அதிமுக மாநாடு: எடப்பாடி பழனிசாமி பேச்சில் முக்கிய 10 அம்சங்கள் என்ன? – BBC News தமிழ்

அதிமுக மாநாடு: எடப்பாடி பழனிசாமி பேச்சில் முக்கிய 10 அம்சங்கள் என்ன? - BBC News தமிழ்

மதுரை அதிமுக மாநாடு

மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளும் திமுகவை குறிவைத்து சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நீட் தேர்வு, டாஸ்மாக் கொள்ளை, கச்சத்தீவு தாரை வார்ப்பு, மீத்தேன் திட்டம் என்பன போன்ற பல பிரச்னைகளில் திமுக மீது அவர் புகார்ப் பட்டியல் வாசித்தார். ஆனால், அதிமுகவுக்கு உரிமை கோரும் ஓ.பன்னீர்செல்வம் குறித்தோ, சசிகலா, டி.டி.வி. தினகரன் குறித்தோ அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொ 51வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதிமுக பொன்விழாவை கொண்டாடும் வகையில் மதுரையில் “வீர வரலாற்றில் பொன் விழா எழுச்சி மாநாடு” நடைபெற்றது. இந்த மாநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழன் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

மாநாட்டின் நிறைவாக பேசிய எடப்பாடி பழனிசாமி, வழக்கம் போல் திமுக மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அத்துடன் தமது ஆட்சிக் காலத்தில் செய்த மக்கள் நலத் திட்டங்களைவும் அவர் எடுத்துக் கூறினார். ஆனால் எந்தவொரு இடத்திலும் மத்திய அரசையோ, பா.ஜ.க.வையோ அல்லது தன்னுடன் முரண்பட்டு, அதிமுகவுக்கு உரிமை கோரும் பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.டி.தினகரன் ஆகியோரையோ அவர் விமர்சிக்கவே இல்லை. கட்சியை முழுமையாக கைப்பற்றிவிட்ட அவர், எதிர் தரப்பினர் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

மதுரை அதிமுக மாநாடு

எடப்பாடி பழனிசாமி பேச்சில் முக்கிய 10 அம்சங்கள்

  • நான் முதல்வராக இருந்த போது “எங்களின் விவசாய நிலத்தை மீத்தேன் திட்டத்திற்காக பறிக்க பார்க்கிறார்கள்” என்ற கோரிக்கை விவசாயிகள் முன்வைத்தார்கள். ஒரு விவசாயி என்கிற அடிப்படையில் அவர்களின் கஷ்டங்களை அறிந்த நான், மத்திய அரசாங்கத்தோடு பேசி தஞ்சை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வழிசெய்தேன்.
  • தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வண்ணமாக 5 மாவட்டங்கள் மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி முல்லைப்பெரியார் அணையின் நீர்மட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயர்த்தி காட்டினார். முல்லைப் பெரியார் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த மீண்டும் நாம் முயற்சித்தோம். ஆனால் மத்திய அரசு அதை கிடப்பில் போட்டு விட்டது.
  • மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப 6 மாவட்டங்களை புதிதாக உருவாக்கி தந்தோம். பயிர் கடனை ரத்து செய்தோம். மீனவர்களுக்கு பல்வேறு திட்டங்களை தந்தோம்.
  • அம்மா கிளினிக் பொதுமக்களின் சேவைக்காக உருவாக்கினோம். ஆனால், அதை விடியா திமுக அரசு மூடிவிட்டது.
  • முதலமைச்சர் ஸ்டாலின் இராமேஸ்வரத்திற்கு வருகை தந்தார். கச்சத்தீவை மீட்போம் என்று பச்சை பொய் பேசி வருகிறார். அதை தாரை வார்த்து கொடுத்தது திமுகவே.
  • நீட் எதிர்ப்புப் போராட்டம் என்பது ஏமாற்று வேலை. சட்டமன்றத் தேர்தலில் நின்ற போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று சொன்னார். ஆனால் இதுவரை என்ன முயற்சி செய்தார்.
மதுரை அதிமுக மாநாடு
  • நீட் தேர்வு விவகாரத்தில் திமுக மிகப்பெரிய நாடகம் நடத்தி வருகிறது. 2010ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருந்த போதுதான் நீட் தேர்வு வந்தது. அதை யாராலும் மறுக்க முடியாது. ஆகவே காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அதற்கு உடந்தையாக இருந்தது திமுக ஆட்சி.
  • திமுக முன்னாள் அமைச்சர்கள் நீதிமன்றம் சென்று ஊழல் வழக்கு சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெற்றி கண்டுள்ளனர். நாங்கள் விட மாட்டோம் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் உச்ச நீதிமன்ற வரை செல்வோம்.
  • டாஸ்மாக்கில் மிகப்பெரிய கொள்ளை நடைபெற்று வருகிறது. ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு கோடி பாட்டில் விற்கப்படுகிறது. ஒரு நாளைக்கு பத்து கோடி வருமானம் பெறுகிறது திமுக அரசாங்கம்.
  • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு என நடைபெற்று வருகிறது.
  • அதிமுக என்னும் மாபெரும் இயக்கத்தை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாது. ஸ்டாலின் அவர்களே! உங்கள் கட்சியை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *