
பட மூலாதாரம், DUMINTHA JAYATHILAKA FB
இலங்கையில் பல்வேறு முக்கிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களை கைது செய்ததாக கூறப்படும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் போலீஸ் உயர் அதிகாரியான போலீஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
தனக்கும், தனது குடும்பத்திற்கும் விடுக்கப்படுகின்ற உயிர் அச்சுறுத்தலை அடுத்தே, தான் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக போலீஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
நிழலுலக உறுப்பினர்களினால் தனக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கான பிரிவின் போலீஸ் பரிசோதகராக துமிந்த ஜயதிலக்க கடமையாற்றியிருந்தார்;.
இந்த நிலையில், துமிந்த ஜயதிலக்க பிரான்ஸ் நாட்டை நோக்கி கடந்த 14ம் தேதி சென்றுள்ளதாக தெரிய வருகின்றது.
மனைவி மற்றும் குழந்தை ஆகியோரை இலங்கையில் மறைத்து வைத்த நிலையிலேயே, துமிந்த ஜயதிலக்க நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
என்ன நடந்தது?

பட மூலாதாரம், DUMINTHA JAYATHILAKA FB
தனக்கு உயிர் அச்சுறுத்தலை விடுத்ததாக, சில நிழலுலக உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளையும் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.
குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்களை கைது செய்ததன் பின்னர், நிழலுலக உறுப்பினர் என கூறப்படும் ஹினடியன மஹேஷ் என்ற நபரினால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் குரல் பதிவொன்று வெளியாகியுள்ளது.
”நீ சிறு குழந்தையுடன் இருக்கின்றாய் அல்லவா? மிகவும் கவனமாக இருந்து கொள். துமிந்த சேர் எதற்கும் கவனமாக இருந்துக்கொள்ளுங்கள். உனக்கு தகவலை வழங்கிய நபரை மூன்று நாட்களில் கொலை செய்வோம். முடியுமானால், அவரை காப்பாற்றிக் கொள். தேவையில்லாமல் கொலை செய்ய வைக்க வேண்டாம். உனது மனைவியை உன் கண் முன்னே துஷ்பிரயோகம் செய்து கொலை செய்வோம்.” என அந்த தொலைபேசி உரையாடல் குரல் பதிவில் பதிவாகியுள்ளது.
கொழும்பு – ஆட்டுப்பட்டிதெரு போலீஸ் நிலையத்திற்குள், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களுக்கு நஞ்சு வழங்கியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்த பிரதான போலீஸ் உத்தியோகத்தராக துமிந்த ஜயதிலக்க விளங்குகின்றார்.
இந்த சம்பவத்தை அடுத்து, இலங்கையின் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் கஞ்சிபானி இம்ரானும், தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் குரல் பதிவை துமிந்த ஜயதிலக்க வெளியிட்டுள்ளார்.

பட மூலாதாரம், DUMINTHA JAYATHILAKA FB
”நீங்கள் அதிகமாக துள்ள வேண்டாம் சேர். அமைதியாக இருந்து கொள்ளுங்கள். நான் உங்களை அச்சுறுத்தவில்லை. ஜயதிலக்க சேர் என மிகுந்த மரியாதைவுடன் கதைத்தேன். உங்களுடன் பிரச்னை ஏற்படுத்திக் கொள்வதற்கு எனக்கு பிரச்னை கிடையாது. எம்மை எமது வேலைகளை செய்து கொண்டிருப்பதற்கு இடமளியுங்கள். உங்களை போன்ற பலர் இருந்தார்கள். இறுதியில் மண்டியிட்டார்கள். புரிந்து கொள்ளுங்கள். மண்டியிட வைக்க எமக்கு தெரியும்.” என போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் கஞ்சிபானி இம்ரானினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் குரல் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
துமிந்த ஜயதிலக்கவின் பாதுகாப்பிற்காக போலீஸ் திணைக்களத்தினால் துப்பாக்கியொன்றும் வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இவ்வாறான பின்னணியிலேயே, துமிந்த ஜயதிலக்க நாட்டை விட்டு கடந்த 14ம் தேதி பிரான்ஸ் நோக்கி தப்பிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், பிரான்ஸில் தற்போது தங்கியுள்ள துமிந்த ஜயதிலக்க, சமூக வலைத்தளம் ஊடாக வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

”கொழும்பில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பல மனித படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்ய என்னால் முடிந்தது. இவ்வாறு நிழலுலக உறுப்பினர்களை தொடர்ச்சியாக கைது செய்யும் போது, எனக்கும் எனது மனைவி மற்றும் குழந்தையின் உயிருக்கு தொடர்ச்சியாக உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
அதனை பொருட்படுத்தாத நான் தொடர்ச்சியாக வேலை செய்தேன். இறுதியாக நான் கடந்த 14ம் தேதி இலங்கையிலிருந்து இங்கு வந்தேன். இங்கு வரும் போதும், ஆட்டுப்பட்டித்தெரு போலீஸ் நிலையத்திற்குள் சந்தேக நபர்களுக்கு நஞ்சு வழங்கியமை தொடர்பாக சம்பவத்தின் விசாரணைகளை முடிந்துக்கொண்டே பிரான்ஸிற்கு வந்தேன்.
தொடர்ச்சியாக விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே நான் இங்கு வந்தேன். நான் இங்கு வந்தாலும், எனது மனைவி மற்றும் குழந்தை ஆகியோரை எனது வீட்டில் இருந்து வெளியேற்றி மறைத்து வைத்துள்ளேன்.
அவர்களின் உயிருக்கு பாரிய பிரச்னை காணப்படுகின்றது. அவர்களின் உயிருக்கு பிரச்னை ஏற்படாத வகையில் அவர்களை பாதுகாத்து தருமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.” என போலீஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ராணுவத்தில் இணைந்துக்கொள்ளும் வகையிலேயே தான் பிரான்ஸை நோக்கி சென்றுள்ளதாகவும், அதற்கான நேர்முக பரீட்சைகளில் தோற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது மனைவி மற்றும் குழந்தை ஆகியோரின் உயிருக்கு ஆபத்து காணப்படுகின்றமையினால், புதிய வேலையில் சேரவும் முடியாமல் நிம்மதி இழந்து தவிப்பதாக அவர் குறிப்பிடுகின்றார்.
போலீஸ் திணைக்களத்தின் பதில்

பட மூலாதாரம், DUMINTHA JAYATHILAKA FB
போலீஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க போலியான நாடகமொன்றை உருவாக்கி பிரான்ஸ் நோக்கி சென்றுள்ளாரா என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுகின்றது என போலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி போலீஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.
”குறித்த போலீஸ் அதிகாரி பெப்ரவரி மாதம் 14ம் தேதி முதல் மார்ச் மாதம் 6ம் தேதி வரை வெளிநாடு செல்வதற்கான விடுமுறையை பெற்று சென்றுள்ளார். விடுமுறையின் அடிப்படையிலேயே அவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.
வெளிநாட்டிற்கு சென்றதன் பின்னரே சமூக வலைத்தளங்களின் ஊடாக அவர் இவ்வாறான கருத்துகளை வெளியிட்டுள்ளார். கடிதம் மற்றும் குரல் பதிவுகளை அவர் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், DUMINTHA JAYATHILAKA FB
இந்த அதிகாரி கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் காலப் பகுதியில் அவருக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றமை குறித்து போலீஸ் திணைக்களத்திற்கு அறிவிக்கவில்லை. இந்த குரல் பதிவுகளில் கதைக்கும் நபர்கள் தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளது. குறித்த நபர்களா பேசுகின்றார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த அனைத்து விடயங்களும் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில நன்மைகளை பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறான அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்பதை போன்ற விடயத்தை உருவாக்கியிருக்கக்கூடும்.
அப்படியான ஒரு சந்தேகம் எமக்கு உள்ளது. தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
அவரின் பாதுகாப்புக்கு கைத்துப்பாக்கி ஒன்றை வழங்கியிருந்தோம். இது தொடர்பில் சந்தேகம் காணப்படுகின்றது. இது திட்டமிடப்பட்ட ஒன்றா என்ற சந்தேகம் எழுகின்றது.” என போலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி போலீஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்