறார். மெண்டீஸ் ஷார்ட் அல்லது பேக்-ஆஃப்-எ-லெங்த் பந்துகளை எதிர்கொள்ள சிரமப்படுகிறார். எனவே, இந்திய வேகப்பந்து வீச்சாளர் அவருக்கு ஷார்ட் பால் வீச முயற்சிக்க கூடும்.
இடது கை சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் அவருக்கு நெருக்கடியாக இருக்கிறார்கள். ரவீந்திர ஜடேஜா – குசல் மெண்டிஸ் இடையேயான மோதல் சுவாரஸ்யமாக இருக்கும்.
‘சூப்பர் ஃபோர்’ அரங்கில் அனைவரையும் கவர்ந்த மற்றொரு பேட்ஸ்மேன் 28 வயதான சதீர சமரவிக்ரம. கடந்த மூன்று போட்டிகளில் 158 ரன்களையும் மொத்த தொடரில் 216 ரன்களையும் அவர் எடுத்துள்ளார்.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக 72 பந்துகளில் 93 ரன்களை குவித்த சமரவிக்ரமவின் இன்னிங்ஸில் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். நடப்பு தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் தனது அணிக்காக அதிக சிக்ஸர்களை அவர் அடித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 253 இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு குஷால் மெண்டீஸ் – சதீர சமரவிக்ரம ஆகியோர் மூன்றாவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்னர்ஷிப் அமைத்துகொடுத்தனர். எனவே, அவர்களை விரைவாக வெளியேற்றுவது இந்திய அணிக்கு சாதகமாக அமையும்.

பட மூலாதாரம், Getty Images
3. பிட்ச், வானிலைக்கு ஏற்ப வீரர்கள் அணியில் இடம்பெற வேண்டும்
இந்திய அணியில் தொடக்க வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அதில் மாற்றம் தேவைப்படாது. அதே நேரத்தில் பந்துவீச்சில் மாற்றம் தேவைப்படும். பங்களாதேஷுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் அக்சர் படேல் காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.
தற்போது அவருக்கு பதிலாக அணியில் இடம்பெறபோவது ஷர்துல் தாக்கூரா அல்லது வாஷிங்டன் சுந்தரா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.
இந்த ஆசிய கோப்பையில் பனிப்பொழிவு இல்லாததால் சுழற்பந்து வீச்சாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர்கள் ஐந்து போட்டிகளில் 48.7% விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். பிரேமதாசாவில் ஆஃப் ஸ்பின்னர்கள் 18.5% விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள் மிகவும் சிக்கமாக உள்ளார்கள். ஓவருக்கு 4.3 ரன்களை மட்டுமே அவர்கள் வழங்கியுள்ளனர்.
அத்தகைய சூழ்நிலையில், இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக வாஷிங்டன் சுந்தர் சிறந்த தேர்வாக இருக்கிறார்.
அதேநேரம், வாஷிங்டன் சுந்தர் வெள்ளிக்கிழமைதான் பெங்களூரில் இருந்து இலங்கைக்கு சென்றுள்ளார். ஷர்துல் இலங்கையிலேயே இருப்பதோடு பந்துவீச்சிலும் முக்கிய பங்களிப்பு ஆற்றியிருக்கிறார். எனவே, இந்திய அணி தனது விளையாடும் அணியை தேர்ந்தெடுப்பதில் கவனமுடன் இருப்பது அவசியம்.

பட மூலாதாரம், Getty Images
4. பேட்டிங்கில் பின்வரிசை வீரர்களின் பங்களிப்பும் அவசியம்
ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இந்த தொடரில் பேட்டிங்கை பொருத்தவரை சிறப்பான பங்களிப்பை அளிக்கவில்லை. 53 பந்துகளை எதிர்கொண்ட அவர் வெறும் 25 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார்.
சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் திணறிவருகிறார். பந்துவீச்சிலும் அவர் 6 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். அவரது செயல்பாடு குறைந்து வருவதும் கவலையளிக்கக் கூடியது. 2021ஆம் ஆண்டில் இருந்து தற்போதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் ஜடேஜா விளையாடியுள்ளார்.
இதில், அவரது சராசரி 37.3 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 59.8 ஆகவும் உள்ளது.
5. முக்கியப் பங்கு வகிக்கும் குல்தீப் யாதவ்
சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சிறப்பான ஃபார்மில் உள்ளார். 4 போட்டிகளில் 9 விக்கெட்களை அவர் வீழ்த்தியிருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 25 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களையும் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 43 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களையும் அவர் கைப்பற்றியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக 10 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்களை குல்தீப் யாதவ் கைப்பற்றியுள்ளார். அவரது சராசரியும் 21.3 ஆக இருக்கிறது. எனவே, குல்தீப் யாதவை சமாளிக்க இலங்கை மேட்ஸ்மென்கள் மாற்றுவழியை தேடுவது அவசியம்.

பட மூலாதாரம், Getty Images
இரு அணிகளும் வெவ்வேறு திட்டங்களுடன் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.
2018ஆம் ஆண்டு இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றிருந்தது. அதன் பின்னர், பல்வேறு அணிகள் பங்கேற்று விளையாடும் தொடர்கள் எதிலும் இந்தியா கோப்பையை வென்றது இல்லை. எனவே, இன்றைய போட்டியில் வென்று இதனை மாற்றியமைக்க வேண்டிய சவால் இந்திய அணியின் முன் உள்ளது.
மறுபுறம், இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கு தகுதி சுற்றுப் போட்டிகளில் விளையாடியே தாங்கள் இடம்பெற்றிருந்தாலும், ஆட்டங்களின் போக்கையே மாற்றியமைக்கக் கூடிய வல்லமை தங்களிடம் உள்ளது என்பதை இந்த தொடரில் வென்று மற்ற அணிகளுக்கு சொல்ல இலங்கை விரும்புகிறது.
இறுதிப் போட்டி பரபரப்பாக அமைவதற்கு வானிலையும் அவசியம். கடந்த வாரத்தில் பெரும்பாலான நாட்களும் மழையால் பாதிக்கப்பட்டன.
இன்று பிற்பகலில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், போட்டி பாதிக்கப்பட்டால் அடுத்த நாள் வைத்துக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகியக் கோப்பையை பொருத்தவரை இரு அணிகளுமே வெற்றிகரமான அணிகளாக திகழ்கின்றன. இந்தியா ஏழு முறையும் இலங்கை ஆறு முறையும் கோப்பையை வென்றுள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்