சஹத் – ஜியா: திருநம்பி பெற்றெடுத்த குழந்தையின் பிறப்பு சான்றிதழ் சர்ச்சையானது ஏன்?

சஹத் - ஜியா: திருநம்பி பெற்றெடுத்த குழந்தையின் பிறப்பு சான்றிதழ் சர்ச்சையானது ஏன்?

 சஹத் மற்றும் ஜியா

பட மூலாதாரம், ZIYA PAVAL / INSTAGRAM

படக்குறிப்பு,

சஹத் பாசில் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய திருநம்பி. ஜியா பாவல், ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை.

கேரளாவை சேர்ந்த மாற்றுப்பாலின தம்பதியான சஹத் மற்றும் ஜியா, தங்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தங்களை தந்தை, தாய் என்று அடையாளப்படுத்துவதற்குப் பதிலாக பெற்றோர் என அடையாளப்படுத்த வேண்டும் எனக் கோரி கேரள உயர் நீதிமன்றித்தை நாடியுள்ளனர்.

கேரள மாநிலம், கோழிக்கோடு- உம்மலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சஹத் மற்றும் ஜியா. இதில், சஹத் பாசில் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய திருநம்பி, ஜியா பாவல், ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை.

இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். குழந்தை மீதான ஆசையால், குழ்தையை தத்தெடுக்க முடிவு செய்திருந்த மாற்றுப்பாலின தம்பதி, அதில் சட்டச் சிக்கல்கள் இருந்ததால், அந்த முயற்சியைக் கைவிட்டனர்.

பாலின மாற்று அறுவை சிகிச்சையில் இருந்த இருவரும் மருத்துவரை அணுகியதில், சஹத்தின் கருப்பை உள்ளிட்ட உறுப்புகள் அகற்றப்படாததைத் தெரிந்துகொண்டனர்.

பிறகு மருத்துவர்களின் ஆலோசனைப்படி, ஜியாவின் விந்தணுவை பெற்று, சஹத்தின் கருப்பைக்குள் செலுத்தப்பட்டது. அதன்மூலம் அவர் கர்ப்பமான நிலையில், கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அவர்களுக்கு குழந்தை பிறந்தது.

பிறந்த குழந்தையை கோழிக்கோடு மாநகராட்சியில் பதிவு செய்துள்ளனர். அப்போது, அவர்கள் தங்களை தந்தை, தாய் என அடையாளப்படுத்தாமல், பெற்றோர் என அடையாளப்படுத்தும்படி கேட்டுள்ளனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்த மாநகராட்சி அதிகாரிகள், திருநம்பி சஹத் பாசிலை தாயாகவும், திருநங்கை ஜியா பாவலை தந்தையாகவும் பதிவு செய்துள்ளனர்.

அதாவது, அவர்களை தற்போதைய மாற்று பாலினத்தைக் கொண்டு அடையாளப்படுத்தாமல், அவர்கள் பிறந்தபோது இருந்த பாலினத்தைக் கொண்டே சான்றிதழில் அடையாளப்படுத்தியுள்ளனர்.

பெற்றோராக அங்கீகரிக்க நீதிமன்றத்தை நாடிய மாற்றுப்பாலின தம்பதி

 சஹத் மற்றும் ஜியா

பட மூலாதாரம், ZIYA PAVAL/INSTAGRAM

படக்குறிப்பு,

கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி மாற்றுப்பாலின தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாற்றுப்பாலின தம்பதி சஹத் -ஜியா, கேரள உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தாய்- தந்தை என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக பெற்றோர் எனக் குறிப்பிடும்படி அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஜியா, “நாங்கள் எங்களது தற்போதைய பாலினத்தின் அடிப்படையில் பிறப்புச் சான்றிதழில் மாற்றிக் கொடுங்கள் என்றுகூட கேட்கவில்லை.

குறைந்தபட்சம், எங்களை பொதுவாக பெற்றோர் என அடையாளப்படுத்துங்கள் என்றுதான் கேட்கிறோம். பெற்றோர் என்றால், தாய்-தந்தை என இருவரையும்தான் குறிக்கும். அதில் எந்த சிக்கலும் வரப் போவதில்லை,” என்றார் ஜியா.

குழந்தைகள் மீது தங்களுக்கு இருந்த ஆசையால்தான் குழந்தை பெற்றுக்கொண்டதாகக் கூறிய ஜியா, “தற்போது விவரிக்க முடியாத மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்,” என்றார்.

மாற்றுப்பாலின தம்பதிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு கோழிக்கோடு மாநகராட்சியும், கேரள மாநில அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அடுத்த விசாரணை அக்டோபர் மாதம் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 சஹத்

பட மூலாதாரம், ZIYA PAVAL/ INSTAGRAM

படக்குறிப்பு,

பிப்ரவரி 9ஆம் தேதி பிறந்த குழந்தையை, பிப்ரவரி 17ஆம் தேதி அன்று கோழிக்கோடு மாநகராட்சியில் பதிவு செய்துள்ளனர்.

மாநில அரசு ஆதரவும் – மாநகராட்சியின் எதிர்ப்பும்

 சஹத் மற்றும் ஜியா

பட மூலாதாரம், ZIYA PAVAL/ INSTAGRAM

படக்குறிப்பு,

நீதிமன்றத்தில் மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டள்ளதாக வழக்கறிஞர் பத்மா லஷ்மி கூறினார்.

நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை குறித்து, மாற்றுப்பாலின தம்பதியினருக்காக ஆஜராகி வாதாடி வரும் வழக்கறிஞர் பத்மா லஷ்மி பிபிசியிடம் பேசினார்.

அப்போது அவர், மாற்றுப்பாலின தம்பதியினரின் கோரிக்கைக்கு மாநில அரசு ஆதரவாக உள்ளதாகவும், கோழிக்கோடு மாநகராட்சி எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறினார்.

“கோழிக்கோடு மாநகராட்சியினர் செய்திருப்பது முற்றிலும் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு எதிரான மனநிலையில் இருந்து செய்துள்ள செயல். ஒருவர் தன்னை எப்படி அடையாளப்படுத்த வேண்டும் என்பதை மாநகராட்சி எப்படி முடிவு செய்தது என்று தெரியவில்லை.

சஹத் பாசில் தன்னை ஆணாக உணர்ந்து, தன்னைத் தந்தையாக எண்ணிக் கொள்ளும்போது, அரசு எப்படி அதை மாற்ற முடியும்?,” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், நீதிமன்றத்தில் மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கோழிக்கோடு மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் ஜியா, சஹத் ஆகியோர் தங்களது பெயர்களை மறைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாகவும், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகளின்படியோ அல்லது மாநில அரசு சார்பில் வகுக்கப்பட்டுள்ள விதிகளின்படியோ அதற்கான சாத்தியம் இல்லை என்றும் கூறியுள்ளது.

அதனால், சஹத் பாசிலை தாயாகவும், ஜியா பாவலை தந்தையாகவும் பதிவு செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்றும், தம்பதியினரின் இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோழிக்கோடு மாநகராட்சி சார்பில் அந்த மாநகராட்சியின் செயலர் பினி தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளார்.

ஆனால், இது முற்றும் பொய் என்கிறார் பத்மா லஷ்மி.

‘தாய், தந்தை யார் என்பதைத் தெரிந்து கொள்வது குழந்தையின் உரிமை’

 சஹத் மற்றும் ஜியா

பட மூலாதாரம், ZIYA PAVAL/ INSTAGRAM

படக்குறிப்பு,

கோழிக்கோடு மாநகராட்சி அதிகாரிகள் நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்துவதாக பத்மா லஷ்மி குற்றம்சாட்டினார்.

“தங்களை பெற்றோர் என்று அடையாளப்படுத்தத்தான் கோரினரே தவிர, பெற்றோர் என்ற இடத்தில் பெயரிடாமல் பதிவு செய்யும்படி அவர்கள் கேட்கவே இல்லை.

ஆனால், மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், இந்த தம்பதியினர் தங்களின் பெயர்களை மறைக்கும்படி கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்,” என்றார் பத்மா லஷ்மி.

இதன் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்துவதாக பத்மா லஷ்மி குற்றம் சாட்டினார்.

கேரள உயர்நீதிமன்றத்தில் கோழிக்கோடு மாநகராட்சி சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், தன்னுடைய தாய், தந்தை யார் எனத் தெரிந்துகொள்வது ஒரு குழந்தையின் உரிமை எனவும் வாதாடியுள்ளார்.

அதற்குப் பதிலளித்த பத்மா லஷ்மி, “தற்போதைய காலத்தில் குழந்தை வளர்ந்து வரும்போது, அவர்களுக்கே தாய், தந்தை யார் எனத் தெரிந்துவிடும்.

ஒரு மாற்றுப்பாலினத்தவர்களின் குழந்தை, அவர்களின் அரவணைப்பில் வளரும்போது, திருநம்பியால்தான் கருத்தரிக்க முடியும் என்பது குழுந்தைக்குப் புரியும்,” என்றார்.

இதுகுறித்து கோழிக்கோடு மாநகராட்சியின் துணை மேயர் முசாபரிடம் கேட்டபோது, “இது சட்டப் பிரச்னை என்பதால், இதை மாநகராட்சி செயலர்தான் கவனித்து வருகிறார். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, பிறப்புச் சான்றிதழ் பதிவு நடைபெறும்,” என்றார்.

மாநகராட்சி செயலர் பினியிடம் பேச முயன்றபோது, “வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், இது குறித்து விசாரித்துவிட்டு பதிலளிக்கிறேன்,” என்றார்.

‘எதிர்கால வழக்குகளுக்கு முன்னோடி வழக்கு இது’

ஆனால், இந்த வழக்கின் முடிவு எதிர்காலத்தில் வரவிருக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கான தீர்வாக இருக்கும் என்கிறார் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஜெய்னா கோத்தாரி.

இவர் சமீபத்தில் உச்சநீதிமனறத்தால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்ட தன்பாலின தம்பதியினருக்கு திருமண அங்கீகாரம் வழங்குவது குறித்த வழக்கில் ஆஜராகி வாதாடியுள்ளார்.

“மாற்றுப்பாலின தம்பதியின் குழந்தையைப் பதிவு செய்வதில் தாய்-தந்தை குறித்த பிரச்னை இதுவே முதல்முறை. ஆனால், தற்போது உச்சநீதிமன்றம் மாற்றுப்பாலினத்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாம் எனக் கூறியுள்ள நிலையில், இதுபோன்ற பிரச்னைகள் நிச்சயம் எதிர்காலத்தில் எழக்கூடும். இந்தத் தீர்பின் முடிவு, எதிர்காலத்தில் வரவிருக்கும் வழக்குகளுக்கு முன்னோடியாக இருக்கும்,” என்றார்.

தொடர்ந்து, ஒரு குழந்தையின் உரிமை குறித்துப் பேசிய ஜெய்னா கோத்தாரி, “குழந்தைக்கு பெற்றோர் யார் என்று தெரிந்துகொள்ளும் உரிமைதான் உள்ளது. அதில், தாய், தந்தை என்று தனித்தனியாக இல்லை. இந்த உரிமையும்கூட இந்தியாவில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவை இல்லை.

ஒரு தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கு தன்னுடைய பெற்றோர் யார் எனத் தெரிந்துகொள்ளும் உரிமை இருப்பதாக உச்சநீதிமன்ற உத்தரவில் உள்ளதே, தவிர, இது அனைவருக்கும் பொருந்தும் வகையிலானதாக அமையாது,” என்றார் ஜெய்னா.

எனினும், கேரள உயர்நீதிமன்றத்தில் அக்டோபர் 10ஆம் தேதி அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போதுதான் இதன் முடிவு தெரிய வரும்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *