1996 உலகக்கோப்பை : 60,000 ரசிகர்கள் முன் வினோத் காம்ப்ளி கதறி அழுதது ஏன்?

1996 உலகக்கோப்பை : 60,000 ரசிகர்கள் முன் வினோத் காம்ப்ளி கதறி அழுதது ஏன்?

கிரிக்கெட் உலகக்கோப்பை, இந்தியா, இலங்கை, வினோத் காம்ப்ளி, சச்சின் டெண்டுல்கர்

பட மூலாதாரம், Getty Images

கடந்த 1996ஆம் ஆண்டின் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டித் தொடரில், பெங்களூருவில் நடந்த ஒரு போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான காலிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

ஆனால் அதன் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்தது. நான்கு நாட்களுக்குப் பிறகு இலங்கைக்கு எதிரான அரையிறுதிப் போட்டி வரை இந்தியாவால் அதிலிருந்து மீள முடியவில்லை.

ஒரு பெரிய போட்டியில் வென்ற பிறகு, இந்திய அணிக்கு ஒரு மெத்தனப் போக்கு வந்துவிடும் என்பதை இந்திய அணியின் பயிற்சியாளர் அஜித் வடேகர் அறிந்திருந்தார்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது சுயசரிதையான ‘இம்பர்ஃபெக்ட்’ எனும் நூலில், ஒருமுறை போட்டியில் வென்ற பிறகு, இந்திய அணி விமானத்தில் ஜோக் அடித்து விளையாடிக் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.

“அன்று மாலை, ஹோட்டலில் நடந்த டீம் மீட்டிங்கில், வடேகர் திடீரென்று எங்களை நோக்கி, ‘என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?’ என்று திட்டினார். ‘உலகக் கோப்பையை வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? விமானத்தில் என்ன நடந்தது? இது என்ன மாதிரியான நடத்தை?’, என்று கூறினார்,” என்கிறார்.

இலங்கைக்கு முன்பாக பேட்டிங் செய்ய முடிவு

கிரிக்கெட் உலகக்கோப்பை, இந்தியா, இலங்கை, வினோத் காம்ப்ளி, சச்சின் டெண்டுல்கர்

பட மூலாதாரம், Harper Sports India

இலங்கைக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கு முன் வடேகர் இதே மனநிலையில் இருந்தார். அணி கூட்டத்தில் அவர் மட்டுமே பேசினார். அதன் பிறகு கேப்டன் அசாருதீன் சில வார்த்தைகள் பேசினார்.

இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் நீடித்தது. அதில் 50 நிமிடங்கள் இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரொமேஷ் கலுவிதாரண மற்றும் ஜெயசூர்யாவை எவ்வாறு தடுப்பது என்பது பற்றி மட்டுமே விவாதிக்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இந்த இருவரும் சிறப்பாகச் செயல்பட்டிருந்ததால் இந்தியாவின் ஸ்கோரான 272 ரன்களை எளிதாகக் கடந்திருந்தனர்.

அவர்களது பேட்டிங் மிகவும் வலுவாக இருந்ததால், மனோஜ் பிரபாகர் ஒரு ஆஃப்-ஸ்பின் பந்து வீசவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது அவரது விளையாட்டு வாழ்க்கை முடிவதற்குக் காரணமாக அமைந்தது.

கல்கத்தாவை அடைந்ததும், ஈடன் கார்டனில் உள்ள ஆடுகளம் ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மண்ணைக் கொண்டு மீண்டும் அமைக்கப்பட்டதாக இந்திய அணிக்குத் தெரிவிக்கப்பட்டது. முதல் பார்வையில் அந்த ஆடுகளம் ஆஸ்திரேலிய ஆடுகளத்தைப் போல் திடமாக இருந்தது.

சச்சின் டெண்டுல்கர் ‘பிளேயிங் இட் மை வே’ என்ற தனது சுயசரிதையில், “ஆடுகளத்தைப் பார்த்தவுடனே, டாஸ் வென்றால் முதலில் ஃபீல்டிங் செய்வது என்று முடிவு செய்தோம். அதுவரை இலங்கை தனது இலக்குகளை வெற்றிகரமாகப் பின்தொடர்ந்து வந்ததும் இதற்குப் பின்னால் உள்ள ஒரு காரணம்,” என்று குறிப்பிடுகிறார்.

கிரிக்கெட் உலகக்கோப்பை, இந்தியா, இலங்கை, வினோத் காம்ப்ளி, சச்சின் டெண்டுல்கர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்தியாவுக்கு எதிராக பேட்டிங் செய்த அரவிந்த் டி சில்வா.

“அவர்களது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சனத் ஜெயசூரிய மற்றும் ரொமேஷ் கலுவிதர்ண ஆகியோர் முதல் பந்திலிருந்தே அதிரடி ஆட்டக்காரர்களாக விளையாடி, பெரும்பாலான போட்டிகளில் இலங்கைக்கு நல்ல தொடக்கத்தை வழங்கிக் கொண்டிருந்தனர்.

லீக் போட்டியில் எங்களைத் தோற்கடித்தனர். ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பது முக்கியம்,” என்று குறிப்பிடுகிறார்.

அரவிந்த் டி சில்வா மற்றும் மஹாநாமாவின் பேட்டிங்

இந்தியா டாஸ் வென்று இலங்கையை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் முதல் ஓவரிலேயே பெவிலியனுக்கு திருப்பி அனுப்பிய இந்திய அணியின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

“ஸ்ரீநாத்தின் பந்தில் கோல்டன் டக் அடிக்க நான் கலுவிதர்ணாவை தேர்ட் மேன் பகுதியில் கேட்ச் செய்தேன். வெங்கடேஷ் பிரசாத் ஜெயசூர்யாவை கேட்ச் செய்தார். இதற்குப் பிறகு என்ன செய்வது என்று தெரியவில்லை. மகாபாரதத்தில் அபிமன்யுவை போல, வியூகத்திற்குள் நுழைவதற்குப் பயின்றிருந்தோம், ஆனால் அதிலிருந்து எப்படி வெளிவருவது என்பது தெரியவில்லை,” என்று எழுதியுள்ளார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

கிரிக்கெட் உலகக்கோப்பை, இந்தியா, இலங்கை, வினோத் காம்ப்ளி, சச்சின் டெண்டுல்கர்

பட மூலாதாரம், Hodder & Stoughton

“சிறிது நேரத்தில் எங்கள் கவனம் போட்டியில் இருந்து திசை திருப்பப்பட்டது, அரவிந்த் டி சில்வா அதை முழுமையாகப் பயன்படுத்தி 47 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். மஹாநாமாவும் 58 ரன்களில் இன்னிங்ஸ் விளையாடி இலங்கையை ஆரம்ப தோல்வியில் இருந்து மீட்டார்.

ஆட்டநேர முடிவில் ரணதுங்கவின் 35 ஓட்டங்களுடனும், திலகரத்னவின் 32 ஓட்டங்களுடனும், சமிந்த வாஸின் 22 ஓட்டங்களுடனும் இலங்கை அணி தனது ஸ்கோரை 251 ஓட்டங்களுக்கு எடுத்துச் சென்றது,” என்கிறார்.

இதன்பிறகு, சச்சின் டெண்டுல்கர் பந்து வீச வந்தபோது, ஆடுகளத்தை அனுமானிப்பதில் தவறு செய்ததை உணர்ந்தார்.

அவர் தனது சுயசரிதையில் இப்படி எழுதுகிறார்: “பந்து நிற்காமல் பேட்ஸ்மேனை நோக்கி நகர்ந்தது. ஆடுகளத்தின் மேற்பரப்பு வலுவாகத் தெரிந்தாலும், அதன் அடியில் உள்ள மண் அமுக்கப்பட்டிருக்கவில்லை. இந்த ஆடுகளம் 50 ஓவர்கள் வரை நீடிக்காது என்பது தெளிவாகத் தெரிந்தது.

இலங்கையின் ஸ்கோரை மட்டுப்படுத்தியது முக்கியமானது. ஆனால் இதையும் மீறி அவர்கள் 50 ஓவர்களில் 251 ரன்களை எடுக்க முடிந்தது, இது இறுதியில் எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது,” என்கிறார்.

பின்னர், ரணதுங்கா தனது இலக்கு 275-280 ரன்கள் எடுப்பதாக இருந்ததாகவும், ஆனால் பந்து சுழல்வதைப் பார்த்தபோது, இந்த ஆடுகளத்தில் 220 ரன்கள்கூட போதுமானதாக இருக்கும் என்று உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.

ஸ்டம்ப் அவுட் ஆன சச்சின்

கிரிக்கெட் உலகக்கோப்பை, இந்தியா, இலங்கை, வினோத் காம்ப்ளி, சச்சின் டெண்டுல்கர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் குமார் தர்மசேனா

இப்போது சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுக்க வேண்டும் என்று பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பார்வையாளர்களை அவர் ஏமாற்றவில்லை. சுழலும் ஆடுகளத்தில், அவர் 98 ரன்களை எடுத்திருந்த நிலையில் வித்தியாசமாக ஸ்டம்ப் அவுட் ஆனார்.

அதுகுறித்து டெண்டுல்கர் தனது சுயசரிதையில் இப்படி எழுதுகிறார்: “ஜெயசூர்யா இடது கை சுழற்பந்து வீச்சில் இருந்தார். அவரது பந்துகளில் ஒன்று எனது பேட்டில் மோதி ஆன் சைடு நோக்கித் திரும்பியது.

வேகமாக ரன் அடிக்க வாய்ப்பு இருப்பதாக நினைத்தேன், அதனால் கிரீஸை விட்டு வெளியே வந்தேன். ஆனால் விக்கெட் கீப்பர் கலுவிதார்ணவுக்கு மிக அருகில் பந்து நின்றதைப் பார்த்தேன். எனக்கு ரன் எடுக்கவோ, மீண்டும் கிரீசுக்கு வரவோ நேரமில்லை.

அவர் ஒரேயடியாக விக்கெட்டை சிதறடித்தார். நான் அவுட் ஆனதை அறிந்ததால் மூன்றாவது நடுவரின் முடிவுக்காகக் காத்திருக்காமல் பெவிலியன் சென்றேன். நான் பெவிலியன் நோக்கி நகரும்போது, எனக்கு அடுத்து வரவிருக்கும் பேட்ஸ்மேன்களுக்கான பாதை எளிதானது அல்ல என்பதை உணர்ந்தேன்.”

மோசமடைந்த ஆடுகளம்

கிரிக்கெட் உலகக்கோப்பை, இந்தியா, இலங்கை, வினோத் காம்ப்ளி, சச்சின் டெண்டுல்கர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கலுவிதர்னா சச்சின் டெண்டுல்கரை ஸ்டம்ப்-ஹிட் செய்தார்

சச்சினும் மஞ்ச்ரேகரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பெற்ற நேரத்தில், ஆடுகளம் மோசமடைந்ததை பார்வையாளர்கள் உணரவில்லை.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர், தனது சுயசரிதையில், “குமார் தர்மசேனா ஒரு ஆஃப்-பிரேக் பந்தை அசாருதீனிடம் வீசியபோது, அது ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அடித்தது. இதை லெக் சைடில் மார்பு உயரத்தில் விக்கெட் கீப்பர் கலுவிதர்னா பிடித்தார். இந்த பந்து வைட் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இதன் பின்னர் தர்மசேனாவின் முகத்தில் தோன்றிய புன்னகையை என்னால் மறக்கவே முடியாது. போட்டி தங்களுடையது என்றும், தனது அணி இறுதிப் போட்டியில் விளையாட இந்தியாவுக்கு அல்ல லாகூருக்கு செல்லும் என்றும் அந்த நிமிடத்தில் அவர் உணர்ந்திருக்கலாம்.”

“இலங்கை அணியில் தர்மசேனாவை தவிர முத்தையா முரளிதரன், ஜெயசூர்யா ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். தேவைப்பட்டால் அரவிந்த டி சில்வாவும் சுழற்பந்து வீசுவார்.

டெண்டுல்கர் ஆட்டமிழந்த பிறகு, மேலும் இரண்டு சிறந்த பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பியதும், எல்லாம் முடிவுக்கு வரப் போகிறது என்பதை நாங்கள் அறிந்தோம்,” என்கிறார்.

கிரிக்கெட் உலகக்கோப்பை, இந்தியா, இலங்கை, வினோத் காம்ப்ளி, சச்சின் டெண்டுல்கர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஈடன் கார்டன் பார்வையாளர்கள் பொறுமையிழந்தனர். இந்தியா தோற்றுவிடும் எனத் தெரிந்ததும் பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்களை மைதானத்தில் வீசத் துவங்கினர்.

மைதானத்தில் பாட்டில்களை வீசத் தொடங்கிய பார்வையாளர்கள்

அசாருதீன் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். மஞ்ச்ரேகர் ஜெயசூர்யாவின் பிடியில் கிளீன் போல்ட் ஆனார். ஜவகல் ஸ்ரீநாத், அஜய் ஜடேஜாவைவிட, இடது கை பேட்ஸ்மேன் வினோத் காம்ப்ளியை இணைத்துக்கொள்ளும் வகையில் முன்னேற்றம் பெற்றார். ஆனால் அவர் 6 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

ஜடேஜாவும் 11 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். நயன் மோங்கியாவும், ஆஷிஷ் கபூரும் அவுட் ஆனவுடன், இந்திய இன்னிங்ஸின் முடிவு தெளிவாகத் தெரிந்தது.

அதற்குள் ஈடன் கார்டன் பார்வையாளர்கள் பொறுமையிழந்தனர். இந்தியா தோற்றுவிடும் எனத் தெரிந்ததும் பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்களை மைதானத்தில் வீசத் துவங்கினர். அப்போது 15 ஓவர்கள் இருக்கும்போது இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்திருந்தது.

கூட்டத்தை அமைதிப்படுத்தும் வகையில், நடுவர் மற்றும் போட்டி நடுவர் கிளைவ் லாயிட் இருவரும் இரு அணி வீரர்களையும் மைதானத்திற்கு வெளியே அழைத்தனர். அரை மணிநேரத்திற்குப் பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. ஆனால் முத்தையா முரளிதரன் தனது ஓவரின் இரண்டாவது பந்தை வீசுவதற்கு முன்பு, கூட்டம் மீண்டும் மைதானத்தில் பாட்டில்களை வீசத் தொடங்கியது.

எல்லையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த இலங்கை ஃபீல்டர்கள் ஆடுகளம் அருகே வரும் அளவுக்கு நிலைமை மோசமாகியது. பார்வையாளர்கள் இந்தியாவின் தோல்வியைக் காணத் தயாராக இல்லை.

பின்னர் ஆட்டத்தை நிறுத்தி இலங்கையை வெற்றியாளராக அறிவிக்க நடுவர் முடிவு செய்தார். வினோத் காம்ப்லி, பத்து ரன்களுடன் ஆட்டமிழக்காமல் பெவிலியன் திரும்பும்போது, அவர் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தார்.

அவர்களின் செயல்பாடு நாட்டிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என்று பார்வையாளர்கள் அறிந்திருக்கவில்லை. இந்தச் சம்பவம் கல்கத்தாவின் விளையாட்டு வரலாற்றில் ஆழமான அடியை ஏற்படுத்தியது.

கிரிக்கெட் உலகக்கோப்பை, இந்தியா, இலங்கை, வினோத் காம்ப்ளி, சச்சின் டெண்டுல்கர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஒருவேளை இந்தியாவுக்காக ஒரு மேட்ச் சேவ் இன்னிங்ஸ் விளையாடும் வாய்ப்பை இழந்ததால் காம்ப்லி ஏமாற்றம் அடைந்திருக்கலாம்

முதலில் ஃபீல்டிங் செய்தது தவறான முடிவு

இந்தியாவின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான எரபள்ளி பிரசன்னா டெலிகிராப் செய்தித்தாளில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்திருக்க வேண்டும் என்று எழுதினார்.

இந்தியாவின் ஃபீல்டிங் செய்யும் முடிவு உளவியல் ரீதியான முடிவு. இது வியூகத்தின் பகுதியாக எடுக்கப்பட்டதல்ல.

இலங்கை அணி ரன்களை சேஸ் செய்வதை விரும்பவில்லை என்று கேப்டன் அசாருதீன் போட்டிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் ஒப்புக்கொண்டார்.

இந்திய அணியில் நவ்ஜோத் சித்து மட்டுமே இந்தியா முதலில் பேட் செய்ய வேண்டும் என்று விரும்பினார், ஆனால் அவரது கருத்து கேட்கப்படவில்லை. பின்னர் கிரௌண்ட்ஸ்மேன் இந்திய கேப்டனுக்கு முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும், ஆனால் அவர் தனது ஆலோசனையைப் புறக்கணித்து முதலில் ஃபீல்டிங் செய்யத் தேர்வு செய்ததாகவும் கூறினார்.

ஹோட்டலை அடைந்ததும், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், சச்சின் டெண்டுல்கர், அஜய் ஜடேஜா மற்றும் இரண்டு வீரர்கள் ஓர் அறையில் கூடினர்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது சுயசரிதையில் இவ்வாறு எழுதுகிறார்: “அப்போதுதான் வினோத் காம்ப்ளி அறைக்குள் நுழைந்தார். அணியின் தோல்வி குறித்து பகிரங்கமாக அழுததற்காக அஜய் ஜடேஜா அவரை கடுமையாக விமர்சித்தார்.

காம்ப்ளியின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது அவருக்குப் பிடிக்கவில்லை. ஒருவேளை இந்தியாவுக்காக ஒரு மேட்ச் சேவ் இன்னிங்ஸ் விளையாடும் வாய்ப்பை இழந்ததால் காம்ப்லி ஏமாற்றம் அடைந்திருக்கலாம்.”

இலங்கையின் வெற்றிப் பயணம் இத்துடன் நிற்கவில்லை. நான்கு நாட்களுக்குப் பிறகு, லாகூரில் நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *