
பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA
மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியபோது.
2023-ஆம் ஆண்டு மணிப்பூரின் மெய்தேய் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப் பரிந்துரை செய்திருந்த உத்தரவை அம்மாநிலத்தின் உயர் நீதிமன்றம் தற்போது மாற்றியிருக்கிறது. மெய்தேய் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கொடுத்த பரிந்துரையை தற்போது நீதிமன்றம் நீக்கியுள்ளது. இதற்கு குக்கி மற்றும் மெய்தேய் இன மக்கள் என்ன சொல்கிறார்கள்?
மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. முன்னதாக, மார்ச் 27, 2023 தேதியிட்ட உத்தரவில், பழங்குடி (எஸ்.டி) பட்டியலில் மெய்தேய் சமூகத்தை சேர்ப்பதற்கான கோரிக்கையை விரைவாக பரிசீலிக்குமாறு மாநில அரசை மணிப்பூர் உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
ஆனால் இந்த உத்தரவு வந்த சில நாட்களிலேயே மாநிலத்தில் சாதிய வன்முறை வெடித்தது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
ஆனால், நீதிமன்ற உத்தரவையும் மணிப்பூரில் வெடித்த வன்முறையையும் இணைப்பது சரியல்ல என்று சிலர் கருதுகின்றனர்.
ஆனால், முந்தைய உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்த மெய்தேய் சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கான பரிந்துரையை தற்போது மணிப்பூர் உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.
பிப்ரவரி 21-ஆம் தேதி இதுதொடர்பான மறு ஆய்வு மனுவை விசாரித்த போது, நீதிபதி கோல்மி கைஃபுல்ஷிலு அடங்கிய தனி நீதிபதி அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.
அந்த உத்தரவில், “2023 மார்ச் 27 தேதியிட்ட பத்தி எண் 17 (iii)-இல் வழங்கிய அறிவுறுத்தல்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் செய்யப்பட்ட அவதானிப்புகளுக்கு எதிராக உள்ளன. எனவே, அந்த பத்தி எண்ணை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,” என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதி கைஃபுல்ஷிலு, “அந்த நேரத்தில், மனுதாரர்கள் உண்மைகள் மற்றும் சட்டம் பற்றிய தவறான கருத்து காரணமாக ரிட் மனுவை விசாரிக்கும் நேரத்தில் நீதிமன்றத்திற்கு சரியான உதவியை வழங்கத் தவறியதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,” என்றார்.
மணிப்பூரில் குக்கி பழங்குடியினருக்கும் மெய்தேய் சமூகத்தினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே 3-ஆம் தேதி முதல் வன்முறை மோதல் நடைபெற்று வருகிறது. சுமார் 32 லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்த சிறிய மாநிலத்தில், பழங்குடியினர் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் நில உரிமையைப் பெறுவதற்காக, மெய்தேய் சமூகம் பழங்குடியினர் அந்தஸ்தைக் கோருகிறது.
இந்த வன்முறையால், குக்கி பழங்குடியினருக்கும் மெய்தேய் சமூகத்தினருக்கும் இடையே பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், நீதிமன்றத்தின் இந்த சமீபத்திய உத்தரவுக்குப் பிறகு, மாநிலத்தில் இதுவரை எந்த எதிர்வினையும் காணப்படவில்லை.

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA
மணிப்பூரில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்
பழங்குடியினர் கோரிக்கைக் குழு என்ன சொல்கிறது?
மணிப்பூரின் பழங்குடியினர் கோரிக்கைக் குழுவின் செயல் தலைவர் லெப்டினன்ட் கர்னல் லைஷ்ராம் லோகேந்திர சிங் (ஓய்வு பெற்றவர்) கூறுகையில், “நீதிமன்றத்தின் தீர்ப்பில் செய்யப்பட்ட மாற்றங்கள் மாநிலத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது,” என்றார்.
அவர் கூறுகையில், “உண்மையில், மெய்தேய் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் இந்த விஷயத்தில் நீதிமன்றத்திற்கு எந்தப் பங்கும் இல்லை. மாநில அரசே இந்தப் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்,” என்றார்.
“கடந்த 10 ஆண்டுகளாக மெய்தேய் சமூகத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்கக் கோரி ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் செல்ல விரும்பவில்லை. ஆனால், மெய்தேய் பழங்குடியினர் சங்கம் என்ற புதிய அமைப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த மனு விசாரணையில் உள்ளது,” என்றார்.
“ஆனால் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு தற்போது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. வன்முறைக்குப் பிறகு சட்டம்-ஒழுங்கு சரியில்லை. எனவே, சட்ட விஷயங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் எந்த குழப்பத்தையும் உருவாக்காமல் பார்த்துக்கொள்கிறோம். முந்தைய உத்தரவில் இருந்து நீதிமன்றம் நீக்கிய பகுதி எங்களின் கோரிக்கையை பாதிக்காது என்பது மக்களுக்கு தெரியும்,” என்கிறார் அவர்.
‘எங்களுக்கு நிலமே இல்லாமல் போகும்’

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA
தனி குக்கி நிர்வாகம் கோரிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
இந்திய அரசின் பழங்குடியினர் நல அமைச்சகம் 29 மே 2013 அன்று மணிப்பூர் அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பி அதில் பரிந்துரைகள் கோரப்பட்டதாக மணிப்பூரின் பழங்குடியினர் கோரிக்கைக் குழு கூறுகிறது.
லோகேந்திர சிங் கூறுகையில், “மணிப்பூரில் உள்ள மெய்தேய் சமூகத்தின் மக்கள்தொகை 14 லட்சம். இப்போது அவர்கள் பெரும்பான்மை சமூகம் இல்லை. 1951 மக்கள்தொகை கணக்கெடுப்பில், மெய்தேய் சமூகத்தினர் சுமார் 59%. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மெய்தேய் மக்கள்தொகை 44%. அவர்களுக்கு10 சதவீத நிலம் மட்டுமே உள்ளது, 90% நிலம் பழங்குடியினரிடம் உள்ளது. இப்போது அவர்கள் எங்கள் நிலங்களையும் வாங்குகின்றனர்,” என்றார்.
லோகேந்திர சிங் கூறுகையில், “பழங்குடியினர் பட்டியலில் எங்களைச் சேர்க்கவில்லை என்றால், எங்களுக்கு வாழ நிலமே இல்லாமல் போகும் காலம் வரும். எனவே, மெய்தேய் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு மாநில அரசு விரைவில் பரிந்துரை அனுப்ப வேண்டும்,” என தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கும் மணிப்பூர் வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறுகிறார்.
அவர் கூறுகையில், “மெய்தேய் சமூக மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க பரிந்துரைத்த உத்தரவின் காரணமாக வன்முறை வெடித்திருந்தால், நாகா சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளிலும் வன்முறை நடந்திருக்கும். குக்கி மக்கள் மணிப்பூரின் ஒரு பகுதியை தங்கள் நிலமாக மாற்ற விரும்புகிறார்கள். அதனால்தான் அவர்கள் மே 3 அன்று போராட்டம் நடத்தினர். அப்படி ஒரு பேரணியில் வன்முறை நடந்தது. இந்த வன்முறை இன்று வரை தொடர்கிறது,” என கூறுகிறார்.

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA
குக்கி அமைப்புகள் என்ன சொல்கின்றன?
மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின் ஒரு பகுதியை நீக்கியது நல்ல நடவடிக்கை என குக்கி பழங்குடியின அமைப்புகள் கூறுகின்றன.
மணிப்பூரில் உள்ள குக்கி-சோ பழங்குடியினரின் முக்கிய அமைப்பான பூர்வீக பழங்குடித் தலைவர்கள் மன்றத்தின் (ITLF) செய்தித் தொடர்பாளர் ஜின்சா வுவல்சோங் கூறுகையில், “பழங்குடி அந்தஸ்துக்கான மெய்தேய் மக்களின் கோரிக்கை முரண்பாடானது. மெய்தேய் மக்கள் வளர்ந்த சமூகத்தினராக உள்ளனர். பழங்குடி பட்டியலில் சேர்க்கப்பட்டு, அவர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினராக மாறிவிட்டனர். மெய்தேய் மொழி இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், உயர்நீதிமன்றம் எடுத்த முடிவு சரியான நடவடிக்கை,” என்றார்.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மாநிலத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா?
இந்த கேள்விக்கு பதிலளித்த ஜின்சா வுவல்சோங், “நீதிமன்றத்தின் இந்த முடிவு அரசுக்கு அல்லது எங்கள் கோரிக்கைகளுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. குக்கி-சோ பழங்குடியின மக்கள் அரசாங்கம் ஏற்காவிட்டாலும் கூட, தங்கள் பகுதிகளில் தனி நிர்வாகத்தை விரும்புகிறார்கள்,” என்றார்.
“இது எங்களின் அரசியல் கோரிக்கையை பாதிக்காது. பழங்குடியினர் பகுதியில் நிலம் வாங்க முடியாத காரணத்தால் மெய்தேய் மக்கள் எஸ்.டி அந்தஸ்து கோருகின்றனர். ஆனால் இந்திய அரசியலமைப்பு பழங்குடியின மக்களின் நிலத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது,” என்றார்.
பாஜக என்ன சொன்னது?

மணிப்பூர் வன்முறையில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் பா.ஜ.க-வும் பதில் அளித்துள்ளது.
மணிப்பூர் மாநில பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் எலங்பாம் எஸ். ஜான்சன் பிபிசியிடம், “மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் முந்தைய உத்தரவில் இருந்து நீக்கப்பட்ட பத்தி ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டது,” என்றார்.
“மெய்தேய் சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து கோரிக்கையை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் பரிசீலிக்கும். எனவே, நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இது முந்தைய முடிவை மேம்படுத்தும் முயற்சி மட்டுமே,” எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்புவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஜான்சன், “மெய்தேய் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க எங்கள் அரசுக்கு அதிகாரம் இல்லை, ஏனெனில் இந்த விஷயத்தில் மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். பழங்குடியினர் பட்டியலில் எந்த ஒரு சமூகத்தையும் சேர்ப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்கும். நீதிமன்ற உத்தரவுப்படி எங்கள் அரசு நடவடிக்கை எடுக்கும். ஆனால், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தாலேயே பழங்குடி அந்தஸ்து வழங்கப்படும் என்பது இல்லை,” என்றார்.
கடந்த பத்தாண்டுகளாக மணிப்பூரில் மெய்தேய் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வருகிறது. ஆனால், இந்தக் கோரிக்கையின் பேரிலும் மெய்தேய் சமூகத்தினர் தங்களுக்குள் பிளவுபட்டுள்ளனர்.
மெய்தேய் பிராமணர்களும், அரச வம்சாவளியினரும் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு ஆதரவாக இல்லை, ஏனெனில் மெய்தேய் சமூகத்தின் ஒரு பகுதியினர் பட்டியல் சாதி அந்தஸ்தைப் பெற்றுள்ளனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒட்டுமொத்த மெய்தேய் சமூகமும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டால், சாதி மோதல் உருவாகும் அபாயம் இருப்பதாக பலரும் கருதுகின்றனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்