ERS-2: பூமியை நோக்கி விரையும் ஐரோப்பிய செயற்கைக்கோள் – எங்கே விழ போகிறது?

ERS-2: பூமியை நோக்கி விரையும் ஐரோப்பிய செயற்கைக்கோள் - எங்கே விழ போகிறது?

ஐரோப்பிய செயற்கைக்கோள்

பட மூலாதாரம், ESA

படக்குறிப்பு,

பூமியில் விழப் போகும் ERS – 2 செயற்கைக்கோள்

ஒரு காலத்தில் முக்கியமானதாக கருதப்பட்ட ஐரோப்பிய செயற்கைக்கோள் ஒன்று எந்நேரமும் பூமியின் மீது விழலாம் என்று அச்சம் நிலவி வருகிறது.

ERS-2 என்ற பெயர் கொண்ட இந்த செயற்கைக்கோள் 1995ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளியில் இருந்து பூமியை கண்காணிக்கும் தற்போதைய நவீன தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியான இது 2011ஆம் ஆண்டு செயலிழந்து போனது.

அதிலிருந்து கொஞ்சம்கொஞ்சமாக பூமியை நெருங்கிக் கொண்டிருந்த இந்த செயற்கைக்கோள் தற்போது முற்றிலுமாக கட்டுப்பாட்டை இழந்து எப்போது வேண்டுமானாலும் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன் கிழமை மாலையில் எந்த நேரத்திலும் இது பூமியை அடையும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2 டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் பூமியை நெருங்குவதற்கு முன்பே எரிந்து சாம்பலாகி விடும் என்று ஐரோப்பிய விண்வெளி மையம் கூறியுள்ளது.

இருப்பினும் அதன் சில பாகங்கள் பூமியின் சில பகுதிகளில் விழலாம் என்று அச்சம் உள்ளது. ஆனால், அது மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதியில் விழுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு.

பூமியின் பெரும்பகுதி கடலால் சூழப்பட்டுள்ளதால் இதன் பாகங்கள் தண்ணீரில் விழுந்து மூழ்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய விண்வெளி முகமையின் புவி கண்காணிப்பு பிரிவைச் சேர்ந்த மிர்கோ அல்பானி இதுகுறித்து பேசுகையில், “பூமிக்கு திரும்பி வரும் இந்த செயற்கைக்கோளின் பாகங்கள் கதிரியக்கம் அல்லது விஷத்தன்மை கொண்டவை இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

சில பேனல்கள் உள்ளிட்ட உட்பாகங்கள் மற்றும் சிறு வெளிபாகங்கள் மட்டுமே பூமியின் வெளிவட்ட பாதையிலேயே எரிந்து அழியாமல், இங்கு வந்து விழ வாய்ப்புள்ளது.

ஐரோப்பிய செயற்கைக்கோள்

பட மூலாதாரம், ESA

படக்குறிப்பு,

தற்போது பூமியின் வெப்பநிலையை கண்காணிப்பதற்கு முன்னோடியாக இருந்தது ERS செயற்கைகோள்கள்தான்.

செயற்கைக்கோள்களுக்கு முன்னோடி

ஐரோப்பிய விண்வெளி முகமை 1990இல் ஒரே மாதிரியான இரண்டு தொலைதூர புவி கண்காணிப்பு (Earth remote sensing) செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது. அவற்றின் பெயர் ERS-1 மற்றும் ERS-2.

அந்த சமயத்தில் இவைதான் அதிநவீன செயற்கைக்கோள்களாக பார்க்கப்பட்டது. இதில் நிலம், காற்று மற்றும் கடலை ஆராய்வதற்கான தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டிருந்தன.

இவை இரண்டும் வெள்ளத்தை கண்காணிப்பது, கடல் மற்றும் கண்டங்களின் வெப்பநிலையை அளவிடுவது, பனிக்கட்டிகளில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பது மற்றும் பூகம்பத்தின் போது ஏற்படும் மாற்றங்கள் குறித்த தகவல்களை சேகரிப்பது உள்ளிட்ட பணிகளை செய்தன.

இதில், ERS-2 செயற்கைக்கோளுக்கு பூமியை சூரியனின் புறஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கும் ஓசோன் படலத்தை கண்காணிக்கும் திறனும் இருந்தது.

இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள்களுக்கு முன்னோடிகள் என்று அழைக்கப்பட்டன. அதில் ஒன்றான ERS-2 செயற்கைக்கோள்தான் தற்போது முதலில் பூமியை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது.

ஐரோப்பிய செயற்கைக்கோள்

பட மூலாதாரம், AIRBUS

படக்குறிப்பு,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் புதிய விதிகளின்படி, விண்வெளியில் செயலிழந்த செயற்கைக்கோள்களை ஐந்தாண்டுகளுக்குள் பூமிக்கு கொண்டு வந்திட வேண்டும்.

விண்வெளி மாசு

இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் ஏவப்பட்ட காலகட்டத்தில் செயலிழந்த செயற்கைகோள்களினால் விண்வெளியில் உருவாகும் மாசு குறித்து எந்த கடுமையான விதிமுறைகளும் இல்லை. செயலிழந்த செயற்கைக்கோள்களை 25 ஆண்டுகளுக்குள் மீண்டும் பூமிக்கு கொண்டு வர வேண்டும் என்ற விதி அமலில் இருந்தது.

ஆனால், தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் புதிய விதிகளின்படி, விண்வெளியில் குப்பைகளை உருவாக்கக் கூடாது. செயலிழந்த செயற்கைக்கோள்களை ஐந்தாண்டுகளுக்குள் பூமிக்கு கொண்டு வந்திட வேண்டும்.

அதேபோல், எதிர்காலத்தில் விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள்களும் அதன் பணி முடிந்த பிறகு, பூமிக்கு மீண்டும் கொண்டு வரும் வகையில் கூடுதல் எரிவாயு நிரப்பி அனுப்ப வேண்டும்.

காரணம், உலகளவில் அதிக செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுவதால் அவை ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் அபாயம் உள்ளது.

ERS-2 செயற்கைக்கோள் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து 780 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது.

ஐரோப்பிய செயற்கைக்கோள்

பட மூலாதாரம், HEO

படக்குறிப்பு,

ஆஸ்திரேலிய செயற்கைக்கோள் கண்காணிப்பு நிறுவனம் ERS-2வை கண்காணித்து வருகிறது.

எஞ்சியிருந்த எரிவாயுவின் மூலம், இது 2011ஆம் ஆண்டு பூமிக்கு சற்று அருகில் 570 கிலோமீட்டர் தொலைவில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக அந்த காலகட்டத்தில், இது கீழ் வளிமண்டலத்தில் நுழைந்து அடுத்த 15 ஆண்டுகளுக்குள் அழிந்து விடும் என்று மதிப்பிடப்பட்டது.

இந்த கணிப்பு கிட்டத்தட்ட சரி என்பது இன்று நிரூபணம் ஆக உள்ளது.

அதே சமயம், ERS-1 செயற்கைக்கோளையும் பூமிக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற்றன. இதில் அதனுடனான தொடர்பு பாதியிலேயே அறுந்து விட்டது.

ERS-1 செயற்கைகோள் தற்போது பூமியிலிந்து 700 கிலோமீட்டர் மேலே சுற்றிக்கொண்டிருக்கிறது. அது கீழே வந்து முழுமையாக அழிவதற்கு எப்படியும் 100 ஆண்டுகள் ஆகலாம்.

விண்வெளியை பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்காக இயங்கி வரும் அமைப்பான செக்யூர் வோர்ல்டு ஃபவுண்டேஷன் மற்றும் அமெரிக்க நிறுவனமான லியோலேப்ஸ், விண்வெளியில் தொடர்ந்து குப்பைகள் அதிகரித்து வருவதால், அவை உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளன.

அவர்களது கூற்றுப்படி, ஏற்கனவே அங்கு அதிகளவிலான செயற்கைக்கோள்களால் உருவாக்கப்பட்ட குப்பைகள் சுற்றிக்கொண்டிருப்பதால், அவை உலக பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான புதிய செயற்கைக்கோள்களை மோதி அழிக்க வாய்ப்புள்ளது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *